Lekha Books

A+ A A-

மரணக்காற்று

Maranakkatru

சிறிதும் எதிர்பார்க்காமல் நடந்த சத்யனின் மரணம் பற்றிய செய்தி அந்த மனிதரைப் பாடாய் படுத்தியது. சத்யன் அவருடைய சொந்த சகோதரர் என்பதால் அல்ல அந்த மரணம் அவரைத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. சத்யன் அளவிற்கு தான் நம்பிக்கை வைத்த ஆள் உலகத்தில் வேறொருவர் இல்லை என்பதை அவர் நன்கு அறிவார்.

யாருக்கும் ஒரு சிறு கெடுதல் கூட செய்யாத, என்ன கெடுதலை அவருக்கு யார் செய்தாலும் அதற்கு பதிலாக எதுவும் செய்ய  நினைக்காத, சுருக்கமாக சொல்லப் போனால் ஒரு அப்பாவி மனிதரான சத்யனுக்கு மரணமடையும் அளவிற்கு எந்தவொரு நோயும் இருக்கவில்லை என்பதே உண்மை.

வாழ்க்கையின் கரையை எட்டி பிடிப்பதற்காக ஒன்று சேர்ந்து துடுப்பு போட்டவர்கள்தான் அவர்கள் இருவருமே. ஒரே வீட்டில் எத்தனையோ வருடங்களாக ஒன்றாகவே இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களையெல்லாம் வாழ்க்கையில் அனுபவித்தார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மொத்தத்தில் ஒதுக்கப்பட்ட காலால் மிதித்து நசுக்கப்பட்ட பிள்ளைகளாக அவர்கள் இருந்தார்கள். சிறுவயதிலேயே அவர்களின் பெற்றோர்கள் அவர்களிடமிருந்து நிரந்தரமாக விடை பெற்றுவிட்டார்கள். அண்ணனுக்கு தம்பியும் தம்பிக்கு அண்ணனும் மட்டுமே துணையாக இருந்தார்கள்.

இரண்டு பேரும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற வருடம் இப்போதும்  ஞாபகத்தில் இருக்கிறது. தம்பியை விட நான்கு வயது அதிகமான அண்ணன் எல்லா வகுப்புகளிலும் விடாமல் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தார். ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய வகுப்புகளில் அவருக்கு தொடர்ந்து தோல்விதான் கிடைத்துக் கொண்டிருந்தது. பத்தாம் வகுப்பில் இரண்டு முறைகள் தோல்வியைத்  தழுவிய முட்டாள் மனிதராக இருந்தார் அண்ணன். தம்பி படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். எந்த வகுப்பிலும் அவர் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவவில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் அவர் எல்லா வகுப்புகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அண்ணனை விட படிப்பில் புத்திசாலியாக இருந்த தம்பியை யாரும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க தயாராக இல்லை. அண்ணனை கல்லூரியில் சேர்த்தார்கள். கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் இன்டர்மீடியட் படித்தாலும், தொடர்ந்து படிக்காமல் கல்லூரியை விட்டு வெளியே வந்த அண்ணன் அரசியல்வாதி ஆடையை அணிந்தார். அரசியல் செயல்பாடுகள் அண்ணனுக்கு மிகப்பெரிய ஒரு நட்பு வளையத்தை உண்டாக்கிக் கொடுத்தன. தம்பி குடும்ப விஷயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அருகிலிருந்த பள்ளிக் கூடத்தில் குமாஸ்தாவாக அவர் வேலை பார்த்தார். அண்ணனும் தம்பியும் இருபது வருடங்களுக்கும் அதிகமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. அவரவர் வேலைகளில் இருவரும் முழுமையாக மூழ்கினார்கள். அண்ணன் தனக்கென்று சொந்தமாக ஒரு வீடும்  நிலமும் வாங்கினார். தம்பிக்கு பூர்வீகமாக இருந்த வீடும், நிலமும் கிடைத்தன. இருவரும் தனிதனியாக இருந்த இரு வீடுகளில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.

அண்ணனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தார்கள். தம்பிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. தம்பிக்கென்று பல கடமைகள் இருந்தன. அண்ணனுக்கும் அத்தகைய கடமைகள் இருந்தாலும், அதைச் செய்யாமல் இருக்கக் கூடிய புத்திச்சாலித்தனமும், தந்திரங்களும் அவரிடம் நிறையவே இருந்தன.

இப்போது எல்லா விஷயங்களும் அவரின் ஞாபகத்தில் வந்து கொண்டிருக்கின்றன. காலம் படுவேகமாக கடந்து போய் விட்டது. அண்ணனுக்கு இப்போது எழுபது வயது. தம்பிக்கு அறுபத்தைந்து நெருங்கி விட்டிருக்கிறது.

முதலில் மரணத்தைத் தழுவ வேண்டியவரென்னவோ அண்ணன்தான். ஆனால், மரணமடைந்தது தம்பி. தம்பி மரணமடையாமல் இருக்க வேண்டும் என்று அண்ணன் விரும்பினார். தான் மரணமடையும் போது தன்னுடைய தலையை பிடிக்க வேண்டியவர் தம்பிதான். ஆனால் எல்லாம் நேர்மாறாக நடந்து விட்டது. தான் மரணமடைந்த பிறகுதான் தம்பி மரணத்தைத் தழுவ வேண்டும் என்று அண்ணன் பலமுறை கடவுளிடம் வேண்டினான். ஆனால், சிறிதும் எதிர்பாராமல் பின்புற வாசல் வழியே இந்த மரணம் உள்ளே நுழைந்து விட்டது. ஒவ்வொரு மரணமும் ஓரு அர்த்தத்தில் பார்க்கப்போனால் கொல்லைப்புற வழியில்தான் நடக்கிறது. இதுவும் அப்படித்தான் நடந்திருக்கிறது என்று மனதில் நினைத்து ஏன் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்க முடியவில்லை?

சத்யநாதன் பிரகாசமான பகல் நேரமென்றால் அண்ணனான அந்த மனிதர் கோபிநாதன் இருண்டு போன இரவு என்பதே உண்மை. இருவரின் குணத்திலும், தோற்றத்திலும் சிறிது கூட ஒற்றுமை கிடையாது. தொடர்ந்து வந்து கொண்டிருந்த நினைவு வெள்ளத்தில் அண்ணன் முழுமையாக மூழ்கிப் போயிருந்தார்.

வழக்கத்திற்கு மாறாக தொலைபேசி அமைதியாகி விட்டிருந்தது. நேற்று இரவு செய்த மழை மின்சாரத்தையும் தொலைபேசியையும் செயல்பட விடாமல் செய்தது. தெளிவான ஒரு அறிவிப்பு கடைசிவரை கிடைக்கவில்லை. தம்பி மரணத்தைத் தழுவியது எப்போது என்பதையோ மரணத்திற்குக் காரணமான நோய் எது என்பதையோ அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒன்று மட்டும் உண்மை. இனிமேல் ஐந்தாவது கல்லில் பஸ்ஸை விட்டு இறங்கும்போது சத்யநாதன் அவருக்காக அங்கு காத்து நிற்கப் போவதில்லை. ஆற்றைக் கடந்து ஐந்தாம் கல்லில் குண்டலியூர் பஸ் நிறுத்தத்தில் எப்போதும் அவருக்காக காத்து நின்றிருப்பார் சத்யநாதன். அங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது வீடு. வீட்டில் பலரும் இருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்தவரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தவர் சத்யநாதன்தான். எப்போதும் அவரைப் பின்பற்றி வாழ்க்கையில் நடந்த, அவருடைய வளர்ச்சியைப் பார்த்து மனதில் மகிழ்ச்சியடைந்திருந்த மனிதர் அவர். இனி அதையெல்லாம் நினைத்து நினைத்து மனதில் கவலைப்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை. சத்யனின் பிரிவு அவரை மிகவும் வேதனைப்படச் செய்தது.

கடந்த இரண்டு நாட்களாக மழை இடைவிடாது பெய்தவண்ணம் இருக்கிறது. தென்னை மரத் தோப்பில் நீர் தேங்கியிருக்கிறது. வாசலில் மழை நீர் தங்கியிருக்கிறது. பாதையில் நீர் நிறைந்திருக்கிறது. குளமும் கிணறும் மழை நீரால் நிரம்பியிருக்கின்றன. மழையால் போக்குவரத்து பெரிதும் பாதித்து விட்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் இந்த பெரு மழை கொஞ்சம் நின்றிருந்தால்? பிணத்தை எரியூட்டும்போது இந்த மழை நிச்சயமாக தொந்தரவு தராமல் இருக்காது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel