Lekha Books

A+ A A-

விராஜ்பேட்டையிலிருந்து வந்த பெண் - Page 3

veerajpettaiyilrunthu vantha pen

“இனி நாம என்னடா செய்றது?”

மரத்தடியில் காற்று வாங்கிக் கொண்டு நின்றிருந்த நாராயணன் மாஸ்டர் என்னுடன் சேர்ந்து நடந்தார்.

“மாஸ்டர்... நடங்க... எழுத்தச்சனிடம் இறக்க மாட்டீர்கள் என்று கூறுங்கள். ஒரு அரை மணிநேரத்திற்குள் எழுத்தச்சனின் விருப்பத்தை நான் நிறைவேற்றித் தருகிறேன் என்று கூறுங்கள்.”

“ஆனந்தா, நீ எங்கே போகிறாய்?”

“மல்லிகாவைத் தேடி...”

“என்ன?”

அவரிடம் வானமே இடிந்து விழுந்துவிட்டதைப் போன்ற அதிர்ச்சி வெளிப்பட்டது. அவர் அதே இடத்தில் வாயைப் பிளந்து கொண்டு நின்றிருக்க, நான் மல்லிகாவின் வீட்டை நோக்கி நடந்தேன். அவள் யார் என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும். தெரியாதவர்கள் யாராவது இருந்தால், மதிப்பிற்குரிய மனிதர்களே... கேட்டுக் கொள்ளுங்கள்- எங்களுடைய ஊரில் மோசமான நடத்தையைக் கொண்ட ஒரு பெண்... அவள்தான் மல்லிகா. அவள் விராஜ்பேட்டையிலிருந்து வந்து எங்களுடைய ஊரில் வசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் கொங்கிணியையும் தூய தமிழையும் பச்சை மலையாளத்தையும் பேசுவாள். அடர்த்தியான வண்ணங்களைக் கொண்ட புடவைகளை அணிவாள். விலைகுறைவான நறுமணத்தைக் கொண்ட பவுடரைப் பூசுவாள்.

“எழுத்தச்சா...”

நான் கட்டிலில் உட்கார்ந்து அழைத்தேன்.

“எழுத்தச்சா... இதோ... சதி... கண்களைத் திறங்க...”

எழுத்தச்சன் இனிமேல் கண்களைத் திறக்கமாட்டார் என்பதும், அப்படியே திறந்தாலும் எங்களை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது என்பதும் எனக்குத் தெரியும்.

நான் எழுத்தச்சனை குலுக்கிக்கொண்டே அழைத்தேன். எழுத்தச்சனின் உடல் பனிக்கட்டியைப் போல மரத்துப் போய்விட்டிருந்தது. எல்லாரும் மூச்சை அடக்கிக் கொண்டு நின்று கொண்டிருக்க, எழுத்தச்சனின் சுருக்கங்கள் விழுந்த, மூடியிருந்த கண்களில் மெல்லிய ஒரு அசைவு உண்டானது.

“எழுத்தச்சா... சதி... சதி வந்திருக்காங்க.”

நான் மல்லிகாவின் கையை எடுத்து எழுத்தச்சனின் காலியான கிளிக்கூண்டைப்போல இருந்த நெஞ்சின்மீது வைத்தேன். கண்கள் திறந்திருக்கவில்லையென்றாலும், எழுத்தச்சனின் வலதுகை சற்று மெதுவாக அசைந்தது. மெலிந்து போயிருந்த கை விரல்கள் நடுங்கின. எழுத்தச்சனின் நடுங்கிக் கொண்டிருந்த வலது கை அவளுடைய கை விரல்களைத் தொட்டது. அப்போது மரணம் நெருங்கிக் கொண்டிருந்த எழுத்தச்சனின் முகத்தில் எங்கோ தூரத்தில் தெரியும் ஒரு சூரிய உதயத்தின் சாயல் வெளிப்பட்டது.

நான் செய்தது சரியானதா? தவறானதா? எவ்வளவோ வருடங்களாக நான் எனக்குள் கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி இது. எழுத்தச்சன் மரணத்தைத் தழுவி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

காண்ட்ராக்டர் பி.கெ. நம்பியாரின் மூளையில் ரத்தம் உறைந்து போய்விட்டது. புகழ்பெற்ற மருத்துவர்கள் செய்த தீவிர முயற்சிகளின் பலனாக அவருடைய உயிர் பிழைத்துக் கொண்டாலும், அவருடைய இரண்டு கைகளும் நிரந்தரமாக செயல்படாமல் போய்விட்டன. மூளையில் ரத்தம் உறைந்தால் கைகள் செயல்படாமல் போகுமா? மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி எனக்கு சிறிதும் தெரியாது. எனினும், நம்பியாரின் கைகள் செயலற்றுப்போய்விட்டன என்ற விஷயத்தைக் கேட்டவுடன், இன்று... நீண்ட இருபத்தாறு வருடங்களுக்குப் பிறகு எழுத்தச்சனின் இறுதி நாட்களைப் பற்றிய நினைவுகளில் நான் மூழ்கிப் போய்விட்டேன்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel