Lekha Books

A+ A A-

நான் பட்டாளத்தில் சேர்ந்த கதை

naan pattalathil serntha kathai

ற்றவர்களின் அனுபவம் எப்படி என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை, என்னுடைய பட்டாள வாழ்க்கை வெற்றிகரமான ஒன்றுதான்.

அப்படியென்றால் எதற்காக முன்கூட்டியே பட்டாளத்தில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள் - இல்லையா? நான் ஓய்வெடுத்தது பட்டாளம் வெறுத்துப் போய்விட்டது என்பதற்காக அல்ல, சகோதரா. புதிய தலைமுறைக்கு நாம் வழிவிட்டுக் கொடுப்பதுதானே நியாயம்!

தவிர, தெய்வத்தை அடைவதற்கான நேரமும் கிட்டத்தட்ட எனக்கு நெருங்கிவிட்டது. உண்மையாகச் சொல்லப்போனால், பட்டாளத்தில் எனக்கு பிரச்னைக்குரிய ஒரு விஷயம் இருந்தது என்றால், அது- தெய்வீக காரியங்களில் என்னால் சரிவர ஈடுபட முடியாமல் இருந்ததுதான். நாம் நினைக்கிற மாதிரியே வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் நடக்குமா என்ன?

இன்று வைப்புத் தொகை கணக்கைப் புதுப்பிக்கலாம் என்று போனபோது புதிதாக வந்திருக்கும் மேனேஜர் கேட்டார்: "முப்பது வருஷங்கள் பட்டாளத்துல இருந்திருக்கீங்க. உங்களோட ரேங்க் என்ன இப்படி?..." என்று. நான் சொன்னேன்: "சார்... பொண்டாட்டியோ பிள்ளையோ இல்லாத ஒரு தனிக்கட்டையான எனக்கு எதுக்கு ரேங்க்? நான் பட்டாளத்துல சேர்ந்தது ரேங்க் வாங்கணும்ன்றதுக்காக இல்ல. பாரதமாதா மேல இருந்த ஒரு வெறியினாலதான் நான் பட்டாளத்துக்கே போனேன்.”

என்னுடைய சாதாரண அனுபவங்கள் புதிய தலைமுறைக்கு ஒரு உத்வேகமாக இருக்கட்டும் என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்தவாறு நான் என்னுடைய வாழ்க்கைப் பாதையில் நடந்த சில சம்பவங்களை மக்கள் முன் திறந்து வைக்கிறேன். இதில் சில தவறுகள் இருக்கலாம். எல்லோரும் அதைப் பெரிதுபடுத்தாமல் என்னை மன்னிக்க வேண்டும். காரணம்- நான் ஒரு எழுத்தாளன் அல்ல. வெறும் பட்டாளக்காரன்தான். நான் படித்ததே ஆறாம் வகுப்பு வரையில்தான். மலையாளத்தில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் வாங்கினேன். என்னால் முடிந்தவரை உண்மைகளையே சொல்ல முயற்சிக்கிறேன். முதலிலேயே சொல்லிவிடுகிறேன்- மலையாளத்தில் நான் வாங்கிய மதிப்பெண்கள்தான் நான் வாங்கிய மதிப்பெண்களிலேயே அதிகம். அந்த தைரியத்தை வைத்துத்தான் நான் இதை எழுதுகிறேன்.

பட்டாளத்தில் சேரும்போது என்னுடைய வயது பதினெட்டு. நான் பிறந்த நாட்டின் மீது எனக்கு பாசம் அதிகம் இருந்தாலும், என் தந்தை மீது எனக்கு வெறுப்புத்தான் இருந்தது. அது தேவையில்லாதது என்பதை இப்போது உணர்கிறேன். ஆனால், இப்போது இதைச் சொல்லி என்ன பயன்? என் தந்தை இறந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன.

என் தந்தை இறக்கும்போது எங்கள் யூனிட் சம்பலில் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. பூலான்தேவி அப்போது இளம் வயது பெண்ணாக இருந்தாள். அன்று அவளை நான் பார்த்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன். கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு அவளை அப்படியே இறுக அணைத்து அவளின் கறுத்த உதடுகளில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்திருப்பேன். பிறகு... ஒரு மூலையில் அவளை உட்கார வைத்து அவளின் கஷ்டங்கள் என்னென்ன என்பதை விளக்கமாகச் சொல்லும்படி கேட்பேன். அவளுக்கு விருப்பம் இருந்தால், குறுகிய நேரத்திற்கு அவளுடன் உல்லாசமாகவும் இருந்திருப்பேன். என்னுடைய வயதுதான் அவளுக்கு. எது எப்படியோ- என்னுடைய தந்தை இறந்த செய்தி எனக்குக் கிடைக்கும்போது, அவர் மண்ணுக்குக் கீழே புதைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. நான் அன்று இரவு கூடாரத்தைவிட்டு வெளியே வந்து ஒரு கல்லின் மேல் அமர்ந்து என்னைச் சுற்றிச் சுற்றி வந்த இரண்டு கொசுக்களை இரண்டு கைகளாலும் அடித்துக் கொன்றேன். என் தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைத் தொழுதேன். 'ஆகாயத்தில் இருக்கின்ற எங்களின் பிதாவே' என்று சொல்லியவாறு நான் ஆகாயத்தைப் பார்த்தபோது, ஆகாயம் இருண்டுபோய் காணப்பட்டது. நான் சிறிது நேரம் அந்த இருட்டையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். அங்கே என் தந்தையின் அடையாளம் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். அப்படியெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. என் கண்களில் வலி உண்டானதுதான் மிச்சம். எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. ஆனால், வரவில்லை. மெதுவாகக் கொசு வலைக்குள் புகுந்தேன். அடுத்த சில நிமிடங்களுக்கு எனக்குத் தூக்கமே வரவில்லை.

என் தந்தையிடம் நான் கோபமாக இருந்ததற்குக் காரணம் உண்டு. அவர் என்னை தன் விருப்பப்படி அடிப்பார். அவர் ஒரு கல்மனம் கொண்ட மனிதராக இருந்தார். அவரைப் பார்க்கும் போது அன்று அப்படித்தான் என் மனதில் தோன்றியது. இப்போதும் நான் அவரைப் பற்றிக் கொண்ட அபிப்பிராயம் மாறவே இல்லை என்பதுதான் உண்மை. மிகப்பெரிய கெட்ட மனிதர்கள் பலரையும் நான் பார்த்தாகிவிட்டது. என்ன இருந்தாலும், என் தந்தைதானே என்று நினைத்து அவரை ஒரு நல்ல வெளிச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதில் உண்டாகும். ஆனால், என் தந்தை எப்போதும் இருட்டுக்குள்ளேயே கிடந்தார். அவரை வெளிச்சத்தில் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் எப்போதும் இருட்டோடு சேர்ந்து நின்றுகொண்டிருப்பதும், நடப்பதும், படுப்பதும்தான் என் ஞாபகத்தில் வருகிறது.

சொல்லப்போனால்- எங்களின் குடிசை எப்போதும் இருட்டாகவே இருக்கும். மண்ணெண்ணெய் வாங்க முடியாததால் இரவில் இருட்டு. வேய்ந்த ஓலையின் ஓரத்தை வெட்டாமல் விட்டதால், அது எப்போதும் மறைத்துக்கொண்டிருப்பதால் பகலிலும் இருட்டு. என்னைப் பெற்றவுடன் என் தாய் இறந்துவிட்டாள். அதற்குப்பிறகு என் தந்தைதான் என்னை வளர்த்தார். என் தாயின் வயிற்றில் நான் இருந்தபோது என் தந்தை அடித்து உதைத்ததால்தான் என் தாய் குறிப்பிட்ட மாதம் ஆவதற்கு முன்பே குறைப்பிரசவத்தில் என்னைப் பெற்றதாகவும், அவள் மரணத்தைத் தழுவியதாகவும் என் சித்தி சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாயின் வயிற்றில் இருக்கிறபோதே என்னை அடித்த என் தந்தை, அதற்குப் பிறகும் என்னை அடித்து உதைத்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது! என் தந்தை நல்ல உயரத்தைக் கொண்டவராகவும், ராட்சசத்தனமான பலத்தைக் கொண்ட மனிதராகவும் இருப்பார். அவரின் கண்கள் இரண்டும் எப்போதும் சிவந்தே இருக்கும். அவரின் சிவந்த கண்கள் மட்டும் என்னிடம் இல்லாமல் போய்விட்டது. மீதி அவரிடம் இருந்த பலமான உடலும், உயரமும் எனக்கும் இருந்தன. அவரின் நெஞ்சில் ரோமம் இருக்காது. என்னுடைய நெஞ்சிலும்தான். கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலிருந்தே என் தந்தை என்னை ஏன் அடித்திருக்க வேண்டும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். நிச்சயம் அதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் அல்லவா? ஒரு பையனை தோன்றும்போதெல்லாம் அடிப்பது என்பது மனதிற்கும் உடலுக்கும் சந்தோஷம் தரக்கூடிய ஒரு செயலும் அல்ல.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel