Lekha Books

A+ A A-

தாமரைத் தொப்பி - Page 4

thamarai thoppi

தலை சிறியதாக இருந்தவர்களுக்கு கண்களால் எதையும் பார்க்க முடியவில்லை. தலை பெரியதாக இருந்தவர்களுக்கு எங்கே தொப்பி தலையிலிருந்து கீழே விழுந்து விடுமோ என்ற சந்தேகம். வண்டிக்காரர்களுக்கும் தொப்பி அணிவது என்பது பிரச்சினைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்தது. ஒரு கையால் புருவத்திற்கு மேலே தொப்பியை உயர்த்தியோ அல்லது தலையில் அழுத்தியோ அவர்கள் நிலைமையைச் சரி பண்ண முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கையால் அவர்கள் குதிரையை விரட்ட வேண்டும். பெண்களின் தலையின் எடை இந்தத் தொப்பிக்குள் சிக்கிக் கொண்டு படாதபாடுபட்டது. தொப்பிக்குள் தலை இருந்ததால் பலவிதப்பட்ட பிரச்சினைகளும் உண்டாயின. குழந்தைகள் தொப்பி தங்களின் இடுப்பு வரையில் கீழே இறங்காமல் இருக்க, பல பொருட்களை உள்ளே திணித்து வைத்தார்கள். கண்கள் தெரியாத நாயகியும் தலையைத் தூக்க முடியாத எதிர்நாயகனும் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள். அவள் பிடிவாதமாகப் பல விஷயங்களையும் சொன்னபோது அவன் கூறுவான்: “தொப்பியை மீறக்கூடாது!” அதைக்கேட்டு அந்த இளம்பெண்கள் தேம்பித் தேம்பி அழுதவாறு கடந்து சென்றார்கள். எது எப்படியோ எல்லாரும் மன்னரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார்கள்.

எங்கு பார்த்தாலும் ஜரிகைத் தொப்பி! மூன்று தெருக்கள் சந்திக்கும் இடங்களில் சேறு படிந்த தன்னுடைய கால்களை வெளியே காட்டிக் கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனின் தலையிலும் தாமரைத் தொப்பி ஜொலித்துக் கொண்டிருந்தது! ஆங்காங்கே கண்களில் தென்படும் சிறு கடைகளிலும் ஜரிகைத் தொப்பிகள் தொங்கிக் கொண்டிருந்தன. இடுப்பு சிறுத்து, மார்புப் பகுதி முன்னால் தள்ளி பல்லிகளைப் போல் இருந்த குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தாய்மார்கள் தங்களின் ஒரு கையால் அந்தக் குழந்தைகளின் தலையில் தொப்பியைக் கீழே விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், தங்க மொட்டுகளால் ஆன செழிப்பான ஒரு பூந்தோட்டத்தைப் போல் இருந்தது அந்த நாடு.

தாமரையும் மன்னனும் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து தொப்பிகளை அணிந்து செல்லும் மக்களைப் பார்த்தார்கள்.

“தாமரை, பார்க்குறதுக்கு எவ்வளவு அழகா இருக்கு!”

“ம்...”- அவள் புன்னகைத்தாள்.

தொப்பி வாரத்தின் கடைசி நாளன்று மன்னனும் மகாராணியும் நகரத்தை வலம் வருவார்கள். நகரத்தின் முக்கியமான மனிதர்கள் அப்போது அவர்களுடன் இருப்பார்கள். ஆரம்பத்திலேயே இந்த விஷயம் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. தொப்பியின் அளவிலிருந்த ஏராளமான தோரணங்களால் நகரம் அழகுபடுத்தப்பட்டது. தாமரைத் தொப்பி அணிந்த மக்கள் இரண்டு வரிசையில் நின்றிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் தொப்பி அணிந்து நடந்து சென்று தாமரையின் கவனத்தைக் கவர்ந்த அந்தக் கிழவனும் இருந்தான். தன் தலையில் அணிந்திருந்த தொப்பி இந்த அளவுகஅகுப் பிரபலமானதில் அவனுக்குப் பெருமையாக இருந்தது.

அப்போது பட்டாசு வெடிச்சத்தமும் செண்டை ஒலிக்கும் சத்தமும் ஆரவாரச் சத்தங்களும் கேட்டன. அவர்கள் வருகிறார்கள்- மன்னனும், ராணியும்!

இரண்டு வரிசைகளாக நின்றுகொண்டிருந்த தொப்பிகளைப் பார்த்தவாறு மன்னரும் தாமரை ராணியும் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது மாதிரி தொப்பிக்காரனான கிழவன் சொன்னான்: “மன்னர் தொப்பி அணியல.”

“ராணியும் தொப்பி அணியல” - அருகில் நின்றிருந்த ஒரு கிழவி கூறினாள். அதைச்சொல்லிச் சொல்லி மக்கள் மத்தியில் அதுவே பேசப்படும் விஷயமாகி விட்டது. உரத்த குரலில் எல்லாரும் அதைச் சொன்னார்கள். கூப்பாடு போட்டார்கள். அழைத்துச் சொன்னார்கள்.

மக்களின் தலைவனான மன்னன் தேரை நிறுத்திவிட்டு கேட்டான்: “என்ன அது அமைச்சரே?”

“உங்க பக்கம் தவறு எதுவும் இருக்கக்கூடாது.”

“என்னன்னு சொல்லுங்க?”

“உங்க தலையில தொப்பி இல்லைன்னு அவங்க சொல்றாங்க.”

"சரி... தொப்பிகளைக் கொண்டுவரச் சொல்லுங்க. ஒண்ணு எனக்கு. ஒண்ணு உங்களுக்கு. இன்னொன்னு மகாராணிக்கு.”

“எனக்கு வேணுமா என்ன?” - தாமரை கேட்டாள்.

“தாமரை, மக்களோட விருப்பத்தை நிறைவேற்ற வேண்டாமா?”

தொப்பிகள் கொண்டு வரப்பட்டன. மன்னனின் கழுத்துவரை தொப்பி இறங்கியிருந்தது. மக்களால் அவனுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவனால் மக்களைப் பார்க்க முடியவில்லை. அமைச்சரின் தலையில் சரியாக நிற்காமல் அவனைக் கஷ்டப்படுத்தியது. அந்தத் தொப்பிகளை அவர்கள் இருவரும் மாற்றி அணிந்து பார்த்தார்கள். அப்போதும் அதே நிலைதான். கடைசியில் எதையும் பார்க்க முடியாத மன்னன் தொப்பியைச் சுமந்து கொண்டு தேரில் உட்கார்ந்திருந்தான். சற்று திரும்பக்கூட முடியாத அமைச்சர் மன்னனுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தான். தாமரை சிறிது நேரம் என்னவோ சிந்தித்தாள். பிறகு தன்னுடைய கணுக்கால்வரை தொங்கிக் கொண்டிருந்த தலைமுடியைப் பந்து போல் சுருட்டி அதன்மீது தொப்பியை வைத்தாள். மிகவும் சரியாகப் பொருந்தியது தொப்பி. மக்கள் மகாராணியைப் பார்த்து சந்தோஷத்துடன் ஆரவாரம் செய்தார்கள். தேர் நகர்ந்தது.

மன்னன் அழைத்தான்: “தாமரை!”

“என்ன?”

“உனக்கு ஏதாவது தெரியுதா? எப்படி தெரியுது? இந்தத் தொப்பி உனக்கு சரியா இருக்கா?”

“இல்ல. ஆனா, எனக்குத் தலைமுடி இருக்கே! மன்னரே, கொஞ்சம் தலைமுடியை வளருங்க.”

“அப்படியா தாமரை?”

“உங்களுக்கு என்ன வேணும்?”

“நான் உனக்காக என்னவெல்லாம் அனுபவிக்கிறேன்! இனிமேலாவது அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடு...!”

“எந்தப் பேரு மன்னரே?”

“உனக்கு என் மேல இரக்கமே இல்ல. எல்லாம் சும்மாதான்.”

தாமரைக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் மன்னனுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்துகொண்டு காதில் மெதுவான குரலில் சொன்னாள்:

“என் காட்டுப் பன்னி!”

“என் தாமரை!”- ஒரு முழக்கத்தைப் போல மன்னனின் தொப்பிக்குள்ளிருந்து அந்தக் குரல் வெளியே வந்தது.

“என் காட்டுப் பன்னி! நான் சொல்றதைக் கேப்பியா?”

“கட்டாயமா!”

“என் கிழட்டுப் பிணமே! அப்படின்னா... தலைமுடி வளரு- தொப்பி அதுல பொருந்தி நிக்கிற மாதிரி...”

“சரி...”

அமைச்சர் அப்போதும் தொப்பியைச் சுமந்துகொண்டு ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருந்தான். அந்த ரதம் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel