Lekha Books

A+ A A-

அக்கா - Page 6

akka

வாசலில் அப்போதும் பேச்சு நடந்து கொண்டிருந்தது. சங்கரன் நாயரும் பெரியம்மாவும் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் தனிப்பட்ட முறையில் அந்த உரையாடல் நடப்பதைப் போலிருந்தது. அதனால்தானோ என்னவோ மிகவும் மெதுவான குரலில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எது வேண்டுமானாலும் நடக்கட்டும்& துடைப்பம் எங்கு போனது? ஓரத்தில் பதுங்கியிருக்கும் கொம்பு மீசைக்காரனை ஏதாவது பண்ண வேண்டுமே!

துடைப்பத்தைத் தேடி சமையலறைக்குச் சென்றபோது அங்கு அக்கா இருந்தாள். சிறிது நேரத்திற்கு முன்புதானே அக்கா சங்கரன் நாயரின் பஞ்சாயத்தைக் கேட்பதற்காகப் போனாள்? அக்காவிடம் துடைப்பம் எங்கே என்று கேட்டபோது அப்புவை அப்படியே வாரி எடுத்துத் தூக்கிக் கொண்டாள். தொடர்ந்து நெற்றியிலும் தலையிலும் முத்தங்கள் பதித்தாள். அக்காவின் கண்களிலிருந்து நீர் வழிந்து அவனுடைய முகத்திலும் தலையிலும் விழுந்தது.

சங்கரன் நாயர் அப்படியொன்றும் அனாவசியமாகத் திட்டியதாகத் தெரியவில்லை. கோபமாக ஏதாவது சொன்னது மாதிரியும் தெரியவில்லை. பிறகு எதற்கு அக்கா அழ வேண்டும்?

இந்த அக்காவுக்கு உண்மையிலேயே பைத்தியம்தான்...

இரவில் அவள் கேட்டாள்: "அக்கா இல்லைன்னா நீ பெரியம்மா பக்கத்துல படுத்துக்குவியா?"

"அக்கா, உன் கூடத்தான் எப்பவும் படுப்பேன்."

"நான் போயிட்டா?"

"அக்கா, நீங்க எங்கே போறீங்க?"

அதற்கு அக்கா பதில் எதுவும் கூறவில்லை. திரும்பத்திரும்ப அவன் கேட்டபிறகு, பதில் வந்தது.

"எங்கேயும் போகல. சும்மா விளையாட்டுக்காகச் சொன்னேன்...."

அதற்குப் பிறகுதான் அப்புவிற்கு நிம்மதியாக இருந்தது.

ஒரு மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அவனுக்கு அடை கிடைத்தது. அது வழக்கமாகக் கிடைக்கக்கூடியதல்ல. அப்படி விசேஷமாக ஏதாவது கிடைத்தால், அதை சக்கனின் முன்னால் வைத்து தின்ன வேண்டும் என்ற ஆசை அப்புவிற்கு உண்டு. அந்தச் சக்கனின் மன எரிச்சலை அப்போது பார்க்க வேண்டும். அவனுக்கு அப்போது பயங்கர பொறாமையாக இருக்கும். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எதையும் சாப்பிடக்கூடாது என்று அக்கா பலமுறை கூறியிருக்கிறாள். இருந்தாலும் சக்கனுக்கு சாட்டை செய்யத் தெரியும். கறவைப்பசு அவனை மட்டும் குத்தவே குத்தாது. சொல்லப்போனால் தன் விருப்பப்டி அவன் கறவை மாட்டின் கழுத்தைக் கட்டிப்பிடித்து விளையாடுவான்.

அடையைத் தின்னாமல் ஒளித்து வைத்துக் கொண்டு அக்காவுக்குத் தெரியாமல் அவன் வாசலை விட்டு இறங்கினான். சக்கன் வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை இழுத்துக் கொண்டிருந்தான். எப்போதும் போல 'எனக்குக் கொஞ்சம் தா' என்று அப்புவைப் பார்த்து அவன் கெஞ்சவில்லை.

"எனக்கு பெரியம்மா தந்தாங்களே!" என்றான்.

"பொய் சொல்ற"& அப்பு சொன்னான்.

"அவங்க வந்தப்போ சாயப் பொடி, சர்க்கரை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்ததே நான்தான்..."

"யாரு வந்தது?"

"விருந்தாளிங்க... இதோ பாரு..."

சக்கன் தன்னுடைய மடியை அவிழ்த்துக் காட்டினான். அதில் மூன்று பீடித் துண்டுகள் இருந்தன.

"அங்க வந்த தம்புரான் இழுத்தது இதெல்லாம்..."

பீடி பிடிக்க வேண்டுமென்றால் அவர் பெரிய மனிதராக இருக்க வேண்டும். சங்கரன் நாயருக்கு அப்பள வடிவத்தில் தலையில் முடி இருக்கிறது என்றாலும் கூட, அவரால் பீடி பிடிக்க முடியாது. அவர் சென்ற முறை வந்தபோது பெரியம்மாவைப் போல வெறுமனே& வெற்றிலைப் பாக்குத்தான் போட்டார்.

விருந்தினர்கள் எங்கே? அக்காவைப் பார்த்துக் கேட்கவேண்டுமென்று அப்பு வீட்டிற்குள் ஓடினான். அக்கா வீட்டின் பின் பக்கத்தில் இருந்தாள். பெரியம்மா காய்கறி வெட்டிக் கொண்டிருந்தாள்.

"எங்கே பெரியம்மா, விருந்தாளிங்க?"

"எந்த விருந்தாளிங்கடா? இங்கே யாருடா விருந்தாளியா வந்தது?

எமன்தான் விருந்தாளியா வரணும்..." யார் வந்தது என்று சக்கன் கூறவில்லை. எமனாம் எமன். விருந்தாளி யார்? அதைத்தான் அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

"என்னடா கேள்வி கேக்குற நீ? உன்னை அடிச்சாத்தான் நீ சரியா வருவே..." அவன் வாயே திறக்கவில்லை. விருந்தாளி வந்ததைப்போன்ற ஆரவாரத்தைக் காட்டினாள் பெரியம்மா.

அதற்கு மேல் அவன் அதைப் பற்றி விசாரிக்கவில்லை.

இரவில் ஒரு தூக்கம் முடித்து கண்களைத் திறந்த போது பாயில் அப்புவிற்கு அருகில் படுத்திருந்த அக்காவைக் காணவில்லை. அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அக்கா பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு என்னென்னவோ சாமான்களையெல்லாம் அடுக்கிக் கொண்டிருந்தாள். அறையில் தாழம்பூவின் வாசனை கமழ்ந்து கொண்டிருந்தது. அவன் தூங்கும் போது அருகில் அக்கா இருந்தாள். பிறகு எதற்கு அவள் எழ வேண்டும்? இரவில் விளக்கை எரிய வைத்துக் கொண்டு பெட்டியில் முண்டையும் ப்ளவ்ஸ்களையும் ஏன் எடுத்து வைக்க வேண்டும்? மெதுவாக எழுந்து எந்தவித ஓசையும் உண்டாக்காமல் நடந்து சென்று அக்காவின் கழுத்தைப் பிடித்து பயமுறுத்த வேண்டுமென்று அவன் நினைத்தான். ஆனால், அவனால் எழ முடியவில்லை. கண்கள் மெதுவாக மூடின. இளவரசன் மாணிக்கக் கல்லைக் கண்டெடுத்த காடு அவனுடைய ஞாபகத்தில் வந்தது. தாழம்பூவின் மணம் வேறு. அவன் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

காலையில் அக்கா தட்டி எழுப்பிய பிறகுதான் அவன் எழுந்தான். கிணற்றுக்கருகில் குளித்துவிட்டு கஞ்சி குடித்து முடித்தவுடன் அக்கா அவனுக்கு ஆடைகளை அணிவித்தாள். தலையை வாரும் போது அக்கா சொன்னாள்: "பள்ளிக்கூடத்துக்குப் போறப்போ நல்லா பார்த்துப் போகணும். மாடுகள் வழியில வரும்."

அது எப்போதும் அவள் சொல்வதுதான்.

அவன் 'சரி' என்று தலையை ஆட்டினான்.

"பசங்ககூட சண்டை போடக்கூடாது."

"ம்..."

"பெரியம்மா உன்னை நல்லா பார்த்துக்குவாங்க..."

"ம்..."

"பெரியம்மா சொல்றபடி சேட்டை பண்ணாம இருக்கணும்!"

"பெரியம்மா மோசம். எனக்கு அக்கா, நீங்க இருந்தா போதும்."

"என் கண்ணு..."

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க அவள் அப்புவைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு தடுமாறிய குரலில் அழைத்தாள்: "என் கண்ணு..."

அக்கா அழுதுவிடுவாளோ என்று பயந்தான் அப்பு. இல்லை. இந்த முறை அக்கா அழவில்லை. அதனால் அவனுக்கும் பதைபதைப்பு உண்டாகவில்லை.

அப்போது அவனுக்கு என்னவோ சொல்ல வேண்டும் போல் இருந்தது.

"அப்போ, அக்கா..."

"நீ என்னை அம்மான்னு கூப்பிடு..."

அது அவனுக்குப் பிடிக்கவில்லை.

"எதுக்கு அப்படி நான் அழைக்கணும்?"

"ஒண்ணுமில்ல... சும்மாதான்..."

"என் அம்மா எங்கே இருக்காங்க அக்கா?"

அக்கா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. அவளின் கைகள் மெதுவாக அவனிடமிருந்து விலகின. அவன் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு ஒன்றுமே பேசாமல் நின்றிருந்தான். சிறிது நேரம் கழித்து ஆணியில் மாட்டப்பட்டிருந்த பையை எடுத்து அவன் கையில் தந்த அக்கா சொன்னாள்: "சரி... நீ பள்ளிக்கூடத்திற்குப் புறப்படு..."

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel