Lekha Books

A+ A A-

ஐசுக்குட்டி

Icukutty

சுக்குட்டி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். டாக்டர் வராமல் தான் குழந்தை பெற முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள். வேதனை தாங்க முடியாமல் உரத்த குரலில் அவள் கூக்குர லிட்டாள்.

“டாக்டரை சீக்கிரம் கொண்டு வாங்க...”

“மகளே...” -பிரசவம் பார்க்கும் பெண், ஐசுக்குட்டியின் வீங்கிப் போயிருக்கும் வயிற்றைத் தடவியவாறே ஆறுதலான குரலில் சொன் னாள்: “கொஞ்சம் திரும்பிப் படுத்து முக்கு... குழந்தை இப்பவே வெளியே வந்திடும்!”

“இல்ல... மாட்டேன்!” -ஐசுக்குட்டி வெறித்த கண்களுடன் உறுதியான குரலில் சொன்னாள்: “நான் சாகப் போறேன்...”

உரத்த குரலில் இதைச் சொன்னாள் ஐசுக்குட்டி. கிழக்குப் பக்கத்தில் வராந்தாவில் உட்கார்ந்திருந்த பெண்களும், மேற்குப் பக்கத்தில் முற்றத்திலும் மற்ற இடங்களிலும் கூடியிருந்த ஆண்களும், கேட்கத்தக்க விதத்தில், டாக்டரை உடனே கொண்டு வரவில்லையென் றால், தான் கட்டாயம் இறந்துவிடப் போவதாக ஐசுக்குட்டி கதறி அழுது சொன்ன விஷயம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு பொதுச் செய்தி ஆகிவிட்டது. அவள் இறக்க நேர்ந்தால், அதற்குக் காரணமாக இருப்பவர்கள் அவளின் கணவனும், அவனின் வயதான தாயும்தான். எப்படி இருந்தாலும், அவர்கள் டாக்டரைக் கொண்டு வந்தே தீருவார்கள். டாக்டரைக் கொண்டு வருவதாக இருந்தால், குறைந்தது அவருக்கு அறுபதிலிருந்து நூறு ரூபாய் வரை செலவழிக்க வேண்டியது வரும். டாக்டரே வரவில்லையென்றால்கூட, ஐசுக்குட்டி குழந்தை பெற முடியும். ஆனால், டாக்டர் வந்து பிரசவம் ஆவது என்பது ஒரு கௌரவமான விஷயமாயிற்றே!

சுற்றியிருக்கும் பல பணக்காரர்களின் வீடுகளிலும் பிரசவம் நடப்பதாக இருந்தால், காரில் டாக்டரை அழைத்து வருகிறார்கள் அல்லவா? ஐசுக்குட்டியின் கணவன் கையில் தற்போது பணம் இல்லையென்றாலும், அறுபதோ நூறோ ரூபாய்களை வேறு எங்காவது இருந்து அவன் தயார் பண்ணட்டும். யாரிடமாவது கடனாகக் கேட்டு வாங்க வேண்டியதுதானே? இல்லாவிட்டால் எதையாவது விற்று அந்தப் பணத்தை உண்டாக்க வேண்டியதுதான். கொஞ்சநாட்களுக்கு முன்னால் ஐசுக்குட்டியின் கணவனின் தம்பி மனைவி ஆஸ்யாம்மா பிரசவமானபோது, டாக்டரை எப்படிக் கொண்டு வந்தார் கள்? அதேபோல எதையாவது விற்று, பணம் தயார் பண்ணட்டும். ஆஸ்யாம்மாவுக்காக அவளின் கணவன் என்னவெல்லாம் செய்கிறான்? சொல்லப்போனால்- பரம்பரை ரீதியாகப் பார்த்தால், ஆஸ்யாம்மா அப்படி யொன்றும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. தாழ்ந்த நிலையில் இருந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவள் அவள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவள் அல்ல ஐசுக்குட்டி. பெண்கள் பலர் ஒன்று கூடிப் பேசுகிறபோது தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேச வேண்டும் என்பதே ஐசுக்குட்டியின் ஒரே விருப்பம்.

“ஓ... நான் பிள்ளை பெறுகிறப்போ டாக்டரைக் கொண்டு வந்தாங்க. எண்ணி எண்ணி அவர் கையில் நூறு ரூபா கொடுத்தாங்க. வீட்டோட வாசலுக்கே அவரோட மோட்டார் வந்துச்சு. அதுக்கு தனியா பத்து ரூபா கொடுத்தாங்க. அன்னைக்கு டாக்டர் என்ன பண்ணினார் தெரியுமா? ஒரு குழாயை எடுத்து மேல வச்சு பார்த்தார். அதை அப்படி வச்சா வயித்துல இருக்குற பிள்ளை சிரிக்கிறதைப் பார்க்கலாமாம்...”

இதே விஷயத்தை ஆஸ்யாம்மா எப்போது பார்த்தாலும் கூறுவாள். அவள் அப்படிச் சொன்னதும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லாரும் அவளை வாயாறப் புகழ்வார்கள். வாழ்த்துவார்கள். இதைக் கேட்கும்போதெல்லாம் ஐசுக்குட்டிக்கு என்னவோபோல் இருக்கும். அதேபோல் தன் பிரசவ சமயத்திலும் ஒரு டாக்டரைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று முதல் பிரசவ நேரத்திலேயே அவள் ஆசைப்பட்டாள். ஆனால் பிரசவம் நடக்கப்போகிற சமயத்தில் அதை அவள் மறந்து விட்டாள். ஆனால் இப்போது அதை மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருந்தாள். இருந்தாலும், பிரசவம் பார்க்கும் பெண் ஐசுக்குட்டியின் கருத்துக்கு எதிராக இருந்தாள். டாக்டரை வரவழைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை என்பதை அவள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாள். ஒரு பெண்ணுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பதை விரல்நுனியில் உணர்ந்து தெரிந்து வைத்திருப்பவள் அவள்! இதற்கு முன்பு நூற்றுக்கணக்கான பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவள் ஆயிற்றே அந்தப் பெண்! அந்தப் பெண் அப்படிச் சொன்னதைப் பார்த்து ஐசுக்குட்டிக்குக் கோபம் கோபமாக வந்தது. எங்கே அந்தப் பெண் சொல்வது மாதிரியே நடந்துவிடப் போகிறதோ என்று கவலைப்பட்டாள் அவள். ஆஸ்யாம்மாவைவிட தான் எந்தவிதத்தில் தாழ்ந்தவள் என்று மனதிற்குள் குமுறினாள் ஐசுக்குட்டி.

“சீக்கிரம் டாக்டரைக் கொண்டு வர்றீங்களா இல்லியா?” -பற்களை “நறநற”வென்று கடித்தவாறு கத்தினாள் ஐசுக்குட்டி.

ஐசுக்குட்டியின் வயதான மாமியார் கிழவி அந்த இருட்டு அறைக் குள் ஓடி வந்து மெதுவான குரலில் கெஞ்சினாள்.

“ஐசுக்குட்டி... மகளே... நீ இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறது நல்லதா? சொல்லு... அவன் கையில் காசே கிடையாது.... என் தங்கப்பொண்ணாச்சே நீ! பேசாம குழந்தையைப் பெறுடா...”

“என் தங்க அத்தையே!” -ஐசுக்குட்டி அழுதாள்: “கடவுளைக் கும்பிடுங்க. எல்லாம் ஒழுங்கா நடக்கும். டாக்டரை உடனடியா கொண்டு வாங்க.”

“கடவுளே... நான் இப்ப என்ன செய்யட்டும்?” -ஐசுக்குட்டியின் மாமியார் கிழவி கண்ணீர் விட்டாள்.

“ஹு....ஹு...ஹு...” என்று உதட்டைக் குவித்து என் னவோ சொல்லியவாறு ஐசுக்குட்டி தலையணையில் சாய்ந்து உட்கார்ந்தாள். பிரசவம் பார்க்கும் பெண் விளக்கின் திரியை இலேசாக நீட்டி விட்டவாறு சொன் னாள்: “மகளே, பேசாம படு... அதாவே குழந்தை பிறந்திடும்!”

இதைக் கேட்டதும் ஐசுக்குட்டிக்குத் தாங்க முடியாத அளவிற்குக் கோபம் வந்தது. அந்தப் பெண்ணையே அவள் கொன்றுவிடுவதுபோல் பார்த்தாள். பிறகு, என்ன நினைத்தாளோ, உரத்த குரலில் கூப்பாடு போட்டாள். மாமியார் கிழவி மறுபடியும் மறுபடியும் அவளிடம் வந்து கெஞ்சினாள். ஆனால், ஐசுக்குட்டி அவள் சொல்வதையெல்லாம் காது கொடுத்துக் கேட்பதாய் இல்லை. தீர்க்கமான குரலில் அவள் சொன்னாள்:

“அத்தை... உங்களுக்குத் தெரியும்ல பிரசவத்தோட வலி எப்படி இருக்கும்னு? கடவுளே... டாக்டரை சீக்கிரம் கொண்டு வாங்க...”

மாமியார் கிழவி உண்மையிலேயே ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள். அவள் மொத்தம் ஒன்பது குழந்தைகளைப் பெற்றவள். ஒரு பிரசவத்திற்குக்கூட டாக்டர் வந்தது கிடையாது. இருந்தாலும், ஐசுக்குட்டி இப்படியொரு பிடிவாதம் பிடிக்கிறாள்! கிழவி ஒரு வார்த்தைகூட பதில் பேசாமல் கீழே இறங்கிப் போனாள். இந்தக் காலப் பெண்களின் பிடிவாதப் போக்கைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். அவளுக்கே இந்த மாதிரியான சொந்த அனுபவங்கள் இல்லாமலா இருக்கும்? சாதாரண காரியங்களுக்குக்கூட ஆண்களைத் தொல்லைப்படுத்துவதும், அவர்களைத் தேவையில்லாமல் அலையோ அலை என்று அலைய வைப்பதும், கஷ்டங்களை அனுபவிக்க வைப்பதும், பெண் இனத் திற்கே உரிய தனித்துவ குணமல்லவா?

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel