Lekha Books

A+ A A-

பாலம்

paalam

ன்னுடைய கிராமத்தில் ஒரு நதி. அதன்மீது முன்பு ஒரு பாலம் இருந்தது.

அந்தப் பாலத்தைக் குறித்துத்தான் இப்போது உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன். (அல்லது ஒருவேளை குஞ்ஞம்பு மாஸ்டரைப் பற்றியதாகவும் இருக்குமோ?)

பாலத்தையும், குஞ்ஞம்பு மாஸ்டரையும் குறித்துக் கூறுவதற்கு முன்னால் அந்தப் பாலத்திற்கடியில் ஓடும் நதியைப் பற்றிக் கூறிவிடுகிறேன். அதுதான் பொருத்தமும் கூட.

அந்த நதி எங்கள் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். எங்கள் கிராமத்தின் உயிர் என்று அதைச் சொல்வதுதான் இன்னும் சரியானது.

நதியைப் பற்றிய எனது எண்ணங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. கடந்துபோன அந்த இளம் பிராயத்து நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது முதலில் ஞாபகத்திற்கு வருவது அந்த நதிதான். கருங்கற்களால் ஆன ஐந்து தூண்களுக்கிடையே என்றும் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் அதன் நிறம் கால மாறுதல்களுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும். ஆகாயமே நதிக்குள் வந்துவிட்டதோ என்று கூட சில சமயங்களில் எண்ணத் தோன்றும். புத்தாண்டு பிறக்கும் போது மலையின் உச்சியிலிருந்து குதித்தோடி வரும் ஆற்றுநீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடும்போது பார்க்க வேண்டுமே! மண்ணின் நிறத்துடன் கரை கடந்தோடி கடலுடன் சென்று கலக்கும் நீர், கல்தூண்களைக் கடந்து செல்லும்போது, தூணைச் சுற்றிலும் ஒரே அலையும், நுரையுமாக இருக்கும்.

ஆற்றில் ஒருமுறை கூட தண்ணீர் வற்றி நான் பார்த்ததேயில்லை. எப்போது பார்த்தாலும் ஒரே ஜலப் பிரவாகம்தான். மழைக் காலமாயிருந்தாலும் சரி; வெயில் காலமாக இருந்தாலும் சரி- வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியவண்ணம் இருக்கும். கடல் மிகவும் அருகில் இருந்ததுதான் அதற்குக் காரணம்.

என் தந்தை கொஞ்ச காலம் போத்தனூர் ரெயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். எல்லா சனிக்கிழமைகளிலும் வீட்டிற்குள் வருவார். ஒருமுறை திரும்பிப் போகும்போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு பள்ளியில் விடுமுறை விட்டிருந்தார்கள்.

தெற்கு நோக்கி நான் போகும் முதல் பயணமே அதுதான். (வடக்கே வளபட்டணம் வரை போயிருக்கிறேன்). பாரதப்புழை ஆற்றின் கரையில் ஒரு பயணம். கேட்கவே குதூகலமாயிருந்தது. எத்தனையோ வாய்களால் புகழ்ந்து பாடப்பட்ட பாரதப்புழை நதியைக் காண்பதென்றால்... அது என்ன சாதாரண விஷயமா?

திரூர் ஸ்டேஷனைக் கடந்ததுதான் தாமதம்- வெளியில் மேய்ந்து கொண்டிருந்த கண்களை நான் அகற்றவேயில்லை.

வெளியே வெயில் ‘சுள்’ளென்று காய்ந்து கொண்டிருந்தது. கண்களில் ஒரு சோர்வு. அப்படியே சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். பிறகு என் தந்தை அழைக்கும் சத்தத்தைக் கேட்டு கண்விழித்தேன்.

“பாஸ்கரா, மகனே பாஸ்கரா, அதோ தெரியுது பார்... அதுதான் பாரதப்புழை.”

என் தந்தை தன் சுட்டு விரலால் காட்டியவாறு கூறினார்.

அங்கே மணல் பரந்து கிடந்தது. ஆற்றின்மீது மணல் ஏற்றப்பட்ட லாரி ஒன்று போய்க் கொண்டிருந்தது.

என் தந்தை வெறுமனே விளையாடுகிறாரோ என்று நினைத்தேன் நான்.

பாரதப்புழையைவிட எங்கள் கிராமத்தில் ஓடும் நதி எவ்வளவு பெரியது! எங்கள் கிராமத்து ஆற்றில் தண்ணீர் வற்றி நான் ஒருமுறை கூட பார்த்ததேயில்லை. அதை நினைத்துப் பார்த்தபோது, என்னையும் மீறி ஒரு பெருமிதம் உண்டானது என் மனதில்.

அந்த நதியின்மீது ஒரு பாலம்.

நான் முதன்முதலாகப் பள்ளியில் சேர்ந்த அன்றுதான் அந்தப் பாலத்தின் மேலேயே நடந்து போனேன்.

என் தந்தை என்னுடைய கையைத் தன்னுடைய கையுடன் பிணைத்திருந்தார். மற்றொரு கையில் சிலேட்டும், பயிற்சிப் புத்தகமும் இருந்தன. பயத்துடன் என் தந்தையிடம் கேட்டேன்: “பாலம் சரிந்துவிடாதா, அப்பா?”

“லாரியும், பஸ்ஸும் போற பாலம்டா பாஸ்கரா... ரயில் மேலே போனாக்கூட அப்படியே கொஞ்சமும் அசையாமல் இருக்கும்டா மகனே இது.”

அதைக் கேட்டு நான் சிரித்தேன்.

“யானை மேலே போனால்...?”

“நூறு யானைகள் நடந்து போனாக்கூட இந்தப் பாலத்துக்கு எந்தக் கேடும் உண்டாகாதுடா மகனே...”

எனக்கு அதற்குப் பிறகுதான் மனதிலிருந்த பயமே போனது. என் தந்தையின் கையைப் பற்றிக்கொண்டு குதூகலத்துடன் நான் நடந்து போனேன். பாலம் நடுங்குவதுபோல் ஒரு தோணல். கைவிரல்களைப் பற்றிக் கொண்டேன் நான்.

“பயப்படாதேடா, பாஸ்கரா. பஸ்ஸும் லாரியும் வர்றப்போ மட்டும்தான் பாலம் கொஞ்சம் அதிரும்.”

அவர் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு எதிர்திசையிலிருந்து பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

பாலத்தின் அகலமோ மிகவும் குறைவு. பஸ் வேறு வந்து கொண்டிருந்ததால் பாலத்தின் ஒரு கைப்பிடிச் சுவரோரம் ஒதுங்கி நின்று கொண்டோம். பஸ் கடந்துபோனபோது, உள்ளபடியே பாலம் அதிரத்தான் செய்தது.

பெரியவனாக வளர்ந்து கல்லூரிக்குப் போகின்ற நாட்களில்கூட இந்தப் பாலத்தின் வழியே தான் நான் போனேன்.

இன்று அலுவலகம் போவதுகூட இந்தப் பாலத்தின் வழியேதான்.

-ஒரு விதத்தில் பார்க்கும்போது என் வளர்ச்சிக்கு சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது இந்தப் பாலம் என்றுகூட கூறலாம்.

சமீபத்தில் அலுவலக வேலை சம்பந்தமாக மேற்பயிற்சி பெறுவதற்காக வடஇந்தியாவில் இருக்கின்ற ஒரு நகரத்திற்குப் போயிருந்தேன். அப்போதுதான் எனக்கு, ‘ஹோம் ஸிக்னஸ்’ என்பதன் அர்த்தமே புரியத்தொடங்கியது. எவ்வளவோ படித்திருக்கிறேன். ஆனால், புத்தகத்தைத் திறந்துவிட்டால் போதும்- ஊர் பற்றிய நினைவுகள் மனதில் அலையடிக்கத் தொடங்கிவிடும். பல முகங்களும் கண்முன்னே வரிசையாக வலம் வரும். பல இடங்களும், பல சூழ்நிலைகளும்கூட. குழந்தைகளுக்கான அரைஞாண் கயிறும் ஊசியும் விற்கும் மாப்பிள்ளைக் கிழவன்... ஒரு வகையான துர்நாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் கக்கூஸ்... ஆனால், கண் முன்னே மறையாமல் கம்பீரமாக நின்றுகொண்டிருப்பது என்னவோ அந்தப் பாலம்தான். பாசிபிடித்த அந்தக் கல்தூண்களும், லாரியும், பஸ்ஸும் போகும் போதெல்லாம் ஓசையெழுப்பும் கைப்பிடிச்சுவரும் மனக்கண் முன்னால் வந்து நின்றன.

அப்போதுதான் அந்தச் செய்தி என்னை வந்தடைந்தது. எங்கள் ஊர் பாலத்திற்கு ஏதோ சேதம் ஏற்பட்டுவிட்டதாம்.

ஒரு நாள் பாலத்தின் இரு பக்கங்களிலும் இரு அறிவிப்புப் பலகைகள் காட்சியளித்தன. அதில் ‘பாலம் அபாயம்’ என்ற எழுத்துக்கள்... தொடர்ந்து கனரகமான வாகனங்கள் பாலத்திற்கு மேலே போவது தடை செய்யப்பட்டது.

பாலத்திற்கு ஏற்பட்ட சேதத்தைப் பார்க்க நகரத்திலிருந்து அதிகாரிகள் வந்தார்கள். படகொன்றில் ஏறி நதியில் பயணம் செய்தவாறு பாலத்தைப் பார்வையிட்டார்கள். அவர்களில் ஒரு மனிதர் தொப்பி அணிந்திருந்தார். கூட்டத்தில் சற்று தடிமனான ஒருவர் கையால் சுட்டிக் காட்டியவாறு என்னவோ கூறிக் கொண்டிருந்தார். நதிநீர் வெயில் பட்டு ‘தகதக’த்துக் கொண்டிருந்தது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel