Lekha Books

A+ A A-

தாமரைத் தொப்பி - Page 2

thamarai thoppi

புதிய அணிகலன்களின் ஜொலிப்பு, புதிய வாசனைப் பொருட்களின் அலைகள், புதிய ஆடைகளின் பளபளப்பு- இவை எதுவுமே தாமரையைக் கவரவில்லை. மகாராணியாக ஆகும்போது இவை எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்.

“செல்லமே!”

“என் பேரு தாமரைன்றதை எவ்வளவு சீக்கிரமா நீங்க மறந்துடுறீங்க?”

“செல்லமே! என்னை நீ திட்டு”- அந்தப் பழைய சுவாரசியமான விஷயத்தை நினைத்துக் கொண்டு மன்னன் சொன்னான்.

அவள் வெட்கத்துடன் புன்னகைத்தவாறு தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். மன்னன் திரும்பத் திரும்ப அவளிடம் கேட்டான். அவளை முத்தங்கள் தந்து ஒரு வழி பண்ணினான். எனினும் அவள் அசைவதாகக் காணோம்.

“தாமரை, என்னைத் திட்டு...”

“நீங்க என் வாழ்க்கையின் கடவுளாச்சே!”

மன்னனுக்கு அதைக் கேட்டு என்னவோ போல் ஆகிவிட்டது. இத்தகைய வார்த்தைகளை அவன் ஆயிரம் வைப்பாட்டிகளிடம் கேட்டிருக்கிறான். அதைச் சொல்வதற்கு தாமரை தேவையில்லை. எனினும், திட்டுதல் என்ற இனிய சேமிப்பை அந்தச் சந்தர்ப்பத்தில் விட்டுவிட மன்னன் தயாரில்லை. அவன் மந்திர மண்டபத்தை நோக்கி எழுந்து போனான். தாமரையோ தன்னுடைய கிராமத்தைப் பற்றியும் இப்போதைய அரச வாழ்க்கையைப் பற்றியும் அவ்வப்போது மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

நாட்கள் கடந்தன. மன்னன் பல சமயங்களில் தாமரையிடம் கெஞ்சினான். எனினும், அந்த மகாராணி, “நீங்க என் உயிர் நாயகன்” என்று சொல்லிவிட்டு மௌனமாக இருந்துவிடுவாள். மன்னனுக்கு அதைக்கேட்டு என்னவோ போலாகிவிடும். இப்படி மன்னனும் மகாராணியும் மனதில் கவலையுடன் அரண்மனையின் ஏழாவது மாடியின் அறையில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தெரு மக்கள் கூட்டம் நிறைந்த ஒன்றாக இருந்தது. பலவிதப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் பலவித குணங்களைக் கொண்ட மனிதர்கள், பலவிதப்பட்ட ஆடைகள், பலவகைப்பட்ட சம்பவங்கள் பலவகைப்பட்ட பாராட்டுகள், பலவிதப்பட்ட பதில் பாராட்டுகள்! மகாராணி தாமரைக்கு உற்சாகம் உண்டாகிவிட்டது. அவள் கண்களை இமைக்காமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். தெருவில் இருந்த மனிதர்கள் கூட்டத்தில் ஒரு மனிதன் ஒரு ஜரிகைத் தொப்பியை அணிந்து போய்க் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். வெயில் பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது அந்தத் தொப்பி. பார்ப்பதற்கு நெருப்புக் கொழுந்துகளால் சூழப்பட்ட தலையுடன் அந்த மனிதன் போவதைப் போல் இருந்தது.

“பாருங்க... பாருங்க... அங்கே பாருங்க” - தாமரை மன்னனிடம் சொன்னாள். மன்னன் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

“பாருங்க, மன்னரே!”

அப்போதும் மன்னன் அமைதியாகவே இருந்தான்.

“என் உயிர் கடவுளே, பாருங்க.”

மன்னன் அசையவில்லை.

தாமரைக்குக் கோபம் வந்தது. அந்தக் கோபத்தால் உண்டான மின்னல் வெட்டுகள் அவளுடைய கண்களில் வெளிப்பட்டன. அவள் சொன்னாள்:

“கிழட்டுப் பிணமே, அந்தத் தொப்பியைப் பாரு.”

மன்னன் சுய உணர்வுக்கு வந்தான்: “தாமரை...”

அப்போதும் அவளுடைய கோபம் தணியவில்லை. அந்த வாயிலிருந்து வார்த்தைகள் படுவேகமாக வெளியே வந்து கொண்டிருந்தன.

“காட்டுப் பன்னி! நான் என்ன சொல்வேனோ, அதைச் செய்றேன்னு சொன்னே. ஆனா, இப்போ... பிணம்!”

“என்ன வேணும், தாமரை?”

“அங்கே பாரு”- தன்னுடைய மெல்லிய விரல்களால் சுட்டிக் காட்டியவாறு அவள் மன்னனிடம் சொன்னாள்: “அந்த ஜரிகைத் தொப்பியைத் தலையில் வச்சு போய்க்கிட்டு இருக்குற மனிதனைப் பாரு. என்ன அழகா இருக்கு. பார்க்கறதுக்கு!”

“சரிதான், செல்லமே!”

“செல்லமே இல்ல. என் பேரு தாமரை!”

“தாமரை என்ன வேணும்?”

“எனக்கு அந்தத் தொப்பி வேணும். சீக்கிரம்... சீக்கிரம்... ம்... சீக்கிரமா போய் கொண்டு வா!”

மன்னன் உடனே அமைச்சருக்கு ஆள் அனுப்பிவிட்டு உடனடியாகத் தொப்பியைக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தான்.

“அந்தத் தொப்பிதான் வேணும், தெரியுதா அமைச்சரே?” -தாமரை ஞாபகப்படுத்தினாள்.

தூதர்கள் நான்கு திசைகளுக்கும் பறந்தார்கள். அரண்மனையில் கூட்டம் கூட ஆரம்பித்தது. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்று பலருக்கும் புரியவில்லை. பலரும் பலவிதத்திலும் சிந்திக்க ஆரம்பித்தார்கள். மன்னன் அருகிலுள்ள நாட்டின் மீது போர் தொடுக்கப் போகிறான் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன என்றும் போர் வீரர்கள் தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்.

மாலை நேரம் வந்ததும் இருந்த ஆரவாரமெல்லாம் அடங்கிவிட்டது. தொப்பி கிடைத்துவிட்டது. அமைச்சர் ஒரு பட்டு சால்வையில் மூடி அந்தத் தொப்பியை மன்னருக்குக் கிடைக்கும்படி அனுப்பி வைத்தான். மன்னன் அந்தத் தொப்பியுடன் அந்தப்புரத்திற்கு ஓடினான்.

“தாமரை, தொப்பி கிடைச்சிடுச்சு...”

அவள் விரிந்த கண்களுடன் அந்தப் பட்டு சால்வையைப் பிரித்து தூரத்தில் எறிந்தாள். அந்த ஜரிகை தொப்பி! ஜன்னல் வழியாக வந்த மாலை நேர வெயில் பட்டு தொப்பி ஜொலித்தது. அவள் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஜரிகையில் ஆன அந்தத் தொப்பியின் உட்பகுதியில் வியர்வையுடன் கலந்த அழுக்கு சற்று காணப்பட்டது. எனினும், தாமரை அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. எப்படி ஜொலிக்கிறது தொப்பி என்பதை மட்டும்தான் அவள் பார்த்தாள்.

“உண்மையிலேயே நீங்க என் உயிருக்குயிரான நாயகன்தான்”- அவள் உற்சாகம் கரைபுரண்டோட மன்னனைப் பார்த்தாள். மன்னனின் முகம் மிகவும் வாடிப்போய் காணப்பட்டது.

“ஏன் உங்க முகம் திடீர்னு இப்படி வாடிடுச்சு?”

“நான் உனக்காக இவ்வளவு பண்ணியும், என் தாமரையே, உன்னால என்னைக் காதலிக்க முடியலையே!”

“என்ன நீங்க பேசுறீங்க! நீங்க என் உயிருக்குயிரான நாயகன்”

“நிறுத்து!”- மன்னன் மனக் கவலையுடன் சொன்னான்: “உயிருக்குயிரான நாயகன்- மண்ணாங்கட்டி!”

அதைக்கேட்டு தாமரை பதைபதைப்புக்குள்ளாகி விட்டாள். “மன்னரே, ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு என்ன ஆச்சு?”

“நான் உன்னோட உயிர் நாயகன் இல்ல. காட்டுப் பன்னி. புரியுதா?”

தாமரை தரையைப் பார்த்துப் புன்னகைத்தாள். நிலவைப் போன்ற புன்சிரிப்பு அது! அந்தப் புன்னகையில் மன்னனின் கோபம் கரைந்து காணாமல் போனது. மீண்டும் விளையாட்டும் சிரிப்பும் ஆரம்பமானது. தாமரை அந்தத் தொப்பியின் பெருமைகளைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாள். கடைசயில் அவள் ஒரு வேண்டுகோளையும் வைத்தாள்.

“நான் ஒண்ணு கேட்கட்டுமா?”

“கேளு, செல்லமே!”

“செல்லமேன்னுதானே என்னைக் கூப்பிட்டீங்க?” அவள் தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டாள்.

“தாமரை, என்ன வேணும்?”

அவளுடைய முகத்தில் அந்த நிலவு தோன்றியது.

“நம்ம மக்கள் எல்லாரும் இந்த மாதிரி தொப்பி அணிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?”

“மக்கள் இந்த மாதிரி தொப்பியை அணியிறதா?”

“ஆமா... இதுல ஆச்சரியப்படுறதுக்கு என்ன இருக்கு?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel