Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 19

kanavukku en azhudhai

இதோ இருக்காரே இவர்தான் உன்னோட அப்பா. சரியான சந்தர்ப்பம் வர்றப்ப சொல்றேன்னு சொன்னேன். அந்த சந்தர்ப்பத்தை இப்ப நீயே உருவாக்கிட்டே. கோயம்புத்தூர் கல்லூரியில படிக்க வந்த இவர், எனக்குக் காதல் பாடம் எடுத்தார். அதுக்கப்புறம் என்னைக் கைவிட்டு, வாழ்க்கைப் பாடமும் கத்துக் குடுத்துட்டார். வாடா, போகலாம்...”

“புஷ்பா... புஷ்பா... நான் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்ங்கற உண்மையை மறைச்சேனே தவிர, நான் ஏழைன்னு உன்கிட்ட பொய் வேஷம் போடலியே? நான் மறைச்சதுக்குக் காரணம் உன் மேல நான் கொண்ட காதல். பணக்காரன்னு தெரிஞ்சா ஆரம்பத்துலயே என்னை ஒதுக்கிடுவியோங்கற பயத்துலதான் நான் அப்படிச் செஞ்சேன். உன்னை நான் ஏமாத்தணும்னு சத்தியமா நினைக்கலை. நான் அப்பாவை சந்திக்கும்போது அவர் சுசிலாவைப் பொண்ணு பார்த்து பேச்சு வார்த்தையும் முடிச்சு வச்சிருந்தார். எ... எ... என்னால அதை மீறி எதுவும் பேச முடியலை புஷ்பா. உன்னைப் பார்க்கறதுக்காக நான் சிங்கநல்லூருக்கு உன் வீடு தேடி வந்தேன். நீ அங்கே இல்லை. உங்க வீடும் பூட்டிக்கிடந்துச்சு. அங்கே பக்கத்துல இருந்த யாருக்கும் உன்னைப் பத்தின தகவல் தெரியலை. உன்னைத் தேடித் தேடி தவிச்சேன் புஷ்பா...”

“கல்யாணத்துக்கு மட்டும் அப்பா பேச்சை கேப்பீங்க... காதலிக்கறதுக்கு? யாருடைய அனுமதியும் தேவையில்லை. நீங்க என்னை விட்டுட்டுப் போனப்புறம்தான் தெரிஞ்சது உங்க ஆசை விதை என் வயித்துல முளை விட்டிருக்குன்னு. கழுத்துல தாலியை சுமக்காம வயித்துல குழந்தையை சுமக்கற அவமானம் தாங்காமத்தான் அந்த ஊரை விட்டுத் தெரிஞ்சவங்க யாருமே இல்லாத திண்டுக்கல்லுக்குப் போனேன். இன்னொரு உயிரை சுமந்ததுனாலதான் என் உயிரை இந்த உடம்புல சுமந்துகிட்டு வாழ்ந்தேன். இப்பவும் அவனுக்காகத் தான் உயிர் வாழறேன். ஆனா உங்க நிழல் கூட எங்க மேல படக்கூடாது. பாஸ்கர்... இதுவரைக்கும் உன்னை ஒரு வார்த்தைகூட அதட்டிப் பேசினதில்லை. இப்ப பேசறேன். இப்பவே இந்த இடத்தை விட்டுக் கிளம்பு. வாடா...” கோபம் சிறிதும் மாறாத குரலில் புஷ்பா கத்திவிட்டு வெளியே நடந்தாள். அவள் பின்னாடியே பாஸ்கரும் போனான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுசிலாவிற்கு சிவலிங்கம் அவ்வப்போது யோசனைக்குள் மூழ்கித் தவிப்பதற்கும், சிவலிங்கத்தின் கண்களில் உள்ள மாறாத சோகத்திற்கும், அவர் அடிக்கடி யோசனையில் மூழ்கி, மனதிற்குள்ளே ஒரு மெளன வேள்வி நடத்தி, தன்னை வருத்திக் கொள்வதற்கும் காரணம் இந்த புஷ்பாவும், அவள் மீது கொண்ட காதலும் தான் என்பது புரிந்தது.

‘என் அன்புக் கணவரின் வாழ்க்கையிலும், மனதிலும் இன்னொரு பெண் இடம் பெற்றிருக்கிறாள். இதை அவர் என்னிடம் இத்தனை வருட காலமாக மறைத்து விட்டிருக்கிறார். வெளிப்பட்டுவிட்ட உண்மை, அவள் மனதை வலிக்கச் செய்தது என்றாலும் பக்குவப்பட்டுவிட்ட மனதால் அதைத் தாங்கிக் கொண்டாள்.

‘அப்பாவின் சொல்லைத் தட்ட முடியாமல் தன்னைத் திருமணம் செய்து கொண்டார். என் மீது அன்பாகத்தான் இருந்தார், இருக்கிறார். இந்த புஷ்பாவை விட்டு விட்டோமே என்று எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்! இப்போது அவள் வீசி விட்டுப் போன அக்கினி அடங்கிய சொற்களால் துடித்துவிட்டாரே...’ பண்பட்ட உள்ளம் கொண்ட சுசிலாவின் மனம் புண்பட்டது. அவளை அறியாமல் பெருகிய கண்ணீரைத் துடைத்தாள்.

‘பிரச்னைகள் விஸ்வரூபமாகிக் கொண்டே போகிறது. முள்மேல் விழுந்த துணியை எடுப்பது போல் மிக கவனமாகச் செயல்பட வேண்டும்.’ முடிவு செய்தாள்.

அவளைச் சமாதானப்படுத்துவதற்காகப் பேச ஆரம்பித்த சிவலிங்கத்தைத் தடுத்தாள்.

“எனக்கு எந்த வருத்தமும் இல்லைங்க. நீங்கதான் உண்மைகளை உங்க நெஞ்சுக்குள்ளேயே புதைச்சு இத்தனை வருஷ காலத்தையும் சோகத்திலேயே கடத்திட்டீங்க. புதைஞ்சுக்கிடந்த உண்மைகள் தானே வெளியே வந்தாச்சு. எனக்கும் எல்லா உண்மைகளையும் புரிய வச்சுடுச்சு. ஒரு பெண் கிட்ட காதல் நாடகம் நடத்தி பொய்யான வசனங்கள் பேசி, நாடகம் முடிஞ்சதும் திரை போட்டு மறைக்கற கயவர் இல்லை என் கணவர்ங்கற உண்மை புரியலைன்னா இத்தனை வருஷக் காலம் உங்களோட நான் குடும்பம் நடத்தினதுக்கு அர்த்தமே இல்லைன்னு ஆயிடும். உங்களுக்கு எந்த அதிர்ச்சியும் தரக்கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார். புஷ்பா உங்களைப் பழி சுமத்தி பேசிட்டு உங்களை உதாசீனப்படுத்திட்டுப் போனது பெரிய அதிர்ச்சி. இதை நீங்க தாங்கிக்கிட்டதே அந்த கடவுள் அருளாலதான். அதனால அமைதியா இருங்க.”

“மாலு... அவளோட...”

“எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். நீங்க நல்லா இருந்தாத்தான் என்னால நிம்மதியா செயல்பட முடியும். இதுக்காக நீங்க செய்யற உதவி, எதுவும் பேசாம, எதைப் பத்தியும் கவலைப்படாம ரெஸ்ட் எடுக்கறது மட்டும்தான்.”

“சரி சுசிலா. நீ சொல்றதை நான் கேக்கறேன். ஆனா இப்ப ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். நீ... நீ... என்னை மன்னிச்சுடு....”

“மன்னிச்சாச்சு. மறந்தாச்சு. போதுமா?”

சுசிலாவின் கைகளை அன்புடன் பிடித்துக் கொண்டார் சிவலிங்கம்.

34

நாட்கள் நகர்ந்தன. ஆனால் யுகங்கள் கழிந்தது போல இருந்தது அனைவருக்கும்.

“ராசி இல்லாதவள், பிறந்த நேரம் சரி இல்லைன்னு பாட்டி சொன்னதை நானும் நிரூபிச்சுக்கிட்டே இருக்கேன் அண்ணி. என்னால எல்லாருக்கும் கஷ்டம்” என்று புலம்பிய மாலுவுக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் இருந்த கல்யாணியையும், மாலுவையும் தன் பரிவான ஆறுதல் வார்த்தைகளால் சமாதானம் கூறினாள் சுசிலா. மற்றவர்களுக்கு ஆறுதல் சொன்ன சுசிலாவிற்கு இந்தப் பிரச்னைக்கு என்ன வழி? என்று எழுந்த கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. தெய்வங்களை வேண்டினாள். பிரார்த்தனை செய்தாள். ஸ்லோகங்களைப் படித்தாள். பூஜா பலனுக்காகக் காத்திருந்தாள். ஆனால் விதி யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அது தன் சதியைத் தொடர்ந்து செயல் புரிந்து கொண்டே இருந்தது.

35

வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது போல மாலு, கல்யாணிக்கு ஒரு பயங்கரமான விஷயத்தைக் கூறினாள். கல்யாணியின் இதயத்தில் இடி இறங்கியது போலிருந்தது. அடி மேல் அடி. அடுக்கடுக்கான துன்பங்கள். கடவுளே! செய்வதறியாது தரையில் சரிந்து உட்கார்ந்தவள் ஒரு மணி நேரம் வரை அப்படியே சோகச் சிலையாக உட்கார்ந்தபடி இருந்தாள்.

துவண்டு போன கொடியாய், வாடிய மலராய், சிலை போல அமர்ந்திருந்த கல்யாணியைப் பார்த்தாள் சுசிலா.

“என்னம்மா கல்யாணி, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? என்ன ஆச்சு?” பதறியபடி கேட்டாள்.

சுசிலா கேட்ட மறுவிநாடி, சுசிலாவின் தோளில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel