Lekha Books

A+ A A-

வரப்போகும் மாப்பிள்ளை - Page 4

varapogum mapillai

அவர் ஆச்சரியம் கலந்த குரலில் கூறினார்: "என்ன? புனிதமானதாகவும் உயர்வானதாகவும் உள்ள காதலை கேவலப்படுத்துகிறீர்களா?''

"நான் காதலை கேவலப்படுத்தவில்லை. கேவலப்படுத்தவும் மாட்டேன். என் ஆழமான காதலை இன்னொரு மனிதரிடம் செலுத்திவிட்டேன்.''

"அந்த அதிர்ஷ்டசாலி யார்?''

அவள் ஆர்வத்துடன் பதில் கூறினாள்: "ஆமாம்... அவர் அதிர்ஷ்டசாலிதான் அவர் மிகப்பெரிய வசதி படைத்தவர். மிகவும்

அழகானவர். நிறைய படித்திருப்பவர். சக்தி படைத்தவர். அவர் எங்கே? அப்பிராணியான நீங்கள் எங்கே?''

"அவருக்கு உங்கள் மீது காதல் இருக்கிறதா?'' -அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டார்.

"அதைத் தெரிந்து கொள்வதற்குத்தான் நான் உங்களிடம் கேட்டேன். நான் அவரைப் பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை.''

அவர் விழுந்து விழுந்து சிரித்தார். "சரிதான்... உங்களுடைய காதல் நிறைவேறும்.''

அதற்குப் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி அவர் பேசவில்லை. சில நேரங்களில் அவர் அங்கு வருவார். சில நாட்கள் கடந்த பிறகு, அங்கு வருவதையே நிறுத்திக் கொண்டார்.

வருடங்கள் நான்கைந்து கடந்தோடிவிட்டன. மிகப்பெரிய செல்வந்தரும் அழகு படைத்தவரும் நிறைய அதிகாரங்கள் படைத்தவருமான எதிர்கால மணமகனை மனதில் வழிபட்டுக் கொண்டு, அவள் நாட்களை எண்ணி எண்ணி கடத்திக் கொண்டிருந்தாள். சில நேரங்களில் தியானத்தில் இருப்பதைப்போல இருக்கும் அவளைப் பார்த்து, அந்த அழகான சிலை புன்னகைக்கும். அவளைப் பெயர் சொல்லி அழைக்கும். அவள் வெட்கத்துடன் அப்படியே நின்று கொண்டிருப்பாள். அந்த மனிதன் அவளின் அருகில் செல்வான். உணர்ச்சிவசப்பட்டு அவளை இறுகக் கட்டிப்பிடிப்பான். அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு அங்கு நடப்பார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் பெருமையாக நினைக்கும்; வாழ்த்தும். அவர்கள் அந்த பிரம்மாண்டமான இல்லத்திற்குள் நுழைவார்கள். தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து காதல் ரசம் கொண்ட பாடல்களைப் பாடி அங்கு ஆடிக்கொண்டிருப்பார்கள். அந்த மனிதன் அவளைத் தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருப்பான்.

அவள் அவனுடைய மார்பில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டு ஆனந்தம் அடைந்து கொண்டிருப்பாள். திடீரென்று அவள் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் இருந்து கீழே விழுவாள். மாளிகை இடிந்து தூள்தூளாகி தரையில் விழும். அவளுடைய கணவன் கண்களுக்கு முன்னாலிருந்து மறைந்து போவான். பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் கைகளைத் தட்டிச் சிரிக்கும். அவள் வாழ்வின் கொடூரமான உண்மைகளை நோக்கி கண்களைத் திறப்பாள். மீண்டும் கண்களை மூடிக்கொள்வாள். மிகப் பெரிய செல்வந்தனும் அழகான தோற்றத்தைக் கொண்டவனும் சகல சக்திகள் படைத்தவனுமான அந்த இளைஞன் அவளுக்கு முன்னால் வந்த நிற்பான்.

கற்பனை! வெறும் கற்பனை!

அவளுடைய அன்னைக்கும் தந்தைக்கும் அவள்மீது வெறுப்பு உண்டாக ஆரம்பித்தது. அவள் அவர்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சுமையாக தோன்ற ஆரம்பித்தாள். வீட்டில் எந்தவொரு வேலையையும் செய்யாமல் குளியலும் உணவும் முடிந்து அங்கேயே உட்கார்த்திருப்பது- அதற்கேற்ற நிலைமை எதுவும் அந்த குடும்பத்திற்கு இல்லை. அவளுடைய தாய் மெதுவாக முணுமுணுக்க ஆரம்பித்தாள்: "பெண்ணை யாருடனாவது அனுப்பி வைக்காமல், இப்படி வைத்துக் கொண்டிருந்தால் எப்படி? பெண் நன்கு அலங்கரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால், சாப்பிடுவதற்கு இங்கு ஏதாவது இருக்குதா? கஞ்சிக்கு வழியில்லை. நீதிபதி வருவார் என்று தந்தையும் மகளும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியே உட்கார்ந்து வயதாகி நரை விழட்டும். யாருக்கு பாதிப்பு?''

காலப்போக்கில் தந்தையும் தாயின் கருத்தை ஒத்துக்கொள்ள ஆரம்பித்தார். "அந்த ஏஜென்டை கல்யாணம் பண்ணி வைத்திருக்கலாம். அவனிடம் தேவையான அளவிற்கு பணம் இருக்கு.  நல்ல திறமையானவன். பார்ப்பதற்கும் லட்சணமா இருக்கிறான். அந்த

குமாஸ்தாவும் அப்படியொன்றும் மோசமில்லை. அரசாங்க வேலை. வெளியேயும் வருமானம் இருக்கு. அப்போ பெரிய கொம்பைப் பிடிக்க வேண்டும் என்று பார்த்தோம். இப்போது யாருமே வருவது இல்லை.''

அவள் அவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பாள். அவளுடைய இதயம் வேதனையால் துடித்தது. அவளுடைய மனம் ஏமாற்றத்தை நோக்கி நீங்கிக் கொண்டிருந்தது. வாசனை நிறைந்த சோப் வேண்டும். இரவிக்கைக்கு புதிய வகையான துணிகள் வேண்டும். புதிய புடவைகள் வேண்டும். அவை எதுவுமே அவளுக்குக் கிடைக்கவில்லை. தந்தையிடம் கூறினால் அவர் மவுனமாக உட்கார்ந்திருப்பார். தாயிடம் கூறினால் திட்டுவாள். அவள் கலங்கிப்போய்விட்டாள். சோப்பே இல்லாமல் குளிப்பதற்கு அவள் தள்ளப்பட்டாள். பவுடரை முழுமையாக நீக்கியே விட்டாள். கிழிந்துபோன இரவிக்கைகளை தைத்து அணிய ஆரம்பித்தாள். அதுதான் சங்கடமான விஷயமே. "அடியே... இந்த நெருப்பைக் கொஞ்சம் எரிய வை. சிறிது நீர் கொண்டு வா. இந்த தேங்காயை அரை...'' இப்படி ஒவ்வொரு வேலைகளையும் அவளுக்குக் கொடுக்கத் தொடங்கினார்கள். ஒரு முண்டு அணிந்தால் அதில் கரி ஆகிவிடும். உடம்பெங்கும் புகையின் வாசனை இருந்தது.

நெருப்பிற்கு அருகில் உட்கார்ந்து ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. முடியவில்லை... வசதி படைத்த பணக்காரனாகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் எல்லாவித அதிகாரங்களையும் கொண்டவனாகவும் இருக்கக்கூடிய எதிர்கால மணமகனைக் கனவு காணக்கூடிய விளையாட்டு வீராங்கனையான சரோஜினி- அவளால் இவை எதையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

வாழ்க்கை என்றால் என்ன என்பதை அவள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். அது மிகப் பெரிய கனவு அல்ல என்பதையும் கற்பனை அல்ல என்பதையும் அவள் உணர ஆரம்பித்தாள். கருங்கல்லைப் போல

கடுமையான ஒரு உண்மை- அதுதான் வாழ்க்கை என்பதை அவள் புரிந்துகொண்டாள். அவளுடைய தோழிகள் அந்த உண்மையை நேரடியாக சந்தித்தார்கள். நளினி அவளுக்குக் கிடைத்த குமாஸ்தாவுடன் அந்த வகையில் வாழ்ந்து கொண்டிருந்தாள். பத்மாக்ஷி- அவளுக்கு நல்ல ஒரு மணமகன் கிடைத்தான். லீலாவதி -அவளுடைய நிலை என்ன? சரோஜினி நினைத்தாள். அந்த ஏஜென்டே போதும்தான்... மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் குமாஸ்தா... அந்த ஆள் என்னை பொன்னைப் போல கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பார். மர வியாபாரியின் மகன்... அவன் என்னை வழிபட்டுக் கொண்டு இருந்திருப்பான். அந்த ஆசிரியர்... கஷ்டம்! அந்த மனிதரையும் நான் வேண்டாம் என்று ஒதுக்கினேன். தனியாக உட்கார்ந்து அவள் அழுவாள்.

அவளுடைய தாய், கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக திங்கட்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று அவளிடம் சொன்னாள்.

அவளுக்கும் அது நல்ல விஷயம் என்று தோன்றியது. ஒரு திங்கட்கிழமை அவள் கோவிலைச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். அப்போது லீலாவதியும் முன்பு பார்த்த அந்த ஆசிரியரும் சேர்ந்து தொழுவதற்காக வந்து கொண்டிருந்தார்கள். சரோஜினியின் இதயத்தில் ஒரு வேதனை உண்டானது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel