Lekha Books

A+ A A-

மரணத்தின் சறுக்கல் - Page 4

maranaththin-sarukkal

கிழிந்த, கசங்கிப்போன ட்ரவுசர், மஞ்சள் நிறத்தில் பெரிய ஓட்டைகளிருந்த ஒரு பனியன். அமெரிக்கன் விளக்கு பரப்பிவிட்ட வெளிச்சத்தில் நான் அவனுடைய வாடித் தளர்ந்து போன முகத்தையும் ஈரமான கண்களையும் பார்த்தேன்.

சிறிது நேரத்திற்கு முன்பு 'அன்னபூர்ணா'வின் மாடியில் அமர்ந்து சாப்பிடும் போது நாங்கள் பார்த்த பையன்.

பசியும், ஆசையும் பிரதிபலித்துக் கொண்டிருந்த கண்கள்.

"ஹூ ஈஸ் இட்?"

ராமகிருஷ்ணன் முகத்தை உயர்த்தாமல் கேட்டார்.

"யாரோ ஒரு பையன்."

ராமு அண்ணன் கவனத்தைத் திருப்பினார். சீட்டிலிருந்த தன் பார்வையை உயர்த்தினார். ஆகாயத்திலிருந்து அறுந்து கீழே விழுந்தவனைப் போல் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவனையே அவர் உற்றுப் பார்த்தார். பிறகு என்னைப் பார்த்தார்.

"மிஸ்டர் வாசு?"

"என்ன?"

"தப்பு உங்களோடதுதான். நான் சொன்னேன்ல சாப்பிட்டு முடிஞ்சு வர்றப்போ கேட்டை அடைச்சிட்டு வரணும்னு..."

"தப்பு என்னோடதா இருக்கலாம்."

"டேய் இது ஆபீஸ். இங்கே தர்மம் தர வழியில்ல..."

சாதாரண பிச்சைக்காரன் வரும்போது சொல்லப்படும் வார்த்தைகளை பாடகர் நண்பர் சொன்னார்.

"நான்சென்ஸ். இப்போ என்ன தர்மம் கொடுத்தாச்சு?"

ராமுஅண்ணன் மீண்டும் சீட்டு விளையாட்டில் மூழ்கிவிட்டார்.

அந்தச் சிறுவன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நான்கு பேரையும் பார்த்தான். தொடர்ந்து என்னையும் பிறகு மெதுவாக எனக்கருகில் வந்தான்.

"சார்..."

நான் தலையை உயர்த்தினேன்.

"சாப்பிட்டு ரெண்டு நாட்களாச்சு. ஏதாவது..."

அவனுடைய கண்களில் நீர் ததும்பியது.

சீட்டுகளை எண்ணிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ராமகிருஷ்ணன் என்னையும் என்னுடைய நாற்காலியையொட்டி நின்று கொண்டிருந்த சிறுவனையும் உற்றுப் பார்த்தார்.

"இவனைத்தானே நாம அன்னபூர்ணாவுல இருக்குறப்போ பார்த்தோம்!"

"ஆமா..."

"என்னடா நீ விடாம எங்க பின்னாடி வந்துக்கிட்டு இருக்கே?"

சிறுவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த ஆளையே பார்த்தான்.

நான் கேட்டேன்.

"உனக்கு ஹோட்டல்ல ஒண்ணும் கிடைக்கலியா?"

"இல்ல சார்... சுவாமியோட ஹோட்டல்ல கிடைச்சது இது..."

அவன் காண்பித்தான். தின்னுவதற்குக் கிடைத்தது அல்ல. இடது கையிலும் இடுப்பிலும் வெந்து போன இடங்கள்...

"ஒரே எரிச்சலா இருக்கு சார். சுடுதண்ணியை என் மேல ஊத்துறாங்கன்றதை நான் அப்போ நினைக்கல..."

அவனுடைய வாடிப்போன கன்னங்கள் வழியாக கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.

"அந்த நீக்ரோ கிருஷ்ணனோட வேலையா இருக்கும்."

"சுவாமிக்கு ஏற்ற வேலைக்காரன்தான்."

"அது இருக்கட்டும்.. விளையாட்டைப் பாருங்க."

சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள். சீட்டாட்டம் தொடர்ந்தது.

"உன் ஊர் எது?"

"பறளி."

"எதுக்காக ஊர்ல இருந்து வந்தே?"

அதற்குப் பதில் இல்லை.

அவன் அழுது கொண்டிருந்தான்.

அவனை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் இரண்டு. பசியை உடனடியாக அடக்க ஏதாவது அவனுக்குக் கிடைத்தாக வேண்டும். ஊருக்குப் போக ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும்.

வீட்டைவிட்டு புறப்பட்டு வந்ததற்கான காரணத்தை அவன் விளக்கிச் சொன்னான்.

அவனுடைய தாயும் அக்காவும் வீட்டில் இருக்கிறார்கள். சொந்தமென்று கூற எந்த சொத்துமில்லை. அவர்கள் தற்போது வசித்து கொண்டிருப்பது வேறொருவரின் இடத்தில். எனினும், அவர்கள் வாழ்கிறார்கள். உணவிற்கும் உடைக்கும் பிரச்சினையில்லை.

"பிறகு ஏன் வீட்டை விட்டு ஓடி வரணும்?"

"நான் வீட்டுல இருக்குறது அவங்களுக்குப் பிடிக்கல. எப்போ பார்த்தாலும் என்னைக் கண்டபடி பேசுவாங்க. அடிப்பாங்க. எப்பவாவது கொஞ்சம் கஞ்சி தருவாங்க."

என்னால் அதை நம்ப முடியவில்லை.

தாயும் சகோதரியும் பட்டினி போடுவது சொந்த மகனை& சகோதரனை.

உலகத்திற்கு தேவையில்லாத ஒரு மனிதன். அவன் இறந்தால் யாருக்கும் ஒரு இழப்பும் உண்டாகப் போவதில்லை.

ராமகிருஷ்ணன் சொன்னது ஞாபகத்தில் வந்தது. மரணத்திற்கு சிறிது கூட சறுக்கல் உண்டாகாது. முனகி நீங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வாழ்க்கையை அவனுக்கு அது அனுமதிக்கும்.

அவன் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சகோதரனைப் பட்டினி போடுவது! மகனைப் பட்டினி போடுவது....

"நீ பொய் சொல்ற."

"இந்த ரெண்டு கண் மேல சத்தியமா சொல்றேன், சார். நான் சொல்றது உண்மை. அவங்க கூட சண்டை போட்டுட்டுத்தான் நான் வெளியே வந்ததே!"

"உன்னால அவங்களுக்கு என்ன கஷ்டம்?"

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை.

"நீ எப்படி இங்கே வந்தே?"

"டிக்கெட் இல்லைன்னு இறக்கி விட்டுட்டாங்க."

அவனுக்கு ஏதாவது தர வேண்டும். ஆறணா தந்தால்தான் ஒரு சாப்பாடு கிடைக்கும். என்னுடைய பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை யோசித்துப் பார்த்தேன். பணத்திற்கு மிகவும் சிரமமாக இருந்ததால் சாயங்காலம் ஒரு பாக்கெட் பெர்க்லி வாங்கினேன். அப்போது மீதி இருந்தது ஒரு ஓட்டை முக்காலணாதான்.

நாளை இருபத்தொரு மைல் தூரத்தில் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும். புதிதாக வேலை பார்க்கப் போகும் இடத்திற்கு பயணத்திற்குத் தேவையான பணத்தை காலையில் இரயில்வே க்ளார்க் கடனாகத் தருவதாகக் கூறியிருக்கிறார்.

மூன்றாம் தேதிதான் ஆகியிருக்கிறது. சம்பளம் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.

"ஏதாவது வேலை தந்தா நான் செய்யிறேன், சார்."

"வேலை?"& நான் பெருமூச்சு விட்டேன். வாழ்வதற்குப் போதுமான வருமானத்தைத் தரக்கூடிய வேறொரு வேலை இருக்கும்பட்சம், நிச்சயம் நான் இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டேன்.

"ராமகிருஷ்ணா..."

நான் என் நண்பரை அழைத்தேன்.

"ம்...?"

"வாட் ஈஸ் டூ பி டன்?"

பதில் இல்லை.

"ராமு அண்ணே..."

யாருக்கும் அதில் கவனமில்லை.

"மிஸ்டர் வாரியர்"

"முப்பத்தொண்ணு க்ளாவர்"

"அஞ்சு ஸ்பேட்..."

"ஒன்பது க்ளாவர்."

"பாஸ்..."

மீண்டும் சீட்டாட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் ராமகிருஷ்ணனை மீண்டும் அழைத்தேன்.

"பர்ஸ்ல சில்லறை இருக்கா?"

"செல்லாத ஒரு அணா இருக்கு. மொத்தம் இருப்பதே ரூபா மைனஸ் ஃபைவ்."

விஷயம் புரிந்தது. அதற்கு மேல் கேட்கவில்லை. கேட்டாலும் பிரயோஜனமில்லை.

"ராமு அண்ணே..."

"அவனைப் பேசாம போகச் சொல்லு..."

"நண்பர்களே, கிவ் ஹிம் சம்திங்க..."

நான் அப்படிக் கெஞ்சி கேட்டது பாடகர் நண்பரின் உரத்த சத்தத்தில் ஒன்றிப் போனது.

"தப்பா விளையாடுறீங்க."

"மிஸ்டர். வாரியர்..."

"நீங்க க்ளாவர் விளையாடணும்."

நான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தேன்.

டார்ச் விளக்கை எடுத்து அறைக்குள் இங்குமங்குமாய் அலசினேன். மொத்தம் இரண்டு நாணயங்கள் இரண்டு பேரிடமும் இருக்கின்றன. ஒரு ஓட்டை காலணாவும் ஒரு செல்லாத நாணயமும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel