Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 22

kanavukku en azhudhai

39

தியாகு வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தான். மகிழ்ச்சியுடன் அனைவரும் வரவேற்றனர். போனில் அடிக்கடி தியாகு தொடர்பு கொண்டபோதும் அவனிடம் வீட்டில் நடந்த எந்தப் பிரச்சினைகளையும் கல்யாணி சொல்லவில்லை. சரியான சந்தர்ப்பத்தில் அவனிடம் நடந்த அனைத்தையும் கூறினாள் கல்யாணி.

“இத்தனை வேதனைகளையும் எப்படிம்மா நீயும், மாலுவும் தாங்கிக்கிட்டீங்க? நான் போன் பண்ணினப்பக்கூட எதுவும் சொல்லாம எப்படித்தான் சமாளிச்சீங்களோ...”

“இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சமாளிச்சு சரி பண்ணினது எங்கம்மாதான். பக்தி மயமா பிரார்த்தனை பண்ணி சக்தி ரூபமா செயல்பட்டு எங்கம்மாதான் சிக்கலைத் தீர்த்து வச்சு, நம்ப குடும்பத்துல சந்தோஷத்தை மீட்டுக் குடுத்திருக்காங்க. அப்பாவோட மனசுல உறுத்திக்கிட்டிருந்த உணர்வுகளையும் புரிஞ்சுக்கிட்டு புஷ்பா அம்மாவை இங்கே அழைச்சுட்டு வந்தாங்க. அப்பாவும் உடம்பு சரியாகி தெம்பா இருக்கார்.”

“அண்ணா...” அழைத்தபடியே ஓடி வந்தாள் மாலு. அவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருகிறது.

“ம்கூம். நீ அழுதது போதும்மா. இனி அழவே கூடாது. சந்தோஷமா இருக்கணும். பாஸ்கர் எங்கே காணோம்?”

தியாகு கேட்டுக் கொண்டிருந்தபோதே பாஸ்கர் வந்தான். புஷ்பாவையும் அறிமுகம் செய்து வைத்தான்.

“என்னை மன்னிச்சிடுங்க ஸார்...”

“இனிமேல் இந்த ஸார் மோர் எல்லாம் வேண்டாம். மச்சான்னு கூப்பிடுங்க பாஸ்கர்.”

வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் பாஸ்கர்.

புஷ்பா, புன்சிரிப்புடன் தியாகுவின் அருகே வந்தாள்.

“மாப்பிள்ளை, உங்களை கணவனா அடைய என் மகள் கல்யாணி குடுத்து வச்சிருக்கணும். உங்களை மருமகனா அடைய நாங்களும் பாக்கியம் செஞ்சிருக்கோம். கல்யாணி உங்க குடும்ப விளக்கு...”

“ஆமா அத்தை. கல்யாணிதான் இந்தக் குடும்பத்தோட ஆணி வேர். அந்த வேர், துளிர்விட்டு பூத்துக் குலுங்கற மரமா வளர வச்சது சுசிலா அத்தையும், மாமாவும். அவங்க பெத்து எடுக்காத மகள் கல்யாணியோட நிம்மதியான வாழ்க்கைதான் தங்கள் லட்சியம் என்பது போல அவங்க கல்யாணிக்கு உறுதுணையா இருக்காங்க.”

“நான்தான் அவசரப்பட்டு குழப்பத்தை அதிகமாக்கிட்டேன் மாப்பிள்ளை...”

“போனது போகட்டும் அத்தை. நல்லதுதானே நடக்கப் போகுது...”

மாலுவின் கஷ்டங்களுக்கெல்லாம் என்ன காரணம், யார் காரணம் என்பதை விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தாள் கல்யாணி.

“மாலு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எல்லாத்துக்கும் காரணம் சீதம்மா பாட்டிதான். அதாவது அவங்களோட மூட நம்பிக்கைகள், பத்தாம் பசலித்தனமான கொள்கைகள். மாலுவை துக்கிரி, துஷ்டை, கெட்ட நேரத்துல பிறந்தவள்னு குத்தி காமிச்சு அவளைத் துன்புறுத்தினது மட்டும் இல்ல... அவ மனசுலயும் தன்னைப் பத்தி தாழ்வான அபிப்பிராயத்தையும் உண்டு பண்ணிடுச்சு. நீங்க வெளிநாட்டுக்கு போறப்ப பாட்டிதான் அவளை சென்னைக்கு வரவிடாம தடுத்திருக்காங்க. அதனாலதான் மாலு அன்னிக்குத் தனியா இருக்கும்படி நேர்ந்துடுச்சு.”

“மாலு குழந்தையா இருந்தப்ப பாட்டி அப்படித் திட்டினது எனக்கும் தெரியும். ஆனா அவ ஓரளவு வளர்ந்தப்புறம் அவளை அப்படிப் பேசக் கூடாதுன்னு கண்டிச்சு வச்சிருந்தேனே?...”

“அவங்க உங்க முன்னாடி திட்ட மாட்டாங்க. நீங்க இல்லாத சமயத்துல திட்டுவாங்க. இவளும் உங்ககிட்ட சொல்லாம விட்டதுனால உங்களுக்குத் தெரியலை. நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தப்புறம் நான் மாலுவுக்காகப் பரிஞ்சு பேசினதுனால கொஞ்சம் குறைச்சுக்கிட்டாங்க. அவ்வளவுதான்.”

“கல்யாணி,” வாசலில் குரல் கேட்டது. யாத்திரை சென்றிருந்த சீதம்மா வந்தாள்.

“பாட்டி” அன்புடன் அவளை அணைத்துக் கொண்ட கல்யாணி, அவளைத் தனியாக அழைத்துச் சென்றாள்.

“பாட்டி, மாலுவோட பிறந்த நேரம் சரி இல்லை, அவ ராசி கெட்டவள்னு சொல்லி அவளைப் புண்படுத்தினீங்க. நாம நல்லது நினைச்சா நல்லதுதான் நடக்கும். நம்ப நினைப்புகளை நல்லதாகவே நினைக்கப் பழகிக்கணும் பாட்டி. நல்லது நடக்கறதும், கெட்டது நடக்கறதுக்கும் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு காரணம்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. நாங்க அவர் வெளிநாட்டுக்குப் போகும்போது வழியனுப்ப சென்னைக்குப் போனபோது நீங்கதான் மாலுவை எங்க கூட வராம தடுத்திருக்கீங்க. நீங்க அவளைத் தடுத்து நிறுத்தினதாலதான் அவ இங்க தனியா இருக்கும்படி ஆயிடுச்சு, அதனால எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்துடுச்சு தெரியுமா?...” நடந்தவை அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினாள் கல்யாணி.

“இப்ப என்ன சொல்றீங்க பாட்டி? எங்க கூட மாலு வந்திருந்தா இப்படி நடந்திருக்குமா? இப்ப சொல்லுங்க. அவளோட கெட்ட ராசியா உங்களோட மூட நம்பிக்கையா? எது பாழாக்குச்சு அவளோட மானத்தை? அவ ராசி கெட்டவளா இருந்திருந்தா, அந்தப் பையன் பாஸ்கர் சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிருப்பான்.”

“முதல்ல நடந்த கல்யாணத்துல மாப்பிள்ளை ஏன் செத்துப் போனான்? ஆரோக்யத்தைப் பத்தின முன் எச்சரிக்கை உணர்வு இல்லாத அவங்களோட அலட்சியம் அவனோட உயிரைப் பலி வாங்கிடுச்சு. இதுக்கு மாலு எப்படிக் காரணமாவாள்? சொல்லப் போனா மாலு மூலமா எங்க குடும்பத்துல இருந்த குழப்பங்கள் தீர்ந்திருக்கு. எங்கப்பா அவரோட நெஞ்சுல சுமந்துக்கிட்டிருந்த பாரம் இறங்கி இருக்கு. அவரோட முகத்துல இதுவரைக்கும் நானும், எங்க அம்மாவும் பார்த்திராத சந்தோஷத்தைப் பார்க்கிறோம்.”

“பாஸ்கர் நல்லவன், அறிவாளி. மாலுவைக் கல்யாணம் பண்ணி அவளை சந்தோஷமா வாழ வைக்கப் போறான். மேல மேல முன்னேறி மாலுவுக்கு பெருமை சேர்க்கப் போறான். காலம் மாறிடுச்சு பாட்டி. இன்னும் ராசி, பிறந்த நேரம்ன்னெல்லாம் பேசறது சரி இல்லை. சுமங்கலிகள்தான் மங்கல காரயங்கள்ல கலந்துக்கணும்ங்கற தவறான கொள்கைகளை எல்லாம் விட்டுடுங்க. மனுஷிங்கதானே? அவங்க மட்டும் நல்லது நடக்காம கெட்டது நடக்கணும்னு நினக்கறவங்களா? நல்லதும், கெட்டதும் அவரவர் மனசுல இருக்கு. ப்ளீஸ் பாட்டி, புரிஞ்சுக்கோங்க” இதமாக எடுத்துச் சொன்னாள் கல்யாணி.

நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு சீதம்மா தெளிவு பெற்றாள். தன் மனதில் இருந்த மூட நம்பிக்கைகளுக்கு விடை கொடுத்தாள். மாலுவைத் தேடி ஓடினாள்.

“என் கண்ணே மாலு...” பாட்டி மாலுவைக் கொஞ்சினாள். அந்தப் பாசத்தை அநாவசியமான பத்தாம்பசலித்தனமான கொள்கைகள் அடக்கி வைத்திருந்தன. அவற்றிற்கு விடுதலை கொடுத்த சீதம்மாவின் மனம், அளவற்ற ஆனந்தம் அடைந்தது.

40

பாஸ்கர் மாலு திருமணம் இனிது நடந்தது. மறுமணத்தால் மாலுவின் வாழ்வில் மணம் வீசியது. வசந்தம் வந்தது.

அதே நாளில் புஷ்பாவின் கழுத்தில் சிவலிங்கம் தாலி கட்டுதற்குரிய ஏற்பாட்டை வீட்டில் செய்து வைத்திருந்தாள் சுசிலா. சிவலிங்கத்தின் அந்தரங்கங்கள், சுசிலாவிடம் அரங்கேறிய பின் புஷ்பாவின் கருகமணிகளைப் பற்றிச் சொல்லி இருந்தார். ஆகவே முன்கூட்டியே மதுரை சென்று அந்த கருகமணிகளை எடுத்து வந்து தங்கத் தாலியுடன் கோர்த்து வைத்திருந்தாள் சுசிலா. குடும்பத்தினர் கூடியிருந்த சுபவேளையில் அந்தத் தாலியை சுசிலா எடுத்துக் கொடுக்க, புஷ்பாவின் கழுத்தில் கட்டினார் சிவலிங்கம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel