Lekha Books

A+ A A-

வரப்போகும் மாப்பிள்ளை

varapogum mapillai

மிகப் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும்; மிகுந்த அழகு படைத்தவனாக இருக்க வேண்டும்; நிறைய அதிகாரங்கள் படைத்தவனாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையிடம் இருக்க வேண்டும் என்பது சரோஜினியின் விருப்பமாக இருந்தது. திருமணத்தைப் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து- அதைப் பற்றி நினைக்கத் தொடங்கிய நாளிலிருந்து அவள் தன்னுடைய எதிர்கால கணவனைப் பற்றி கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தாள்.

தோழிகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் தங்களுடைய வரப்போகும் மணமகன்களைப் பற்றிதான் அவர்களுடைய பேச்சு இருக்கும். பத்மாக்ஷிக்கு ஒரு வக்கீல் கணவனாக வர வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. நான்கு கைகளைக் கொண்ட ஆடையை அணிந்து வண்டியில் ஏறி நீதிமன்றத்திற்குச் செல்லும் வக்கீல்களின் உயர்ந்த தன்மைகளைப் பற்றிக் கூறுவதற்கு அவனிடம் எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. நளினி தன்னுடைய மனதில் வைத்து வழிபட்டவன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தான். எல்லாருடைய அச்சத்திற்கும் மரியாதைக்கும் உரிய போலீஸ் இன்ஸ்பெக்டரின் அதிகாரங்களையும், பெருமைகளையும் பற்றிப் புகழ்ந்து பேசும்போது, நளினி உணர்ச்சி வசப்பட்டுவிடுவாள். லீலாவதிக்கோ நீதிபதி அவளுடைய கணவனாக வரவேண்டும். நீதிபதியின் அதிகாரங்களையும் அவருடைய மனைவிக்குக் கிடைக்கக் கூடிய கௌரவத்தையும் பற்றிப் பேசும்போது, அவள் ஒரு எஜமானியாகவே மாறிவிடுவாள். இப்படி தங்களுடைய எதிர்கால கணவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவர்களுக்கு  இடையே இருக்கும் ரசனை வேறுபாடுகள், சில நேரங்களில் சிறுசிறு சண்டைகள் உண்டாகக்கூட காரணங்களாக இருந்திருக்கின்றன.

நளினி கூறுவாள்: "போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்தால் எல்லாரும் கிடுகிடு என்று நடுங்குவார்கள்.''

உடனடியாக லீலாவதி பதில் கூறுவாள்: "நீதிபதிக்கு தூக்கில் போட்டு கொல்வதற்குக்கூட அதிகாரம் இருக்கிறது என்ற விஷயம் தெரியுமா?''

இடையில் பத்மாக்ஷி வேகமாகப் பாய்ந்து கூறுவாள்: "வக்கீல் இல்லையென்றால் இன்ஸ்பெக்டரும் நீதிபதியும் சும்மாதான் உட்கார்ந்திருக்க வேண்டும்.''

இறுதியில் சரோஜினி கூறுவாள்: "என் கணவருக்கு முன்னால் வக்கீலும் இன்ஸ்பெக்டரும் நீதிபதியும் மிகவும் சாதாரணமானவர்கள். வெறும் புழுக்கள்! அவர் மிகப்பெரிய பணவசதி கொண்டவராக இருப்பார். மிகவும் அழகானவராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். எல்லாவித திறமைகளையும் கொண்டவராக இருப்பார்.''

ஒரு விஷயத்தில் மட்டும் சரோஜினிக்கும் அவளுடைய தோழிகளுக்குமிடையே ஒற்றுமை நிலவியது. அவர்களுடைய எதிர்கால கணவர்கள் மிகவும் அழகானவர்களாக இருக்க வேண்டும் என்பதே அது.

நளினிக்குத்தான் முதலில் திருமண ஆலோசனை வந்தது. ஆனால், அவள் அந்த விஷயத்தை மற்றவர்களிடம் தெரிவிக்கவில்லை. திருமண நிச்சயதார்த்தமும் முடிவடைந்தது. அவள் படிப்பையும் நிறுத்திவிட்டாள். அப்போதுதான் சரோஜினிக்கும் மற்றவர்களுக்கும் விஷயமே தெரியவந்தது. மணமகன் ஒரு நிறுவனத்தில் க்ளார்க்காக வேலை செய்து கொண்டிருந்தான். சம்பளமாக முப்பது ரூபாய் கிடைத்துக் கொண்டிருந்தது. அழகானவனாக இல்லையென்றாலும், அவலட்சணமானவனாக இல்லை. திருமணத்திற்கு சரோஜினியையும் பத்மாக்ஷியையும் லீலாவதியையும் அழைத்திருந்தாள். அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்தே சென்றார்கள். நளினியின் விருப்பத்திற்கு

நேர்மாறாக நடைபெற்ற திருமணமாக இருந்ததால், அவள் கவலையில் இருப்பாள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவளுக்கு எந்தவொரு ஏமாற்றமும் இல்லை. ஒரு மனக்குறைவும் இல்லை.

லீலாவதி கேட்டாள்: "நளினி, இந்த அப்பிராணி க்ளார்க்குடன் செல்வதற்கு உனக்குச் சம்மதம்தானா?''

நளினி எந்தவொரு தயக்கமும் இல்லாமல் கூறினாள்: "விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும், நான் போய்த்தான் ஆக வேண்டும். பிறகு... விருப்பப்பட்டு போவதுதானே நல்லது?''

பத்மாக்ஷி சொன்னாள்: "நளினி, உனக்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிடைப்பதொன்றும் சிரமமான ஒரு விஷயமில்லை. பிறகு எதற்கு ஒரு க்ளார்க்கின் மனைவியாக நீ ஆனாய்?''

அலட்சியமான குரலில் நளினி சொன்னாள்: "இதெல்லாம் தலைவிதி, பத்மாக்ஷி. நாம நினைப்பதைப்போல எதுவும் எப்போதும் நடப்பதில்லை.''

சரோஜினிக்கு கோபம் வந்தது: "எதற்கு விதியைக் குறை கூறுகிறாய்? நாம் முயற்சி செய்தால் விருப்பப்படுவதுதான் நடக்கும். அதற்காக காத்திருப்பதற்குப் பொறுமை வேணும். எங்களுடைய திருமணங்களை நாங்கள் மனதில் நினைப்பதைப் போலவே நடப்பதை, நாங்கள் காட்டுகிறோம்.''

நளினி உறுதியான குரலில் கூறினாள்: "இதை வைத்து நான் திருப்திப்பட்டுக் கொள்கிறேன் சரோஜம். இந்த அளவிற்குத்தான் என்னுடைய நிலையே இருக்கு.''

அதற்குப் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. திருமணம் நடைபெற்றது. சரோஜினியும்

பத்மாக்ஷியும் லீலாவதியும் நளினிக்கு வாழ்த்துகள் கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்கள்.

அதற்குப் பிறகும் அவர்கள் மூவரும்- சரோஜினியும் பத்மாக்ஷியும் லீலாவதியும் ஒன்றாகச் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்குச் செல்வார்கள். போகும்போதும் வரும்போதும் அவர்கள் தங்களின் எதிர்கால மணமகன்களைப் பற்றி ஒருவரோடொருவர் விவாதித்துக் கொள்வார்கள். நளினிக்கு நடந்ததைப்போல அவர்களுக்கும் முட்டாள்தனமாக ஏதாவது நடைபெற்றுவிடக்கூடாது என்று அவர்கள் சபதம் எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நளினியைப்போல பொறுமையற்ற தன்மை வந்துவிடக்கூடாது என்று முடிவு செய்தார்கள். பத்மாக்ஷி மட்டும் அந்த அளவிற்கு கடுமையான உறுதிமொழி எதையும் எடுத்துக்கொள்ளவில்லை.

சில நேரங்களில் அவள் கூறுவாள்: "நளினி புத்திசாலிப் பெண். அவளுடைய நிலைக்கு ஏற்ற ஒரு கணவன் அவளுக்குக் கிடைத்திருக்கிறான். அவள் அதை ஏற்றுக்கொண்டாள். பெரிய அளவில் யாராவது வருவான் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தால், சில நேரங்களில் எதுவுமே நடக்காமல் போனாலும் போய்விடும்.''

சரோஜினிக்கு கோபம் வரும். "பத்மாக்ஷி, நீ என்ன முட்டாள்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறாய்? நமக்கென்ன நிலைமைக் குறைவு இருக்கிறது? படிப்பு இல்லையா? அழகு இல்லையா?''

லீலாவதியும் சரோஜினியைப் பின்பற்றிக் கூறுவாள்: "அதைத்தான் நானும் கூறுகிறேன். நமக்கு என்ன நிலைமைக் குறைச்சல் இருக்கு? நம்முடைய அழகையும் படிப்பையும் பார்க்கும்போது, நம்முடைய விருப்பம் மிகவும் சாதாரணமானது.''

பத்மாக்ஷி கிண்டலுடன் புன்னகைப்பாள். "இப்போ படிப்பையும் அழகையும் பார்ப்பதில்லையே! பணம் இருக்கிறதா பணம்? அதுதான்

பார்க்கப்படுவதே! நம்மைவிட அதிக அழகைக் கொண்டவர்களும் படிப்பைக் கொண்டவர்களும் வயதாகி நரைத்துப் போய்விட்டிருக்கிறார்கள்.''

சரோஜினிக்கு கோபம் வந்தது: "பத்மாக்ஷி, நீ பெரிய பணக்காரியாக இருப்பதால் அப்படிக் கூறுகிறாய். உங்களிடம் பணம் இருந்தால், கையிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.''

"நாங்கள் ஏழையாக இருந்தாலும், நாங்கள் விருப்பப்படுவதைப் போன்ற கணவர்கள் எங்களுக்குக் கிடைக்காமல் இருக்கமாட்டார்கள். வராவிட்டால், நாங்கள் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்துவிடுவோம்.''

அதற்குப் பிறகு பத்மாக்ஷி எதுவும் சொல்ல மாட்டாள்.

மிகப் பெரிய பணக்காரனும் அழகு படைத்தவனும் நிறைய படித்தவனும் எல்லாவித அதிகாரங்களையும் கொண்டவனுமான ஒரு இளைஞன்- அவனைத் தவிர வேறு எந்த ஆளும் சரோஜினியின் கழுத்தில் மணமாலையை அணிவிப்பதற்கு முடியாது என்று அவள் அழுத்தமாக முடிவு செய்தாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel