Lekha Books

A+ A A-

ஏழாவது பூ

Ezhavathu Poo

து அவர்களின் முதல் இரவு. பாதி இரவு முடிகிற வரையில் அவன் அவளிடம் பல கதைகளையும் சொல்லிக் கொண்டிருந்தான். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு வகையான அனுபவங்களையும் அவன் கூறினான்.

சிறுவனாக இருந்தபோது ஒரு கன்றுக்குட்டியின் மேல் ஏறி தான் சவாரி செய்ய முயற்சித்த கதையைக் கூறிய போது, அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

ஒரு வேலைக்காக வேற்றூரில் போய் தங்கி அனுபவித்த கஷ்டங்களைப் பற்றி அவன் சொன்னபோது, அவளுடைய கண்களில் கண்ணீர் வந்தது.

அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் நீண்டு தொங்கும் தலைமுடியைக் கொண்ட ஒரு இளம்பெண் மீது தனக்கு உண்டான காதலைப் பற்றி அவன் சொன்னபோது, அவள் தன்னுடைய கீழுதட்டைக் கடித்துச் சிவப்பாக்கினாள்.

கடைசியில் ராக்கோழி கூவும் நேரத்தில், அவன் சொன்னான்:

'சுஜாதா, நீ ஏதாவது சொல்லு..."

"எதைப் பற்றி வேணும்னாலும்" - அவளின் இடது கையின் மேல் தன் தலையை வைத்து சாய்ந்து படுத்திருந்த அவன் சொன்னான்:

"வாழ்க்கையில கிடைச்ச ஏதாவது அனுபவத்தைப் பற்றி..."

அவளின் கழுத்தில் ஒரு தங்க மாலை இருந்தது. அதில் இருந்த லாக்கெட்டில் குழந்தைப் பருவ கண்ணனின் ஒரு சிறிய படம் வைக்கப்பட்டிருந்தது. ஆல இலையில் படுத்து கால் விரலைச் சூப்பிக் கொண்டிருக்கும் மயில் பீலி சூடிய சின்ன கண்ணன்.

"நான் இந்த மாலையைப் பற்றிச் சொல்லட்டுமா?"

"சரி சொல்லு..."

அவன் படுத்தவாறே ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

"நான் பூப்பறிக்க போயிட்டு வரட்டுமா?"

பச்சை வர்ணம் பூசப்பட்ட வெளிக் கதவுக்கு அப்பால் உள்ள பாதையில் சித்ராவும் வத்சனும் அவளுக்காகக் காத்திருந்தார்கள்.

அவர்கள் சுஜாதாவை விட வயதில் இளையவர்கள். சித்ரா எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அவளின் தம்பி வத்சன் ஆறாம் வகுப்பு. சுஜாதா சொன்னதைக் கேட்டு ஏதோ ஒரு வார இதழை வாசித்துக் கொண்டிருந்த அவளின் தாய் முகத்தை உயர்த்தினாள்.

"உனக்கு இப்போ என்ன வயசு?"

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இளம் பெண்... தான் மலர் கொய்யப் போவதாகக் கூறுகிறாள்.

"இனி எப்பவும் நான் போக மாட்டேன். இன்னைக்கு மட்டும்..."

அவள் கெஞ்சினாள். சுஜாதாவிற்குப் பூப் பறிக்கப் போவதில் அப்படியொரு விருப்பம்!

எல்லா சமயத்திலும் பூக்கூடைகளை எடுத்துக் கொண்டு வண்ணான் பாறைக்கு அவள் பூ பறிக்கப் போவதுண்டு. இரண்டு வருடங்களாக வழக்கமாக நடைபெறும் அந்தக் காரியம் நடைப்பெறாமல் நின்றுவிட்டது. காரணம் - அவள் வயதிற்கு வந்து விட்டாள்.

சித்ராவும் வத்சனும் வெளிக் கதவிற்கு அப்பால் எதிர்ப்பார்ப்புடன் அவளுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் எங்கே தன்னை விட்டு விட்டுப் போய் விடுவார்களோ என்று சுஜாதா பயந்தாள்.

நேற்று கல்லூரியை விட்டுத் திரும்பி வருகிறபோது அவள் சித்ராவைப் பார்க்க நேர்ந்தது. அப்போது சித்ரா கேட்டாள்:

"அக்கா... பூ அலங்காரம் பண்ணுறீங்களா?"

"பூப் பறிச்சுக் கொண்டு வர்றதுக்கு எனக்கு எந்தத் தம்பியும் இல்லியே!"

தனக்கு ஒரு தம்பி இல்லையே என்ற வருத்தம் தெரிந்தது அவள் குரலில்.

"அக்கா... நீங்க பூப்பறிக்க வர்றீங்களா?"

அவள் அதைக் கேட்டு நீண்ட பெருமூச்சு விட்டாள். தான் இழந்து விட்ட இளமைக் காலத்தைப் பற்றிய இனிய நினைவுகள்.

"அக்கா, நீங்க நாளைக்கு எங்க கூட வர்றீங்களா?"

"எங்கே?"

"வண்ணான் பாறைக்கு..."

"வர்றேன்."

கொஞ்சமும் யோசிக்காமலே சொன்னாள்.

"சரி... போயிட்டு வா...". அவளின் தாய் சொன்னாள் : "சாயங்காலம் ஆகுறதுக்கு முன்னாடி வீட்டுக்குத் திரும்பி வந்துடணும். உன் அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சிச்சின்னா, என்னை ஒரு வழி பண்ணிடுவாரு..."

தாய் சொன்ன கடைசி வார்த்தைகள் அவள் காதில் விழவே இல்லை. அதற்குள் அவள் வெளி வாசலை அடைந்திருந்தாள்.

சித்ராவும் வத்சனும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் சுஜாதாவிற்குப் பூக்கூடைகளைத் தந்தார்கள். அவர்கள் மூன்று பேரும் வேகமாக வண்ணான் பாறையை நோக்கி நடந்தார்கள்.

வயல் வரப்பில் தும்பை மலர்கள் பூத்துக் குலுங்கின. கலங்கிப் போய் இருந்த நீரில் சிதறிக் கிடந்த வயலட் வர்ண காக்கா பூக்கள் மீது பூக்கூடைகளை வீசியவாறு அவள் நடந்தபோது தன்னுடைய கால்களில் கொலுசுகள் 'ஜல் ஜல்' என்று ஓசை உண்டாக்குவது போல் அவள் உணர்ந்தாள்.

முன்பு அவளின் கால்களில் கொலுசுகள் இருக்கவே செய்தன. அவள் நடந்து செல்லும் இடங்களில் எல்லாம் கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், அவள் பத்தாம் வகுப்பை அடைந்தபோது, அவள் தன்னுடைய கொலுசுகளை இழக்க வேண்டிவந்தது.

"நீ பெரிய பொண்ணாயிட்டே! இனிமேல் உனக்கு கொலுசு வேண்டாம்." அம்மா சொன்னாள்.

அவளின் தாய் அவளுடைய கால்களில் இருந்து கொலுசுகளைக் கழற்றியபோது, அவளால் தன் கண்களில் வழிந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்த கொலுசோடு சேர்ந்து அவளின் இளமையான நாட்களும் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்தன.

வண்ணான் பாறையை அடைந்த போது வேறு சில மாணவர் - மாணவிகளும் அங்கு இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் பூக்கூடைகள் இருந்தன. அவள் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல தும்பைப் பூக்கள் மேலும் காக்கா பூக்கள் மேலும் நடந்தாள்.

வண்ணான் பாறை மாலை நேர வெயில் பட்டு பொன் என மின்னிக் கொண்டிருந்தது. பாறைக்குப் பக்கத்தில் இருந்த காட்டில் இருள் படர்ந்தது.

நாளை காலையில் முற்றத்தில் ஏழு நிறங்களில் பூக்களைக் கொண்டு அவள் அழகுபடுத்த வேண்டும். காலையில் எழுந்தவுடன் தாயும், தந்தையும் கண் விழிப்பது அவள் பரப்பி வைத்திருக்கும் மலர் அலங்காரத்தின் மீதாக இருக்க வேண்டும். அவளின் பூக்கூடைகளில் தும்பைப் பூக்களும் காக்காப் பூக்களும் நிறைந்து இருந்தன.

"அக்கா... போகலாம்..."

வானம் இருண்டு கொண்டு வருவதைப் பார்த்து வத்சனுக்குப் பயம் வர தொடங்கியது.

"கோவில்ல சங்கு ஊதிட்டாங்க. நாம போகலாம்."

சுஜாதா அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவளின் பூக்கூடைகளில் ஆறு வகை பூக்களே இருந்தன. இன்னொரு வகை பூ கட்டாயம் வேண்டும்.

"பயமா இருக்கு."

எங்கோயிருந்து வந்த ஒரு காட்டுக் கோழியின் சத்தத்தைக் கேட்டு வத்சன் பயந்து நடுங்கினான்.

"நாம போகலாம்..."

"கொஞ்சம் நில்லுங்க பிள்ளைங்களா..."

சுஜாதா சொன்னாள். "அக்கா நான் இதோ வந்துர்றேன்."

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel