Lekha Books

A+ A A-

ஏழாவது பூ - Page 2

Ezhavathu Poo

ஏழாவது பூவைத் தேடி சுஜாதா கொடிகள் பரவிக் கிடக்கும் காட்டிற்குள் நுழைந்தாள். அதைப் பார்த்த சித்ராவும் வத்சனும் பயந்தார்கள். அவர்கள் ஒரு நாள்கூட அந்த கொடிகள் ஓடி கிடக்கும் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்தது கிடையாது. அதற்குள் நுழைவது என்றால் அவர்களுக்கு மிகவும் பயம்.

கொடிகள் ஓடி கிடக்கும் அந்தக் காட்டிற்குள் கொடிகளை மாதிரியே பாம்புகள் தொங்கிக் கொண்டிருக்கும். அந்தக் காடு எந்த இடத்தில் முடிகிறது என்று அவர்கள் யாருக்குமே தெரியாது. முன்பு ஒருமுறை தைரியசாலியான ஒரு பையன் அந்தக் காட்டிற்குள் போனான். அதற்குப் பிறகு அவன் வெளியே வரவே இல்லை.

இளம் சிவப்பும் வெளிச்சமும் இருட்டும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அடர்ந்த காட்டிற்குள் நுழைந்த சுஜாதா பூக்களைப் பறித்துப் பறித்து கூடைக்குள் போட்டாள்.

ஆனால், ஏழாவது பூ அவளுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

"அக்கா, போகலாம்" - வெளியே நின்றிருந்த சித்ராவும் வத்சனும் சொன்னார்கள்      "எங்களுக்குப் பயமா இருக்கு..."

மலர் பறிக்க வந்த மற்ற சிறுவர் - சிறுமிகள் அனைவரும் திரும்பிப் போய் விட்டிருந்தார்கள்.

சுஜாதா கொடிகளைக் கைகளால் நீக்கி விட்டவாறு காட்டிற்குள் மேலும் சென்றாள். இலைகளே இல்லாத ஒரு வகையான கொடிகள் அங்கே நிறைய தொங்கிக் கிடந்தன. அவளைச் சுற்றிலும் கொடிகள் முழுமையாக பரவிக் கிடந்தன. நீர் தாவரங்களுக்கு மத்தியில் தான் நீந்திச் செல்வதைப் போல் அவள் உணர்ந்தாள்.

திடீரென்று சற்று தூரத்தில் கொடிகளுக்கு மத்தியில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அதைப் பார்த்த அவளின் கண்கள் கூசின. கொடிகளுக்கு மத்தியில் ஒரு அரண்மனை. அதன் சுவர்களும் தூண்களும் கூரைகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. பொன்னால் ஆன சுவர்களில் இருந்து கொடிகள் கீழ் நோக்கி தொங்கிக் கொண்டிருந்தன.

"பெண்ணே... வருக... வருக..."

அரண்மனைக்குள் இருந்து யாரோ சொன்னார்கள். அவள் திடுக்கிட்டு நின்றாள்.

"வருக..."

கரகரப்பான ஒரு ஆண் குரல்.

அவள் முன்னோக்கி நடக்காமல் தயங்கி நின்றாள்.

திடீரென்று பொன்னால் ஆன வாசலில் ஒரு பெரிய உருவம் தெரிந்தது. அந்த ஆள் அசாதாரணமான உருவ அமைப்பைக் கொண்டிருந்தான். அவன் ஒரு ராட்சசன் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. இடுப்பைச் சுற்றியிருந்த கொடிகளை விட்டால் அவன் உடம்பில் வேறு ஆடை எதுவுமே இல்லை.

"பெண்ணே... வா..."

அவள் கொடிகளுக்கு இடையே அந்த மனிதனின் அருகில் போய் நின்றாள். அவள் எந்தச் சமயத்திலும் ராட்சசர்களைக் கண்டு பயந்ததில்லை. ராட்சசன் அவளை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான்.

"உன் பேர் என்ன?"

"சுஜாதா... ப்ரீடிக்ரி முதல் வருடம் படிக்கிறேன்..."

அவளின் கையில் இருந்த பூக்கூடையில் இருந்த ஒரு பிடி பூக்களை எடுத்து அந்த ஆள் முகர்ந்து பார்த்தான்.

"நான் யார்னு தெரியுமா?"

"நீங்க ராட்சசனா?"

அவள் வியப்பு மேலோங்க அந்த மனிதனின் பெரிய முகத்தைப் பார்த்தாள்.

"ஆமாம்... நான் இந்தக் கொடிகள் அடர்ந்த காட்டுல இருக்குற ராட்சசன்தான். இது என்னோட அரண்மனை."

பிறகு அந்த மனிதன் அவளுக்கு அரண்மனை முழுவதையும் சுற்றிக் காட்டினான். அதற்குள் இருந்த அலங்கார பொருட்களைப் பார்த்து அவள் ஆச்சரியப்பட்டாள். நாற்காலிகளும் கட்டில்களும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன.

ராட்சசன் தன்னுடைய பெரிய சிம்மாசனத்தின் மேல் அமர்ந்தான். சுஜாதாவைத் தனக்கு முன்னால் இருந்த ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னான்.

"இந்தக் காட்டுக்குள் வர்ற முதல் பெண்ணே நீதான்..." ராட்சசன் சொன்னான்: "உனக்கு நான் இப்போ ஒரு பரிசு தரப் போறேன்."

அவளின் கண்கள் விரிந்தன.

"உனக்கு என்ன வேண்டும்?"

"எனக்கு..."

"பிரியப்படுறது எதை வேணும்னாலும் நீ கேட்கலாம்."

"லாக்கெட்ல குழந்தைப் பருவ கண்ணன் படம் இருக்குற மாலை..."

அவள் வெட்கத்துடன் சொன்னாள்.

நீண்ட காலமாக தன்னுடைய மனதில் அவள் வைத்துக் கொண்டிருந்த ஒரு ஆசை அது. தன் தந்தையிடமும் தாயிடமும் பலமுறை சொன்னாள். ஒரு பயனுமில்லை. அவர்கள் சொல்வார்கள்: "உனக்கு ஏற்கெனவே ஒரு மாலை இருக்கு. நெக்லஸ் வேற இருக்கு. இதுக்கு மேல இனியும் தேவையா என்ன?"

நல்ல மூடில் இருந்தபோது ஒரு நாள் அவளின் தந்தை சொன்னார்: "கடவுள் படம் இருக்குற மாதிரி ஒரு மாலை நான் வாங்கித் தர்றேன் உன்னோட கல்யாணத்திற்கு..."

திருமணம் எப்போது?  பி.ஏ. முடிப்பது வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்பது அவளின் தந்தையின் கட்டளை. அதற்குப் பிறகுதான் அவளின் திருமண விஷயம் நடக்கும். அதுவரை மாலைக்காக அவள் காத்திருக்க வேண்டுமா?

ராட்சசன் உள்ளே போனான். அவள் விருப்பப்பட்ட மாலையுடன் திரும்பி வந்தான். அவன் அந்த மாலையை அவளின் கைகளில் கொண்டு வந்து தந்தான். "எப்படியும் மூணு பவுன் இருக்கும்" - அவள் தன் மனதிற்குள் கூறிக் கொண்டாள்.

அவள் மாலையைக் கழுத்தில் அணிந்தாள். அதன் கொக்கிகளை மாட்ட ராட்சசன் உதவினான்.

எது எப்படியோ அவளின் வாழ்க்கையில் இருந்த ஒரு மிகப் பெரிய விருப்பம் அன்று நிறைவேறியது.

காட்டை விட்டு வெளியே வந்த அவள் தன் வீட்டை நோக்கி ஒடினாள். ஏழாவது பூ அவளுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ராட்சசனை அவள் பார்த்து விட்டாளே! அவனின் அரண்மனைக்குள் அவள் நுழைந்து விட்டாளே! பிறகு.. ஒரு மாலையும் கிடைத்து விட்டதே!

சிவப்பு ப்ளவிஸீக்கு மேலே மார்புக்கு அருகில் இருக்கும் குழந்தைப் பருவ கண்ணனின் படம் இருக்கும் லாக்கெட்டிற்கு அவள் முத்தம் தந்தாள்.

" நீ எங்கேடி போயிருந்தே? உண்மையைச் சொல்லு..."

தன் தாயின் குரலைக் கேட்டு அவள் சொன்னாள்:

"நான்தான் பூப்பறிக்க போயிருந்தேன்ல?"

"அப்ப உன் பூவெல்லாம் எங்கே?"

அவள் பூக்கூடைகளை ராட்சசனின் அரண்மனையிலேயே மறந்து வைத்து விட்டு வந்திருந்தாள்.

"இது என்னடி?"

தாயின் கண்கள் அவளின் மார்பு மீது சென்றன.

"இதை யார் உனக்குத் தந்தது? உண்மையைச் சொல்லு.

உண்மையைச் சொல்லல, நடக்குறதே வேற..."

"ராட்சசன்..."

"ராட்சசனா?"

"ஆமாம்மா. காட்டுக்குள்ள இருக்குற ராட்சசன்..."

உள்ளேயிருந்து அவளின் தந்தை வந்தார்.

"நீங்க இதைப் பார்த்தீங்களா?" தாய் தன் கணவனை நோக்கி திரும்பினாள்: "ராட்சசன் கொடுத்தானாம்..."

"யார்டி உன்னோட ராட்சசன்? அவனோட பேரு என்ன?"

அவளின் தந்தை கேட்டார் : "மாளிகையில இருக்குற முதலாளியோட மகனைச் சொல்றியா ராட்சசன்னு...?"

தன் தந்தை இப்படிச் சொன்னதைக் கேட்டு அவளின் மனதில் வேதனை உண்டானது. மாளிகையில் இருக்கும் முதலாளியின் மகன் பெண்களுக்குப் பொருட்கள் வாங்கித் தருகின்ற கதைகளை அவளும் கேட்டிருக்கிறாள்.

"அப்பா, நான் சொல்றது உண்மை. அவன் உண்மையிலேயே ராட்சசன்தான். அந்தக் காட்டுக்கு அந்த ஆளுதான் ராஜா..."

அவள் சொல்ல வந்ததை முழுமையாக முடிக்கவில்லை. அதற்குள் அவளுக்கு அடி விழுந்தது.

அவளின் தந்தை அவளை அறைக்குள் அடைத்து வைத்து வெளியே தாழிட்டார். அவளுக்குக் குடிக்கவோ, தின்னவோ எதுவும் கொடுக்கக் கூடாது என்றார்.

"இந்தக் குடும்பத்துல இதுவரைக்கும் ஒரு பெண்ணால கெட்ட பெயர் உண்டாகல. உன்னை நான்..."

மூடப்பட்ட கதவுக்கு வெளியே தன் தந்தை பண்ணும் ஆர்ப்பாட்டங்களை அவளும் கேட்கவே செய்தாள்.

அவளுக்கு மீண்டும் பல அடிகள் கிடைத்தன. அவள் அறைக்குள்ளேயே அடைக்கப்பட்டுக் கிடந்தாள். அவளுக்கு எதுவும் தராமல் பட்டினி போட்டார்கள். அடர்ந்த காட்டின் ராஜாவான ராட்சசன் தான் அவளுக்கு மாலை தந்தான் என்ற உண்மையை யாருமே நம்பத் தயாராக இல்லை.

அவளின் இரண்டு கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோடியது. நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்த வெள்ளை ப்ளவுஸின் மேல் கிடந்த மாலையை அவன் எடுத்தான். குழந்தைப் பருவ கண்ணனை உள்ளங்கையில் வைத்து தடவியவாறு அவன் சொன்னான்: "நான் நம்புறேன்..."

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel