Lekha Books

A+ A A-

மரணத்தின் சறுக்கல்

maranaththin-sarukkal

ப்ளாஸ்டிக் விரிப்பு போடப்பட்டிருந்த மேஜைக்கு இரு பக்கங்களிலும் அமர்ந்து 'அன்னபூர்ணா'வின் மாடியில் இருந்த அறையில் நாங்கள் உணவருந்திக் கொண்டிருந்தோம். எப்போதும் வரும் நேரத்தைவிட சற்று முன்பே வந்து விட்டது காரணமாக இருக்கலாம்& நாங்கள் மட்டுமே அங்கு இருந்தோம். என்னுடைய நண்பர் தனக்கு விருப்பமான இருக்கையில் அமர்ந்திருந்தார். பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் என் நண்பர் எதிரில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய சில்க் சட்டையின் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

கீழே தெரு இருக்கிறது. வண்டியிலிருந்து இறங்கி வரும் பயணிகள் அதன் வழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதும் இருப்பதை விட அதிகமான தட்டுகள் அன்று மேஜை மீது பரவிக்கிடந்தன. ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதற்கிடையில் என்னுடைய நண்பர் சொன்னார்: "நல்லா சாப்பிடணும் வாசு. நாளைக்கு நாம ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடப் போறது இல்லையே!"

ராமகிருஷ்ணன் சொன்னதென்னவோ உண்மைதான்.

இரண்டு மாதங்கள் நகரமென்றோ, கிராமமென்றோ சொல்ல முடியாத இந்த ஊரில் தங்கியிருந்த நான் நாளை இங்கிருந்து கிளம்புகிறேன். இது மனப்பூர்வமாக நான் விருப்பப்பட்ட ஒன்றல்ல. வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தத் தொழிலை நான் ஏற்றுக் கொண்டபோது, எனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் சொல்கிறபடி நான் நடக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன் அல்லவா? அப்படியென்றால் இடமாற்ற உத்தரவு வரும்போது, அதன்படி நான் நடக்கத்தானே வேண்டும்!

ஆவி பறந்து கொண்டிருந்த மாமிசத் துண்டை கடித்துக் கொண்டே அவர் சொன்னார்: "இந்த வாழ்க்கையே மகிழ்ச்சியானது தான்."

"நிச்சயமா..." நான் உணர்ச்சி இல்லாமல் சொன்னேன்.

சாப்பிடுவதற்கு மத்தியில் என் நண்பர் தொடர்ந்து பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்.

நான் என்னவோ யோசனையில் இருந்தேன்.

தனியாகவும் கூட்டமாகவும் கீழே இறங்கும் தெருவழியாகப் பயணிகள் போய்க் கொண்டிருந்தார்கள்.

உண்பதற்கிடையில் எத்தனையோ விஷயங்களைப் பற்றி நான் பேச வேண்டியிருக்கிறது.

எனக்கு ஏனோ அன்று மனதில் ஆர்வமே இல்லை. பேசவேண்டும் என்று நினைக்கிறேன்& பல விஷயங்களைப் பற்றியும். ஆனால் முடியவில்லை.

நான் மீண்டும் சாலையைப் பார்த்தேன். மகிழ்ச்சியடைய முடியாத ஒரு காட்சி. திறந்திருக்கும் ஜன்னல் வழியாக நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு கீழே ஒரு சிறுவன் நின்றிருக்கிறான். ஆசையும் பசியும் தெரிகின்ற இரண்டு கண்கள்.

என் நண்பரும் அந்தக் காட்சியைப் பார்த்தார். அவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

"இங்கே உட்கார்ந்து நிம்மதியா சாப்பிடக்கூட முடியல."

எனக்குச் சாப்பிட்டது போதும் போல் இருந்தது. இலையில் இன்னும் சாதம் மீதமிருந்தது.

கீழே நின்றிருந்த சிறுவனின் கண்கள் இப்போதும் எங்களைப் பார்த்துக் ª££ண்டிருந்தன. அவனுக்கு வயது பதினைந்து அல்லது பதினாறு இருக்கும். கிழிந்து போன பனியனை அணிந்திருந்தான். காற்சட்டை... வாடிப் போயிருந்த முகத்தில் நெருப்பு போல சிவந்திருந்த இரண்டு கண்கள்.

ஆசையும் பசியும்.

கீழே ஹோட்டல் பணியாட்களில் யாரோ ஒருவரின் உரத்த குரல் கேட்டது. அந்தப் பையனை யாரோ திட்டுகிறார்கள் என்பது புரிந்தது. அவன் செய்வது தவறுதான். மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது என்றால்...

அவன் அந்த இடத்தைவிட்டு நகர்வதாகத் தெரியவில்லை.

"நீ போறயா இல்லையாடா?"

மீண்டும் உரத்த குரல்...

அவன் மெதுவாக அந்த இடத்தைவிட்டு அகன்றான். போவதற்கு முன்பு இன்னொரு முறை அவன் எங்களைப் பார்த்தான்.

சாப்பாடு முடிந்தது.

ஒரு இனிப்புப் பொருளை உள்ளே செலுத்தும் ஆவேசத்துடன் என் நண்பர் ஒரு டம்ளர் சுக்கு நீரைக் குடித்துவிட்டுச் சொன்னார்:

"சரி.. கிளம்புவோம்."

நாங்கள் பணத்தைச் செலுத்திவிட்டு கீழே வந்தோம்.

சிகரெட் புகையை ஊதியவாறு நான் மெதுவாக நடந்தேன். மனதில் ஒரு இனம்புரியாத நிலை... குறிப்பிட்டுக் கூறும்படியான காரணம் எதுவும் இல்லை.

"நீங்க போயிட்டா என் மகிழ்ச்சி ரொம்பவும் குறைஞ்சிடும்."

அவர் சொன்னது உண்மைதான். நாங்கள் அந்த அளவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக கடந்த சில நாட்களாக வாழ்ந்திருக்கிறோம்.

"ரெண்டு மனிதர்கள் இருந்தால்தான் வாழ்க்கையே சுவையா இருக்கும்." அவர் சொன்னது சரிதான் என்ற அர்த்தத்தில் நானும் தலையாட்டினேன்.

"சரளாவோட கொஞ்சலைக் கேட்குறது எவ்வளவு இனிமையான ஒரு அனுபவம்!"

எந்த சரளாவைச் சொல்கிறார்? நான் சிந்தனையில் ஆழ்ந்தேன்.

அவர் சொன்னது எல்லாவற்றையும் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என் நண்பர் அதற்குப் பிறகும் பல பெயர்களைச் சொன்னார்.

எல்லாமே அவர் மொழியில் உயிருள்ள கவிதைகள்.

சரளா, அம்மிணி, பேபி, ஆமினா... அவர் சொன்ன ஒவ்வொரு உருவமும் என் நினைவில் கடந்து போய்க் கொண்டிருந்தன.

இந்த நினைவிற்கு மத்தியில் நான் என் நண்பரைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். பிரபஞ்சம் முழுவதிலும் கவிதை காண முயன்று கொண்டிருக்கும் ஒரு இளைஞர் அவர்.

லாட்ஜில் மற்ற நண்பர்கள் காத்திருந்தார்கள். தொடர்ந்து பேசியவாறு என் நண்பர் வேகமாக நடந்தார். நான் அவருக்குப் பின்னால் நடந்தேன்.

நாங்கள் தங்கியிருந்த லாட்ஜில் நிறைய பேசுவதும், ஆர்ப்பாட்டம் செய்தும் நான்தான் என்று பொதுவாக எல்லோரும் கூறுவார்கள். ஆனால், இன்று பார்ப்போமே...

இரயில் தண்டவாளத்தைத் தாண்டி இருக்கும் இரண்டு மாடிகள் கொண்ட ஒரு கட்டிடத்தில்தான் நாங்கள் தங்கியிருக்கிறோம். நான் அங்கிருக்கும் அறையில் தங்க ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆகின்றன. எங்களின் கவனக் குறைவு காரணமாக இருக்கலாம்& அந்தக் கட்டிடம் எட்டுக்கால் பூச்சிகளின் பாதுகாப்பு இல்லத்தைப் போல் ஆகிவிட்டது. ஒழுங்காக அடுக்கப்படாமல் புத்தங்கள் தூசி படிந்து இங்குமங்குமாய் சிதறிக் கிடக்கின்றன. அரண்மனை என்று நாங்கள் எங்கள் அறையைப் பற்றிக் குறிப்பிட்டாலும், அங்குள்ளவர்களுக்கு அதைப்பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை.

அங்குள்ளவர்கள் என்றால் எங்களைச் சேர்க்காமல் அங்கு எஞ்சி இருக்கும் மற்ற ஏழு பேர்கள். அவர்களைப் பற்றி கூறுவதற்கு நிறைய இருக்கிறது. சீட்டு விளையாட்டையும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் வாழ்க்கையை விட்டு ஒதுக்கி வைக்காமல் இருக்கும் ராமு அண்ணன், திருமணமாகாத முப்பது வயது மனிதராக இருந்தாலும் ஒரு தாத்தாவின் நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் வாரியர் மாஸ்டர், இளமையின் எல்லையைக் கடப்பதற்கு முன்பு வாழ்க்கையில் மகிழ்ச்சியின் கடைசித் துளியை ருசித்துவிட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஃப்ரான்சிஸ்... இப்படிப் போகிறது அந்தப் பட்டியல்.

அவர்கள் தான் எங்கள் அறையின் அலங்கோல நிலையைப் பற்றி குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள். அதற்குப் பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் என்னால் இருக்க முடியவில்லை.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel