Lekha Books

A+ A A-

விலக்கப்பட்ட கனி

vilakappatta kani

திருமணத்திற்கு முன்னால் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் எந்தவொரு மறைவும் இல்லாமல் அவர்கள் காதலித்தார்கள். கடற்கரையில் தான் அவர்களுடைய முதல் சந்திப்பு நடந்தது. கடலின் பின்புலத்தில் அழகான குடையுடனும் கண்ணைக் கவரும் ஆடைகளுடனும் கடந்து சென்ற அந்த நல்ல நிறம் கொண்ட இளம் பெண்ணை அவனுக்கு மிகவும் பிடித்தது.

பரந்து கிடக்கும் வானமும், நீல சுருக்கங்களைக் கொண்ட அலைகளும் சாட்சிகளாக இருக்க, அந்த இளமைத் தவழும் அழகான பெண்ணை அவன் காதலித்தான். சிரமப்பட்டு பறந்து கொண்டிருந்த அந்தப் பெண் கொடி கையில் கிடைத்தவுடன் அவனுடைய மனதில் உற்சாகம் உண்டானது. சூரியனும் அலைகளும் உப்பு மணம் வரும் காற்றும் அவனுடைய இதயத்திலும் நரம்புகளிலும் உணர்ச்சி அலைகளை எழச் செய்தன.

அவன் அவளை மிகவும் அதிகமாக கவனிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டதும், அவள் அவனை மேலும் அதிகமாக காதலித்தாள். அவன் இளைஞனாக இருந்தான். நல்ல வசதி படைத்தவனாக இருந்தான். அழகிய தோற்றத்தைக் கொண்டவனும், நல்ல மரியாதை தெரிந்தவனாகவும் இருந்தான். அதனால் அவள் அவனை மிகவும் விரும்பினாள்.

மூன்று மாத காலம் கையோடு கையும் மெய்யோடு மெய்யும் கண்ணோடு கண்ணும் சேர்ந்து அவர்கள் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு நாள் காலையில் குளிப்பதற்கு முன்பு அவர்கள் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டதற்கும், மாலை நேரங்களில் நட்சத்திரங்களை சாட்சியாக வைத்துக் கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு அவர்கள் கூறிக்கொண்ட பிரியாவிடைபெறும் வார்த்தைகளுக்கும், இரவின் புத்துணர்ச்சிக்கும், ஒன்றோடொன்று எந்தச் சமயத்திலும் ஒன்று சேர்ந்திராத அவர்களுடைய உதடுகளில் முத்தத்தின் ருசி இருந்தது.

தூக்கத்திற்குள் நுழைவதுடன் தங்களைப்பற்றி அவர்கள் ஒருவரையொரவர் கனவுகள் கண்டார்கள். கண் விழித்தவுடன் அவர்கள் ஒருவரைப்பற்றி இன்னொருவர் நினைத்தார்கள். ஒருவரோடொருவர் எதுவுமே கூறாமல், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒன்று சேர அவர்கள் ஏங்கினார்கள். திருமணத்திற்குப் பிறகு பூமியில் இருக்கும் எந்தவொரு பொருளையும்விட அவர்கள் ஒருவரையொருவர் வழிபட்டுக் கொண்டாடினார்கள். முதலில் அது காமத்தின் உற்சாகமான ஆக்கிரமிப்பாக இருந்தது. பிறகு வெளிப்படையான கவிதையும், புனிதமான உறவாகவும் ஆனது. கொஞ்சல்கள் மேலும் புனிதமாக்கப்பட்டது. சந்திப்புகள் குறைந்து கொண்டே வந்தன. அதற்குப் பிறகு அந்தச் சந்திப்புகளே இல்லாமல் போயின. புனிதமற்ற ஏதோ ஒன்று அவர்களின் பார்வைகளில் தங்கி நின்றது. அவர்களுடைய நடவடிக்கைகளில் இரவுகளின் தீவிரமான உறவின் எச்சம் தெரிந்தது.

அவர்களுக்கு ஒருவரோடொருவர் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தாலும், அவர்கள் அதை வெளிப்படையாகக் கூறுவதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தார்கள் என்பதென்னவோ உண்மை. ஆனால், அதில் கூடுதலாக எதையும் வெளிப்படுத்தவோ, கூடுதலாக எதையும் செய்யவோ அவர்களால் முடியவில்லை. அதற்குமேல் வெளிப்படையான வார்த்தைகளோ நடவடிக்கைகளோ அவர்களிடமிருந்து உண்டாகவில்லை.

முதல் அணைப்புகளுக்குப் பின்னால் பலவீனமாகிக் கொண்டிருந்த அந்த நெருப்பை எரியச் செய்ய அவர்கள் ஒருவரோடொருவர் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் காதலைப் பற்றிய புதிய வழிமுறைகளைச் சோதித்துப் பார்த்தும், எளிமையும் சிக்கலும் நிறைந்த தந்திரங்களைப் பயன்படுத்தியும் இதயத்திற்குள்ளும் உடலுக்குள்ளும், திருமண நாட்களின் தீவிரமான உற்சாகத்தையும் ஆவேசத்தையும் நிலை நாட்டுவதற்காக அவர்கள் ஏராளமான முயற்சிகளைச் செய்தார்கள்.

ஒழுங்கில்லாமல் வடிவமைக்கப்பட்ட, பல நேரங்களில் எல்லை கடந்த காமத்தின் ஆவேசத்தை அவர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் கசங்கி தளர்வில் விழுந்தார்கள்.

இரவின் அழகில், நிலவில், பனியில் மூடி நின்று கொண்டிருக்கும் மலை உச்சி வழியாக, காவியச் சிற்பங்கள் வழியாக, பள்ளத்தாக்குகள் வழியாக, கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்களின் உற்சாகப் பெருக்குக்கு மத்தியில் அவர்கள் பயணம் செய்தார்கள்.

ஒருநாள் காலையில் ஹென்ரீத்தா போளிடம் கேட்டாள்:

“உணவு சாப்பிடுவதற்காக நீங்கள் என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போக முடியுமா?”

“அதற்கென்ன கண்ணே?”

“எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு ஹோட்டலுக்கு...”

“சரி...” - தன்னிடம் கூறாத ஏதோ வொன்று அவளுடைய மனதில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, ஏதோ கேட்க நினைப்பதைப்போல அவன் அவளைப் பார்த்தான்.

அவள் தொடர்ந்து சொன்னாள்: “எப்படி அதை விளக்கிச் சொல்வது என்றே எனக்குத் தெரியல. என்ன சொல்றது...? ஆணும் பெண்ணும் ஒண்ணு சேர்றதுக்காக போற ஹோட்டல் இருக்குல்ல... அப்படி ஒண்ணு...”

அவன் புன்னகைத்தான். “எனக்குப் புரிஞ்சிடுச்சு. நமக்காக தனிப்பட்ட முறையில் ஒரு  அறை... அப்படித்தானே?”

“அங்கேதான்... ஆனால், முன்பு பல முறை போயிருக்கும், சாயங்காலங்களில் இரவு உணவு சாப்பிடும்... அதாவது... நான் என்ன சொல்றேன்னா... என்னால் அதைச் சொல்ல முடியல...”

“சொல்லு பெண்ணே. நமக்கு இடையில் மறைக்கிறதுக்கு என்ன இருக்கு? நமக்கு இடையில் சிறிது கூட ரகசியத்துக்கான தேவையே இல்லையே!”

“இல்ல... என்னால் சொல்ல முடியாது...”

“ஏய்... சொல்லுடி பெண்ணே... உனக்கு எதற்கு இந்த அளவிற்கு அதிகமான வெட்கம்? நீ மனதைத் திறந்து சொல்லு..”

“சரி... ம்... ஆனால், ஒருநாள் உங்களுடைய வைப்பாட்டியா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். நீங்கள் திருமணமானவர் என்ற விஷயத்தை அறியாத வெயிட்டர்கள் நான் ஒரு வைப்பாட்டி என்று நினைக்கணும். அந்த ஒரு மணி நேரத்துக்கு நீங்களும் நான் ஒரு வைப்பாட்டி என்றே நினைக்கணும். அப்போ உங்களுக்குள் அந்தப் பழைய நினைவுகள் கடந்து வரணும். உங்க முன்னாடி உங்களோடு சேர்ந்து ஒரு பெரிய பாவத்தைச் செய்ய நான் விரும்புறேன். என்னை வெட்கப்பட வைக்காதீங்க... எனக்கு நாணம் வருது. இங்கே பாருங்க. வெறுமனே உணவு சாப்பிடுறதுக்காக இல்ல. இளம் வயதைக் கொண்ட ஆணும் பெண்ணும் இரவு நேரத்தில் ஒரு அறையின் தனிமையில்... ச்சே... வேண்டாம்... என் முகம் மலரைப் போல சிவக்குது... என்னை அப்படிப் பார்க்காமல் இருங்க!”

அவன் ஆச்சரியத்துடன், சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்துப் சொன்னான்: “சரி... இன்னைக்கு சாயங்காலம் எனக்கு நல்லா தெரிஞ்ச ஒரு பெரிய ஹோட்டலுக்கு நாம போறோம்.”

ஏழுமணி ஆனபோது அவர்கள் நகரத்திலேயே மிகவும் பெரியதாக இருக்கும் ஹோட்டலின் படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்கள். எதையோ அடிமைப்படுத்துகிறோம் என்ற எண்ணம் அவனிடம் இருந்தது என்றால், அவளுக்கு வெட்கமும் உள்ளுக்குள் சந்தோஷமுமாக இருந்தது. நான்கு நாற்காலிகளும், வெல்வெட் விரிக்கப்பட்டிருந்த ஒரு சோஃபாவும் போடப்பட்டிருந்த ஒரு சிறிய அறைக்குள் அவர்கள் நுழைந்தவுடன் வெயிட்டர் மெனுவுடன் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றான். அவன் மெனு அட்டையை அவளிடம் தந்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கிளி

கிளி

July 25, 2012

மீசை

மீசை

April 2, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel