Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 10

kanavukku en azhudhai

“போதும் போதும், உங்க புகழ் மாலை. என்ன பெரிசா பண்ணிட்டேன்? என்னோட அம்மா, அப்பாவை ஒரே சமயத்துல நானும் பறிகொடுத்தவ. என்னோட சுசீலா அம்மாவும், சிவலிங்கம் அப்பாவும் என்னை அவங்க பெத்த பொண்ணு மாதிரி வளர்க்கலியா? அன்பு செய்யலியா? அவங்க வளர்த்த பொண்ணு நான். அவங்களை மாதிரியே அன்பே உருவானவளா இருக்கணும்னு உறுதியான தீர்மானத்துல இருந்தேன். இருக்கேன். இனியும் இருப்பேன். மாலு மேல எனக்கு கொள்ளைப் பிரியம்ங்க. அவளோட மனசு வெள்ளை. இந்த சின்ன வயசுலே எவ்வளவு மனப்பக்குவமா இருக்கா தெரியுமா? அவ வயசுக்கு வர்ற பருவத்துல இருக்கா, இனிமேல்தான் நமக்கு நிறைய பொறுப்பு இருக்கு.”

கல்யாணியின் பேச்சில் வெளிப்பட்ட அக்கறையைக் கண்டு பிரமித்துப் போன தியாகு, அன்பு மிகுதியில் அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவர்களது உடல்கள் மட்டுமல்ல, உள்ளங்களும் சங்கமித்துக் கொண்டன.

14

துரையில் இருந்து திருச்சிக்கு அடிக்கடி, சளைக்காமல் சென்று வந்தனர் சுசிலாவும், சிவலிங்கமும். கல்யாணியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் உடனே காரில் கிளம்பி விடுவார்கள். கல்யாணியும், தியாகுவும் அன்பான தாம்பத்யம் நடத்துவதைப் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி கொண்டனர்.

சிவலிங்கம் அலுவலகத்தில் இருந்து வந்தார். வீட்டிற்குள் வந்தவர், அங்கே ஹால் முழுக்க பரப்பி வைக்கப்பட்டிருந்த சாமான்களைப் பார்த்தார்.

“சுசிலா... சுசிலா...” அவரது குரல் கேட்டதும் வேகமாக வந்தாள் சுசிலா.

“என்னம்மா இது? திடீர்னு இவ்வளவு சாமான்களை எடுத்து வச்சிருக்க? என்ன விசேஷம்?”

“என்ன விசேஷம்னு கேக்காதீங்க. என்னென்ன விசேஷம்னு கேளுங்க. அதுக்கு முன்னால் நான் ஒரு கேள்வி கேக்கறேன். புதுசா கல்யாணம் ஆன பொண்ணு வாந்தி எடுத்தா அதுக்கு என்ன காரணம்?”

“ம். புதுசா கல்யாணம் ஆன பொண்ணு வாந்தி... ஓ... புரிஞ்சுருச்சு. குழந்தை உண்டாகி இருக்கலாம். அதனால வாந்தி வரும்... அப்ப நம்ப கல்யாணி...”

“ஆமா... நம்ப கல்யாணி, குழந்தை உண்டாகி இருக்காளாம். போன் பண்ணினா, உடனே இதெல்லாம் ரெடி பண்ணிட்டேன். நாம இப்ப திருச்சிக்குக் கிளம்பணும்.”

“அது சரி, வேற ஏதோ இன்னொரு விசேஷம்னு சொன்னியே, அது என்ன?”

“ஓ... அதைச் சொல்லாம விட்டுட்டேனா? மாலு வயசுக்கு வந்துட்டாளாம். கல்யாணி தனக்குக் குழந்தை உண்டாகி இருக்கிற விஷயத்துக்கு முன்னால, மாலு வயசுக்கு வந்துட்ட விஷயத்தைத்தான் முதல்ல சொன்னா, அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.”

“இருக்காதா என்ன? மாலுவை தன்னோட குழந்தையாவே நினைக்கிறாளே நம்ப கல்யாணி! பெற்ற தாய் இல்லாத கல்யாணிக்கு நீ தாயாக கிடைச்ச. இப்ப மாலுவுக்குத் தாயா நம்ப கல்யாணி, உன்கிட்ட இருந்துதானே கல்யாணிக்கு அந்த பாச உணர்ச்சியும், அன்பு செலுத்தற குணமும் வந்துச்சு? உன்னோட இந்த அன்பும், பண்பும் என் மனசுக்கு எவ்வளவு நிம்மதியைக் குடுக்குது தெரியுமா?”

“நீங்க நிம்மதியா இருக்கணும். மனநிறைவா இருக்கணும். சந்தோஷமான உங்க முகத்தைத்தான் என்னால பார்க்க முடியலை. சஞ்சலம் இல்லாத உங்க மனசையாவது நான் உணர முடியுதே. அது போதும்ங்க. அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்ங்க.”

இதைக் கேட்ட சிவலிங்கம் குற்ற உணர்வில் தவித்தார். தான் அவ்வப்போது பழைய நினைவுகளில் நீந்தி, புஷ்பாவைப் பற்றிய சிந்தனையில் சோகமாகி மூட் அவுட் ஆகி விடுவதைத் தவிர்க்க முடியாமல் சுசிலாவின் மனதைப் புண்படுத்தி வருவது குறித்துதான் அவள் மறைமுகமாய் பேசுகிறாள் என்று புரிந்து, வேதனைப்பட்டார்.

“என்னங்க. யோசனைக்குப் போயிட்டீங்களா? வந்து சாப்பிட்டுட்டு திருச்சிக்குக் கிளம்பற வேலையைப் பாருங்க. டிரைவரை சாப்பிட அனுப்பிட்டீங்களா?”

“அனுப்பிட்டேன். வந்துடுவான்.”

சிவலிங்கம், முகம் கழுவிவிட்டு, சாப்பிடும் அறைக்குச் சென்றார். இருவரும் சாப்பிட்டு முடித்துத் திருச்சிக்குக் கிளம்பினார்கள்.

கல்யாணி, இவர்களுக்காகக் காத்திருந்தாள். கார் வந்து நின்றதும் ஓடி வந்தாள். முகத்தில் வெட்கம் வர்ண ஜாலமிட்டது.

“டிரைவர், கூடை எல்லாம் இறக்கி வை.”

டிரைவர் எல்லாப் பொருட்களையும் இறக்கினான்.

“என்னம்மா கல்யாணி, வாந்தி எடுத்து கஷ்டப்படறியா?” சுசிலா, கல்யாணியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.”

“ஆமாம்மா. அடிக்கடி வாந்தி வருது.”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சீதம்மா வந்தாள்.

“வாங்க, வாங்க.”

“என்ன சீதம்மா, மாலு பெரியவளாயிட்டாளாமே?” சுசிலா கேட்டதும் சீதம்மாவின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது.

“ஆமா. பிறந்த நேரம்தான் சரி இல்லை. வயசுக்கு வந்த நேரமாவது நல்லா இருந்தா சரிதான்.”

“ஏன் பாட்டி, பாவம் சின்ன பொண்ணு மாலு. அவளைப் போய் திட்டறீங்க..” கல்யாணி மாலுவிற்காகப் பரிந்து பேசினாள்.

“மாலு எங்கே இருக்கா கல்யாணி? அவளுக்கு பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கோம்.”

“சரிம்மா. இதையெல்லாம் எடுத்து உள்ளே வை. உனக்காக புளி சாதம். புளிக்குழம்பு எல்லாம் கொண்டு வந்திருக்கேன். நீ ஆசையா சாப்பிடறதை நான் உன் பக்கத்துல உட்கார்ந்து பார்க்கணும். அதுக்கு முன்னால மாலுவைப் பார்த்துடலாம்.”

“வாங்கம்மா” சுசிலாவை மாலு இருக்கும் தனி அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“மாலுக்குட்டி நல்லா இருக்கியாம்மா?” சுசிலாவின் குரல் கேட்டதும் தூங்கிக் கொண்டு இருந்த மாலு எழுந்தாள்.

உறக்கம் கலையாத முகத்தில் சுசிலாவைக் கண்ட மலர்ச்சி.

“எப்ப வந்தீங்க அத்தை?”

“இப்பத்தாம்மா வந்தோம்.”

“அத்தை, அண்ணிக்கு பாப்பா பிறக்கப் போகுது தெரியுமா?”

“ஓ. தெரியுமே.”

“அத்தை, அண்ணிக்கு குழந்தை பிறக்கறப்ப எந்த கெட்டதும் நடக்கக் கூடாது...”

இதைக் கேட்டதும் சுசிலாவும், கல்யாணியும் துடித்து விட்டனர்.

“பார்த்தியாம்மா கல்யாணி. பிஞ்சு மனசுல நஞ்சு படர்ந்தாப்போல பாட்டி பேசின பேச்சு, இவ மனசை எப்படி பாதிச்சிருக்கு? சின்னப் பொண்ணு எவ்வளவு வேதனைப்பட்டிருந்தா இப்படி ஆழமா சிந்திச்சிருப்பா? பாவம் மாலுக்குட்டி...?”

“எனக்கு அதெல்லாம் பழகிப் போச்சு அத்தை.”

வேதனை ரேகைகள் முகமெங்கும் தென்பட, மாலு பேசியதைக் கேட்ட கல்யாணி, ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டாள்.

15

திருச்சியில் கல்யாணியுடன் இரண்டு நாட்கள் போனதே தெரியாமல் பொழுது போயிற்று. தியாகு தன் நிறுவனம் பற்றிய வரவு, செலவு, கணக்குகள் அடுத்ததாக முன்னேறக் கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் பற்றி விபரமாகப் பேசினான் சிவலிங்கத்திடம்.

தியாகுவின் சுறுசுறுப்பான செயல்கள், திறமை எதையும் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் இவற்றை நன்றாக புரிந்து கொண்டார் சிவலிங்கம். “தியாகு, இவ்வளவு திறமைசாலியா இருக்கீங்க.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel