Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 21

kanavukku en azhudhai

“நம்ப சொந்தம் எப்பவும் தொடர்கதையா இருக்கணும்ன்னுதான் இப்ப மாலுவையும், பாஸ்கரையும் ஆண்டவன் சேர்த்து வச்சிருக்கார். நீங்க அவரை மன்னிச்சதையும், மாலுவை உங்க மருமகளா ஏத்துக்கிட்டதையும் கேட்டார்னா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். நான் உங்ககிட்ட வந்து விளக்கம் சொன்னதை என்னோட பெருந்தன்மைன்னு நீங்க சொன்னீங்க. அதுல என்னோட சுயநலமும் அடங்கியிருக்கு. அவரோடக் கண்கள்ல இருக்கற சோகத்தை மாத்தி முழுமையான சந்தோஷம் உள்ளவரா பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். என்னோட அந்த ஆசை நிறைவேறப் போகுதே... அவர் எப்படி உங்க மேல தன் உயிரையே வச்சிருக்காரோ அதே மாதிரி நான் அவர் மேல என் உயிரை வச்சிருக்கேன்.”

“எனக்காக அவரை நிச்சயம் பண்ணின நாள்ல்ல இருந்து அவரை என் உயிருக்குயிரா நேசிக்க ஆரம்பிச்சேன். அவர் நல்லவர். யாருக்கும் எந்தத் தீங்கும் மனசால கூட நினைக்காதவர். தான தருமங்கள் செய்யறதுக்கு கொஞ்சம் கூடத் தயங்காதவர். யார் மனசையும் நோக வைக்கவே அவருக்குத் தெரியாது. அதனாலதான் உங்களைப் பிரிஞ்ச அவரால என் கூட சந்தோஷமா வாழ முடியலை. என்னை மட்டுமே நேசிக்கற நல்ல கணவரா நடந்துக்க முடியாத அவர், நல்ல மனிதர். உங்களை நினைச்சுக்கிட்டு, என்னைப் புறக்கணிக்கலை. குடும்ப நேயமும், மனித நேயமும் நிறைஞ்ச மகத்தான மனுஷன் அவர்.

“அவர் இதயத்துல எனக்கு இடம் தரலைன்னாலும், அவரோட மனைவிங்கற அந்தஸ்தையும், மரியாதையையும் குடுத்தார். அதனாலதான் எல்லாருக்கும் நல்லதே நடக்கணும்னு நினைச்சு வாழற அவருக்கு ஒரு நல்லது நடக்கணும்னு நான் உங்ககிட்ட பேச வந்தேன். ஒரு உத்தம புருஷனுக்கு உன்னதமான உதவியை நான் செய்யணும்ன்னா அது உங்களை அவரோட சேர்த்து வைக்கறதாத்தான் இருக்கும்.”

“அவருக்காக இல்லாட்டாலும் உனக்காக, உன்னோட அன்பான மனசுக்காக இனி நான் எதையும் செய்வேன் சுசிலா.”

சுசிலா, புஷ்பாவின் கரங்களோடு தன் கரங்களை இணைத்தபடி தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளியிட்டாள்.

37

பாஸ்கருடனும், புஷ்பாவுடனும் வந்த சுசிலாவைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள் கல்யாணி. அவர்களை வரவேற்பதற்குக் கூட வாய் எழவில்லை அவளுக்கு.

“என்னம்மா கல்யாணி, திகைச்சுப் போய் நின்னுட்ட? சந்தோஷமான சமாச்சாரத்தோடதான்மா வந்திருக்கேன்” பேசிய சுசிலா, புஷ்பாவின் கண்கள் அங்கும் இங்குமாக அலைவதைக் கவனித்தாள்.

“புரியுது. யாரைத் தேடறீங்கன்னு?....” சுசீலா கேலியாகச் சொன்னதும் புஷ்பா வெட்கப்பட்டாள். இதற்குள் அங்கே வந்த சிவலிங்கம். புஷ்பாவைப் பார்த்ததும் பலவித உணர்வுக் கலவைகளால் தடுமாறினார். அதைப் புரிந்து கொண்ட புஷ்பா அவரிடம் பாஸ்கரை கூட்டிச் சென்று “இதோ உங்க மகன்” என்று அவரது கைகளில் ஒப்படைத்தாள்.

பாஸ்கரைக் கட்டி அணைத்துக் கொண்ட சிவலிங்கம், புஷ்பாவைப் பார்த்தார். “என்னை மன்னிச்சுடு புஷ்பா...”

“நானும் உங்களைத் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். நடந்ததெல்லாம் போகட்டும். இனிமேல் நடக்கப் போறதைப் பார்ப்போம். உங்க மேல இப்ப எனக்கு எந்தக் கோபமும் இல்லை.”

சிவலிங்கம் மகிழ்வுடன் வாய்விட்டுச் சிரித்தார்.

“இந்த மாதிரி முழுமையான மகிழ்ச்சி நிரம்பிய உங்க முகத்தைப் பார்க்கணும்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன்?! என்னோட ஆசை நிறைவேறிடுச்சு.”

“நீ ஆசை மட்டும் படலை சுசிலா ஒரு தவமே பண்ணி இருக்க...” புஷ்பா கூறினாள்.

“தவப்பலனை நீங்கதானே குடுத்தீங்க? வாங்க, மாலுவைப் போய் பார்க்கலாம்.” மாலுவின் அறைக்கு புஷ்பாவை அழைத்துச் சென்றாள். கல்யாணியும் உடன் சென்றாள். வெறித்த பார்வையுடன், சோகம் கப்பிய முகத்துடன் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்தாள் மாலு.

“மாலு. நீதான் என் மருமகள்” என்று மாலுவையும், “நீதான் என் மகள்” என்று கல்யாணியையும் கட்டிப் பிடித்துக் கொண்டாள் புஷ்பா.

மாலுவைப் பார்க்கும் ஆவலில் அங்கே வந்த பாஸ்கரைச் செல்லமாக விரட்டினாள் புஷ்பா. “பாஸ்கர், மாலுவோட கழுத்துல நீ தாலி கட்டறவரைக்கும் அவளைப் பார்க்கவும் கூடாது. பேசவும் கூடாது. கல்யாணத்துக்கப்புறம்தான் எல்லாம். இங்கிருந்து போ முதல்லே.”

“சரிம்மா...” என்றபடியே போன பாஸ்கர் போகிற போக்கில் மாலுவிடம் கண்களாலேயே பேசி விடை பெற்றான். இருவரது கண்களும் கலந்த அந்தக் கணங்கள் அவர்களால் மறக்க முடியாத இனிய கணங்களாக இருக்கும்.

38

சிவலிங்கம் நன்றாக உடல்நலம் தேறி விட்டார். சுசிலாவையும், சிவலிங்கத்தையும் அம்மா, அப்பா என்று அழைத்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

“இப்ப இவ்வளவு வாய் பேசறியே, அன்னிக்கு உங்கம்மா ‘வாடா இங்கிருந்து’ன்னு கூப்பிட்டதும், பின்னாடியே ஓடின. நான் உங்க வீட்டுக்கு வந்து பேசினப்புறம் ‘இங்கே வா’ன்னு உங்கம்மா கூப்பிட்டப்ப, அவங்க பின்னாடியே இங்கே வந்துட்ட... சரியான அம்மா கோண்டுவா இருக்கியே...”

“ஆமா. சுசிலாம்மா. எங்கம்மா என்ன சொன்னாலும் கேட்பேன். எங்க அப்பா இல்லாம அவங்க என்னை வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்க?! அதனாலதான்.”

“அதுக்காக? ஒரு பொண்ணுக்குச் சரியான நியாயம் கிடைக்க வழி சொல்லாம இப்படியா ஓடறது?” வேண்டுமென்றே தமாஷாக அவனைச் சீன்டினாள் சுசிலா.

“அதுதான் பிரச்னையை தீர்த்து வைக்க நீங்க வந்துட்டீங்களேம்மா...” வெகுளியாகப் பேசிய பாஸ்கர் மீது அளவற்ற பாசம் கொண்டாள் சுசிலா.

“எப்படிம்மா எங்க ஊரையும், வீட்டையும் தேடி வந்தீங்க?”

“இதென்ன பெரிய விஷயமா? மாப்பிள்ளையோட ஆபீஸ் போய் கம்ப்யூட்டர்ல உன் அட்ரஸ் பார்த்தேன். எழுதிகிட்டேன். வீட்டுக்கு வந்து கல்யாணியிடமும், உங்க அப்பாகிட்டயும் நான் எங்கே போறேன், எதுக்காகப் போறேன்னு கேக்கக் கூடாதுன்னுதான் கண்டிஷன் போட்டேன். கிளம்பி உங்க ஊருக்கு வந்து, உங்கம்மாவைப் பார்த்துப் பேசினேன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. எல்லாம் உங்க அம்மாவோட நல்ல குணத்துனாலதான்.”

“என்னோட ரெண்டு அம்மாவும் சேர்ந்து என் மாலுவை என்கிட்ட சேர்த்துட்டாங்க. இல்லப்பா?” சிவலிங்கத்திடம் குழந்தை போலக் கேட்டான் பாஸ்கர்.

“ஆமாம்ப்பா. நான் இவ்வளவு சந்தோஷமா இன்னிக்கு இருக்கோம்னா அதுக்குக் காரணம் உங்கம்மாக்கள்தான்.”

“மூவரும் சிரித்து மகிழ்ந்தனர்.”

“புஷ்பா, தன் இருபத்தஞ்சு வருஷத்து சோகக் கதைகளை சிவலிங்கத்திடம் சொல்லி ஆறுதல் அடைந்தாள். புஷ்பாவை சந்தித்து அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துடித்துப் போன தன் உணர்வுகளை அவளிடம் வெளியிட்டு தன் இதயத்தில் உறுதிக் கொண்டிருந்த வேதனை முள்ளைப் பிடுங்கித் தூர எறிந்தார் சிவலிங்கம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel