Lekha Books

A+ A A-

அக்கா - Page 4

akka

பலா மரங்கள் நிறைந்திருக்கும் மலையைத் தாண்டி அவன் எதையும் பார்த்ததில்லை. ஏழு கடல்களைத் தாண்டியிருக்கும் ஊர்கள், உயர்ந்துநிற்கும் மலைகளைக் கீறிக் கொண்டு செல்லும் புகைவண்டி... குடைகளும் பட்டாடைகளும் நிறைந்த அந்த ஊரில் இருக்கும் குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்!

ஜானுவின் தாய் அப்புவின் அக்காவிடம் விடைபெற்றாள். அவர்கள் ஒன்றாய்ப் படித்தவர்கள் ஆயிற்றே! ஜானு தன் தந்தையுடன் சேர்ந்து எத்தனையோ இடங்களுக்குப் போயிருப்பாள்!

பிறகு ஒரு தமாஷான விஷயம்... ஜானுவின் தந்தையைப் பற்றி அவளுடைய தாய் என்ன சொல்வாள் தெரியுமா? 'அம்முவோட அப்பா' என்பாள்.

ஜானுவின் தாய் அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததம் அக்காவின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. ஒருவேளை மலைகளைக் கீறிக் கொண்டு பாய்ந்து செல்லும் புகைவண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்று அக்கா ஆசைப்படுகிறாளோ?

அக்கா வேறெங்கும் போவதில்லை. சொல்லப்போனால் கோவில் குளத்திற்குக் கூட செல்வதில்லை. அவள் குளிப்பது கூட வீட்டிலிருக்கும் கிணற்றின் அருகில்தான். பகவதி கோவிலில் பாட்டும் மேளச் சத்த கேட்கும் போது, பெரியம்மா அங்கு போனாள். அப்புவும் போனான். அப்போது கூட அக்கா கோவிலுக்குப் போகவில்லை.

"அக்கா வரலியா பெரியம்மா?"

அதைக் கேட்டு பெரியம்மா கோபத்தில் சத்தம் போட ஆரம்பித்து விட்டாள்: "டேய், நீ பேசாம இருக்கியா இல்லியா?"

கடந்த வருடம் தான் அவன் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தான். இன்னும் இரண்டு மாதங்களில் தேர்வு வருகிறது. அதில் வெற்றி பெற்றால் அவன் இரண்டாம் வகுப்பில் போய் உட்காரலாம்.

ஜானு அவளின் தந்தை இருக்கும் ஊருக்குப் போய்ச் சேர்ந்தபிறகு பள்ளிக்கூடம் போவாளா? அங்கேயும் பள்ளிக்கூடம் இருக்குமே! கேளு வாத்தியார் அங்கு இருப்பாரா? அங்கு அவர் இல்லாமல் இருக்கட்டும். அடி வாங்காமல் அவள் இருக்கலாமே!

வகுப்பில் அப்புவிற்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன் பெயர் குட்டிசங்கரன். வயலுக்கு அந்தப் பக்கத்தில் அவனுடைய வீடு இருக்கிறது. அவர்கள் இருவரும் சேர்ந்துதான் பள்ளிக்கூடம் போவார்கள், வருவார்கள். கேளு வாத்தியார் சில வேளைகளில் குட்டி சங்கரனை குட்டிச்சாத்தான் என்று அழைப்பார். அதைக் கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். அந்தச் சிரிப்புச் சத்தம் அவனுடைய காதுகளில் விழும். என்ன இருந்தாலும், கேளு வாத்தியார் தரும் அடிகளைத் தாங்குவது கஷ்டம்தான்.

குட்டிசங்கரன் ஒரு முறை அவனுக்கு எலுமிச்சம் பழத்தைப் பரிசாகத் தந்தான்.

அந்தப் பழத்தை அவன் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தான். அவன் வீட்டில் முந்தைய நாள் கொஞ்சம் எலுமிச்சம் பழங்கள் இருந்தனவாம். அவனுடைய சின்ன அக்காவுக்கு அன்று திருமணமாம்.

"கல்யாணத்துக்கு எதுக்கு எலுமிச்சம்பழம்?"

"முட்டாள், இது கூடவா தெரியல?"

அவன் திரும்பவும் அப்புவைப் பார்த்து கேட்டான். ஏதோ ஏகப்பட்ட திருமணங்களைத் தான் பார்த்திருப்பதைப் போலிருந்தது அவனுடைய செயல். திருமணத்தைப் பற்றி குட்டிசங்கரன் விளக்கமாகவே சொன்னான். "ஏராளமான பேர் வீட்டிற்கு வருவார்கள். பந்தலில் வந்து உட்கார்ந்திருப்பவர்கள் மீது புட்டியில் பன்னீர் நிறைத்து தெளிக்க வேண்டும். பன்னீர் நல்ல வாசனை கொண்டதாக இருக்கும். பிறகு சந்தனத்தையும் எலுமிச்சம்பழத்தையும் எல்லோருக்கும் கொடுப்பார்கள்."

அவன் சொன்னதை அப்பு நம்பவேயில்லை. அவன் கூறியது அனைத்தும் பொய் என்று சொன்னால், அவன் கேட்பான்: "நீ கல்யாணத்தைப் பார்த்திருக்கியா?"

அப்போது அவன் 'இல்லை' என்று பதில் சொல்ல வேண்டி வரும்.

குட்டி சங்கரன் மகிழ்ச்சியடையட்டும் என்ற எண்ணத்துடன் அப்பு சொன்னான்: "எங்க அக்காவுக்குக் கல்யாணம் நடக்குறப்போ எலுமிச்சம்பழம் தருவோம்."

அதற்கு குட்டிசங்கரன¢ சொன்னான்: "அதுக்கு உனக்கு அக்கா வேண்டாமா?"

அதைக் கேட்டு அப்புவிற்கு பலமான கோபம் வந்தது. 'குட்டிச்சாத்தா' என்று உரத்த குரலில் சத்தமிட்டு கன்னத்தில் அடிக்க வேண்டும் போல் அவனுக்கு இருந்தது. குட்டிசங்கரன் அவனைவிட தோற்றத்தில் பெரியவன். அதனால் அவன் அதைச் செய்யவில்லை.

"என் அக்கா பிறகு யாருடா...?"

"முட்டாள்... நீ அக்கான்றது உன் அம்மாடா!"

அப்போது குட்டிசங்கரனின் முட்டாள்தனத்தைப் பார்த்து அப்புவிற்குச் சிரிப்பு வந்தது. காரணமில்லாமலா கேளு வாத்தியார் குட்டிச்சாத்தானுக்கு அறிவு இல்லை என்று கூறுகிறார்?

"போடா... உனக்கு அறிவுன்றது கொஞ்சம் கூட இல்ல."

"நான் சொல்றது உண்மை. எங்கம்மா சொன்னாங்க."

"உங்கம்மாவுக்கு என்ன தெரியும்?"

அதற்குப் பிறகு அவர்களுக்குள் சண்டை உண்டாகிவிட்டது. குட்டிசங்கரன் தான் தந்த ஏலுமிச்சம் பழத்தைத் திரும்பக் கேட்டான். எலுமிச்சம் பழத்தை அவனுக்கு முன்னால் எறிந்த அப்பு அவனைப் பார்த்து வக்கனை காட்டினான்.

பள்ளியை விட்டு வெளியே வரும்போது அவன் மனதிற்குள் நினைத்தான்& 'அக்கா எப்படி அம்மாவாக முடியும்? அவனுக்கு அம்மா, அப்பா இருவருமே இல்லை. அக்காவும், பெரியம்மாவும் மட்டுமே இருக்கிறார்கள். இதில் பெரியம்மாவைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள முடியாது. 'டேய், அதைச் செய்ய வேண்டாம். டேய், இதைச் செய்ய வேண்டாம்... டேய் உன் தலையைப் பாக்குறப்போ..' என்று கத்துவாள்.

அவனுக்கு அக்கா மட்டும் போதும். அப்படியென்றால் நல்ல அக்காவை அம்மா என்று சொல்லும் குட்டிச்சாத்தானை என்ன செய்வது?

அவனுக்கு அம்மா வேண்டாம்.

அம்மா இருந்தால் உண்டாகக்கூடிய பிரச்சினைகளை அவன் நன்கு அறிவான். அக்காவின் தாய்தானே பெரியம்மா? அப்படி இருக்கும் போது அக்கா எப்போதாவது மன சந்தோஷத்துடன் இருக்க முடிகிறதா?

கடந்த நான்கைந்து நாட்களாக அக்கா இரவு, பகல் எந்நேரமும் அழுதவண்ணம் இருக்கிறாள். பெரியம்மா அப்படியொன்றும் திட்டியதாகவும் தெரியவில்லை. எனினும் அவள், ஏனோ அழுதவண்ணம் இருக்கிறாள்.

'இந்த அக்காவுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?'

அக்காவுக்கு அப்புமீது எந்த வருத்தமுமில்லை. இரவு நேரத்தில் கட்டிப்பிடித்து படுத்திருக்கும் போது அக்கா பல விஷயங்களையும் சொன்னாள். அவள் சொன்னது கதை அல்ல. கதை கேட்பதென்றால் அப்புவிற்கு மிகவும் பிடிக்கும். அக்காவிற்கு நிறைய கதைகள் தெரியும். மாணிக்கக் கல்லைத் தேடிக் கண்டுபிடித்த இளவரசனின் கதை... அந்தக் கதையைக் கேட்ட பிறகுதான் மாணிக்கக்கல்லைப் பார்க்க நேர்ந்தால் அதை எப்படி ஒளித்து வைக்க வேண்டும் என்ற விஷயத்தையே அப்பு தெரிந்து கொண்டான். அந்த மாணிக்கக்கல்லை சாணத்திற்குள் மறைத்து வைக்க வேண்டும். அப்படி அதை மறைத்துவிட்டால், ஒளி வெளியே தெரியாது. அதற்குப் பிறகு கல்லாக மாறிய இளவரசியைப் பற்றிய கதை... உயிர் வாழ்வதற்காக குழந்தையை அறுத்து கல்லில் இரத்தம் ஒழுகச் செய்ததைக் கேட்ட போது அவனுக்குத் தாங்க முடியாத அழுகை வந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel