Lekha Books

A+ A A-

ஐசுக்குட்டி - Page 2

Icukutty

“ஆயிரம் இருந்தாலும் எனக் காகத்தான் அவர் இதைச் செய்தார்” என்றொரு தற்பெருமை மட்டுமே அதில் இருக்கும். இப்படிப்பட்ட தற்பெருமை அடித்துக் கொள்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களேதான்! அவர்கள் அடிக்கிற மேளத்திற்குத் தகுந்த மாதிரி ஆடிக் கொண்டிருப்பவர்கள்தானே ஆண்கள்! இந்த விஷயங்கள் எல்லாம் மாமியார் கிழவிக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஐசுக்குட்டியின் பிரசவ காரியம் என்பதால் இது பற்றியெல்லாம் பெரிதாக எண்ணிக் கொண்டிராமல், இப்போதுள்ள நிலைமையின் தீவிரத்தை மட்டுமே அவள் சிந்தித்துக் கொண்டிருந் தாள்.

டாக்டரைக் கொண்டு வராத ஒரே காரணத்தால், ஐசுக்குட்டி இறந்துபோய்விட்டால்...? அதற்குப் பிறகு மற்றவர்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்? உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் டாக்டருக்குக் கொடுக்க பணம் கையில் இருக்க வேண்டுமே! அஸன்குஞ்னு கையில் பணமே இல்லை. காலை விடிந்ததிலிருந்து இரவு நேரம் வரை ஒரே இடத்தில் அமர்ந்து பீடி சுற்றுவது அவன் வேலை. அவ்வளவு நேரம் வேலை பார்த்தும், அவனுக் குக் கிடைக்கிற பணத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவதே மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும், கிழவி சென்று மகனிடம் சொன்னாள். அஸன்குஞ்னு தாய் சொன்ன விஷயத்தைக் கேட்டு, அசையாமல் சிலை என உட்கார்ந்து விட்டான். பேசாமல் திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம் என்று அவன் மனம் அப் போது எண்ணியது. அதை இப்போது நினைத்து என்ன பயன்? அறு பது ரூபாய் எப்படி தயார் பண்ணுவது? யாரிடம் கடனாக வாங்குவது? கிட்டத்தட்ட நூறு ரூபாய் தேவைப்படுமே! முதலாளியிடம் போய்க் கேட்டால் நிச்சயம் அந்த மனிதர் காசு தர மாட்டார். வீட்டையும் நிலத்தையும் பணயமாக எழுதிக் கொடுத்தால், ஒரு வேளை அந்த ஆள் பணம் தரலாம். அதைக் கட்டாயம் செய்யத்தான் வேண்டுமா? அதற்கு இப்போதென்ன அவசியம் வந்துவிட்டது? அப்படியே செய்தாலும், வேலை செய்து கடனை அடைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. வட்டி மாதா மாதம் கூடிக் கூடி கடைசியில் வீடும் நிலமும் முதலாளிக்குச் சொந்தமாகப் போவதுதான் நடக்கும். அஸன்குஞ்னு என்ன செய்வது என்று தெரியாமல் பிரசவ அறையின் ஜன்னலைத் திறந்து தன்னுடைய முகத்தைக் காட்டினான்.

“இங்கே பாருங்க... நான் செத்துப் போயிருவேன்!” -அஸன்குஞ்ஞைப் பார்த்து ஐசுக்குட்டி அழுதாள்: “டாக்டரை சீக்கிரம் அழைச்சிட்டு வாங்க.”

“ஏய்... அதிகமா துள்ளாதேடி நாயே... இதுக்குமேல ஏதாவது பேசினே, உன்னோட உடம்புல இருக்கிற எலும்புகளை எல்லாம் அடிச்சு நொறுக்கிடுவேன். நீ செத்தா செத்துட்டுப் போ. அதனால எனக்கு என்ன? நீ எனக்கு ஒரு புல்லு மாதிரி. நீ போயிட்டா நான் இன் னொருத்தியைக் கட்டிட்டுப் போறேன்” என்று அஸன்குஞ்னு சொல்லவில்லை. அவன் ஐசுக்குட்டியின் காலில் விழாத குறையாகச் சொன்னான்:

“ஐசுக்குட்டி... என் தங்கம்ல... நான் கட்டாயம் இந்தத் தடவை டாக்டரைக் கொண்டு வர்றேன்!”

இந்தத் தடவையாம் இந்தத் தடவை!

“இந்தத் தடவைன்னா எப்ப கொண்டு வர்றது? இப்பவே கொண்டு வரணும்!” -நிலாவைப் பிடித்துத் தரச்சொல்லும் சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் பிடித்தாள் ஐசுக்குட்டி. அப்படி அவள் பிடிவாதம் பிடிப்பதற்குக் காரணம் -அந்த அளவிற்குச் செல்லம் அதிகமாகக் கொடுத்து அவளின் வாப்பாவும் உம்மாவும் அவளை அன்புடன் வளர்த்ததே. ஐசுக்குட்டிக்கும் அஸன்குஞ்னுக்கும் திருமணம் நடந்தது கூட அவர்களின் வாப்பாக்களுக்கிடையே இருந்த ஆழமான நட்பை வைத்துத்தான். இந்தத் திருமணத்தை ஐசுக்குட்டியின் உம்மா ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தாள். இப்போதுகூட ஏதாவது பிரச்சினை வந்தால் அந்தத் திருமண பந்தத்தைப் பிரிப்பதற்கு எப்போதும் அவள் தயாராக இருக்கிறாள் என்பதே உண்மை. அஸன்குஞ்னுக்கு இந்த விஷயம் நன்றாகவே தெரியும். இருப்பினும் அவன் வாய் திறப் பதில்லை. காரணம்- அஸன்குஞ்னுவின் குடும்பத்தைவிட ஐசுக்குட்டியின் குடும்பம் வசதியானது. அவர்கள் கொடுத்த வரதட்சணைப் பணத்தைக் கண்டபடி செலவு செய்து ஒன்றுமே இல்லாமல் பண்ணிவிட்டான் அஸன்குஞ்னு. இருந்தாலும், அவன்மீது ஏகப்பட்ட அன் பையும், பாசத்தையும் வைத்திருந்தாள் ஐசுக்குட்டி. அவனை “செல்லமே” என்றுதான் அவள் பாசம் கொட்ட அழைப்பாள். அவள் இறந்துபோகப் போகிறாளா? இப்படி ஒரு விஷயத்தை மனதில் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை அஸன்குஞ்னுவால்.

“முத்தே... என் அருமை ஐசுக்குட்டியே... என் பொன்னான வைரக் கல்லே!” -இப்படிப் பல வார்த்தைகளைக் கொட்டி அவளைச் சமாதா னப்படுத்திய அஸன்குஞ்னு அடுத்த நிமிடம் வெளியே போனான்.

ஐசுக்குட்டி திரும்பத் திரும்ப டாக்டரைக் கொண்டு வரச்சொல்லி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள். அவள் பிரசவமாவதைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்த பெண்கள், அவளின் செயலைப் பார்த்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இந்தப் பொண்ணு செத்தால்கூட இவங்க டாக்டரைக் கொண்டு வரமாட்டாங்க!”

அதைக் கேட்டவாறு ஐசுக்குட்டியின் உம்மா கொடுங்காற்றைப் போல வேகமாக உள்ளே நுழைந்தாள்.

“மகளே... ஐசுக்குட்டி...!”

“உம்மா... நான் சாகப்போறேன். டாக்டரைக் கொண்டு வாங்க...”

இந்த ஊரே கேட்கிற அளவிற்கு ஐசுக்குட்டியின் தாய் சொன்னாள்:

“மகளே, கவலைப்படாதே. நீ கட்டியிருக்கிற தாலியை அறுத்தாவது டாக்டரை உன்னோட உம்மா கொண்டு வந்திடுவேன். பேசாம நீ படுத்திரு. நாம என்ன பணமும், அந்தஸ்தும் இல்லாதவங்களா என்ன?”

இப்படி சுயதம்பட்டம் அடித்துக் கொண்ட அவள் வெளியே வந்தாள். அஸன்குஞ்னு அங்கு நின்றிருந்தான். அவனை ஒரு பிடி பிடித்தாள் ஐசுக்குட்டியின் உம்மா.

“என் மகள்தான் பிரசவம் பார்க்க டாக்டர் வரணும்ன்றாளே! அவள் சொன்னபடி கொண்டு வராம பேசாம படுக்கப்போட்டுருந்தா எப்படி?”

“அத்தை... அந்தப் பிரசவம் பாக்குற பொம்பள டாக்டரெல்லாம் வேண்டாம்னு சொல்றாங்க. இங்க இருக்குற எல்லாருக்கும் இது தெரியும்.”

“அவ யார் என்னோட மகள் விஷயத்தைத் தீர்மானிக்கிறதுக்கு? உன்னால அதைச் செய்றதுக்கு வக்கு இல்லைன்னா அதை முதல்ல சொல்லு. அவ வேண்டாம்னா இப்பவே நீ சொல்லிடு. அவளை அள் ளிக் கொண்டு போறதுக்கு ஆண்களுக்கா பஞ்சம்! நாங்க ஒண்ணும் வேற வழியே இல்லாம வந்தவங்க இல்ல.”

ஐசுக்குட்டியின் உம்மா சொன்னதை எல்லாரும் கேட்டார்கள். ஆஸ்யாம்மாவும் கேட்டாள். வேற வழியே இல்லாம என்று அவள் சொன்னது தன்னைக் குறி வைத்துத்தான் என்பதை அவள் புரிந்து கொண்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இரவு வரட்டும்... இந்த விஷயத்தைத் தன் கணவனிடம் நூறு மடங்கு அதிகமாக்கிச் சொல்லிடுவோம் என்று அவள் தீர்மானித்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel