Lekha Books

A+ A A-

அக்கா - Page 3

akka

மேற்குப் பக்க வீட்டிலிருக்கும் ஜானுவிற்கு ஒரு மாமா இருக்கிறார். அவர் எங்கோ தூரத்தில் இருக்கிறார். ஏழு கடல்களைத் தாண்டிச் சென்றால்தான் அவர் இருக்கும் இடத்தை அடைய முடியும். அங்கு பட்டு ஆடைகளும் குடைகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன. அந்த மனிதர் வந்திருந்த போது, ஜானுவிற்கு இவை இரண்டுமே கிடைத்தன. அவர் கொண்டு வந்த குடை மிகவும் அழகாக இருந்தது. அது அப்படியொன்றும் கனமாக இல்லை. அவள் தன் தாயுடன் கோவிலுக்குச் செல்லும்போது மட்டும்தான் அந்தக் குடையையே கையில் எடுப்பாள். அவளுடைய மாமா வாங்கி வந்திருந்த ஆடையை இன்னும் தைக்காததால், அதை அவள் தன் பெட்டியிலேயே வைத்திருந்தாள்.

வீட்டிலிருக்கும் அவளுடைய மாமா அவளுக்கு இதுவரை எதுவும் கொடுத்ததில்லை. அவளுக்கு மிகவும் பிடித்தமானவர் ஏழு கடல்களைத் தாண்டி வந்த மாமாதான். அவர் இனிமேல் அடுத்த வருடமும் வருவார்.

தன்னுடைய மாமா வேறுவிதமான குணத்தைக் கொண்ட மனிதராக இருப்பதைப் பார்த்து உண்மையிலேயே வருத்தப்பட்டான் அப்பு. அவர் இனிமேல் வரமாட்டார் என்று அக்கா சொன்னாள். அவர் வேலை செய்கின்ற இடத்தில் குடை கிடைக்குமா? அப்படியே அது கிடைத்தாலும், அவர் அதை இங்கு கொண்டுவருவாரா? அவர் பார்வையைப் பார்க்க வேண்டுமே! பெரியம்மாவையே அந்த ஆள் அழ வைத்து விட்டாரே! வீட்டிற்குள் அவர் வராததற்குக் காரணம் சண்டையாக இருக்கலாம். ஆமாம்... யாருடன் சண்டை?

இனி வரும்போது அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்தான் அப்பு. ஆனால், அவனுடைய மாமா வரவேயில்லை.

மாமா எங்கிருக்கிறார்? அக்கா அதைப் பற்றி சொல்லவேயில்லை. ஜானுவிற்கு அப்புவின் மாமாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவனுக்கு ஒரு மாமா இருக்கிறார் என்பதை நம்புவது கூட அவளுக்கு மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருந்தது. சக்கனுக்கு  அவனுடைய மாமாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தது. "அவருக்கு அந்தக் கரையில வீடும் நிலமும் இருக்கு" என்று அவன் சொன்னான்.

சக்கன் அப்புவின் மாமாவைப் பார்த்திருக்கிறான். அவன் அந்த வழியே போகும் போது புதிதாக உருவாக்கிக் கொண்டிருந்த வீட்டிற்கு ஓடு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

"மாமா ஏன் அங்க வரல?"

"அக்கா தப்பு பண்ணிட்டாங்கள்ல?"

எதற்காக அக்கா தப்பு பண்ணினாள் என்ற விஷயம் சக்கனுக்கும் தெரியவில்லை. சிந்தித்துப் பார்க்கும் போது அப்புவிற்கு எதுவுமே புரியவில்லை. அவனுடைய மனதில் பலவிதப்பட்ட சந்தேகங்களுக்கு விடை கிடைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதை அவன் யாரிடம் கேட்பான்?

அக்காதான் பொதுவாக அவனுடைய எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கூறிக் கொண்டிருப்பாள். இரவில் படுத்திருக்கும் பொழுது அவன் கேட்கும் சந்தேகம் ஒவ்வொன்றிக்கும் அவள் பதில் கூறுவாள்.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது வடக்குப் பக்கமிருக்கும் அறையில் பாய் விரிக்கப்பட்டிருக்கும். சிவப்பு நிறத்தில் பெரிய வெள்ளைநிறப் பூக்கள் போடப்பட்டிருக்கும் ஒரு பழைய புடவை பாய்க்குமேல் விரிக்கப்பட்டிருக்கும். அதில் படுக்கத்தான் அவனுக்கு எப்போதும் பிரியம். அது அவனுடைய அக்காவின் புடவை என்பதுதான் காரணம்.

அக்காவிடம் இன்னொரு புடவையும் இருக்கிறது. அதை அவள் பெட்டியில் மடித்து வைத்திருக்கிறாள். அக்கா அதை எடுத்து உடுத்தி அவன் பார்த்ததேயில்லை. அந்தப் பெட்டியைத் திறக்கும் போது நல்ல ஒரு வாசனை வரும். தாழம்பூவின் மணமது. தாழம்பூ வாசனை கொண்ட அந்தப் புடவையை உடம்பில் அணிந்து கொண்டு அக்கா நடப்பதைப் பார்க்கும் போது நன்றாகவே இருக்கும் என்று நினைத்தான் அவன்.

சாப்பிட்டு முடித்தவுடன் படுக்கையில் போய் படுத்தாலும், அக்கா வரும்வரையில் அப்பு உறங்காமலே இருப்பான். சமையலறையைப் பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டு பாத்திரங்களைக் கழுவி முடித்த பிறகே அக்கா அங்கு வருவாள். அக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்தவாறே அவன் தன் மனதில் இருக்கும் சந்தேகங்கள் ஒவ்வொன்றையும் வெளியிடுவான். ஜானு அன்று சொன்னது பொய்யாக இருக்குமோ என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவனுடைய நோக்கம்.

சில நேரங்களில் அவள் என்னவெல்லாம் பொய் சொல்கிறாள்! ஒன்பது குட்டிகளைத் தின்ற ஒரு பாம்பு அவளின் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்தில் இருக்கும் பாம்புப் புற்றில் இருக்கிறதாம். அது எவ்வளவு பெரிய பொய்! ஒரு பாம்பின் வயிற்றில் ஒன்பது குட்டிகள் இருக்க முடியுமா?

ஒரு முறை ஜானு சொன்னாள், அவள் கடவுளைப் பார்த்தாளாம்.

அவள் சொன்னதில் அப்புவிற்கு சிறிது கூட நம்பிக்கையில்லை. அப்பு கடவுளைப் பார்த்ததில்லை. சக்கன் பார்த்ததில்லை. அக்கா கூட பார்த்ததில்லை.

ஜானு இரவு நேரத்தில் கடவுளைப் பார்த்தாளாம். கோவில் திருவிழாவின் போது பார்த்த பூசாரிக்கு இருந்ததைவிட தாடியும் மீசையும் பெரிதாக இருந்ததாம் கடவுளுக்கு. அவள் சொல்வது பொய்யா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அப்பு கேட்டான்: "தலையில என்ன இருந்துச்சு?"

"யார் தலையில?"

"கடவுளோட தலையில?"

ஜானு சிறிது நேர யோசனைக்குப் பிறகு சொன்னாள்: "தலை முடி...."

"புப்புப்பூய்..."& அப்பு உரத்த குரலில் சொன்னான்: "கடவுளோட தலையில கிரீடம் இருக்கும்." அதை ஜானு பார்த்ததில்லை. அவள் உண்மையாகவே தலை குனிந்துவிட்டாள்.

பொய் சொல்லக்கூடியவளாக இருந்தாலும், அவளை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவள் இருந்தால் அவனுக்கு விளையாடுவதற்கு ஒரு ஆள் கிடைத்த மாதிரி இருக்கும். இப்போது அவள் இல்லை. ஜானுவை அவளுடைய தந்தை அழைத்துக்கொண்டு போய்விட்டார். காடும் மலைகளும் நிறைந்த ஒரு இடத்திற்கு அவர்கள் போய் விட்டார்கள். ஆனால், கடலைக் கடக்க வேண்டாம். ஏழு கடல்களையும் கடந்து போக வேண்டியது அவளுடைய மாமா இருக்கக் கூடிய இடத்திற்குத்தானே? தன் தந்தையுடன் போகும் போது அவள் புகை வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். புகைவண்டி பெரிய மலைகளின் வயிற்றைக் கீறிக் கொண்டு பாய்ந்தோடும்.

ஊரை விட்டுச் செல்வதற்கு முந்தையநாள் ஜானு அப்புவின் வீட்டிற்கு வந்தாள். அப்போது அவள் தாயும் உடனிருந்தாள்.

"நாங்க நாளைக்கு ட்ரெயின்ல ஏறிப்போறோம்" என்று அவள் சொன்னபோது, அவள் மீது அவனுக்குச் சிறிது பொறாமை உண்டானதென்னவோ உண்மை. அவள் எப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்க்கலாம்! அவள் சொல்லும் இடத்தில் நல்ல ரப்பர் பந்துகளும் சைக்கிள்களும் இருக்கலாம்.

எங்காவது போனால் நன்றாக இருக்குமென்று நினைத்தான் அப்பு. யாராவது வந்து அழைத்துக் கொண்டு போகாமல் அவனால் என்ன செய்ய முடியும்?

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel