Lekha Books

A+ A A-

மரணத்தின் சறுக்கல் - Page 4

maranaththin-sarukkal

ஒரு காலணா கிடைத்து அவனுக்கு என்ன பிரயோஜனம்? நான் அதை எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் சென்றேன்.

"காலணா மட்டும்தான் இருக்கு.."

"மோர் தென் இனஃப் ஸென்ட் ஹிம் அவே..."

"காலணான்னா சாதாரணமா? காலணாவுக்கு ஒரு ஸ்டார் கிடைக்கும்."

"ஒட்டகமார்க்னா மூணு கிடைக்கும்."

அதற்குமேல் அங்க தயங்கி நிற்கவில்லை. அவர்களிடமிருந்து அதற்குமேல் எதிர்பார்க்க முடியாது.

நான் அந்தச் சிறுவனின் கையில் காலணாவைக் கொடுத்தேன்.

அவனுக்கு ஒரு சாப்பாடு வாங்குவதற்கான காசைத் தரவேண்டுமென்று எனக்கு விருப்பமுண்டு. ஆனால், என்னிடம் அதைத் தர முடியாத நிலை. இதை அவனிடம் சொல்லிவிட்டுத்தான் அந்தக் காசை அவனுடைய கையில் தர வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், அதைச் சொல்ல என்னால் முடியவில்லை.

அவன் நன்றிப் பெருக்கு நிறைந்த கண்களுடன் அந்தக் காசை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு நடந்தான்.

படிகளில் அவன் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்டது.

வாசல் கதவு மீண்டும் 'க்ரீச்'சென்றது.

"இப்பத்தான் விளையாட்டு நல்லா போய்க்கிட்டு இருக்கு, வாசு ஒரு சிகரெட்."

"சிகரெட் இல்ல...."

"ச்சே... சிகரெட் இல்லாம எப்படி?"

மீண்டும் விளையாட்டு தொடர்ந்தது.

"இருபத்தெட்டு..."

"முப்பது..."

"முப்பத்தொண்ணு..."

நான் சிந்தித்தேன். கையில் ஒரு காசு கூட இல்லை. அறிமுகமே இல்லாத ஒரு இடம். என்னவெல்லாம் கஷ்டங்கள்! ஏதாவது வேண்டுமென்று கெஞ்சிக்கேட்டால் கிடைப்பது அடியும் துப்பலும் சில நேரங்களில் வெந்நீர்.

அந்தச் சிறுவனின் வீங்கி வெந்து போயிருந்த இடுப்பும் கையும் நினைவில் வந்தது. சுடுநீர் மனித உடலில் படும் போது...

அவன் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகும் போது.. அவனை வரவேற்பார்களா?

தாயும் சகோதரியும்! உருக்கைப் போல உறுதியான உறவுகள் அவை.

அவன் திரும்பிப் போகாதபட்சம், உலகிற்கு ஒரு பிச்சைக்காரன் அதிகமாகக் கிடைக்கிறான்.

நேரம் இப்போது பதினொன்றைத் தாண்டியிருக்கும். நிலவு வெளிச்சம் சற்று மங்கலாகி இருக்கிறது. சந்திரன் ஏதாவது மேகக் கூட்டங்களுக்குப் பின்னால் மறைந்து போயிருக்கலாம்.

உறக்கம் வந்தால் பேசாமல் போய் படுக்கலாம். காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன், பயணத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும். இந்த லாட்ஜும் இந்த இடமும் இந்த நண்பர்களும் என்னைவிட்டு விலகி நிற்பார்கள்.

ஒரு சிகரெட் இருந்தால்! அமைதியாக உட்கார்ந்து புகை பிடிப்பதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது.

ஜக்... ஜக்...ஜக்...

தூரத்தில் வண்டி வந்து கொண்டிருக்கிறது. சரக்கு இரயிலோ பயணிகள் வண்டியோ? சரக்கு வண்டிதான். எனக்கு அதைப் பார்க்கும் போது மனதில் ஒரு வித வருத்தம் உண்டாகிறது. மனிதர்கள் பயணம் செய்யும் வண்டியாக இருந்தால் என்னால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.

வண்டிச் சக்கரங்களின் சத்தம்.

ஜக்... ஜக்...

கறுப்பு நிற இரயில் பெட்டிகள்.

ஒன்று... இரண்டு... மூன்று... ஒன்று... இரண்டு... மூன்று. வண்டிச் சக்கரங்களின் சத்தத்தில் இருந்து வேறுபட்டு ஒலிக்கும் ஒரு சத்தம்.

சில நிமிடங்கள் கடந்தன. வண்டி நின்றது. என்ஜின் அறையிலிருந்தும் கார்டு இருந்த அறையில் இருந்தும் சிலர் வெளியே வந்தார்கள். என்ன நடந்தது?

ஆட்கள் சிறிது சிறிதாகக் கூட ஆரம்பித்தார்கள். நான் மெதுவாகப் படிகளில் இறங்கினேன். படிகளைக் கடந்து இரயில் தண்டவாளத்தில் ஏறினேன்.

பலரின் குரல் கேட்டது.

"வாட்ஸ் தி மேட்டர்?"

"ஒன்லி அன் ஏன்ஸிடென்ட்."

"ஃபினிஷ்ட்?"

"திங் ஸோ"

நான் அருகில் போகவில்லை. அந்த வழியே வந்த ஒரு ஆள் அருகில் வந்தபோது நான் கேட்டேன்.

"என்ன விஷயம்?"

"வேலை முடிஞ்சிடுச்சு. ஒரு பிச்சைக்காரப் பையன். சக்கரம் அவன் நெஞ்சு மேல ஏறிடிச்சு."

அந்த மனிதன் நடந்து சென்றான்.

நான் சில நிமிடங்கள் அங்கே நின்றேன். சிறிது தூரம் நடந்தால் அந்தக் காட்சியைக் காணலாம். வண்டிச்சக்கரங்களுக்கிடையே சிக்கிக் கிடக்கும் மனித உருவம்.

தலை பிளந்து, எலும்புகள் நொறுங்கி, சதையும் இரத்தமும் சிதறி...

ச்சே...

எனக்கு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது. காற்றில் ஈரப்பசை அதிகமாக இருப்பது காரணமாக இருக்கலாம்.

நான் லாட்ஜுக்குத் திரும்பி வந்தேன். என்னுடைய நண்பர்கள் அப்போதும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ராமகிருஷ்ணனின் தலைக்கு அருகில் இருந்த ஜன்னல் படியில் ஜோக்கர் நடனமாடிக் கொண்டிருந்தான்.

"வாசு..."

"ம்..."

"எங்கே போயிருந்தே?"

"வெளியே போய் பார்த்தேன். என்ன விஷயம்னு தெரிஞ்சிக்க..-"

"என்ன விஷயம்?"

நான் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன்.

"சரக்கு இரயிலை நிறுத்தியதை பார்த்தீங்கள்ல."

"யாரு அதை நிறுத்தச் சொன்னது?"

மனதைக் கட்டுப்படுத்த நான் படாதபாடுபட்டேன்.

"ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு சிறுவன் வண்டியில மாட்டிக்கிட்டான்.

"ஓ... அப்படியா? செத்துட்டானா?"

"ஆமா..."

நான் நாற்காலியில் மீண்டும் சாய்ந்தேன்.

சீட்டு விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

வெந்நீர் உடம்பில் விழும் போது... கனமான வண்டிச்சக்கரங்கள் உடம்பின் மீது ஏறி.... சிதைந்து, நொறுங்கி... சதையும் இரத்தமும் சிதறி... நான் எதையெதையோ நினைக்கிறேன்.

"எனக்கு தலை சுற்றுவதைப் போல் இருக்கிறது."

நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது!

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel