Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 9

kanavukku en azhudhai

“என்னடா கல்யாணி, மாப்பிள்ளையை நல்லா பார்த்தியா? உனக்குப் பிடிச்சிருக்கா?” கல்யாணியின் முகத்தை தன் கையினால் நிமிர்த்தி அவள் கண்களை நேருக்கு நேராய் பார்த்துக் கேட்டாள் சுசிலா.

“பிடிச்சிருக்கும்மா” வெட்கம் தாங்காதவளாய் முகத்தை மூடிக் கொண்டாள் கல்யாணி.

இதற்குள் அங்கே வந்த சிவலிங்கமும் கல்யாணியின் சம்மதத்தை அவள் சொல்லாமலே புரிந்து கொண்டார். நெஞ்சம் முழுவதும் சந்தோஷம் பரவ, கல்யாணியை உச்சி முகர்ந்தார்.

மூவரும் மறுபடியும் வரவேற்பறைக்குச் சென்றனர்.

“எங்க கல்யாணிக்கும் சம்மதம்தான். பாட்டிகிட்ட செல்லிடுங்க. இப்பவே இங்கே இருந்து போன் பண்ணிடுங்களேன்.”

“வே... வேண்டாம் ஸார்... நான் திருச்சி போய் நேர்லயே சொல்லிக்கிறேன் ஸார்.”

“இனிமேல் இந்த ஸார் போட்டு பேசறதெல்லாம் கூடாது மாமான்னுதான் கூப்பிடணும்.”

“சரி ஸார்... ஸாரி... சரி மாமா. ஆனா, நீங்க என்னை எப்பவும் தியாகுன்னு தான் கூப்பிடணும். மாப்பிள்ளைன்னு கூப்பிட்டா ஒரு அந்நிய உணர்வு வந்துடும். ப்ளீஸ் எனக்காக.”

“சரி, முயற்சி பண்றேன்...”

“பேசிக்கிட்டே இருந்தா எப்படிங்க? வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.” சுசிலா அவர்களைச் சாப்பிடும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

சற்று நேரத்தில் தியாகுவும் கூச்சம் தெளிந்து உற்சாகமாக சிவலிங்கத்துடன் பேச ஆரம்பித்தான். கம்ப்யூட்டர் குறித்த அவனது விசாலமான அறிவு அவரைப் பிரமிக்க வைத்தது. மல்லிகாவும் தன் குடும்பம் பற்றி பேசினாள்.

“பொண்ணு மாப்பிள்ளை இவங்கதான்னு உறுதியாயிடுச்சு. அதை ஒரு சம்பிரதாயமா செய்யணும்னு சீதம்மா பாட்டி சொல்லுவாங்க. நீங்களே பாட்டிகிட்ட பேசிடறீங்களா மாமா?”

மல்லிகா கேட்டதும் சிவலிங்கம் அதை ஆமோதித்தார்.

“ஆமாம்மா மல்லிகா. நாம சீதம்மா கேட்ட பேசி நல்ல நாள்ல தாம்பூலம் மாத்திக்கிட்டு முகூர்த்த தேதியையும் குறிச்சிடலாம்.”

“கல்யாணிக்கு உங்களை மாதிரி நல்லவங்க இருக்கற குடும்பத்துல மண வாழ்க்கை அமைஞ்சதுல நான் ரொம்ப சந்தோஷப்படறேன் மல்லிகா. அவளும் குடும்பத்துல எல்லாரையும் புரிஞ்சுக்கிட்டு நல்ல மருமகளா நடந்துக்குவா. நான்தான் அவளைப் பிரிஞ்சு எப்படி இருக்கப் போறேன்னு தெரியலை.”

மகளுக்கு நல்ல மணவாழ்க்கை கிடைச்ச சந்தோஷத்துல பேச ஆரம்பிச்ச சுசிலா மகளைப் பிரிய நேரிடுமே என்ற எண்ணத்தில் ஏக்கத்துடன் பேசி முடித்தாள்.

“அத்தை, சம்பந்தி வீட்டுக்கு ஏதாவது விஷயம், விசேஷம்ன்னா மட்டும்தான் வரணும்னு அப்படிங்கற பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் விட்டுடுங்க. உங்க பொண்ணு வாழற வீட்டுக்கு அவளோட அம்மா, அப்பா நீங்க வர்றதுக்கு எந்த சாஸ்திர சம்பிரதாயமும் தேவை இல்லை. உண்மையான அன்பு இருந்தா அதுவே போதும்” தியாகு பளிச் என்று மனதில் பட்டதைப் பேசினான்.

தியாகு அன்புடன் பேசியதைக் கேட்ட கல்யாணி அகமகிழ்ந்தாள். மனைவியாக வரப் போகும் பெண்ணின் பெற்றோருடன் இத்தனை அன்புடன் பழகும் உள்ளம் கொண்ட தியாகுவின் மீது அவளுக்கு மதிப்பு உயர்ந்தது.

அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். மல்லிகாவும், தியாகுவும் கிளம்பினர்.

“அப்ப... நாங்க கிளம்பறோம். மாமா, அத்தை வரேன்...” என்றவன், ஓரக் கண்ணால் அங்கிருந்த கல்யாணியைப் பார்த்தான்.

“வரேன்...” கல்யாணியிடம் தயக்கமாகக் கூறியவன் விடை பெற்றான்.

“ஆமா, ஏன் மாப்பிள்ளை உங்க தங்கை மாலுவை கூட்டிட்டு வரலை? அண்ணியா வரப் போறவங்களை பார்க்கணும்னு அவளுக்கும் ஆசையா இருக்கும்ல?”

“அவளுக்கு ரொம்ப ஆசைதான். ஆனால், பரீட்சை இருக்கறதுனால வர முடியலை. மாமா, என்னை தியாகுன்னு பேர் சொல்லியே கூப்பிடுங்கன்னு சொல்லி இருக்கேன்ல?”

“ஓ.கே. ஓ.கே. கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிறேன்.”

“தாங்க்ஸ் மாமா.”

“மாமா, அத்தை நாங்க கிளம்பறோம்.” மல்லிகாவும் விடை பெற்றாள்.

கார் கிளம்பியது. காரில் இருந்து திரும்பிப் பார்த்த தியாகுவின் கண்கள் கல்யாணியைத் தேடின. கல்யாணி கை அசைத்துக் கொண்டிருப்பது பார்த்து அவன் உள்ளம் துள்ளியது.

13

தியாகு – கல்யாணியின் திருமணம் வெகு விமரிசையாக நிகழ்ந்தது. தியாகுவின் வீட்டில் தன் வாழ்வைத் துவங்குவதற்கு அடி எடுத்து வைத்தாள் கல்யாணி.

சீதம்மாவிற்கு கல்யாணியின் மீது அலாதிப் பிரியம் ஏற்பட்டது. கல்யாணியின் அன்பும், பண்பும் நிறைந்த நடத்தையை அறிந்து கொள்ள நேரிட்ட சீதம்மாவிற்கு கெளரியின் நினைவு தோன்றியது.

கெளரியின் மறு வார்ப்பாகவே கல்யாணி அந்த வீட்டின் மருமகளாக வந்திருப்பது கருதி நிம்மதி அடைந்தாள்.

மாலுவிற்கு அண்ணியாக மட்டும் அல்லாமல் அம்மாவாகவும், அவளிடம் அன்பு செலுத்தினாள் கல்யாணி. பெற்ற தாயை இழந்த மாலு, மற்றுமொரு தாயாக கல்யாணி அந்த வீட்டிற்கு வந்திருப்பதாக உணர்ந்து மகிழ்ந்தாள்.

“அண்ணி... அண்ணி...” என்று கல்யாணியைச் சுற்றி சுற்றி வந்தாள். மாலுவிற்குப் பின்னல் போட்டு விடுவது அவளுக்குப் பிடித்த உணவு வகைகளை சமைத்துக் கொடுப்பது என்று அவளையும் அறியாமல் மாலுவின் மீது அளவில்லாத பாசம் வைத்து நேசித்தாள். அதிர்ஷ்டம் கெட்டவள் என்று மாலுவை சீதம்மா திட்டும் பொழுதெல்லாம் கல்யாணி பரிந்து பேசுவாள்.

“பாவம் பாட்டி மாலு. அவ பிறந்த நேரம்தான் அத்தைக்கும், மாமாவுக்கும் தீ விபத்து நடந்துச்சுன்னு நீங்க சொல்றது நியாயமே இல்லை. உங்க காலத்துல இந்த மூட நம்பிக்கையெல்லாம் நிறைய இருந்திருக்கும். இப்ப எல்லாமே மாறியாச்சு பாட்டி. அவளைத் திட்டாம இருங்களேன். ப்ளீஸ்” என்று பணிவு கலந்த அன்புடன் பேசும் பொழுது சீதம்மாவிற்கு எதிர் வார்த்தை பேச இயலாது.

என்றாலும் மாலுவின் மீதுள்ள அந்த வெறுப்பு மாறாமல் தான் இருந்தது.

தியாகு, வீட்டிற்குள் நுழையும்பொழுதே கல்யாணி என்று அழைத்தபடியே வரும் அளவு அவன் உள்ளத்தை தன் அன்பால் கொள்ளை கொண்டாள் கல்யாணி.

பாட்டியிடமும், மாலுவிடமும் பாசத்துடன் பழகும் கல்யாணியின் அன்பான குணநலன்கள் கண்டு பூரித்துப் போனான் தியாகு.

“கல்யாணி, நீ பணக்கார வீட்டில பிறந்து வசதியா வளர்ந்தவ. எங்க வீட்டில அந்த அளவுக்கு வசதி இல்லை. ஆனா, இந்தச் சூழ்நிலையை அனுசரிச்சுப் போற உன்னோட, நல்ல குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்மா. குடும்பத் தலைவனும், தலைவியும் இல்லாத இந்த இல்லத்துக்கு இனியவளா நீ வந்திருக்க. நான் ரொம்ப குடுத்து வச்சவன். என்னைவிட மாலு இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கா. அவள்தான் அண்ணி நல்ல அண்ணியா வரணும்னு சொல்லிக்கிட்டே இருந்தா. நீ வந்தப்புறம்தான் அவ கொஞ்சம் உடம்பு தேறி இருக்கா....”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel