Lekha Books

A+ A A-

தாமரைத் தொப்பி - Page 3

thamarai thoppi

“அது ரொம்பவும் கஷ்டமான விஷயம்!”

“என்ன கஷ்டம்? உங்களுக்கு அதுனால ஒரு மதிப்பு கிடைக்கும்ல?”

“பைத்தியம் மாதிரி ஏதாவது பேசாதே, தாமரை நடைமுறையில அது சாத்தியமே இல்ல.”

“இவ்வளவுதானா? நான் என்ன சொன்னாலும் கேக்குறதா எனக்கு நீங்க சத்தியம் பண்ணித் தந்தீங்க... ஆனா, இப்போ...”

“தாமரை, இது மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். வேறு எது வேணும்னாலும் கேளு...”

தாமரையின் கண்களில் மீண்டும் மின்னல் வெட்டுகள் ஆர்ப்பாட்டம் பண்ணின. “சொன்ன வார்த்தைக்கு இந்த அளவுக்குக் கூட மதிப்பு இல்லாமப் போச்சில்ல? மன்னராம் மன்னர்! எங்க கிராமத்துல இருக்குற அந்தப் பிச்சைக்காரனான சக்கரவர்த்தி எவ்வளவோ பரவாயில்ல. அவன் நான் என்ன சொன்னாலும் செய்யிறதா சொல்லிட்டு, சொன்ன மாதிரியே நடப்பான். எனக்காக மாங்காய் பறிக்கிறதுக்காக வானத்தையே முட்டிக்கிட்டு இருக்குற உயரமான மரத்துல ஏறினான். எறும்புகள் கடிச்சப்போ கீழே உருண்டு விழுந்து இடது கால் ஒடிஞ்சப்போகூட என்னைப் பார்த்து, ‘தாமரை, நான் இந்தக் காயத்துக்குக் கட்டுப் போட்ட பிறகு திரும்பவும் மாமரத்துல ஏறி உனக்கு மாங்காய் பறிச்சுத் தருவேன்’னு சொன்னான். அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா?”

“தாமரை, நீ யார்கிட்ட இப்போ பேசுறேன்னு தெரியுதா?”

“ம்... தெரியுது. நீங்க ஒரு சாதாரண மன்னர். எங்க கிராமத்தோட சக்கரவர்த்தி ஒண்ணுமில்ல...”

“தாமரை...!” -மன்னனுக்குக் கோபம் வந்தது.

“பிணமே, சத்தியம் பண்ணித் தந்துட்டு இப்போ கோபம் வேறயா? காட்டுப் பன்னி! உன்னை எனக்குத் தெரியாதா? கரடிக்குட்டி!”- அவள் இப்படித் தொடர்ந்து திட்டியவுடன், மன்னனுக்குத் திருப்தியாகிவிட்டது. அவனுடைய முகத்தில் உணர்ச்சிவசப்பட்டிருப்பது தெரிந்தது. அவன் தாமரையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னான். “செல்லமே, நான் உத்தரவு போடுறேன். நம்ம மக்கள் ஒரு ஆள்கூட விடாம எல்லாரும் இந்தத் தொப்பியை அணிஞ்சு நடப்பாங்க. போதுமா?”

அவனுடைய கைகளில் சாய்ந்தவாறு அவள் கேட்டாள்: “எப்போ இருந்து மக்கள் தொப்பி அணிய ஆரம்பிப்பாங்க?”

“எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா!”

“நாளையில இருந்து... சரியா?”

“நாளைக்குத் தொப்பி தைச்சு தயாரா இருக்காது. நாளை மறுநாள்ல இருந்து. என்ன, சரிதானா?”

“நீங்க சொன்னதை எப்பவாவது நான் கேட்காம இருந்திருக்கேனா? நாளை மறுநாள் போதும்.”

மன்னன் அவளுடைய மார்பிலிருந்து விலகி வாசல் கதவுக்கு அருகில் சென்றான். உடனே திரும்பி வந்து சொன்னான்: “மகாராணி!”

“தாமரைன்னு கூப்பிடுங்க.”

“தாமரை, இந்தத் தொப்பிக்கு நான் உன் பெயரை வைக்க விரும்புறேன்.”

அவள் புன்னகை செய்து அடக்கமாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாள். பிறகு கிளி கொஞ்சும் குரலில் கேட்டாள்: “என்ன இது?”

“மகாராணி தொப்பி...”

“ச்சே... அவமானம்! எனக்குன்னு ஒரு பேர் இல்லையா என்ன?”

“ஓஹோ...” - அப்போதுதான் மன்னனுக்கு அந்த விஷயமே ஞாபகத்துக்கு வந்தது: “சரி... தாமரைத் தொப்பின்னு பேர் வச்சிடலாம்.”

அந்த அறை முழுவதும் அவளுடைய புன்னகையால் நிறைந்தது.

மன்னன் அமைச்சருக்கு விஷயத்தைச் சொன்னான். அமைச்சர் படைத்தளபதிக்குச் சொன்னான். படைத்தளபதி அரண்மனை அதிகாரியிடம் சொன்னான். இப்படி தொப்பி விஷயம் அரண்மனை தையல்காரனிடம் போய்ச் சேர்ந்தது.

“நாளைக்கு இது முடியுமா?”- அவன் சந்தேகத்துடன் கேட்டான்.

“முடியணும்... இது மன்னரோட ஆணை; பெரியவரே!” - அரண்மனை அதிகாரி கோபக்குரலில் சொன்னான்: “பிறகு- இந்தத் தொப்பி மாதிரியே இருக்கணும் எல்லாத் தொப்பிகளும். கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாம பார்த்துக்கணும். இந்த நாட்டுல இருக்குற குழந்தைகள், ஆண்கள், பெண்கள் எல்லாருக்கும் தொப்பி இருக்கணும். புரியுதா?”

“இதுக்குக் கொஞ்சம் வேலைக்காரர்கள் வேணும்.”

“எவ்வளவு வேணும்னாலும் வச்சுக்கோ!”

நாட்டிலுள்ள எல்லா தையல்காரர்களும் வரவழைக்கப்பட்டார்கள். துணி கிழிக்கப்பட்டது. ஜரிகை சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு மணி நேரம் ஆகும்போதும் அரண்மனை அதிகாரி போய்க் கேட்டான்: “என்ன தையல்காரரே, எவ்வளவு தொப்பிகள் தயாரா இருக்கு?” அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் ஆனவுடன் மீண்டும் அவன் சென்று கேட்டான்: “இப்போ எவ்வளவு தொப்பிகள் தயாரா இருக்கு?” தொப்பிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தன.

இதற்கிடையில் அமைச்சர் பல ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான். தாமரைத் தொப்பியின் பெருமைகளைப் பற்றி நாடு முழுவதும் பிரச்சாரம் பண்ண ஏற்பாடுகள் செய்தான். ஊர் கூட்டங்களிலும் கோவில் பகுதிகளிலும் மக்கள் பெரும் அளவில் வரவழைக்கப்பட்டு, மன்னன் அறிவித்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. யானை உயரத்திற்குக் குவிந்து கிடந்த தொப்பிகளைத் தலையில் வைத்துக் கொண்டு நான்கைந்து பேர் ஒவ்வொரு தெருவாக நடந்தார்கள். அந்த வாரம் முழுவதும் தொப்பி வாரமாகக் கொண்டாட உத்தரவிடப்பட்டது.

அப்போது மக்களுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தது. எதற்காக மன்னர் தங்களை இப்படி தொப்பி அணியும்படி செய்கிறார் என்பதே அது.

“நம்ம எல்லாரையும் புதிய ஏதாவது மதத்துல சேர்க்க முயல்கிறாரோ என்னவோ?” - ஒரு பால் விற்கும் பெண் சொன்னாள்.

“அதுனால என்ன? மன்னர் அணியிற தொப்பி நமக்கும் பொருத்தமாத்தான் இருக்கும்” - அவளுடைய கணவன் சொன்னான்.

“அய்யோ... மதம் மாற என்னால முடியாது”- அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவித்தாள்.

“பேசாம இரு... தலையில தொப்பி இருக்கணுமான்றது இப்போ முக்கியமில்ல. உடல்ல தலை இருக்கணுமான்றதுதான் முக்கியம்” - கணவன் அவளைப் பார்த்து சொன்னான். இப்படிப் பலவிதப்பட்ட குழப்பங்களும் பரபரப்பும் நிறைந்திருக்க மக்கள் தங்களுக்குள் பலவகைகளில் முணுமுணுத்துக் கொண்டார்கள். எனினும், தெருவில் கால் வைக்கும்போது அவர்கள் சிரித்து சகஜமாகத் தங்களைக் காட்டிக் கொள்வார்கள்.

ஆனால், தொப்பி கையில் வந்தவுடன் சிலர் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். குறிப்பாக- வழுக்கைத் தலையைக் கொண்டவர்கள். அவர்கள் எல்லா நேரங்களிலும் தொப்பியை அணிந்திருந்தார்கள். படுத்து உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களின் தலையிலிருந்து அவர்களுடைய மனைவிமார்கள் அதை மெதுவாகக் கழற்றி எடுத்து வைத்தார்கள். தொடர்ந்து அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பாமல் அந்த வழுக்கைத் தலையில் அவர்கள் முத்தமிடவும் செய்தார்கள். அதே நேரத்தில் பொதுமக்களுக்குச் சிறிய சிறிய குழப்பங்கள் இல்லாமலில்லை. எல்லாத் தொப்பிகளும் ஒரே அளவில் இருந்தன. சிறிய தலையைக் கொண்டவர்களுக்குப் பால் பாத்திரத்தை மூடியதுபோல தொப்பி முகம் முழுவதையும் மூடி தோள் வரை அது இருந்தது. பெரிய தலையை உடையவர்களுக்கு ஒரு ஜரிகையால் ஆன மலரைச் சூடியதைப்போல தலை மீது அது இருந்தது. இரண்டு வகைப்பட்ட மனிதர்களுக்கும் அந்தத் தொப்பி உகந்ததாக இல்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel