Lekha Books

A+ A A-

அக்கா - Page 5

akka

இப்போது அக்கா கதை எதுவும் கூறுவதில்லை. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்திருப்பாள். சிறிது நேரம் சென்ற பிறகு கேட்பாள்: "அப்பு, தூங்கிட்டியா?"

"இல்ல..."

"நீ நல்லா படிக்கணும்..."

"ம்..."

"நீ நல்ல பையனா இருக்கணும்."

"ம்..."

"பெரிய ஆளா ஆன பிறகு அக்காவை நல்லபடியா பார்த்துக்குவியா?"

இதென்ன அர்த்தமே இல்லாத கேள்வி! இருந்தாலும் அவன் மெதுவான குரலில் கூறுவான்: "ம்..."

"அக்காவுக்கு இருக்குறது நீ மட்டும்தான்..."

இரண்டு மூன்று நாட்களாகவே அக்காவுக்குச் சரியாக உடல்நலமில்லை. குளிப்பாட்டும்போதும், சாதத்தைப் பிசைகிறபோதும் தலையை வாரும்போதும் அவள் எதுவுமே பேசவில்லை. வெறுமனே அவனுடைய முகத்தையே பார்த்த வண்ணம் இருப்பாள். பிறகு என்ன நினைப்பாளோ, எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருப்பாள்.

'இந்த அக்காவுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு...'

மதிய நேரத்தில் அக்காவும் பெரியம்மாவும் நடுவிலிருக்கும் அறையில் தரையில் படுத்திருக்கும் பொழுது, பெரியம்மா பேசுவது கேட்டது.

"அப்புவைப் பற்றி நினைச்சு நீ மனசைத் தேவையில்லாம புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்."

அதற்கு அக்கா ஒன்றும் சொல்லவில்லை.

"நடந்தது நடந்திருச்சு. அதையும் இதையும் நினைச்சுக்கிட்டு இருந்தா, சரிப்பட்டு வராது. இது நடந்தாதான் எல்லாம் சரியா வரும்."

அதற்கும் அக்கா எந்த பதிலும் கூறவில்லை.

"அதை சங்கரன்நாயர் பார்த்துக்குவார். அந்த அளவுக்குச் சரியான ஆளுதான் அவர்."

"அம்மா, நீங்க என்ன சொல்றீங்க?"

"உன்னை..."& பெரியம்மாவின் குரல் வேறுமாதிரி ஒலித்தது. "வெறுமனே ஏதாவது பேசிக்கிட்டு இருக்காதே. இதுவும் நடக்காமப் போனா பிறகு வாழ்க்கை முழுவதும் இப்படியேதான் இருக்கணும்."

"இது சரியில்லம்மா..."

"அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்."

"அதுனால வர்ற கெட்ட பேரு எனக்குத்தானே?"

"அதை சங்கரன்நாயர் பார்த்துக்குவாரு. வயநாட்டுல இருக்குற ஆளுக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?"

"அம்மா, அப்புவைப் பற்றி..."

"அப்பு கிப்புன்னு ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காதே. உன்கிட்ட நான் சொல்றேன். அர்த்தமில்லாம இப்படி ஏதாவது பேசுறதை உடனே நிறுத்து..."

அக்கா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

மீண்டும் பெரியம்மா சொன்னாள்: "எல்லா பொறுப்புகளையும் சங்கரன் நாயரே ஏத்துக்கிட்டாரு..."

யார் சங்கரன் நாயர்? அவ்வளவு பெரிய ஆளான அவரை நான் பார்க்க வேண்டுமே!

சில நாட்கள் கழித்து ஒருநாள் அந்த சங்கரன் நாயர் வீட்டிற்கு வந்தார்.

பார்க்கும் பொழுது அவர் ஒரு நல்ல மனிதராகவே தோன்றினார். அவர் திண்ணையிலமர்ந்து பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பளத்தைப் போல வட்டமாக இருந்த நரைத்துப் போன தலைமுடியை அவன் பார்த்தான்.

அவருக்கு பெரியம்மாவிடம் எவ்வளவோ விஷயங்கள் பேச வேண்டியிருந்தது.

அதையெல்லாம் கேட்க வேண்டும் என்ற அவசியமே அவனுக்கு இல்லை. வயநாட்டில் வைத்து திருமணத்தை நடத்த போகிறார்களாம். நடத்திக் கொள்ளட்டும். பையனின் காதில் விஷயம் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். பார்த்துக் கொள்ளட்டும். அப்புவைப் பொறுத்தவரை அந்த அப்பளம் போன்ற வட்டத்தில் இருக்கும் தலைமுடியை நன்றாய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் தான். அந்த வட்டத்திற்கு நடுவில் நான்கு நீளமான தலைமுடிகள் இருந்தால் நன்றாக இருக்குமென்று அவன் நினைத்தான். பள்ளிக்கூடத்திலிருக்கும் தோட்டத்திற்கு நடுவில் சட்டியில் செடியை வைத்திருப்பதைப் போல் அது பார்ப்பதற்கு அழகாக இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் தலையை வெளியே நீட்டி மீண்டும் அந்த மனிதரின் தலையை நன்றாகப் பார்த்தான்.

சங்கரன்நாயர் தன்னுடைய குரலை மிகவும் தாழ்த்தினார். பெரியம்மா திரும்பி அப்புவைப் பார்த்தாள்.

"அப்பு... வாசல்ல போய் விளையாடு..."

அவன் போனான். 'ஓ... அவர்களுக்கிடையே ஏதோ முக்கிய சமாச்சாரம்!’

வயநாட்டில் திருமணம் நடப்பதால் அவனுக்கென்ன? ஒரு எலுமிச்சம்பழம் கூட கிடைக்காது. யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். அதனால் அப்புவிற்கு என்ன பாதிப்பு உண்டாகப் போகிறது?

உள்ளேயிருக்கும் அறையில் அரிசி போட்டு வைத்திருந்த பெட்டியை அவன் திறந்து மூடினான். அந்தப் பெட்டிக்குள் சிறகு முளைக்காத ஒரு கரப்பான்பூச்சிக் கண்களை அகலவிரித்து பார்த்துக் கொண்டிருந்தது. ஜன்னலில் ஏறி சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடி ஜாடியைப் பார்த்தது.

சமையலறையில் பீங்கான் டம்ளர் கீழே விழும் சத்தம் கேட்டது. அங்கு அக்கா இருக்கிறாள்.

பெரியம்மா அழைத்தாள். "மாளு..."

டம்ளர் கீழே விழுந்ததற்கு அவள் திட்டுவாளோ?

"அடியே மாளு..."

அக்கா வாசலில் வந்து நின்றாள்.

அக்காவிடம் இப்போது பெரியம்மா என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்க பயந்தவாறு அப்பு காதுகளைத் தீட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

"எல்லாம் அம்மா சொன்னாங்கள்ல?"

சங்கரன்நாயர்தான் கேட்டார்.

"எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். அந்த ஆளு நல்ல மனிதர். தனியா இருக்காரு. இது எதுவும் அந்த ஆளுக்குத் தெரியப் போறது இல்ல..."

அதற்கு அக்கா எந்தப் பதிலும் கூறவில்லை.

"எல்லா விஷயத்தையும் அங்கேயே நடத்துவோம். நாலு ஆளுங்களைக் கூப்பிடணும்."

"அது நமக்குச் சரிப்பட்டு வராதுன்னு நான் சொல்லலியா?" பெரியம்மா சொன்னாள்.

"நீங்க என் சொந்தக்காரங்க. உங்களுக்குன்னு யாரும் இல்ல. என்னை எடுத்துக்கிட்டா, நான் பத்து இருபது வருடமா அங்கே இருக்குறேன். இப்போ தேவகி அம்மாவுக்கு விஷயம் புரியுதா?"

"என்ன சொல்றீங்க, சங்கரன்நாயர்?"

"அதாவது, என் இடத்துல எளிமையா கல்யாணம் வச்சிக்கிறதுல என்ன தப்பு இருக்கு?"

"அது சரிதான் சங்கரன் நாயர். நீங்கதான் எனக்குன்னு இருக்குற ஒரே ஆதரவு!"

"அதுனாலதான் நான் இந்த விஷயத்தை இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு வர்றேன். அந்த ஆளு பொண்ணைப் பார்க்கணும்னு சொன்னாரு. தெரியுதா?"

பெரியம்மா அதற்கு என்னவோ முணுமுணுத்தாள்.

"இந்த விஷயம் யார் காதுலயும் விழாம நான் பார்த்துக்குறேன்."

"எல்லாம் சரி நடந்தா கீழே இருக்குற கோவில்ல பாயசம் போடறதா நேர்ந்திருக்கேன்."

"எல்லாம் ஒழுங்கா நடக்கும். மகளுக்கு எந்த கஷ்டமும் இருக்காது. அந்த ஆளுக்கு அரசாங்கத்துல இருந்து கிடைச்ச நாலு ஏக்கர் நிலமிருக்கு. அதைச் சரி பண்ணினா கடைசி வரை சுகமா வாழலாம்!

அப்போது திண்ணைக்குக் கீழே காலியாக வைக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளத்தில் உட்கார்ந்திருந்த ஒரு கொம்பு உள்ள பூச்சியை அப்பு பார்த்தான். அதை வெறுமனே விடக்கூடாது. அடிக்கலாம் என்று பார்த்தால் துடைப்பத்தைக் காணவில்லை. ஒரு ஈர்க்குச்சி இருந்தால் கூட போதும், அதை ஒரு வழி பண்ணிவிடலாம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel