Lekha Books

A+ A A-

மரணக்காற்று - Page 2

Maranakkatru

சில நாட்களாகவே அவர் காணும் ஒவ்வொரு கனவும் கெட்ட செயல்களுக்கு காரணமாகவே அமைந்து கொண்டிருக்கிறது. வாசலில் மாமரத்தின் கிளையில் அமர்ந்து ஆந்தை அலறுவது அவர் காதில் விழுகிறது. அந்த அலறல் சத்தம் காதில் வந்து விழும்போது தன்னையும் மீறி அவர் நடுங்கிப் போகிறார். எங்கோ என்னவோ நடக்கப் போகிறது என்பதற்கான கெட்ட அறிகுறிகளே அவை என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது.

நடு அறையில் பிணம் படுக்க வைக்கப்பட்டிருக்கிறது. முகத்தைத் தவிர, மீதி உடம்பு முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கிறது. சத்யநாதனின் முகத்தை நீண்ட நேரம் அவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. கண்கள் நீரால் நிரம்பின.

மகன் வந்த பிறகுதான் பிணத்தை எரிக்க முடியும் கோல்ஹாப்பூர் என்ற ஊரில் அவன் வேலை செய்கிறான். கோல்ஹாப்பூர் எங்கே இருக்கிறது? மகாராஷ்ட்ரத்திற்கும் புனேய்க்கும் இடையில் இருக்கிறது அந்த ஊர். ரகு தங்கியிருக்கும் இடம் எங்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

அவனின் யாரோ ஒரு நண்பனின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னார்கள். அவன் அப்போது அங்கு இல்லை. வேலை செய்யும் நிறுவனத்தின் அலுவல் காரணமாக பெங்களூருக்குப் போயிருக்கிறானாம். பெங்களூரிலிருந்து சிக்கமங்களூருக்குப் போவதாக அவன் சொல்லிவிட்டு போனானாம். அங்குதான் புதிய கம்பெனி ஆரம்பிக்கப்படப் போகிறதாம். அங்கு அவனுக்கு வேலை மாற்றமாம். புதிய கம்பெனி, புதிய வீடு, புதுப்பிக்கப்பட்ட சம்பளம், இரவு வந்தால்தான் தகவல் தெரியுமாம்.

எல்லாம் ஒரு நிச்சயமற்ற நிலையில் நடந்து கொண்டிருந்தது. மரணம் நிகழ்ந்து பல மணி நேரம் தாண்டிவிட்டது. இவ்வளவு நேரமாகியும் மகன் இப்போது எங்கே இருக்கிறான் என்பதைப் பற்றிய சரியான தகவல் கிடைக்கவில்லை.

மரணமடைந்து ஒருநாள் ஆகிவிட்டால் பிணம் நாற்றமெடுக்க ஆரம்பித்து விடும். ஈக்களும் எறும்புகளும் மொய்க்க தொடங்கிவிடும். சிறிது சிறிதாக நீர் வழிய ஆரம்பிக்கும். அதோடு தாங்க முடியாத அளவிற்கு கெட்ட வாடை வேறு. ‘சத்யா, நீ எப்பவும் சொல்வேயில்லே, மழைக் காலத்துல மரணமடைஞ்சிடக் கூடாதுன்னு. நீ எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சியோ, அதுதான் உனக்கு நடந்திருக்கு’ - அவர் மனதிற்குள் கூறினார்.

மழை நிற்பது மாதிரி தெரியவில்லை. மிகவும் பலமாக அது பெய்து கொண்டே இருந்தது. சபிக்கப்பட்ட சிங்க மாதம் முதல் தேதி, மோசமான நாள், மரணம் முதல் தேதி என்பதைப் பற்றியோ வருடப் பிறப்பு என்பதைப் பற்றியோ, எண்ணி பார்ப்பது இல்லையே! இரவானாலும் பகலானாலும் மழையாக இருந்தாலும் வெயிலாக இருந்தாலும் மரணத்திற்கு அவை எல்லாமே ஒன்றுதானே! தேவைப்படும் நேரத்திற்கு வேண்டிய நிமிடத்திற்கு மரணம் வந்து வாயில் கதவைத் தட்டும் என்பதே உண்மை.

உறவினர்களும் பக்கத்திலுள்ளவர்களும் அறிமுகமானவர்களும் ஒவ்வொருவராக பிணத்தைப் பார்ப்பதற்காக வந்த வண்ணம் இருக்கின்றனர்.  சிலர் ஒரு முறை பார்த்து விட்டு திரும்பிச் செல்கிறார்கள் – சடங்கு என்ற முறையில்.

ஒரு மனிதன் மரணத்தைத் தழுவும்போது மரணமடைந்த மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். அடுத்த மனிதனுக்கு மட்டுமே உள்ளே தாங்க முடியாத துக்கம் உண்டாகும். மற்ற பலருக்கும் மரணமடைந்து கிடப்பவன் வெறும் ஒரு காட்சிப் பொருள் மட்டுமே.

பிணத்தை சவப் பெட்டியில் வைக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பனிக்கட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் தற்காலிகமான சவப்பெட்டி. மகன் வரும்வரை பிணத்தை அதற்குள் வைத்திருக்க வேண்டும். அவன் வந்த பிறகுதான் சவ அடக்கம் நடத்த முடியும். பனிக்கட்டி வைக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டியான ‘மார்ச்சுவரி காஃபின்’ தேவாலயத்தில் இருக்கிறது. ஜான்பாஸ் கோக்காருக்குச் சொந்தமானது அது. கிறிஸ்தவர்களுக்கான சவப்பெட்டி அது. நாயர்களுக்கு ‘மார்ச்சுவரி பாக்ஸ்’ கிடையாது. ஏங்ஙண்டியூரில் ஏதோ ஒரு க்ளப்புக்காரர்களுக்குச் சொந்தமான ஒரு சவப் பெட்டி இருக்கிறது. அவர்களைப் போய் பார்க்க வேண்டும். வாடானப்பள்ளியிலும் த்ருத்தல்லூரிலும் பொக்காளாம்கரையிலும் திருமங்கலத்திலும் பள்ளிக் கடலிலும் ‘மார்ச்சுவரி பாக்ஸ்’ வாடகைக்கு கிடைக்கின்றன. அது மட்டும் கிடைத்துவிட்டால் போதாது. பனிக்கட்டிகள் கிடைக்கவேண்டும். பையில் நிறைக்கப்பட்ட ஐஸ் கட்டிகள், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவை பிணத்தைப் பத்திரமாக பாதுகாக்கும். பிணத்திற்கு எந்தவொரு கேடும் வராது. அனுபவம் உள்ளவர்கள் விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரின் இதயம் மிகவும் மரத்துப் போய் விட்டிருந்தது. தம்பியின் பிணத்தை அடக்கம் செய்வதற்கு அண்ணன் அதிக ஆர்வம் காட்டி கொள்ள வேண்டிய அவசியமில்லை. எதுவும் பேசாமல் வெறுமனே ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருந்தால் போதும்.

வெகு விரைவிலேயே மரணம் தன்னையும் வந்து அணைக்கத்தான் போகிறது. அது மிகவும் தூரத்தில் இல்லை - சீக்கிரமே நடக்கப் போகிற ஒன்று அது என்ற விஷயம் அவருக்கு நன்றாகவே தெரியும். அவரின் இதயம் பலமுறை பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறது. பலமுறை ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்ரே எடுக்கப்பட்டிருக்கிறது. எக்கோடெஸ்ட் நடத்தப்பட்டிருக்கிறது. டி.எம்.டி. செய்யப்பட்டிருக்கிறது. மிக விரைவில் ஆன்ஜியோக்ராம் எடுக்க வேண்டும். பலூன் சர்ஜரி போதும். பைபாஸ் தேவையில்லை. இதய அறுவை சிகிச்சை இல்லாமலேயே விஞ்ஞான ரீதியான புதிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மருத்துவமனைகள் இருக்கின்றன. திறமை வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர் தன் தம்பியின் பிணத்திற்கருகில் உட்கார்ந்து தன்னுடைய மரணத்தைப் பற்றிய நினைவுகளில் தன்னையும் மீறி மூழ்கிப் போனார்.

அவசர நடவடிக்கைகள் சில எடுத்ததன் மூலம் சத்யனின் பிணம் பனிப் பெட்டிக்குள் எடுத்து வைக்கப்பட்டது. அவர் வெளியே இறங்கி பார்த்தார். அப்போதும் வெளியே கனமான மழை பெய்து கொண்டுதானிருந்தது. மழையுடன் சேர்ந்து காற்றும் வீசிக் கொண்டிருந்தது. மரங்களின் தலைப் பகுதிகள் காற்றில் இங்குமங்குமாய் ஆடிக் கொண்டிருந்தன.

வெளியே இறங்கி நடப்பதற்கான சூழ்நிலை இதுவல்ல என்பதைப் புரிந்து கொண்ட அவர் மீண்டும் மரண வீட்டை நோக்கி நடந்தார் - மூச்சு அடைக்க.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel