Lekha Books

A+ A A-

மரணத்தின் சறுக்கல் - Page 3

maranaththin-sarukkal

இரயில் தண்டவாளத்தையே எந்தவித நோக்கமும் இல்லாமல் பார்த்தவாறு நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். தண்டவாளத்தைத் தாண்டி இருந்த வெட்டவெளியில் மூடுபனி சூழ்ந்திருந்தது. கிழக்குப் பக்கம் இருந்த மலைகளுக்குப் பின்னால்& தனியாக நின்றிருந்த மேகக் கூட்டத்திற்குப் பின்னால் சந்திரன் உதித்துக் கொண்டிருந்தான். வெட்கப்பட்டு நின்றிருந்த ஒரு அழகான புன்னகை ததும்பும் இளம் பெண்ணை அது ஞாபகப்படுத்தியது. நதிக்கரையைத் தொட்டு வந்து கொண்டிருந்த இளங்காற்று எல்லா பக்கமும் குளிரைப் பரப்பிக் கொண்டிருந்தது.

சரக்கு இரயில் ஒருவித 'கரகர' சத்தத்துடன் முன்னால் போய்க் கொண்டிருந்தது. கறுப்பு நிற இரயில் பெட்டிகள் மெதுவாக நகர்ந்து போய்க் கொண்டிருந்தன. ஒன்று, இரண்டு, மூன்று..."

அதற்கு மேல் என்னால் எண்ண முடியவில்லை.

கறுப்பு நிற சரக்கு இரயில் பெட்டிகளின் முடிவில்£த ஊர்வலம் முடிந்தது. 'கரகர' சத்தம் உண்டாக்கியவாறு வண்டிச் சக்கரங்கள் உருண்டு சென்றன.

இதற்கு முன்பு இதே இடத்தில் அமர்ந்து நான் அதைப் பார்த்திருக்கிறேன். சரக்கு ஏற்றப்பட்ட பெட்டிகள்... பயங்கரமான என்ஜின்... இரும்புச் சக்கரங்கள்...

அப்போதெல்லாம் நான் நினைப்பேன். வண்டிச்சக்கரங்கள் மனித உடம்பின் மீது கடந்து செல்லும்போது&

அதை என்னால் நினைக்கவே முடியவில்லை.

தலை பிளந்து, எலும்புகள் நொறுங்கி, இரத்தமும் சதையும் சிதறி...

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அதற்கு மேல் அதைப்பற்றி நினைக்கவேண்டாம் என்று நேற்றே நான் மனதிற்குள் முடிவு செய்திருந்தேன். அதற்குக் காரணம் இருக்கிறது. நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன்.

கனவுகள் என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய விஷயமாக மாறியிருக்கின்றன. நான் நிறைய கனவுகள் காணக்கூடியவன்தான். பெரும்பாலும் நான் காணும் கனவுகள் நல்ல கனவுகளாகவே இருக்கும். தூங்காமல் விழித்திருக்கும் போது கூட நான் கனவு காண்பதுண்டு என்று ராமகிருஷ்ணன் தான் சொன்னார். அது வெறுமனே தமாஷுக்காகச் சொல்லப்பட்டது என்றே நான் நினைக்கிறேன்.

மிகுந்த வேதனையுடன் நான் அந்தக் கனவை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். இதயம் துடிக்க, நான் அதைக் கூறுகிறேன். கேட்கும் போது அது சாதாரணமான ஒன்றாக உங்கள் மனதிற்குப் படலாம். ஆனால், வேதனையுடன்தான் நான் அதை உங்களிடம் சொல்கிறேன். இருபத்து மூன்று வருடங்கள் மட்டுமே வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதன் வண்டிச் சக்கரங்களுக்கு இடையில் கிடந்தான்.

சரக்குகள் ஏற்றப்பட்ட பெட்டிகள்... சக்கரங்கள்... எல்லாம் கடந்து போயின.

என்னுடைய உடல்மீது ஏறி....

முதலில் சக்கரம் ஏறியது எந்த உறுப்பின் மீது? ஞாபகப்படுத்திப் பார்த்தால் நிச்சயம் பதில் தெரிய வரும். ஆனால், அதைப்பற்றி நினைக்க வேண்டாம் என்று நான் தீர்மானித்திருக்கிறேன்.

காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் நான் இந்த விஷயத்தை என் நண்பனிடம் சொன்னேன்.

"ஓ... பரவாயில்லை. என்ன இருந்தாலும் கனவுதானே!" என்று அவர் சொல்லுவார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்.

ஆனால், அவர் சொன்னார்:

"நீங்க சீக்கிரமே தற்கொலை செய்துக்குற மாதிரி சந்தர்ப்பம் வரும்..."

அவர் அப்படிச் சொன்னதை விரும்பவில்லை என்பதை நான் சொல்லவில்லை. எனக்குள் ஒரு நடுக்கம் உண்டானது.

"வாழ்க்கை இவ்வளவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் போது, சிலர்..."

என்னால் அதை முடிக்க முடியவில்லை.

மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை! எழுதவும் பேசவும் மட்டுமே தெரிந்து அதை அனுபவித்தே இராத நான்...

என் நண்பர் விழுந்து விழுந்து சிரித்தார்.

"நீங்க சறுக்கி இருக்கலாம். மரணத்திற்கு ஒருமுறை கூட சறுக்கல் உண்டாகாது... வாழ்க்கையைச் சுகமாக அனுபவித்து வாழணும்னு ஆசைப்படுறவங்களைத்தான் அது வந்து ஆக்கிரமிக்கும். மரணத்தை ஒரு வரமா மனிதன் நினைக்க ஆரம்பிச்சான்னா, அவனை அது நெருங்கவே நெருங்காது..."

இப்படி என்னென்னவோ அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் அதற்கு மேல் அதிகமாகச் சிந்திக்கவில்லை.

காரணமொன்றுமில்லை. இருப்பினும் ஒரு துக்கம் இதயத்திற்குள் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

நிலவு எனக்கு முன்னால் இருந்த இருளை அகற்றி வெளிச்சம் பரவச் செய்து கொண்டிருந்தது. நிலவொளியுடன் இணைந்து காட்சியளித்த மூடுபனி.

"என்ன வாசு, தூங்குறியா?"

சீட்டு விளையாட்டுக்கு மத்தியில் ராமு அண்ணன் கேட்டார்.

"இல்ல..."

"வாசு என்னை மாதிரி உட்கார்ந்துக்கிட்டே தூங்குறது இல்ல. ஆனா, கண்களைத் திறந்து வச்சுக்கிட்டே கனவு காண்பாரு."

ராமகிருஷ்ணன் பல நேரங்களில் சொல்லும் அதே கருத்தை மீண்டும் சொன்னார்.

"யாரைப் பற்றி கனவு காண்பீங்க?"

நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

"........லிருந்து போகுறப்போ யாருடைய இதயத்தையும் எடுத்துட்டுப் போகலியே!"

"தட் ஈஸ் ராங். இனிமேல் இவரோட இதயத்துல வேக்கன்ஸியே இல்ல. இருந்த ஒரே ஒரு இடத்தை ஏற்கெனவே யாரோ ஆக்கிரமிச்சுட்டாங்க.."

"அப்படியாடா? அப்படின்னா இந்த விஷயத்தை என்கிட்ட ஏன்டா இதுவரை சொல்லல?"& வாரியர் மாஸ்டர் கேட்டார்.

ராமு அண்ணன் ஒரு விளக்கம் கூற முற்பட்டார்.

"நீ ஒரு முட்டாள். அதை வாய் திறந்து சொல்லணுமா? அந்தக் கதைகளை எல்லாம் ஒருமுறை படிச்சுப் பாரு. எல்லாக் கதைகள்லயும் இவனோட காதல் உணர்ச்சிகள் பரவிக்கிடக்கும்."

சீட்டுகள் மீண்டும் கையில் வந்து சேர்ந்தவுடன் அவர்கள் விளையாட்டில் மூழ்கினார்கள்.

மறுகரையில் இருந்த ஏதோ ஒரு வீட்டிலிருந்து ஒரு இனிய பாட்டு காற்றில் மிதந்து வந்தது.

அங்கே ஒரு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.

நிலவும் குளிர்ச்சியான காற்றும் உள்ள ஒரு இரவில் இரண்டு வாழ்க்கைகள் ஒன்று சேர்கின்றன.

திருமணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். காதலைப் பற்றியும்தான்.

விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

மணி எத்தனை ஆகியிருக்கும்? நாற்காலியை விட்டு எழுந்து உள்ளே போய்ப் பார்த்தால் நேரம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், முடியாது. அந்த அளவிற்கு சோம்பேறித்தனமாக இருந்தது. நாற்காலியை விட்டு எழுவதற்கே கஷ்டமாக இருந்தது. தலை லேசாக கனப்பதைப் போல் இருக்கிறதோ? தலையில் கனம் இருக்கும் அளவிற்கு அப்படியொன்றும் நடக்கவில்லை. போன வருஷமென்றால் அது ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம்.

வாசல் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.

"யார் கதவைத் திறக்குறது?"

"சேகரனாக இருந்தாலும் சரி... சீட்டை போடு."

படிகள் மெதுவாக ஒலித்தன.

யாரோ ஏறி வருகிறார்கள். மெதுவாக...

சேகரனாத்தான் இருக்குமோ? சேகரா...!

பதில் இல்லை.

"போளாக இருக்குமோ?"

"மிஸ்டர் போள்...!"

பதில் இல்லை.

ஏறி வந்தது சேகரனுமில்லை, போளுமில்லை. ஒரு சிறுவன்.

அவன் படியின் மேற்பகுதியை அடைந்ததும், திகைத்து நின்றான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel