Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 18

kanavukku en azhudhai

31

மாலுவின் அறை. தலையணையைக் கண்ணீர் நனைக்க, வேதனை நெஞ்சை நிறைக்க கண் மூடிப்படுத்துக் கிடந்தாள் மாலு.

“வசந்தமே போனபின் பாடுமோ பூங்குயில்

வாழ்வெலாம் போன பின் ஆடுமோ பொன் மயில்?

இளைய நிலவே இளைய நிலவே

உனது திசை எங்கே??

புதிய திசையில் உதிக்க நினைத்தால்

எந்தன் மனம் தாங்குமோ...?”

இசையமைப்புக்காக ரசித்த பாடலின் வரிகள் இப்போது மாலுவின் உள்ளத்தைத் தொட்டது. அவளின் கன்னத்தின் மீது கல்யாணியின் கைகள் பட்டது. கண் திறந்து பார்த்த மாலு. “அண்ணி” அழைத்தபடி அவளுடைய மடியில் தலை வைத்துக் கொண்டாள்.

“மாலு, பாஸ்கர் உன்னைக் கல்யாணம் எண்ணிக்கறதா சொல்லி இருக்கார். நமக்குத் தெரிஞ்சவரைக்கும் நல்லவராத்தான் இருக்கார். நமக்குத் தெரியாத அளவுல அவர் எப்படிப்பட்டவரோ இருந்தாலும் நீ அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கற சூழ்நிலை உருவாயிடுச்சு. அந்த நிர்ப்பந்தத்துனால, இதுதான் உன் வாழ்க்கைன்னு நிர்ணயமாயிடுச்சு. கடந்து போய் கடல்ல கலந்த நதியை திரும்பக் கொண்டு வர முடியாது. விதைக்குள்ள இருந்து முளை விட்ட இலைகள் திரும்ப விதைக்குள்ள போக முடியாது. அது மாதிரி நீ நிலை தடுமாறிப் போனதை இனிமேல் மாற்ற முடியாது. எழுந்திரு. உனக்கு பாஸ்கரை கல்யாணம் பண்ணி வைக்கற பொறுப்பு என்னோடது. பாஸ்கரோட இணைஞ்ச உன்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்ங்கறது என்னோட நம்பிக்கை. இந்த நிமிஷத்துல இருந்து அழறதை நிறுத்து. உற்சாகமா இரு. பாஸ்கர், ஊருக்குப் போய் அவங்க அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு வரேன்னு சொல்லி கிளம்பி போயிருக்கார். எழுந்திரும்மா.”

கல்யாணியின் ஆறுதலான பேச்சில் உள்ளம் நெகிழ்ந்த மாலு, சற்று மனத்தெளிவு அடைந்தாள். எழுந்தாள். கல்யாணியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டுக் குளியலறைக்குச் சென்றாள்.

32

“சிவலிங்கத்தைப் பார்ப்பதற்காக டாக்டர் வந்திருந்தார். சிவலிங்கத்தைப் பரிசோதித்தார். கலையுடன் நின்றிருந்த சுசிலாவைப் பார்த்தார்.”

“இப்படி ரெஸ்ட்டாவே இருந்தார்னா நல்லதும்மா. ஏற்கெனவே நெஞ்சு வலி வந்ததை உங்ககிட்ட சொல்லாம விட்டுட்டாரு. அதனால நீங்க ரொம்ப பயந்துட்டீங்க. மதுரையில உங்க ஃபேமிலி டாக்டர் கிட்ட நான் ஃபோன்ல பேசிட்டேன். அவரும் நல்ல ரெஸ்ட்தான் ரொம்ப முக்கியமானதுன்னு கண்டிப்பா சொல்லி இருக்கார். இன்னொரு முக்கியமான விஷயம். இவரோட மனசு அதிர்ந்து போகும்படியா எதையும் பேசாதீங்க.”

“சரி டாக்டர்” சுசிலாவின் வாய் டாக்டருக்கு பதில் சொன்னாலும், அவள் மனதிற்குள் வேறு எண்ணங்கள் தோன்றின. ‘இதுக்கு மேல இன்னும் என்ன இருக்கு அதிர்ச்சி அடையறதுக்கு?’ டாக்டர் கிளம்பிப் போனார். சிவலிங்கம் எழுந்திருக்க முயற்சி செய்தார்.

“பேசாம படுத்திருங்க. நேத்து முழுசும் தூக்கத்திற்கு மாத்திரை குடுத்ததுனால எழுந்திருச்சீங்கன்னா தலை சுத்தும்.” சுசிலா சொன்னதும் தலையணையைத் தோளுக்கு அணை கொடுத்து சாய்ந்து கொண்டார்.

“சுசிலா, மாலு எப்பிடிம்மா இருக்கா?”

“அவளோடப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைச்சிருக்கு. பாஸ்கர், மாலுவைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லி இருக்கான். மாலுவோட இந்தப் பிரச்னைக்கு சரியான, நியாயமான தீர்வு அதுதான். அவங்க அம்மாவைக் கூட்டிட்டு வர்றதா சொல்லி ஊருக்குப் போயிருக்கான். அவங்க வந்ததுக்கப்புறம் பேசிட்டு அதுக்கப்புறம் மாப்பிள்ளைகிட்ட போன்ல பேசலாம். ஆனா கல்யாண விஷயத்தை மட்டும்தான் அவர்கிட்ட சொல்லணும். நீங்க எதையும் நினைச்சு குழம்பாதீங்க. கவலைப்படாதீங்க. மாலுவோட மறுமணம் நல்லபடியா நடக்கும். அவ வாழ்வும் மறுமலர்ச்சி அடையும்.”

“நீயும், கல்யாணியும் இவ்வளவு தூரம் பேசி, நடவடிக்கைகளும் எடுத்திருக்கீங்க. எதுவுமே தெரியாம நான் நேத்து முழுசும் தூங்கி இருக்கேனா...?!”

“ஆமா, உங்களைப் படுக்கையிலே ரெஸ்ட்டா இருக்கச் சொல்லி டாக்டர் கண்டிப்பா சொல்லியிருக்கார். இப்போதைக்கு மதுரைக்கும் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்கார். அது மட்டுமில்லை. மாலு பத்தின கவலையில இருக்கற கல்யாணியையும், மனசு நொந்து போயிருக்கற மாலுவையும் இப்பிடியே விட்டுட்டு போகத்தான் நமக்கு மனசு வருமா? பிரச்னைகளையெல்லாம் நல்லபடியா முடிச்சு வச்சுட்டு நிதானமா நாம கிளம்பலாம். பாஸ்கர் இன்னிக்கு ராத்திரியே அவங்க அம்மாவோட வந்துடுவான். நீங்க சாப்பிடுங்க. தைரியமா இருங்க.”

“சரிம்மா.” அயர்ச்சியில் மறுபடியும் படுக்கையில் படுத்துக் கொண்டார்.

33

“அக்கா, இவங்கதான் எங்க அம்மா.” அம்மாவை, கல்யாணிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

பாஸ்கரின் அம்மா! தெய்வீகமான முகத்துடன் காணப்பட்ட அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் மனதிற்குள் ஒரு மரியாதை தோன்றியது. முகத்தில் சாந்தம் குடி கொண்டிருந்தது.

“வாங்கம்மா. வணக்கம். உள்ளே வாங்க.” பாஸ்கரும், அவனது அம்மாவும் உள்ளே வந்தனர். சுசிலாவும் வந்து சேர்ந்து கொள்ள, அவளுக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

அனைவரும் சிவலிங்கம் படுத்திருக்கும் அறைக்குச் சென்றனர்.

“அம்மா, இந்த ஐயாதான்மா கல்யாணி அக்காவோட அப்பா. மாலுவுக்கு மாமா.” பாஸ்கரின் அம்மா சிவலிங்கத்தைப் பார்ப்பதற்காக நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் திடுக்கிட்டாள். “நீங்களா?” கத்தினாள். இதுவரை சாந்தமாக இருந்த அந்த முகத்தில் அப்படி ஒரு கோப உணர்வு எப்படி வந்ததென்பதே புரியவில்லை.

“புஷ்பா, நீயா?” எழுந்து நின்றார் சிவலிங்கம்.

“என் பெயரை சொல்லக் கூட உங்களுக்கு அருகதை கிடையாது. ஆசை வார்த்தை செல்லி மோசம் பண்ணின நயவஞ்சகர் நீங்க. பணக்காரர்ங்கற நிஜ முகத்தை மறைச்சுட்டு ஏழைங்கற முகமூடியை மாட்டிக்கிட்டு என்னை ஏமாத்தின பாவி. அப்பாகிட்ட போய் நம்ப கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு வரேன்னு சத்தியம் பண்ணிட்டுப் போய், அப்பா பேச்சைக் கேட்டு பணக்கார வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட துரோகி. காதல் வலை வீசிப் பெண்களைத் தன் வசப்படுத்தி, தங்கள் ஆசை தணிஞ்சப்புறம். தவிக்க விடத் தயங்கா கயவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர் இந்தப் பெரிய மனுஷன். பாஸ்கர், இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கக் கூடாது நடக்க விட மாட்டேன். இந்த வீட்டுல சம்பந்தம் உள்ள மனுஷங்களோட மூச்சுக் காத்து கூட நம்ப மேல படக் கூடாது. வா. இப்பவே இந்த இடத்தை விட்டு நாம போயாகணும்...” அனல் தெறிக்கும் வார்த்தைகளால் தன் கோபக் கனலை வெளியிட்டாள் புஷ்பா.

“அம்மா... இவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கம்மா. நீங்க ஏன் இப்படிச் சொல்றீங்கன்னு காரணம் சொல்லுங்கம்மா...”

“காரணமா கேக்கறே? நீ வாய் திறந்து பேச ஆரம்பிச்ச நாள்ல இருந்து அப்பா யாரு? அப்பா எங்கேன்னு கேட்டியே, என் வாயைத் திறந்து அதை சொல்ல முடியாம தவிச்ச நான், அப்பா இல்லை, அப்பா இல்லைன்னு மட்டுமே சொல்லி சமாளிச்சேனே? இப்ப சொல்றேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel