Lekha Books

A+ A A-

கிருஷ்ணனின் குடும்பம்

krishnanin-kudumbam

நேற்று மாலையில் ஆரம்பித்தது நெற்றி நரம்புகளின் இந்தக் குடைச்சல். தொடர்ந்து தலைவலியும் வந்து சேர்ந்தது. படுத்தபோது ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பது மட்டும் தெரிந்தது. குளிரை உணர்ந்தபோது எழுந்துபோய் மின்விசிறியை அவள் நிறுத்தினாள். நிறுத்தும்போதும், ஓடச் செய்கிறபோதும் அது இலேசாக முனகும்.

வேகத்தைக் கூட்டி வைத்தால் அதற்குப் பிறகு எந்த சத்தமும் உண்டாகாது. மெல்லிய ஒரு ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும். முனகலுடன் மின் விசிறி நின்றதும் கழுத்து வியர்த்தது. கழுத்திலிருந்து வெப்பம் ரவிக்கைக்குள் மார்பு நோக்கி கீழே இறங்கியது. வெப்பம் அதிகமாக இருப்பது தெரிந்தது. அவள் எழுந்து போய் மீண்டும் மின் விசிறியைப் போட்டாள். நள்ளிரவு வரை அவள் அவ்வப்போது எழுந்து சென்று மின் விசிறியை நிறுத்துவதும் பின்னர் போடுவதுமாக இருந்தாள். அவளுடைய மகனின் அறையில் அப்போதும் வெளிச்சம் இருந்தது. நள்ளிரவு தாண்டிய நேரத்தில் எப்போதோ அவள் களைத்துப்போய் படுத்து விட்டிருந்தாள். அப்போதும் நெற்றியில் நரம்புகளின் குடைச்சல் இருந்தது.

எவ்வளவுநேரம் கடந்து படுத்தாலும், எந்த அளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் அதிகாலை ஐந்து மணிக்கு அவள் படுக்கையை விட்டு எழுந்து விடுவாள். நாற்பது வருடங்களாகவே இருந்து வரும் பழக்கம் இது. தன்னுடைய தலைக்குள் அலாரம் அடிக்கக் கூடிய ஒரு கடிகாரம் இருக்கிறதோ என்று கூட அவள் பல நேரங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறாள். மழை விடாது பெய்து கொண்டிருக்கும் மேஷ மாதத்திலும், குளிர் கடுமையாக இருக்கும் விருச்சிக மாதத்திலும் கூட சரியாக ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கும். உடம்புக்கு என்ன கேடு இருந்தாலும் அவள் கண்களைத் திறப்பாள். இன்றும் அதுதான் நடந்திருக்கிறது.

தலைவலி முழுமையாகப் போய்விட்டிருந்தது. எனினும் நெற்றியிலும் தோள்களிலும் ஒரு வலி இருக்கவே செய்தது. அவள் எழுந்து உட்கார்ந்து நெற்றியில் கை வைத்தவாறு சிறிது நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். வெளியே தெரு விளக்குகள் அணைந்திருந்தன. ஜன்னலுக்கு அப்பால் இருந்த இலேசான இருட்டில் சதுரம் சதுரமாக வீடுகள் தெரிந்தன. தூரத்தில் குருத்துவாராவின் பொன் பூசப்பட்ட மகுடம் ஒரு மின்னல் கீற்றைப் போல தெரிந்தது. அவள் அவிழ்ந்து கிடந்த புடவையை பாவாடைக்கு மேலாகச் சுற்றிப் பிடித்துக் கொண்டு ‘‘பகவானே’’ என்று அழைத்தவாறு அறையைவிட்டு வெளியே வந்தாள்.

தெருவில் இருட்டினூடே பால் வியாபாரிகள் எருமைகளுடன் வந்து கொண்டிருந்தார்கள். இருட்டில் தெரிந்த நெருப்பு அவர்களின் உதடுகளில் எரிந்து கொண்டிருந்த பீடிகள்தான். தூக்கக் கலக்கத்துடன் நடந்துகொண்டிருந்த எருமைகளின் கண்களில் பச்சை நிற ஒளி தெரிந்தது. மாடியில் காயப்போட்டிருந்த துவாலையை எடுத்துக் கொண்டு அவள் குளியலறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டாள். அந்த வெளிச்சம் திடீரென்று இருட்டில் ஒரு பெரிய ஓட்டையை உண்டாக்கியது. இரும்புத் தொட்டியில் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவளுடைய மகன் எப்போதும் குழாய்க்குக் கீழே உட்கார்ந்துதான் குளிப்பான். ஆனால், அவளுக்கோ தொட்டியில் நீரை நிறைத்துக் கொண்டு ‘மக்’கை வைத்து தலையில் நீரை மொண்டு ஊற்றிக் குளிக்க வேண்டும். அப்படி குளித்தால்தான் அவளுக்குத் திருப்தி. குளிர்ந்த நீர் பட்டபோது கண்களை அவள் மூடிக் கொண்டாள்.

குளித்து முடித்து வெளியே வந்தபோது அவளுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்ததைப் போல் இருந்தது. வானம் இலேசாக வெளிறிக் கொண்டிருந்தது. ஈரக்கூந்தலை அவிழ்த்துவிட்டு சலவை செய்த புடவையை உடம்பில் அணிந்து கொண்டு அவள் படுக்கையறையை நோக்கி மீண்டும் சென்றாள். படுக்கையறைதான் அவளுக்கு பூஜை அறையும். கிராமத்தில் அவளுக்குப் பிரார்த்தனை செய்ய ஒரு பெரிய அறையே இருந்தது. அவளே அந்த அறையைச் சுத்தப்படுத்துவாள். பிரார்த்தனை செய்யும் நேரத்தைத் தவிர வேறு யாரையும் அந்த அறைக்குள் அவள் அனுமதிக்கவே மாட்டாள். கதவைத் திறந்தவுடன் சந்தனத்திரி, கற்பூரம், பூக்கள் ஆகியவற்றின் வாசனை ‘குப்’பென்று வரும்.

இங்கு நகரத்தில் தன்னுடைய மகன் வசிக்கும் இடத்தில் ஒரு தனியான பூஜை அறையை கனவில் காணக்கூட அவளால் முடியாது. அதனால் படுக்கையறையின் ஒரு மூலையையே பூஜை அறையாக அவள் ஆக்கிக் கொண்டாள். கபாடி மார்க்கெட்டிலிருந்து அவளுடைய மகன் வாங்கிக்கொண்டு வந்த ஸ்டூலின் மீதுதான் கடவுள் சிலை இருந்தது. அதற்கு முன்னால் கற்பூரத் தட்டு ஒரு சிறிய வால் கிண்டி ஒரு சிறு குத்துவிளக்கு. அதிகாலை நேரத்திலும் சாயங்கால வேளையிலும் அவள் தவறாமல் அந்தக் குத்துவிளக்கை ஏற்றி வைப்பாள். விளக்கேற்றுவது எங்கே தவறிவிடப் போகிறதோ என்ற பயத்தின் காரணமாக இரவு நேரங்களில் அவள் வேறு எங்கும் போய் தங்குவதில்லை. பகலில் எங்கு போனாலும் மாலை வருவதற்கு முன்பே திரும்பி வந்துவிடுவாள். ஒரு முறை கூட எந்தக் காரணத்தைக் கொண்டும் விளக்கு ஏற்றுவதுநின்று போய்விடக் கூடாது என்பதில் அவள் குறியாக இருந்தாள்.

உதடுகளில் கடவுள்களின் பெயர்களைக் கூறியவாறு பாதி மூடிய கண்களுடன் அவள் தீப்பெட்டியை உரசி குத்துவிளக்கின் திரிகள் ஒவ்வொன்றையும் எரிய வைத்தாள். விளக்கு ஏற்றும் போது அவள் மின்விளக்கைப் போடுவதில்லை. மங்கலான இருட்டில் திரிகள் ஒவ்வொன்றாக எரிந்து, அந்த வெளிச்சத்தில் கடவுளின் திருஉருவத்தைப் பார்ப்பதில் அவளுக்கு விருப்பம் அதிகம். அப்போது அவள் அனுபவிக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் விலை மதிப்புள்ள ஒரு தருணமாக அவள் அந்த நிமிடத்தை நினைப்பாள்.

திரிகள் ஒவ்வொன்றும் எரிய ஆரம்பித்த போது கையிலிருந்த தீக்குச்சி முழுமையாக எரிந்து முடித்திருந்தது. எரிந்த தீக்குச்சியைக் கீழே போட்ட அவள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். கண்களைத் திறந்தவுடன், அவள் கடவுளின் முகத்தைப் பார்க்கவில்லை. முதலில் எரிந்து கொண்டிருக்கும் குத்துவிளக்கில்தான் அவளின் கண்கள் பதியும். பிறகு கற்பூரத் தட்டைப் பார்ப்பாள். தொடர்ந்து மெதுவாக கடவுளின் ஒளிமயமான பாதங்களை அவளுடைய கண்கள் பார்க்கும். அங்கேயே அவளின் பார்வை சிறிது நேரம் நின்றிருக்கும். நீல வண்ணப் பாதங்களிலிருந்து விலகும் பார்வை மெதுவாக கடவுளின் முகத்தில் சென்று பதியும் போது மீண்டும் அவள் தன் கண்களை மூடிக் கொள்வாள். பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் உதடுகள் இலேசாக அசைந்து கொண்டிருக்கும். அப்படி நின்று கொண்டிருக்கும் பொழுது அவள் பூமியை விட்டு, வாழ்க்கையை விட்டு விலகிப் போய் கடவுளின் உடலிலுள்ள ஒரு வியர்வைத் துளியாக மாறிப் போயிருப்பாள்.

குத்துவிளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel