
பூஜையறை இல்லாத ஒரு வீட்டில் தன்னால் சிறிதுகூட வாழ முடியாது என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். சிறு வயது முதல் தன் மனதில் இருக்கும் ஒவ்வொன்றையும் பகவானிடம் சிறு கூறித்தான் அவள் வளர்ந்திருக்கிறாள். ரகசியத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவள் பகவான் இருக்கும் இடத்திற்கு எத்தனை முறை ஓடிச் சென்றிருக்கிறாள்.
‘‘என் லட்சுமி, எப்போ பார்த்தாலும் நீ இப்படியே பூஜை அறைக்குள்ளேயே இருந்தா எப்படி? அங்கே உன்னைப் பார்க்க ஆளுங்க வந்திருக்காங்க, மகளே!’’
அவளுடைய தாய் பூஜையறையின் கதவுக்கு வெளியே நின்றவாறு சொன்னாள்.
அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உறவினர்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள். லட்சுமியின் ஊருக்கு வடக்குப் பக்கத்திலிருந்து வருவதே இரண்டு பஸ்கள்தான். ஒரு பஸ் காலையில் மற்றொரு பஸ் மதியத்திற்குப் பின்னாலும் வரும். காலையில் வரும் பஸ்தான் மதியத்திற்குப் பின்னாலும் வரும். மதியத்திற்குப் பின்னால் வரும் பஸ் சில நேரங்களில் வராமற் போவதும் உண்டு. குண்டும் குழியுமாக இருக்கும் பாதையில் மாட்டு வண்டி சக்கரங்கள் பதித்த அடையாளங்கள் பதிந்திருக்கும். அன்று பஸ்களில் வந்து இறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் லட்சுமியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தவர்களே. பாதம் வரை தொங்காத புடவைகளை இடுப்பில் சுற்றி தலையில் கனகாம்பரம் சூடிய இளம் பெண்களும் இடுப்பிற்கு மேலே எதுவும் அணியாமலிருந்து காது வளர்ந்த வயதான பெண்களும் புடைத்துக் காணப்பட்ட மடியில் வெற்றிலை, பாக்கு பொட்டலயத்தையும் நாணயங்களையும் வைத்துக்கொண்டு தோளில் வேஷ்டியை மடித்துப் போட்டிருக்கும் ஆண்களும் முழங்கால் வரை இருக்கும் இஸ்திரி போட்ட ட்ரவுசரும் சட்டையும் அணிந்த சிறுவர்களும் பஸ்ஸை விட்டு இறங்கி திருவிழா நடைபெறும் இடத்திற்கு வருவதைப் போல லட்சுமியின் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
கிருஷ்ணன் வேறு ஊரைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுடைய அரசியல் செயல்பாடுகளைப் பற்றி முக்கத்துக்காரர்களுக்கு நன்கு தெரியும். அவனை நேசிக்கக் கூடி இளைஞர்கள் அந்த கிராமத்தில் இருந்தார்கள். அவர்கள் எழுதி நகரத்திற்குக் கொண்டுபோய் அச்சடிக்கப்பட்ட வாழ்த்துப் பத்திரத்தை ஒரு இளைஞன் திருமணப் பந்தலில் உரத்த குரலில் வாசித்து எல்லாரையும் கேட்கச் செய்தான்.
‘‘திருதட்டாறத்து கிருஷ்ணன் அவர்களுக்கு முக்கம் கிராமத்தைச் சேர்ந்த படிப்பக செயல்வீரர்கள் சமர்ப்பிக்கும் வாழ்த்து இதழ்.
இல்லறம் என்ற மணிமண்டபத்திற்குள் தாங்கள் காலடி எடுத்து வைக்கும் இந்த இனிமையான நேரத்தில் தோழரே, தங்களுக்கு நாங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதயத்தின் ஆழத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட நறுமண மலர்களால் கட்டப்பட்ட அன்பு மாலையை நாங்கள் தங்களின் கழுத்தில் அணிவிக்கிறோம். அமெரிக்க நாட்டிற்கு எதிராகவும், நம் நாட்டின் குத்தகை முதலாளிகளுக்கு எதிராகவும் ஜமீந்தார்களுக்கு எதிராகவும் தாங்கள் முடிவில்லா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விஷயம் எல்லாரும் நன்கு அறிந்த ஒன்று. முக்கத்தைச் சேர்ந்த தங்களின் மனைவி இந்தப் போராட்டத்தில் தங்களுக்கு உற்சாகத்தையும் மன தைரியத்தையும் தருவார் என்றும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போரில் கடைசி நிமிடம் வரை தங்களுடன் அவர் நிற்பார் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இணைக் குருவிகளே, தங்களின் குளிர் நிலவு காட்சியளிக்கும் இல்லற வாழ்க்கையில் என்றென்றும் அன்பு என்ற சந்தனம் மணம் பரப்பிய வண்ணம் இருக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.’’
வாழ்த்து இதழுக்கு மேலே மரக்கிளையில் அமர்ந்து ஒன்றோடொன்று அலகுகளை உரசிக்கொள்ளும் ஜோடிக்கிளிகளின் படம் இருந்தது.
எல்லாரின் கவனமும் வாசலில் வாசித்துக் கொண்டிருந்த வாழ்த்து இதழில் பதிந்திருந்தபோது லட்சுமி தன் தம்பியை அருகில் அழைத்து ஒரு கனமான பொட்டலத்தை அவன் கையில் தந்தாள்.
‘‘நீ இதை கிருஷ்ணன் அத்தான் வீட்டுல கொண்டுவந்து தரணும். யாருக்கும் தெரியக்கூடாது.’’
‘‘இதுல என்ன இருக்கு அக்கா?’’
‘‘பகவான்...’’
பாஸ்கரனின் முகத்தில் ஒரே குழப்பம்.
‘‘உடைச்சிடாதேடா... என் பகவானுக்கு ஏதாவது நடந்துட்டா நான் உயிரோட இருக்க மாட்டேன்.’’
அவள் ஒரு காலி பவுடர் டப்பாவை தன் தம்பியிடம் தந்தாள். அந்த டப்பா குலுங்கியது. அது நிறைய அவளின் ரகசிய சம்பாத்தியம் இருந்தது. அதில் பெரும்பாலும் இருந்தவை ஓட்டை உள்ள காலணா நாணயங்களும் ஜார்ஜ் மன்னரின் தலை போட்ட அரை அணா நாணயங்களும்தான்.
சடங்குகளாலும் கணவன் வீட்டிற்கான நீண்ட பயணத்தாலும் இரவு வந்தபோது லட்சுமி மிகவும் களைத்துப்போய் காணப்பட்டாள். ஆனால், மிகவும் உற்சாகமான மனிதனாக கிருஷ்ணன் படுக்கையறைக்குள் வந்தான். சட்டை பாக்கெட்டில் நிறைய பேப்பர்களை வைத்திருந்தான். சதைப் பிடிப்பான கைகளையும் சுருண்ட தலைமுடியையும் தெளிவான முகவெளிப்பாட்டையும் கொண்டிருந்தான் அவன். காது குத்தப்பட்டிருந்தாலும், அணிகலன்கள் எதுவும் அவன் அணியவில்லை. மீசை இல்லை. எதுவுமே பேசாமல் கிருஷ்ணன் லட்சுமியின் அருகில் சென்ற ஒரு நிமிடம் அவளையே பார்த்துவிட்டு, அவளுடைய நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்தான். அப்போது குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்த ஒரு சுகத்தை அவள் உணர்ந்தாள்.
‘‘ரொம்பவும் களைச்சிப் போயிட்டேல்ல?’’- அவன் கேட்டான்: ‘‘எனக்கு இந்த நாதசுரம், பந்தல், ஆரவாரம் எதுவுமே பிடிக்காது. திருமணம்ன்றது ரொம்பவும் எளிமையா நடக்கணும். பதிவு அலுவலகத்துலயே அதை முடிச்சிடலாம். ஆனா, அதுக்கு மற்றவங்க சம்மதிக்கணுமே?’’
அவன் மடியிலிருந்து வெற்றிலை, பாக்கு பொட்டலத்தை வெளியே எடுத்தான். முற்றிய ஒரு வெற்றிலையின் காம்பைக் கிள்ளிய அவன் சொன்னான். ‘‘எப்பவும் நான் வீட்டிலுள்ளவங்க சொல்றதைக் கேட்க மாட்டேன். இந்த ஒரு விஷயத்திலயாவது அவங்க சொன்னபடி கேட்டா என்னன்னு நினைச்சேன். திருமணம்ன்றது வாழ்க்கையில ஒரே ஒரு முறைதானே வருது?’’
அவன் அவளைக் கடைக்கண்களால் பார்த்துச் சிரித்தான். வெற்றிலையில் சுண்ணாம்பு தேய்த்த பாக்கும் புகையிலையும் சேர்த்து சுருட்டி அவன் அதை வாய்க்குள் திணித்தான். அவனுடைய மூச்சுக் காற்றில் புகையிலையின் மணம் இருந்தது. சிறிது நேரம் சென்ற பிறகு அவன் எழுந்து ஜன்னலருகில் சென்று ஓட்டின்மீது நீட்டித் துப்பினான். அவர்களின் படுக்கையறை மேலே இருந்தது. உயரமுள்ள மேற்கூரையையும் கனமான கதவுகளையும் கொண்ட அந்த அறையில் கும்ப மாதத்தில்கூட உஷ்ணம் இருப்பது தெரியாது. ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றால் கண்ணுக்குத் தெரியாத தூரம்வரை பரந்து கிடக்கும் வயல்கள் தெரியும்.
‘‘முக்கத்துக்காரர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு. நீ அந்த திருமண வாழ்த்து இதழ் வாசிச்சதை கேட்டேல்ல? இன்னையில இருந்து மரக்கிளையில் உட்கார்ந்திருக்குற இரண்டு ஜோடிக் கிளிகள் நாம..."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook