Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 15

kanavukku en azhudhai

“என்ன கல்யாணி, பேசிக்கிட்டே இருந்தா... சாப்பிடணும்ல... எடுத்து வைம்மா. மாலு எங்கே...?”

“அண்ணா...” கூப்பிட்டுக் கொண்டே வந்த மாலு, பாஸ்கரைப் பார்த்ததும் தயங்கினாள்.

“உங்க அண்ணனுக்குத் திடீர் ஃப்ரெண்டு கிடைச்சிருக்கார் மாலு. இவர் பேர் பாஸ்கர். நீ போய் டேபிள்ல்ல இவங்க சாப்பிடறதுக்கு எடுத்து வச்சு ரெடி பண்ணு. இதோ நானும் வரேன்.”

“தியாகுவும், பாஸ்கரும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தனர். மாலுவும், கல்யாணியும் பரிமாறினார்கள்.”

“பாஸ்கர் இவ என் தங்கை மாலு.”

மாலு, பாஸ்கரைப் பார்த்து புன்னகைத்து அந்த அறிமுகத்தை ஏற்றுக் கொண்டாள்.

“என்ன பாஸ்கர், சரியாவே சாப்பிட மாட்டேங்கறீங்க? வச்சது வச்சபடி அப்படியே இருக்கு?” கல்யாணி கேட்டதும் மேலும் சங்கோஜப்பட்டான்.

“சாப்பிடும் போதெல்லாம் எனக்கு எங்க அம்மாவோட ஞாபகம் வந்துரும். என்னை உட்கார வச்சு, என் பக்கத்துலயே இருந்து நான் போதும் போதும்னு சொல்லச் சொல்ல போட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு இருக்கோ இல்லியோ எனக்கு எடுத்துப் போட்டுடுவாங்க?”

“கல்யாணி, பாஸ்கர் ஒரே அம்மா பைத்தியம் வார்த்தைக்கு வார்த்தை அம்மாதான். அவங்க திண்டுக்கல்ல இருக்கறதுனால அந்தப் பிரிவுல ரொம்ப தவிப்பு. அது சரி, பாஸ்கர், நீ எங்கே தங்கி இருக்கே?” தியாகு அது பற்றிக் கேட்டதும் மேலும் கூச்சப்பட்டான் பாஸ்கர்.

“அது... அது... வந்து... ஸார் என் கூட வேலை பார்க்கற பையன் கூடத்தான் இருக்கேன். அவனும் ஏழை, நீ வேற எதுக்கு தனியா வாடகை குடுக்கப் போற? உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கறவரைக்கும் என் கூடவே இருன்னு சொன்னான். நல்ல பையன், காலையில கிளம்பி வந்தா, ராத்திரி படுக்கறதுக்குத்தான் போவேன். ஊர்ல எங்க வீடு சின்ன வீடா இருந்தாலும் தனி வீடு. நல்ல காற்றோட்டமா இருக்கும். வெளியில திண்ணையில படுத்தா இயற்கை காத்துல சுகமான தூக்கம் கண்ணை சுழற்றும்.”

“அடேயப்பா... அந்த வீட்டோட இத்தனை ஐக்கியமா?”

“ஆமா ஸார். அதுக்குக் காரணமும் இருக்கு. அரசாங்கத்துல புறம்போக்கு நிலத்துல குடிசை போட்டுக்கலாம்னு அறிவிச்சு, நிலத்துக்கு சொந்தக்காரங்கன்னு பட்டாவும் போட்டுக் குடுத்தாங்கள்ல? அப்படிக் கிடைச்சது ஸார். அந்த வீடு. அதுக்கு பட்டா வாங்கறதுக்குள்ள எங்க அம்மா பட்ட பாடு!... தினக்கூலி வேலைக்குப் போய்க்கிட்டிருந்த அம்மா, பட்டா போட வர்றாங்கன்னு தெரிஞ்சதும் அங்கேயே போய் பழியாக் காத்துக் கிடப்பாங்க. ஆனா, குறிப்பிட்டு சொன்ன நாளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிங்க வரமாட்டாங்க. அன்னிக்கு தினக்கூலி வேலையும் போய் கூலியும் கிடைக்காது. மூணு வருஷத்துக்கப்புறம் தான் பட்டா கிடைச்சது. அதுக்குள்ள பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கோம். அவ்வளவு கஷ்டப்பட்டதுனால அந்த வீட்டை எங்க அம்மா ஒரு கோவிலா நினைக்கிறாங்க. தனியா நின்னு, சுய உழைப்புல வாழ்ந்து, பெத்த பிள்ளையையும் படிக்க வச்ச எங்க அம்மா ஒரு புதுமைப் பெண்.”

“நல்லது தம்பி. இனிமேல் நீ எங்க வீட்டிலேயே இருந்துக்கலாம். அவுட் ஹவுஸ் ஒண்ணு இருக்கு நீ அங்கே இருந்துக்கலாம். இங்கேயே சாப்பிட்டுக்கலாம். உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மறுத்துப் பேசவே கூடாது. உன் நண்பனோட வீட்டுக்குப் போய் உன் துணிகளை எல்லாம் எடுத்துட்டு வந்துடு.”

“ஸார்... அது...”

“நான் ஆரம்பத்துலயே சொல்லிட்டேன். மறுத்துப் பேசக் கூடாதுன்னு.”

“சரி ஸார்.”

“உன்னை பெட்ரோல் பங்க்ல விட்டுட்டு நான் ஆபீஸ் போறேன். நீ அங்கே உன் கணக்கை முடிச்சுட்டு, சொல்லிட்டு ஆபீஸுக்கு வந்துடு. என் கூடவே வீட்டுக்குத் திரும்பிடலாம். கல்யாணி, நாங்க கிளம்பறோம்மா.”

தியாகுவும், பாஸ்கரும் கிளம்பிச் சென்றார்கள்.

25

ன்று மாலை நேரமே வேலையாட்களை வைத்து அவுட் ஹவுஸை சுத்தம் செய்து வைத்திருந்தாள் கல்யாணி. பாஸ்கரும் தன் பொருட்களைக் கொண்டு வந்து வைத்துவிட்டான்.

தியாகுவிடம் தயக்கமாகப் பேச்சைத் துவக்கினாள் கல்யாணி.

“ஏங்க, ஒரு கன்னிப் பெண் இருக்கிற இடத்துல வயசுப் பையனை இங்கே தங்க வைக்கறது சரிதானா? நல்லா யோசிச்சீங்காளா? உங்க பேச்சைத் தட்டாம எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். ஆனா... என் மனசுக்குள்ள ஒரு நெருடல் இல்லாம இல்ல. பாட்டி கூட நீங்க இல்லாத சமயத்துல இதைப் பத்தி திட்டிக்கிட்டுத்தான் இருக்காங்க.”

“சரிம்மா, அவன்கிட்ட சொல்லியாச்சு. அவுட் ஹவுக்கு குடியும் வந்துட்டான். கொஞ்ச நாள் இருக்கட்டும், சரியான சந்தர்ப்பம் பார்த்து வேற ஏதாவது ஏற்பாடு செஞ்சுடலாம் என்ன?”

“தாங்க்ஸ்ங்க. மனைவி எது சொன்னாலும் நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கறதுன்னு வீம்பு பிடிக்காம நான் சொல்றதை மதிச்சு அதைப் பரிசீலனை செய்யறதா சொல்றீங்க. உங்களைக் கணவரா அடைஞ்ச நான் ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க.”

“நீ எனக்கு மனைவி மட்டும் இல்லியே. என் அம்மா, என் ஃப்ரெண்ட், ஆலோசனை சொல்ற மந்திரியுமாச்சே. நானும்தான் அதிர்ஷ்டசாலி.”

“நாம சந்தோஷமா இருக்கிற மாதிரி நம்ப மாலுவும் நல்ல கணவன் கிடைச்சு சந்தோஷமா இருக்கணும். அந்த நாள் சீக்கிரமே வரணும்ங்க.”

“இது அவசரப்பட்டு முடிக்கற விஷயம் இல்லை கல்யாணி. ஏதோ நாம ஓரளவுக்கு நல்ல வசதியா இருக்கோம். இதை மனசுல வச்சுக்கிட்டு பணத்துக்காக மாலுவை கல்யாணம் செஞ்சுக்க பல பேர் முன் வரலாம். உண்மையாவே ஒரு பெண்ணுக்கு வாழ்வு குடுக்கணும்னு வர்றவனை அடையாளம் தெரிஞ்சு, மாலுவைக் கட்டிக் குடுக்கணும். உங்க அப்பாவும், தீவிரமா இதைப்பத்தி விசாரிச்சிக்கிட்டுத்தான் இருக்காராம். நானும் சொல்லி வச்சிருக்கேன். இன்னொரு விஷயம் கல்யாணி, அடுத்த மாசம் நான் வெளிநாட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். முக்கியமான ஃபேர் ஒண்ணு ஜெர்மனியில நடக்கப் போகுது. அதையும் விஸிட் பண்ணிட்டு, மூணு வார ட்ரெய்னிங் கோர்ஸையும் முடிச்சுட்டு வரலாம்னு இருக்கேன். நான் வர்றதுக்குள்ள உங்க அப்பா, மாலுவுக்கு வரன் பார்த்து வச்சார்னா நான் வந்தப்புறம் மத்த ஏற்பாடுகளை பண்ணலாம்.”

“சரிங்க, கண்ணன் பிறக்கறதுக்கு முன்னாலேயே உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பணும்னு அப்பா ஆசைப்பட்டார். நீங்க தான் மறுத்துட்டீங்க. இப்பவாவது கீளம்பினீங்களே, சந்தோஷமா இருக்குங்க.”

“அப்ப, நான் தொழில் தொடங்கின புதுசு கல்யாணி. இப்ப நல்லா வளர்ந்துடுச்சு. அது மட்டுமில்லை. பாஸ்கரும் ஆபீஸ் நிர்வாகத்தை நல்லா கவனிச்சுக்கக் கூடியவனா இருக்கான். அதனால அவன் பொறுப்புல விட்டுட்டுக் கிளம்பலாம்னு நினைச்சேன்.”

“சரிங்க. இப்பவே இந்த சந்தோஷமான சமாச்சாரத்தை அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சொல்லணும்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel