Lekha Books

A+ A A-

மரணத்தின் சறுக்கல் - Page 2

maranaththin-sarukkal

அந்த அறை எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்குக் காரணம் இருக்கிறது. அங்கே அந்த ஜன்னலுக்கு முன்னால் நின்றால் மாலை நேரத்தின் துடிப்பையும், பொழுது புலரும் நேரத்தின் அழகையும் வெளிப்படுத்தக்கூடிய நதிக்கரை தெரியும். கட்டிடத்தின் முன்பகுதியில் வாழ்க்கையைப் போல இரயில் தண்டவாளங்கள் நீளமாகக் காட்சியளிக்கிறது. மரணத்தை நோக்கி சப்தித்து ஓடிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கையை நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டு பெரிய பெரிய சரக்கு வண்டிகள் ஓசை எழுப்பியவாறு அந்தத் தண்டவாளங்களில் ஓடிக் கொண்டிருக்கும்.

இரவு உணவு முடிந்தபிறகு எல்லோரும் வராந்தாவில் கூடுவது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று.

நாங்கள் படிகளில் ஏறி மேலே வந்தவுடன், வாரியர் மாஸ்டர் எங்களை வரவேற்றார்.

"வாங்க, பிள்ளைங்களா, நாங்க உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்."

நாங்கள் போய் உட்கார்ந்தோம்.

"பிள்ளைங்களா" என்று அவர் அழைத்ததில் எங்களுக்கு எதிர்ப்பு இருப்பதென்னவோ உண்மை.

ராமகிருஷ்ணன் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தவும் செய்தார்.

"பிள்ளைங்களான்னு நூறு தடவை அழைப்பேன். நீங்க பிள்ளைங்கதான். அதற்கு எதிர்ப்பு இருந்தா, காட்டுங்க... பார்ப்போம்..."

வராந்தாவின் ஒரு மூலையில் இருட்டில் இருக்கும் ஒரு தேரைப் போல கிடக்கும் நாற்காலியிலிருந்துதான் அந்தக் குரல் வந்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யாரென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திரைப்படப் பாடல்களும் ஒட்டகம் மார்க் பீடியும் என்று சொர்க்க வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களின் இன்னொரு நண்பரே அது...

அப்போது ராமு அண்ணன் அங்கே வந்தார். அவரின் கையிடுக்கில் நான்கு பக்கம் 'மாத்ருபூமியும்' இடது கையில் இரண்டு சீட்டுக்கட்டுகளும் இருந்தன. தன் தலைக்கு மேலே பெரிய அமெரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, உயரம் சற்றுக் குறைவான ராமு அண்ணன் வாசலில் வந்து நின்றார்.

"வாசு..."

"ம்.."

"ஒரு ஐடியா..."

"சொல்லுங்க..."

"நாளைக்கு நீ... கூட இருப்பே. இன்னைக்கு மட்டும்தான் நாம ஒண்ணா உட்கார்ந்து விளையாட முடியும். அப்படின்னா...."

நான் கையெடுத்துக் கும்பிட்டேன்.

"கடவுளே, இன்னைக்கு என்னை வற்புறுத்தாதீங்க..."

"இன்னைக்கு என்னை விட்டுடுங்க, ராமு அண்ணே!"

"ஏன்? என்ன விஷயம்?"

"ஒண்ணுமில்ல...."

ராமு அண்ணன் தரையில் பேப்பரை விரித்து உட்கார்ந்தார். தொடர்ந்து எல்லோரையும் பார்த்து சொன்னார்:

"சீக்கிரமா எழுந்திரிக்கணும். மணி ஒன்பதாயிருச்சு."

யாரும் அதைக் கேட்டது மாதிரி தெரியவில்லை. தீப்பெட்டியின் மீது தாளம் போட்டவாறு பாடகர் நண்பர் தனக்குள் முனகினார்.

"அனுரா... காம்ருதம் தருவாய் தோழா..."

இருந்த இடத்தைவிட்டு எழுந்து ஒரு மல்யுத்த பயில்வானைப் போல கையில் 'மஸில்'ஸைக் காட்டியவாறு ராமகிருஷ்ணன் கேட்டார்:

"வாட் அபௌட் வாசு?"

"நான் வரல. நீங்க விளையாடுங்க."

அதுவரை அமைதியாக உட்கார்ந்திருந்த ஃப்ரான்சிஸுக்குத் திடீரென்று ஆவேசம் வந்துவிட்டது. உரத்த குரலில் கத்தியவாறு அவர் வேகமாக எழுந்தார்.

"யாரும் விளையாட வேண்டாம். நான் சொல்றேன்."

"என்ன?"

ராமு அண்ணனுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவருடைய கண்கள் விரிந்தன. தீவிரமாக ஏதாவது பேசும்போதோ, ஏதாவது செய்யும் போதோ ராமு அண்ணனின் கண்கள் அப்படி விரிவதுண்டு. சீட்டு விளையாடும் போது நாங்கள் பொதுவாக அதைக் கவனிப்பதுண்டு.

"சீட்டு விளையாடத் தெரியலைன்னா, பேசாம இருக்கணும்."

"விளையாடக்கூடாது. ஒவ்வொரு நாளும் இதேதான் வேலை..."

ஃப்ரான்சிஸுக்கு சீட்டு விளையாட்டு மீது பயங்கர வெறுப்பு!

பாடகர் நண்பர் தன் பாட்டை நிறுத்திவிட்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

"என்ன நண்பரே, அப்படியொரு தீவிர சிந்தனை?"

ராமகிருஷ்ணனின் கேள்வி அவரை சுயநினைவிற்குக் கொண்டு வந்தது.

"விஷயம் கொஞ்சம் சீரியஸ்தான்."

"அப்படியா?"

"அது என்னன்னு நான் சொல்றேன்..."& ராமு அண்ணன் இடையில் புகுந்து சொன்னார்.

"பீடியில்லாத ஒரு உலகமா, இல்லாவிட்டால் தேநீர் இல்லாத ஒரு உலகமா? இதுல வாழ்க்கைக்கு ஏற்றது எது? விஷயம் கொஞ்சம் சீரியஸ்தானே!"

நான்கைந்து டம்ளர்கள் ஒரே நேரத்தில் கீழே விழுந்து உடைந்ததைப் போல எல்லோரும் சிரித்தார்கள்.

பேச்சுக்கு ஏற்ற பலம் சேர்ந்தது மாதிரி இருந்தது. வாரியர் மட்டும் ஒரு அட்டையைக் கையில் வைத்து வீசிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார். திருவாதிரைக் காற்று வீசும் போது கூட அவருக்கு வியர்த்துக் கொட்டும் என்பதுதான் அவரின் தனித்துவம்.

ராமு அண்ணனுக்குப் பொறுமை என்பதே இல்லாமல் போனது. சீட்டுக்கட்டைக் கையால் தடவியவாறு சில நிமிடங்கள் அசையாமல் அவர் உட்கார்ந்திருந்தார். பகல் நேரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வெறுமனே அமர்ந்திருக்க அவர் தயார். ஆனால், இரவு நேரம் வந்துவிட்டால்& பரதய்யரின் சாப்பாடு வயிற்றுக்குள் போய்விட்டால் ராமு அண்ணனுக்கு இரண்டு கைகள் சீட்டு விளையாடியே ஆக வேண்டும். வராந்தாவில் அமெரிக்கன் விளக்கைக் சுற்றி மூன்று பக்க 'மாத்ருபூமி'யும் ராமு அண்ணனும் இடம்பிடித்துவிட்டால் விளையாடுவதற்கு மற்றவர்கள் தயாராகிவிடவேண்டும் என்பது சட்டம்.

"டேய்? நீங்க எழுந்திருக்கீங்களா?"

அதற்குப் பதில் இல்லை.

"யாரும் எழுந்திரிக்க வேண்டாம். நாம உட்கார்ந்தே பேசுவோம். வாசு, அந்த 'தெக்கன் காயல்'ல ஒண்ணு பாடு..."

ஃப்ரான்சிஸ் ராமு அண்ணனுக்கு எதிராகத் தன்னுடைய பிரச்சார வேலையை ஆரம்பித்தார்.

எனக்கு விளையாடுவதற்குச் சிறிது கூட மனதில் ஆர்வம் உண்டாகவில்லை. ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு. மனதிற்குள் புரட்டல் இருக்கிறதோ என்றொரு சந்தேகம் எனக்கு. சாப்பாட்டிற்குப்பிறகு 'பெர்க்கிலி' புகைத்ததால் இருக்குமோ?

எல்லோரும் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தார்கள். பெரிய உடம்பை சாய்வு நாற்காலியிலிருந்து நகர்த்தி பக்கத்தில் விரித்திருந்த 'மாத்ருபூமி'க்குக் கொண்டு போவது என்பது வாரியருக்குச் சற்று சிரமமான காரியம்தான்.

ஆனால், எங்கள் கூட்டத்திலேயே மிகவும் நன்றாகச் சீட்டு விளையாடக்கூடிய மனிதர் என்ற பெருமையைப் பெற்றிருந்ததால் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மைபுட்டி அளவு இருக்கும் ஒரு புட்டி நிறைய பொடியும் ஒரு தூக்குப் பாத்திரம் நிறைய குளிர்ச்சியான நீரும் ஒரு அட்டை விசிறியும் இருந்தால் போதும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கொஞ்சங்கூட சோர்வே இல்லாமல் அவர் சீட்டு விளையாடுவார்.

நான்கு ஆட்கள் சேர்ந்தவுடன் விளையாட்டு ஆரம்பமானது. ஃப்ரான்சிஸ் ஒருவித வெறுப்புடன் சீட்டு விளையாடும் மனிதர்களைப் பார்த்து என்னவோ மெதுவான குரலில் முணுமுணுத்தவாறு கீழே இறங்கிப் போனார்.

சீட்டு விளையாட்டு ஆரம்பமாகிவிட்டால் லாட்ஜின் சூழ்நிலையே மிகவும் அமைதியாகிவிடும். பெயர் சொல்லி அழைப்பது, சீட்டு போடும் சப்தம், உட்கார்ந்தவாறு உறங்கிக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனுக்கு ராமு அண்ணன் தரும் 'டோஸ்'& இவை மட்டுமே அங்கு கேட்கும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel