Lekha Books

A+ A A-

வரப்போகும் மாப்பிள்ளை - Page 5

varapogum mapillai

லீலாவதி ஓடி வந்து அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்: "மன்னிக்கணும், சரோஜம். மிகவும் குறுகிய காலத்தில் எங்களுடைய திருமணம் நடந்துவிட்டது. யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை. யாரையும் அழைக்கவும் இல்லை.''

அதற்கு சரோஜினி எந்த பதிலும் கூறவில்லை. அவள் வேறு சில விஷயங்களைக் கூறி, அந்த விஷயத்தை மறைத்துக் கொண்டாள். இவ்வாறு நலம் விசாரிப்புகள் முடிந்து, அவர்கள் அங்கிருந்து பிரிந்து

சென்றனர். ஆசிரியர் லீலாவதியின் கையைப் பிடித்துக்கொண்டே சென்றார். போய்க் கொண்டிருக்கும்போதே அவர் சரோஜினியைத் திரும்பி ஒரு முறை பார்த்து, சற்று புன்னகைத்தார். வெற்றி பெற்றுவிட்டதைப் போல திரும்பிச் செல்லவும் செய்தார்.

அந்த வகையில் அதுவும் போய்விட்டது.

மனிதர்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் நசுக்கி மிதித்துக் கொண்டு, எல்லையற்ற காலம் வாழ்க்கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தது. சரோஜினிக்கு முப்பத்தியிரண்டு வயது கடந்துவிட்டன. ஒரு நாள் குளித்து முடித்து, திலகம் வைப்பதற்காக அவள் கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றாள். அவளுடைய முகம்! கடவுளே! அங்குமிங்குமாக சில சுருக்கங்கள்... ஏமாற்றம், நிறைவற்ற தன்மை ஆகியவற்றைக் காட்டும் சுருக்கங்கள்! முகம் முழுவதிலும் ஒரு வெளிறிப் போன தன்மை! ஒரு துளி அளவுகூட அன்பு கிடைக்காமல் திரி எரிந்துபோய் அணையப்போகும் தீபம்...

ஒரு இரவு உணவு முடிந்து, அவள் திண்ணையில் குத்து விளக்கிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய அன்னையும் தந்தையும் தம்பிகளும் படுத்துவிட்டார்கள். அவள் கவலை நிறைந்த சிந்தனைகளில் மூழ்கிப்போய் உட்கார்ந்திருந்தாள்.

தேநீர் கடைக்காரன் கோந்தியண்ணன் தன்னுடைய பெரிய வெற்றிலை, பாக்கு பொட்டலத்துடன் அங்கு வந்தார். கடையை மூடிவிட்டால், அதற்குப்பிறகு தூக்கம் வருவது வரை தமாஷாகப் பேசிக்கொண்டிருப்பதற்காக அவர் ஏதாவது வீட்டிற்குச் சென்று உட்காருவார். அவர் எந்த வீட்டிற்குள்ளும் எந்த நேரத்திலும் நுழையலாம். யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் உண்டாகாது. யாருக்கும் எந்தவொரு புகாரும் இல்லை.

கோந்தியண்ணனுக்கு சொந்தம் என்று கூறுவதற்கு கோந்தியண்ணன் மட்டுமே இருக்கிறார். ஐம்பது... ஐம்பத்தைந்து வயது இருக்கும். சரோஜினிக்கு ஞாபகத்தில் இருக்கிற காலத்தில் கோந்தியண்ணனின் தேநீர் கடை எல்லாருக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக இருந்தது. அப்போதும் எச்சில் துப்பும் பாத்திரத்தைப்போல இருக்கும் வாயுடனும் பெரிய வெற்றிலை, பாக்கு பொட்டலத்துடனும் கோந்தியண்ணன் அங்கு வருவதுண்டு. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. திருமணத்தைப் பற்றி யாராவது கேட்டால், அவர் கூறுவார்: "நீங்கள் எல்லாரும் திருமணம் செய்து சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தாலே போதும். அதுதான் எனக்கும் சந்தோஷம்.''

அன்றும் கோந்தியண்ணன் எப்போதும்போல எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சரோஜினிக்கு நேர் எதிரில் ஒரு தடுக்கை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். அவளும் அங்கேயே தான் உட்கார்ந்திருந்தாள். வெற்றிலை, பாக்கு பொட்டலத்தை எடுத்து முன்னால் வைத்துவிட்டு அவர் கேட்டார்: "என்ன... விளக்குக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு கனவு கண்டு கொண்டிருக்கிறாய்?''

"தூக்கம் வரவில்லை, கோந்தியண்ணா. அதனால இப்படி உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நான் அப்பாவை அழைக்கட்டுமா?''

"வேண்டாம்... நான் புறப்படுறேன்.'' அவர் பொட்டலத்தை அவிழ்த்து, வெற்றிலையைப் போட ஆரம்பித்தார். வாசலை நோக்கி தலையை நீட்டி துப்பிவிட்டு அவர் கேட்டார்: "சரி... இப்படியே எவ்வளவு நாட்கள் இருப்பே?''

கேள்விக்கான அர்த்தம் புரியாததைப்போல அவள் சொன்னாள்: "இப்படியே இருக்க மாட்டேன். படுக்கப் போறேன்.''

அவர் சிரித்தார்: "நான் அதைக் கேட்கவில்லை. இப்படி தனியாகவே இருந்தால் போதுமா?''

"கோந்தியண்ணா, நீங்களும் தனியாத்தானே இருக்கீங்க?'' அவருடைய முகத்தில் திடீரென்று ஒரு கவலையின் சாயல் தோன்றியது.

சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டு அவர் சொன்னார். "என் விஷயத்தைக் கணக்கிலேயே எடுக்க வேண்டாம்.''

"என் விஷயத்தையும் கணக்கில் எடுக்க வேண்டாம். கோந்தியண்ணா, சிலருடைய தலைவிதி இப்படித்தான்.'' அவளுடைய தொண்டை இடறியது.

அவர் எதுவும் கூறவில்லை. இருவரும் எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

சில நிமிடங்கள் அப்படியே கடந்து சென்றன. சரோஜினியின் ஆசைகள், அவளுடைய எதிர்பார்ப்புகள்- இவை அனைத்தும் நொடி நேரம் அவளுடைய மனதிற்குள் கடந்து சென்றன. அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டன. ஆடையின் நுனியால் கண்களைத் துடைத்துக்கொண்டே அவள் சொன்னாள்: "இது என்னுடைய தலைவிதி, கோந்தியண்ணா...''

அவர் அதை ஏற்றுக்கொண்டு சொன்னார்: "ஆமாம்... தலைவிதிதான்... அழாதே!''

ஒரு பேரமைதி... கோந்தியண்ணன் என்னவோ கூற முயற்சித்தார். ஆனால், அவர் எதுவும் கூறவில்லை.

கிழக்கு திசை வானத்தின் விளிம்பில் நிலவு உதயமாகி மேலே வந்தது. அவர்கள் இருவரும் நிலவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகும் கோந்தியண்ணன் என்னவோ கூற முயன்றார். ஆனால், அவரிடமிருந்து ஒரு நடுக்கம் நிறைந்த ஓசை மட்டுமே வெளியே வந்தது.

அவள் கேட்டாள்: "என்ன சொல்ல நினைக்கிறீங்க?''

"ஒண்ணுமில்ல...''

அதற்குப் பிறகும் நிமிடங்கள் கடந்தோடிக் கொண்டிருந்தன. அவர் கேட்டார்: "இருட்டு எத்தனை நாழிகை?''

"பதினான்கு.''

"பாதி ராத்திரி ஆயிடுச்சு.''

"ம்...''

"நான் கிளம்பட்டுமா?''

"ம்...''

அவர் எழுந்தார். நீண்ட ஒரு பெருமூச்சை விட்டார்.

என்னவோ கூற நினைத்தார். ஒரு தடுமாறிய சத்தம் மட்டும் வெளியே வந்தது.

அவள் கேட்டாள். "என்ன?''

"ஒண்ணுமில்ல... போய் படு...''

"நான் படுத்துக்கிறேன்... நீங்க போங்க.''

"நீ படுத்த பிறகுதான் நான் போவேன். இரவு நேரத்துல நீ இப்படி தனியா உட்கார்ந்திருக்கக் கூடாது!''

அவள் விளக்கை எடுத்துக்கொண்டு எழுந்தாள். கோந்தியண்ணன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார். அவள் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தாள்.

விளக்கைப் பிடித்துக் கொண்டே அவள் அடைத்த கதவிற்கு அருகிலேயே நின்றிருந்தாள். ஒரு தாங்க முடியாத பேரமைதி... ஒரு சகித்துக்கொள்ள முடியாத தனிமை... ஒரு நீண்ட பெருமூச்சு... விளக்கு அணைந்துவிட்டது. அவள் கதவைத் திறந்தாள்.

கோந்தியண்ணன் அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

அவள் மெதுவான குரலில் கேட்டாள்: "போகலையா?''

அவர் நடுங்கும் குரலில் கேட்டார்: "படுக்கலையா?''

தாங்க முடியாத பேரமைதி!

அவள் கேட்டாள்: "ஏன் போகல?''

"ஏன் படுக்கல?''

அதற்குப் பிறகும் அந்த தாங்க முடியாத பேரமைதி. அவர் இரண்டு அடிகள் முன்னால் எடுத்து வைத்தார். திடீரென்று அதே இடத்தில் நின்றுவிட்டார். அவள் தன் வலது காலைச் சற்று தூக்கி மீண்டும் அழுத்தமாக வைத்தாள்.

"போகலையா?'' அவள் கேட்டாள்.

"படுக்கலையா?'' அவர் கேட்டார்.

"ம்...'' அவள் முனகினாள்.

"ம்...'' அவரும் முனகினார்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel