Lekha Books

A+ A A-

அக்கா

akka

க்கா அழுது கொண்டிருக்கிறாள்.

             அக்கா அழுவதை எப்போதும் அப்பு விரும்பமாட்டான். வடக்குப் பக்கமிருக்கும் அறையின் ஜன்னல் படிமீது அமர்ந்து தன்னுடைய நெற்றியில் கையை வைத்துக் கொண்டு அக்கா அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்கு எப்போது பார்த்தாலும் அழுகைதான். ஒரு வேளை பெரியம்மா அவளை ஏதாவது திட்டியிருக்கலாம்.

பெரியம்மா அப்புவைக்கூட பல நேரங்களில் கண்டபடி பேசுவாள். அப்போது அவன் அழமாட்டான்.

அதற்குப் பதிலாக அவனுக்குக் கோபம்தான் உண்டாகும். தன் அக்கா அளவிற்கு அவன் பெரியவனாக இருந்திருந்தால், தான் யார் என்பதை அவன் காட்டியிருப்பான். இவ்வளவு பெரிய பெண்ணாக இருந்தும், பெரியம்மாவின் திட்டுகளைக் கேட்கும்போது அவளுடைய முகம் மிகவும் வாடிப் போகும். கண்கள் நீரால் நிறைந்துவிடும். அதைப் பார்க்கும் போது பொதுவாக அவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவான்.

அழுது கொண்டிருக்கும்பொழுது அக்காவுக்கு அருகில் நிற்க அப்புவால் முடியாது. அழுவதற்கிடையில் அக்கா அவனைக் கட்டிப்பிடிப்பாள். அப்படி அவள் அன்புடன் தன்னை அணைத்துக் கொள்வது ஒருவிதத்தில் அவனுக்குக் பிடித்தமானதுகூட இருப்பினும் 'மகனே' என்று முணுமுணுத்தவாறு அவள் அவனுடைய நெற்றியிலும் தலையிலும் அடுத்தடுத்து முத்தம் தரும்போது சூடான கண்ணீர்த்துளிகள் அப்புவின் உடல்மீது தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும். அப்போது அவனுக்கும் அழ வேண்டும் போல் இருக்கும்.

பொதுவாக பெரியம்மா திட்டுவதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. அவள் திட்டி அவன் எவ்வளவோ கேட்டு விட்டான். காலையில் படுக்கையைவிட்டு எழுந்தது முதல் பெரியம்மா அவனைத் திட்டிக் கொண்டே தான் இருப்பாள். "உச்சி நேரம் வர்றப்போதான் பையன் படுக்கையைவிட்டே எழுந்திரிக்கிறது. டேய், இங்க பாரு, உன் மண்டையை ரெண்டா பொளந்தாதான் நீ சரியா வருவே" என்று பெரியம்மா அவனைப் பார்த்து சத்தம் போடுவாள்.

வாசலில் கிடக்கும் அம்மிக்கல்லுக்கு அருகில் அமர்ந்து பல் தேய்க்கும் போது தரையில் சிறிது தண்ணீர் பட்டுவிட்டால்கூட போதும், பெரியம்மா வழக்கமான தன் திட்டுதலை ஆரம்பித்து விடுவாள். "மூளை இல்லாதவனே, உன் முதுகெலும்பு ஒடிய வேலை செய்தா இந்தத் தரையை நீ உண்டாக்கினே?" என்று மனம் போனபடியெல்லாம் பேசுவாள்.

வாசலை அசுத்தமாக்கினால், கிணற்றில் ஒரு கல்லை வீசி எறிந்தால், செப்புக்குடத்தின் மீது கையால் தட்டினால்& எல்லாமே பெரியம்மாவுக்கு கோபம் வர வைக்கக்கூடிய விஷயங்கள்தான். இப்போது அவன் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருப்பதால் சற்று நிம்மதியாக இருக்கிறது. பகலில் அதிகம் தொந்தரவு இல்லை அல்லவா?

அக்கா பெரியம்மாவுக்கு இரண்டு உதைகள் கொடுத்தால் என்ன? ஆனால், பெரியம்மாவைப் பார்த்து பயப்படுவது அப்புவை விட அவனுடைய அக்காதான். அப்புவைத் திட்டும் போது அக்கா சில நேரங்களில் கூறுவாள்: "அம்மா அவனை அடிச்சே கொன்னுடுவாங்க..."

"என்ன சொன்ன....?"

அவளைப் பார்த்து பெரியம்மா தன் உடம்பை ஒரு ஆட்டு ஆட்டுவாள். அதற்குப் பிறகும் அவள் வெறுமனே இருக்கமாட்டாள். "அந்த அளவுக்கு அவன் உனக்கு சர்க்கரையா இருந்தான்னா, அதை உன்னோட நிறுத்திக்கோ... தெரியுதா?" என்பாள்.

"அவங்க குழந்தையோட அருமை அவங்கவங்களுக்குத்தான் தெரியும்."

அவள் அவனைத் தொடலாம் என்று ஆசையுடன் போனால்... அவ்வளவுதான்... அடுத்த நிமிடம் கையில் ஒரு பிரம்பை எடுத்துக் கொண்டு வேகமாக வருவாள் பெரியம்மா.

"அடியே... அவன்கிட்ட போகாதே. இதுக்குமேல என்னைப் பேசவச்சே அவ்வளவுதான்" என்று அவள் கத்துவாள்.

இவ்வளவு விஷயங்கள் நடந்த பிறகு அப்பு மெதுவாக வாசல் பக்கம் நடந்து போவான். பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சக்கனுடன் சேர்ந்து வயல் வெளிகளில் சுற்றித்திரிவான். சில நேரங்களில் பூசணிக்கொடிகளுக்கு மத்தியில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கும் சிவப்பு நிற பட்டுப்பூச்சியைப் பிடிப்பதற்காக முயற்சி பண்ணிப் பார்ப்பான். ஒருமுறை கூட அவன் அதைத் தன் கையால் பிடித்ததில்லை. பட்டுக் கோவணமணிந்த அந்தப் பூச்சி பயங்கர தந்திரசாலியாக இருக்க வேண்டும். நேரம் அதிகமான பிறகுதான் அவன் வீட்டிற்குள் மறுபடியும் வருவான். இதற்கிடையில் அவன் மனதில் நினைப்பான். 'அக்கா வடக்குப் பக்கம் இருக்கும் அறையின் ஜன்னல்படியில் நெற்றியை வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பாள்.'

மாலை நேரங்களில் கடவுள் பெயர் சொல்லி பிரார்த்தனை செய்யும் சிரமமான ஒரு வேலையும் அவனுக்கு இருக்கிறது. தாழ்வாரத்தில் நின்றவாறு அப்பு கடவுள் நாமம் சொல்லி பிரார்த்திப்பான்.

சிறிது நேரம் நமச்சிவாயம் சொல்ல வேண்டும். பிறகு அஸ்வதி பரணி. கொஞ்சம் கூட பிசகாமல் அவன் அவற்றைச் சொல்லுவான். மலையாள மாதம் பன்னிரண்டையும் கூறிவிட்டால், பிறகு அவனுக்கு அக்காவின் உதவி தேவைப்படும். ஆங்கில மாதங்களின் பெயர்களையும் ஒன்&டூ&த்ரியும் அக்காதான் சொல்லித்தர வேண்டும்.

அக்காவுக்கு ஆங்கிலம் தெரியும். முன்னறையில் இருக்கும் கிருஷ்ணனின் உருவமிருக்கும் காலண்டரில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ஆங்கில வார்த்தைகளை அக்கா நன்றாக வாசிப்பாள். அக்கா எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள்.

எல்லாம் சொல்லி முடித்தபிறகு அவன் அக்காவின் அருகில்போய் உட்காருவான். எதுவும் பேசமாட்டான். அக்காவின் விரல்கள் அவனுடைய தலைமுடிக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து பாட்டு காற்றில் மிதந்து வரும். பக்கத்து வீடு மிகவும் பெரியது. அங்கு அவன் சென்றதில்லை. வேலிக்கப்பால் நின்று பார்த்திருக்கிறான். அவ்வளவுதான். அந்த வீட்டில் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.

அந்த வீட்டிலிருந்து பாட்டு சத்தம் வந்து கொண்டிருப்பது சமீபகாலமாகத்தான். பாட்டு பாடவும் பேசவும் செய்கின்ற ஒரு பெட்டி அங்கு புதிதாக வந்திருக்கிறது. பெட்டி எப்படி பாடவும் பேசவும் செய்கிறது?

சக்கன் சொல்வான், அந்தப் பெட்டிக்குள் ஆட்கள் நுழைந்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்று. அவனுக்கு எதுவுமே தெரியாது. அவன் பள்ளிக்கூடம் போகிறவன் இல்லையே! அவனைக் கறவை மாடு கொம்பால் குத்தவே செய்யாது. அவன் பெரிய வீரன் என்பதற்காக அல்ல; அவனுடைய கையிலிருக்கும் பிரம்பைப் பார்த்துத்தான் மாடு அவனை நெருங்க பயப்படுவதே.

அந்தப் பாட்டுகள் திரைப்படங்களில் வருபவையாம். அப்பு இதுவரை திரைப்படம் பார்த்ததில்லை. அவனுடைய வகுப்பில் படிக்கும் யசோதாவும் மணியும் அவற்றைப் பார்த்திருக்கிறார்கள். திரைப்படத்தில் படங்கள் போட்ட ஒரு பையை மணி பார்த்திருக்கிறான்.

பாட்டைக் கேட்கும் போது அக்கா பைத்தியம் பிடித்தது மாதிரி ஆகிவிடுவாள். அதற்குப் பிறகு எந்தக் கேள்வி கேட்டாலும் அவள் பதில் சொல்ல மாட்டாள். அப்படி முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு அவள் உட்கார்ந்திருப்பதற்குக் காரணம் என்ன? சில நேரங்களில் அக்கா அப்படித்தான். பேசாமடந்தையாக மாறிவிடுவாள். அந்தச் சமயத்தில் அக்காவைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel