Lekha Books

A+ A A-

விராஜ்பேட்டையிலிருந்து வந்த பெண்

veerajpettaiyilrunthu vantha pen

ண்பது வயதான எழுத்தச்சன் மரணத்தை நோக்கிப் படுத்திருந்தபோது ஒரு ஆசை உண்டானது- சதீ நம்பியாரின் கையைச் சற்று பிடிக்க வேண்டும்

யார் அந்த சதீ நம்பியார்?

பி.கெ. நம்பியாரின் மனைவி.

யார் அந்த பி.கெ. நம்பியார்?

எங்களுடைய ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரரும் "காண்ட்ராக்ட்” தொழில் செய்யக்கூடிய மனிதராகவும் இருப்பவர்.

இந்தக் கதை நடைபெற்ற காலம் சதீ நம்பியாரின் திருமணம் முடிவடைந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டிருந்த காலம். அவள் மூன்று, ஐந்து வயதுகளைக் கொண்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டிருந்தாள்.

எழுத்தச்சனின் வினோதமான ஆசையை அறிந்து உறைந்து போய்விட்டிருந்த- குடிசைக்கு அருகிலும் வெள்ளை நிற கரையான்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருந்த படிகளிலும் நின்று கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உறவினர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கிழவன் இறுதி மூச்சை விடுவதை எதிர்பார்த்துக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்த பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மெதுவான குரலில் பேசிக் கொண்டார்கள். அவர்கள் அப்படி மெதுவான குரலில் என்ன பேசிக்கொள்கிறார்கள்?

“எல்லா ஆண்களுமே இப்படித்தான். சாவை நெருங்கிக் கொண்டு படுத்திருக்கும்போதுகூட, இன்னொருத்தனின் மனைவி மீது நினைப்பு.”

பக்கத்து வீட்டு நாராயணன் மாஸ்டரின் மனைவி மெதுவான குரலில் முணுமுணுத்தாள்.

“மரணத்தை நோக்கிப் படுத்திருக்கும் மனிதரைப் பற்றி குற்றம் சொல்லக்கூடாது ஸ்ரீதேவியம்மா.” எழுத்தச்சனின் ரசிகனும் அந்த ஊர்க்காரனுமான நான் சொன்னேன்: “எல்லா தவறுகளையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்குமான நேரமிது. இன்று எழுத்தச்சன்... நாளை நாம்...”

பக்தராகவும் இரக்க குணம் கொண்ட மனிதராகவும் இருந்தார் எழுத்தச்சன். ஒரு காலத்தில் ஊரையே அடக்கி, விலைக்கு வாங்கக் கூடிய அளவிற்கு வசதி படைத்தவராக இருந்தார். எல்லாவற்றையும் கண்ணில் பார்ப்பவர்களுக்கெல்லாம் வாரி வாரிக் கொடுத்தார். தானம் செய்து செய்து இறுதியில் வீட்டில் ஒன்றுமே இல்லை என்ற நிலை உண்டாகி, பிள்ளைகள் நாலா திசைகளையும் நோக்கிக் சென்று விட்டார்கள். இறுதியில் பகல் வேளையில்கூட வெளிச்சம் உள்ளே வராத இருளடைந்த அந்த பழைய வீடும் ஒரு மகளும் மட்டுமே எஞ்சினார்கள். அவளும் ஒருநாள் எழுத்தச்சனை விட்டு, தன்னுடைய விருப்பப்படி போய்விடுவாள். எழுத்தச்சனின் கையில் மீதமிருக்கும் நான்கு காசில்தான் அவளுடைய கண்களே இருக்கின்றன என்ற விஷயம் எனக்குத் தெரியும்.

எழுத்தச்சனின் மகளின் பெயர் என்ன?

சுஜாதா சுதர்சனன்.

எழுத்தச்சன் இறந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்ப்பதற்கும் அவருக்கு தேவையானதையெல்லாம் செய்து கொடுப்பதற்கும் மிஸ்டர் சுதர்சனன் வந்திருக்கிறாரா?

ஆமாம்... வந்திருக்கிறார்.

வெளிச்சம் குறைவாக இருக்கும் அறையில் போடப்பட்டிருக்கும் மரணப்படுக்கைக்கு அருகில் விலகி நின்று கொண்டு ஊதுபத்தியின் வாசனை கலந்த வெள்ளை நிறப் புகையை சுவாசித்தவாறு நான் எழுத்தச்சனின் முகத்தையே பார்த்தேன். அழுது தளர்ந்த ஒரு குழந்தையைப் போல அவர் அசைவே இல்லாமல் படுத்திருந்தார். எழுத்தச்சன் இறந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததும்,எனக்கு கடுமையான கவலை உண்டானது. ஊரில் உள்ளவர்களுக்கு பணத்தையும் பொருட்களையும் வாரித் தந்த எழுத்தச்சன் எனக்கு எதுவுமே தந்ததில்லை என்பதுதான் உண்மை! இன்னும் சொல்லப்போனால், எதற்காக தரவேண்டும்? தன் சொந்தச் செலவில் எழுத்தச்சன் படிக்க வைத்த சலவைத் தொழிலாளி கண்ணனின் மகன் ஐ.ஏ.எஸ்ஸில் தேர்ச்சியடைந்துவிட்டான். முத்தப்பன்காவில் இருக்கும் சத்திரம் எழுத்தச்சன் கட்டியது. வானம் பிளந்து பருவமழை பொழியும்போது, ஊரிலுள்ள ஏழைகள் தலையைச் சாய்த்துக் கொள்வதற்கு அது ஒரு இடத்தைத் தந்தது.

எல்லாரும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க, எழுத்தச்சன் மெதுவாகக் கண்களைத் திறந்தார். ஆன்மாவின் பலம் தாழ்ந்துபோய், நரை விழுந்திருந்த அந்த கண்களில் மோகத்தின் வெளிச்சம் தெரிந்தது. எழுத்தச்சன் என்னவோ முணுமுணுத்தார்.

“என்ன அப்பா?”

மகள் தன் தந்தைக்கு முன்னால் முகத்தைத் தாழ்த்தினாள்.

“சதி வந்தாச்சா?”

கடலின் பெருமூச்சைப்போல எழுத்தச்சன் கேட்டார்.

அதைக்கேட்டு தன் தந்தையின் முகத்தைப் பார்க்காமலே மகள் தேம்பித் தேம்பி அழுதாள். சுதர்சனின் கண்களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. தொடர்ந்து அந்த இடம் முழுவதும் அமைதி வந்து ஆக்கிரமித்தது. வெளியே வெயில் வாட்டிக் கொண்டிருந்தது.

“ஏதாவது முடிவு செய்யுங்க.”

நாராயணன் மாஸ்டர் எழுத்தச்சனின் பாதங்களைத் தொட்டுப் பார்த்தார். பனிக்கட்டியைப் போல குளிர்ச்சியாக இருந்தது. சுதர்சனன், மாஸ்டர் கூறியது காதில் விழாததைப்போல நின்றிருந்தார். கோபம்,வெட்கம் காரணமாக அவருடைய இரண்டு காதுகளும் சிவந்துப் போயிருந்தன. இனி எப்படி வெளியில் அவர் நடப்பார்? ஆட்களின் முகத்தைப் பார்ப்பார்? இதைவிட ஒரு நாணம் கெட்ட செயல் வருவதற்கு இருக்கிறதா? தன்னையே யாரோ அவமானப்படுத்தி விட்டதைப்போல அவர் உணர்ந்தார்.

“முடிவு செய்யறதுக்கு எதுவுமே இல்லை!”

எல்லாரின் தலைகளும் என்னை நோக்கித் திரும்பின.

“ஊருக்கும் ஊரிலுள்ள மக்களுக்கும் என்னவெல்லாம் செய்த மனிதர்... எனினும், மரணத்தை நோக்கிக் கிடக்கும்போது ஒரு சிறிய ஆசை தோன்றினால், நாம வெறுமனே இருக்க முடியுமா? நல்ல கதைதான்...”

“நீ சொல்றது சரிதான் ஆனந்தா. ஆனால், நம்பியாரின் மனைவி சம்மதிப்பாங்களா? நம்பியாரிடம் போய் யார் பேசுவது? அதற்கான தைரியம் யாருக்கு இருக்கிறது?”

நாராயணன் மாஸ்டர் ஒவ்வொருவரையும் மாறி மாறிப் பார்த்தார். எல்லாரும் அவருடைய கேள்வியைக் கேட்காதவர்களைப்போல நின்று கொண்டிருந்தார்கள். சிலர் சட்டைக்குள்ளிருந்த தங்களுடைய நெஞ்சைப் பார்த்து ஊதிக் கொண்டார்கள். "ஹா... என்ன ஒரு வெப்பம்!” என்று கூறினார்கள்.

“என்ன... யாரும் எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள்?”

நாராயணன் மாஸ்டர் கேட்டார். யாரும் எதுவும் பேசவில்லை. எல்லாரும் வானத்திலிருந்த கரிய மேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “மழை வருவதற்கான ஒரு அறிகுறிகூட இல்லையே!” அவர்கள் கூறினார்கள்.

எழுத்தச்சனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த என்னால் அவருடைய சுவாசம் குறைந்து கொண்டு வருவதை உணர முடிந்தது. சில வேளைகளில் கண்மணிகள் மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. நான் என்னுடைய விருப்பக் கடவுளான பறஸ்ஸினிக் கடவு முத்தப்பனை மனதில் நினைத்தேன்.

“நீ எங்கே போகிறாய் ஆனந்தா?”

நாராயணன் மாஸ்டர் திண்ணையில் கழற்றி வைத்திருந்த டயரால் ஆன செருப்பை எடுத்து அணிந்து கொண்டு எனக்குப் பின்னால் வந்தார்.

கான்ட்ராக்ட் எடுக்கக் கூடிய ஆளாக இருந்தாலும், பி.கெ. நம்பியார் பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றிருந்தார். எங்களுடைய ஊரில் ஆங்கில நாளிதழ் வாங்கக்கூடிய அபூர்வ ஆட்களில் ஒருவராக அவர் இருந்தார். விஷயத்தைக் கூறினால், நம்பியாருக்குப் புரியாமல் இருக்காது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel