Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 12

kanavukku en azhudhai

18

ல்லா சம்பிரதாயங்களும் இனிது முடிந்து முகூர்த்த தேதியும் குறிக்கப்பட்டது.

சுபமுகூர்த்த நாள். மங்கல மேளம் ஒலிக்க, மாப்பிள்ளை மாதவன், மாலுவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

கல்யாணி, ஒரு தாயைப் போல மாலுவை மணக்கோலத்தில் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். குழந்தை கண்ணன் துறுதுறுவென்று இங்குமங்குமாக மகிழ்ச்சியுடன் ஓடிக் கொண்டிருந்தான். சுசிலாவும், சிவலிங்கமும் கல்யாணியின் சந்தோஷத்தைப் பார்த்து தாங்களும் சந்தோஷப்பட்டனர்.

தாலி கட்டி முடிந்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. திடீரென்று மாதவன் மயங்கி விழுந்தான். திருமண மாளிகை முழுக்க ஏ.ஸி. செய்யப்பட்டிருந்தபோதும், மாதவனுக்கு வியர்வை ஆறாகப் பெருகிய, நெஞ்சைப் பிடித்தபடி வலியில் துடித்தான்.

கூடி இருந்தவர் அனைவரும் திடுக்கிட்டனர். மாலு, மான் போல மிரண்டு கல்யாணியைத் தஞ்சம் அடைந்தாள். தனியே மாட்டிக் கொண்ட புறாவைப் போல அவளது இதயம் படபடத்தது.

மாதவனின் பெற்றோர் கதறினார்கள். அண்ணன் பிரபாகர், டாக்டரை வரவழைத்தான். டாக்டர் வந்து கையில் நாடி பிடித்துப் பார்ப்பதற்குள் மாதவனின் நாடித் துடிப்பு நின்று போனது. இதயம் இயக்கத்தை இழந்தது.

“ஸாரி... மாஸிவ் ஹார்ட் அட்டாக்.” சுருக்கமாகச் சொல்லிவிட்டார் டாக்டர்.

“ஐயோ...” மாதவனின் குடும்பத்தினரும், மாலுவின் குடும்பத்தினரும் அலறினர். தியாகு திகைத்துப் போய் நெஞ்சில் திகிலுடன் நின்றான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அதிர்ச்சியில் உறைந்து நின்ற கல்யாணியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் சுசிலா.

மாதவனின் பெற்றோர் கதறி அழுத வண்ணம் கலங்கி நின்றனர்.

“என்னங்க ஆச்சு? உங்க பையன் மாதவனுக்கு ஏற்கெனவே உடம்பு சரி இல்லாம இருந்துச்சா? இதயத்துல கோளாறா? மறைச்சுட்டீங்களா? சொல்லுங்க...” கோபாவேசத்தில் மாதவனின் அப்பாவைப் பார்த்துக் கத்தினார் சிவலிங்கம்.

“ஐயோ சம்பந்தி. அப்படியெல்லாம் மறைச்சு வச்சு ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க நினைக்கிற பாவத்தை செய்யற மனுஷங்க நாங்க இல்லை சம்பந்தி. சில நேரங்கள்ல வாய்வுத் தொல்லைன்னு சொல்லுவான். சாதாரண வாயுத் தொல்லைதானோன்னு இஞ்சி, பூண்டு குடுக்கற வழக்கம். அது அவனோட உயிரையே பறிக்கிற நெஞ்சு வலின்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலியே?”

அதைக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் கோபப்பட்டார். “விஞ்ஞானமும், மருத்துவமும் முன்னேறி இருக்கற இந்த நவீன காலத்துல இருக்கறீங்க இவ்வளவு அலட்சியமா இருந்துட்டீங்களே. சாதாரண வாய்வுத் தொல்லைன்னு நீங்களாவே எப்பிடி யூகிக்கலாம்? முதல் தடவை சொன்னப்பவே டாக்டரைப் பார்த்து ட்ரீட்மெண்ட் எடுத்திருந்தா உங்க மகனை நீங்க இழந்திருக்க வேண்டியதில்லை.”

கூட்டம் கூடி பரிதாபப்பட்டது.

மணக்கோலத்தில் இருந்தவன். பிணக்கோலத்தில் விழுந்து கிடந்தான். அலங்காரமாய் இருந்த திருமண மண்டபம் அலங்கோலமாய் ஆகியது. சிரிப்பும் ஆரவாரமுமாய் இருந்த இடம் அழுகையும் அலறலுமாய் ஒலித்தது.

சிவலிங்கம், தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியேறி காரினுள் ஏறினார். மற்றவர்களும் ஏறிக் கொள்ள, கார் கிளம்பியது.

19

காரில் இருந்து இறங்கிய மாலு அழுதபடியே மாடியறைக்கு ஓடிச் சென்றாள்.

“பாட்டி, பாட்டி...” பேச இயலாத கல்யாணி, கண்ணீர் பெருக நின்றாள். யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

“என்ன நடந்தது? சொல்லுங்களேன்...” தவித்துப் போன சீதம்மாவிற்கு டிரைவர்தான் விளக்கம் கொடுத்தான்.

“ஐயோ, இந்த மாலுவோட கூடப் பிறந்த துரதிர்ஷ்டம் ஒழியலையா? கடவுளே, இந்தப் பொண்ணை ஏன் இப்பிடி ராசி கெட்டவளா படைச்சே...” பாட்டி பேசுவதைத் தடுக்கும் மனநிலை யாருக்கும் இல்லை. மெளனமாக அனைவரும் உள்ளே சென்றனர்.

தன் அறையில் தலையணையைக் கண்ணீர் நனைக்க, தலைவிதியை நெஞ்சு நினைக்க, வேதனை தாளாமல் அழுது கொண்டிருந்தாள் மாலு.

“மாலு, அழாதேம்மா, நடந்தது ஒரு கனவு. அதுக்கு ஏன் அழறே” கல்யாணி ஆறுதல் கூற ஆரம்பித்ததும் அவளது அழுகை அதிகரித்தது.

நீண்ட நேரம் அவளுக்கு ஆறுதல் கூறி அவள் அருகிலேயே இருந்து அவளைத் தூங்க வைத்தாள் கல்யாணி. சிறிது நேரம் கண் அயர்ந்த மாலு, திடீரென விழித்துக் கொண்டாள், தன் அருகில் உட்கார்ந்திருந்த கல்யாணியைப் பார்த்தாள்.

“ஏன் அண்ணி நீங்க தூங்காம இங்கேயே இருக்கீங்க? தற்கொலை செஞ்சுக்குவேன்னு பயமா? ம்கூம். எனக்கு அப்பிடியெல்லாம் தோணவே இல்லை அண்ணி. நீங்க அண்ணாவைப் போய் கவனிங்க அண்ணி. அண்ணன் பாவம், மனசு உடைஞ்சுப் போய் இருப்பார். நீங்கதான் அவருக்கு தைரியம் சொல்லணும். போங்க அண்ணி.”

“உங்க அண்ணன் உன்னை மேல படிக்க வைக்கணும்னு சொன்னார். பாவி நான்தாம்மா உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னேன். என்னாலதான் உனக்கு இந்தக் கஷ்டம்” குலுங்கி அழுத கல்யாணியைத் தன் மடியில் படுக்க வைத்துத் தேற்றினாள் மாலு.

“உங்க கடமையை நீங்க செஞ்சீங்க. என் விதி அதோட கடமையை செஞ்சிடுச்சு. அதுக்கு உங்களைக் குத்தம் சொல்ல முடியுமா அண்ணி? பிறந்த கொஞ்ச நாள்ல்லயே அம்மா, அப்பாவை சாகடிச்சேன். வளர்ந்து ஆளான பிறகு மணமகனா வந்தவனை சாகடிச்சேன். இதுக்கு நடுவுல வீட்டில மாடு செத்துப் போனா அதுக்கும் என்னைத்தான் பாட்டி திட்டுவாங்க. அண்ணனுக்கு பெரிய ஆர்டர் கான்சல் ஆச்சுன்னா அதுக்கும் என்னைத்தான் திட்டுவாங்க. இதெல்லாம் பழகிப் போச்சு அண்ணி. உண்மையிலேயே நான் பிறந்த நேரம் சரி இல்லையா அண்ணி?”

“ஐயோ மாலு. நம்ப பிறந்த நேரத்துக்கும், நம்ப வாழ்க்கையில நடக்கற நிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைம்மா. நீ அழாம அமைதியா இரு.”

“நீங்க அழாம அமைதியா இருந்தா நானும் அழாம இருப்பேன். நீங்களும் அண்ணனும் நிம்மதியா இருக்கணும். மாமாவும், அத்தையும் பாவம். அவங்களைத் தனியா விட்டுட்டு என் கூட வந்துட்டீங்களே... அவங்களைப் போய் பாருங்க அண்ணி. அண்ணாவுக்கும் ஆறுதல் சொல்லுங்க அண்ணி.”

ஆறுதல் அடைய வேண்டியவள் ஆறுதல் கூறினாள். கண்ணீர் வடிக்க வேண்டியவள் கண்ணீரைத் துடைத்தாள்.

20

த்து நாட்கள் கல்யாணியுடன், மாலுவுடனும் கூடவே இருந்துவிட்டு மதுரைக்குப் புறப்பட்டனர் சிவலிங்கமும், சுசிலாவும்.

தியாகு, தன் வேலைகளைக் கவனிப்பதில் மூழ்கி துக்கத்தை மறக்க முயற்சித்தான். மாலு வழக்கம் போல தன் பொழுதைக் கழித்தாள். பாட்டி மட்டும் மாலுவைக் கரித்துக் கொட்டி, நிகழ்ந்ததை நினைவு படுத்திக் கொண்டிருந்தாள். கல்யாணி வீட்டு வேலைகளில் ஈடுபட்டாலும், அவள் மனம் மட்டும் மாலுவுக்கு இப்படி ஆயிற்றே இப்படி ஆயிற்றே என்று அரற்றிக் கொண்டே இருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel