Lekha Books

A+ A A-

மாத்தனின் கதை - Page 2

maathanin kathai

“அது எப்படியோ நடக்கும்.”

சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு மாத்தச்சன் சொன்னான்: “பத்து சக்கரம் அதிகமா கொடுத்தா, அந்த அளவுக்கு நல்ல தகுதி படைத்த பையன் கிடைப்பான். நாம கஷ்டப்படணும்...”

அதற்கு மனைவி சம்மதித்தாள்.

எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்களில் மூழ்கிய அந்த மனங்கள் தூக்கத்தில் ஆழ்ந்தன. அப்போதும் அந்த மனைவியும், கணவனும் கனவுகள் கண்டிருப்பார்கள்! மகளுடைய திருமணம். அவளுடைய வீடு... இப்படி பல கனவுகள்!

பொழுது புலர்வதற்கு முன்பே மாத்தச்சன் மர ஆலைக்கு வந்துவிட்டான். அப்போது அங்கு சாக்கோவைப் பார்ப்பதற்காக நான்கைந்து ஆட்கள் வந்திருந்தார்கள்.

சாக்கோ அந்த ஊரின் மிகப் பெரிய பணக்காரர். அவருக்கு ஏராளமான நிலங்களும் வீடுகளும் சொந்தத்தில் இருந்தன. அவரிடம் இருக்கும் செல்வத்தைப் பற்றி ஊரில் பலப்பல கதைகள் உலாவிக் கொண்டிருந்தன. அவரிடம் சிறிதுகூட ஆணவ குணம் இல்லை. பெண்கள் சம்பந்தமாக எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எப்போதும் நல்ல வார்த்தைகளும் பேச்சும்தான். கோபப்படுகிற மாதிரி முகம் கறுத்தோ வருத்தப்படுவது மாதிரியோ ஒரு வார்த்தைகூட அவர் யாரிடமும் கூறியதில்லை. கடவுள் பக்தி என்று எடுத்துச் கொண்டால்- ஒரு ஞாயிற்றுக்கிழமைகூட தேவாலயத்திற்குச் செல்லாமல் அவர் இருந்ததில்லை. எந்த விஷயத்தைச் சொன்னாலும், கடவுள் பெயரைக் கூறித்தான் அவர் அதைக் கூறவே செய்வார். சமீபத்தில்தான் ஒரு தேவாலயத்திற்கு அவர் நன்கொடையாக ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

சாக்கோ தூக்கத்திலிருந்து எழுந்து வெளியே வந்தவுடன், அவர் மாத்தச்சனைத்தான் பார்த்தார். மாத்தச்சனும் சாக்கோவைப் பார்த்தான்.

“எப்போ வந்தே மாத்தச்சன்?”

“நேற்று இரவு.”

மாத்தச்சனுக்கு சாக்கோச்சனை ரகசியமாகப் பார்க்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் ஒவ்வொரு விஷயங்களுக்காக அங்கு நான்கு பேர் இருந்தார்கள். அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். குழப்பமான மன நிலையுடன் மாத்தச்சன் நேரத்தைச் செலவிட்டான்.

சாக்கோச்சனின் மகள் வந்து காப்பி தயாராக இருப்பதாகச் சொன்னாள். அப்போது அங்கிருந்தவர்களை நிற்கச் சொல்லி விட்டு சாக்கோச்சன் உள்ளே சென்றார். அவருடன் சேர்ந்து மாத்தச்சனும் உள்ளே சென்றான். சிறிது நேரம் கழித்து மாத்தச்சான் திரும்பி வந்தான். அவனுடைய முகத்தில்தான் என்ன பிரகாசம்! ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட சந்தோஷம் அவனுடைய முகத்தில் தெரிந்தது. அந்த மூன்று ரூபாய்களையும் மிகவும் பத்திரமாக அவன் சாக்கோச்சனிடம் தந்தான். அந்த வகையில் அவனுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய சொத்தான திரேஸ்யாவின் வரதட்சனைப் பணத்தில் பதினான்கு ரூபாய் சேர்ந்து விட்டிருந்தது!

கொஞ்சம் விறகு பிளந்து தரும்படி சொல்லி சாக்கோச்சனின் மனைவி மாத்தச்சனை வடக்குப் பக்கம் அழைத்தாள். விறகு பிளந்து முடித்ததும், மாத்தச்சனை வேறொரு வேலை செய்வதற்காக சாக்கோச்சன் அழைத்தார். வயலை உழ வேண்டும். சாக்கோச்சன் மறு கரைக்குச் செல்ல வேண்டும். படகைச் செலுத்த வேண்டியது மாத்தச்சன்தான்.

படகில் இருக்கும்போது மாத்தச்சன் சாக்கோச்சனின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். பாலாவில் இருப்பவர்கள் எல்லாருக்கும் சாக்கோச்சனை நன்கு தெரியும். இந்த ஊர்க்காரன் என்று கூறினாலே, சாக்கோச்சனுக்குப் பக்கத்திலா என்ற கேள்வி உடனே வரும். மாத்தச்சன் சாக்கோச்சனின் மகளுக்கு ஒரு இளைஞனைப் பார்த்து வைத்திருந்தான். ஒரு தந்தைக்கு ஒரே மகன். கோடீஸ்வரன். ஏராளமான நிலங்கள் சொந்தத்தில் இருந்தன. யோசித்துக் கூறுவதாக சாக்கோச்சன் சொன்னார்.

வயலிலிருந்து திரும்பி வந்த பிறகு மாடு, கன்றுகளுக்கு வைக்கோல் போடும் வேலை மாத்தச்சனுக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு ஓலை கீறும் வேலையில் அவன் இறங்கினான். பிறகு ஐம்பது மரக்கால் நெல் அளக்க வேண்டும். எல்லாம் முடிந்தபோது நேரம் அதிகமாகிவிட்டது.

மாத்தச்சனால் நிற்க முடியவில்லை. கால்களும், கைகளும் மரத்துப் போய்விட்டிருந்தன. வடக்குப் பக்கம் போய் சமையல்காரியிடம் ஒரு சொம்பு வெந்நீர் தரும்படி கேட்டான். நீராக இல்லை. அரிசி அடுப்பில் இருந்தது.

அந்த உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது சாக்கோச்சன் அங்கே வந்தார்.

“என்ன மாத்தா- இப்போ வெந்நீர் குடிக்கிற?

சிறிது வெட்கத்துடன் மாத்தச்சன் சொன்னான்: “ஒண்ணுமில்லை... கொஞ்சம் சோர்வா இருக்கு.”

“மத்தியானம் ஏதாவது சாப்பிட்டிருப்பே!”

“எதுவும் சாப்பிடல.”

“ஏன்?”

“அங்கே ஒண்ணும் இல்ல.”

அப்போது வேலைக்காரன் கூலிக்காக அங்கு வந்தான். சாக்கோச்சன் சொன்னார்: “இங்கே வா. இந்தக் கூலியை அளந்து கொடு.”

கூலி அளந்து முடிந்தபோது நேரம் சாயங்காலமாகிவிட்டது. பிரார்த்தனைக்கு சாக்கோச்சன் செல்ல வேண்டும். மாத்தச்சனின் மனம் நிலையாக இல்லை. தலையைச் சொறிந்து கொண்டு அவன் சாக்கோச்சனின் பின்னால் ஓடினான்.

சாக்கோச்சன் கேட்டார்: “என்ன மாத்தா, போகாம இருக்கே?”

“நாலு படி நெல்லு...”

“நெல்லா? எதுக்கு?”

“பிள்ளைகளுக்கு எதுவும் இல்ல...”

“நான் பிரார்த்தனை முடிஞ்சு வர்றேன்...”

கூலியாக நான்க படிகளும் மதிய சாப்பாட்டுக்கு இரண்டு படிகளுமாக மொத்தம் ஆறு படிகள் கேட்டிருக்க வேண்டுமென்று மாத்தன் நினைத்தான்.

அந்த ஏழையின் வாழ்க்கையிலும் சம்பவங்களை உண்டாக்கிக் கொண்டு காலம் போய்க்கொண்டிருந்தது. இப்போதும் சில வேளைகளில் பாலாவிற்கு யாருடனாவது சேர்ந்து படகைச் செலுத்திக்கொண்டு மாத்தச்சன் போவதுண்டு. ஆனால், உடலில் பலம் குறைந்துவிட்டது. அவனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று எல்லாருமே கூறுவார்கள். “என்னையும் கூப்பிடுங்க” என்று மாத்தச்சன் கேட்டுக் கொள்வான். ஏதாவது கொடுத்தால் போதும். எனினும், அவன் பெரிய கணக்கு கூறுவான்.

சாக்கோச்சனின் வீட்டில் மாத்தச்சனுக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. சிறுசிறு வேலைகள். எங்கும் வேலை இல்லாதபோது அவன் அங்கு செல்வான். அந்த வேலைகளைச் செய்வான். சாயங்காலம் கூலி அளக்கும் போது நான்கோ ஐந்தோ கூலி நெல் கேட்டு வாங்குவான். மரியாவிற்கும் அங்கு வேலை இருக்கும். இப்படியே நாட்கள் கடந்து கொண்டிருந்தன.

ஆனால், இப்படியே நாட்கள் நீங்கிக் கொண்டிருந்தால் போதுமா? ஆடை அணிய வேண்டாமா? வீடு கட்ட வேண்டாமா? தேவாலயத்தில் வழிபாடுகள் செய்ய வேண்டாமா? பிள்ளைகளின் படிப்புச் செலவுகள் நடக்க வேண்டாமா? எல்லாவற்றையும் சாக்கோச்சனின் உதவியுடன் நிறைவேற்ற முடிந்தது. இதற்கிடையில் யாருக்காவது ஏதாவது நோய் என்று வந்துவிட்டால், அதற்கான சிகிச்சை செலவுகளையும் சாக்கோச்சனின் உதவியால்தான் நிறைவேற்றி ஆக வேண்டும்.

“அவர் இல்லைன்னா நாம என்னடி செய்வோம்!”

“நானும் அதைத்தான் நினைத்தேன்.”

உண்மைதான். என்ன செய்வார்கள்? சாக்கோச்சன் அவர்களைக் காப்பாற்றும் அவதார புருஷராக இருந்தார். முகம் கறுத்து ஒரு வார்த்தை கூட அவர் கூறமாட்டார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel