Lekha Books

A+ A A-

நிஸாகந்தி

nisakanthi

னக்கு மிகவும் பிடித்தது ‘நிஸாகந்தி’யின் வாசனைதான்.‘நைட்குயின்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்தச் செடியின் சிறிய மலர்களிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து வரும் வாசனைக்கு ஈடு இணையாக வேறு எந்த வாசனையும் இல்லை என்பதே உண்மை.

வேலியில் படர்ந்திருக்கும் கொடிகளிலிருந்தும், வீட்டு முகப்பிலிருந்தும் புறப்பட்டு வரும் அந்தப்புதிய மணம், இருட்டு நேரத்தில் காற்றில் கலந்து வந்து என் மனதை ஒரு ஆனந்த அனுபவத்தில் மூழ்கடிப்பதுண்டு. ‘இந்த இரவுராணி’மலர்களின் விலைமாது என்பதுதான் என் எண்ணம். பகல் முழுவதும் நன்றாக உறங்கிவிட்டு, மாலைநேரம் கடந்ததும், இருட்டில் பதுங்கிச் சென்று யாருக்கும் தெரியாமல் ஆட்களை இறுகத் தழுவி தன் மீது அவர்களை முழுமையாக ஈர்த்து... ஆமாம், அந்த மனதை மயக்கக்கூடிய மணம் ஒரு விலைமாதுவிடம் மட்டுமே இருக்கக்கூடியது.

ஆனால், என்னுடைய சொந்த தோட்டத்தில் ஒரு நிஸாகந்திச் செடியை நட்டு வைக்க நான் எப்போதும் சம்மதித்ததில்லை. பலவகைப்பட்ட பூச்செடிகள் வளர்ந்திருக்கும் என்னுடைய தோட்டத்தில் ஒரு நிஸாகந்திச் செடியைக்கூட உங்களால் பார்க்க முடியாது. அதற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம் இருக்கிறது. அதற்குப்பின்னால் ஒரு பழைய கதை இருக்கிறது.

அப்போது நான் பதினேழு வயது நிரம்பிய ஒரு கல்லூரி மாணவனாக இருந்தேன். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் பதினேழு வயது என்பது சிறிது ஆபத்து நிறைந்த ஒரு கட்டம் என்பது உண்மை. ஆங்கிலேயர்கள் இந்தப் பதினேழாம் வயதை ‘ஸ்வீட் ஸெவன்டீன்’ என்று கூறினாலும், நான் அதற்கு ‘ஆபத்து நிறைந்த பதினேழு’ என்றுதான் பெயரிட்டு அழைக்க நினைக்கிறேன். புதுமையின் ஈர்ப்பில் இந்தப் பதினேழு வயது வாலிபன் மனதில் என்னவெல்லாமோ தோன்றும். தேவையற்ற காதல் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பலவற்றையும் உளறிக் கொண்டு, புதிது புதிதாகக் கேட்கிற ஒவ்வொரு கொள்கையின் பின்னாலும் ஓடி அலைந்து, கீழே விழுந்து, மண்ணில் புரண்டு பார்க்க அழகாக இருக்கும் ஒவ்வொரு இளம்பெண்ணையும் தேவதையாக மனதில் நினைத்து வழிபட்டு, ஏமாற்றமடைந்து நடந்து திரியும் யாருக்கும் எந்தவித கெடுதலும் செய்ய நினைக்காத ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பவனாக அந்தப் பதினேழு வயது இளைஞன் இருப்பான். இந்தப் பதினேழு வயது வாலிபனை பத்திரிகை ஆசிரியர்கள் பலவித கஷ்டங்களுக்கும் ஆளாக்குவதுண்டு. காரணம்- எந்தக் கழுதையின் மூளைக்கும் கவிதை எழுதத் தோன்றும் ஒரு வயது அது. அவன் அந்தச் சமயத்தில் பெரும்பாலும் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்க்கும் சராசரி மனிதர்களில் ஒருவனாகத் தன்னை ஆக்கிக் கொள்ளாமல், அப்படி ஆக விரும்பாமல், ஆன்மிகவாதி போல் ஒரு வகைப்பட்ட தத்துவம் பேசும் மனிதனாக அவன் இருப்பான்.

என்னுடைய காதல் விஷயமும் அப்படித்தான் இருந்தது. நளினி, லீலா என்று எல்லார் மீதும் காதல் கொண்டேன் அப்போது. என்னுடைய ஆதர்ச காதலன் இத்தாலிய ‘டான்டே’தான்.

பல பெண்களின் அழகையும், குணத்தையும் அவர்களுக்குத் தெரியாமலே அலசிப்பார்த்து, காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்து, கடைசியில் என்னுடைய ஆதர்ச காதலி ஆகக்கூடிய அதிர்ஷ்டசாலி என்று நான் தேர்ந்தெடுத்தது மாலதியைத்தான். மாலதி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி. நன்கு வெளுத்து, சற்று பருமனான உடலைக் கொண்டிருக்கும் பெண் அவள். உருண்டு திரண்டிருக்கும் மார்புகள். நிலவைப் போல வட்டமான முகம். அவளுடைய கண்களில் எப்போதும் பார்ப்போரைக் கிறங்க வைக்கும் ஒரு போதை இருக்கும். அவளின் அந்தக் கண்கள்தான் என்னை முதலில் கவர்ந்ததே. மொத்தத்தில் அவளிடம் அழகு கொலுவீற்றிருந்தது. ஒருமுறைகூட சிறிதும் சிரிக்காமல் மிடுக்குடன் இருக்கக்கூடியவள் மாலு. அவள் அப்படி கர்வத்துடன் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இளம்பெண்கள் பொதுவாக அப்படித்தான் இருக்க வேண்டும். எப்போதும் சிரித்துக் கொண்டு, குதித்துக் கொண்டு தெருக்களில் நடந்து செல்லும் இளம்பெண்களை நான் எந்தச் சமயத்திலும் விரும்பியதில்லை. அடர்த்தியான பச்சை நிறத்தில் பருத்தித் துணியாலான பாவாடையையும் சிவப்பு புள்ளிகளைக் கொண்ட வெள்ளை நிற ப்ளவுஸையும் அணிந்துகொண்டு இடது கையில் மாங்காயின் வடிவத்தில் பிடியைக் கொண்ட ஒரு சிறிய குடையைப் பிடித்தபடி சாலையோரத்தில் முகத்தைக் குனியவைத்தவாறு அவள் நடந்து செல்வதை உற்சாகத்துடன் பார்த்தவாறு ஒவ்வொரு நாள் மாலை நேரத்திலும் என் வீட்டு மாடியில் நான் நின்றிருப்பேன். நான் அங்கு நின்றிருப்பது அவளுக்குத் தெரியாது. நான் அவளை இரவும் பகலும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதும் அவளுக்குத் தெரியாது. எங்கள் கணக்குப் பேராசிரியர் ராமநாத அயச்யர் ‘லாகரிதம்’ ‘டான்ஜன்ட்’ எல்லாம் அடங்கிய வீட்டுக்கணக்குகள் கொடுத்திருப்பதை ஒரு மூலையில் வைத்துவிட்டு நான் மாலதியைப் பற்றியும் அவள் குணத்தைப் பற்றியும் அவள் கையில் இருக்கும் புத்தகங்களைப் பற்றியும் அவளுடைய கவிதைகளைப் பற்றியும் சதா நேரமும் நினைத்துக் கொண்டிருப்பேன்.

‘குன்றென வளர்ந்து வரும் என் மார்பு

காண்பாய் என் இதயம் எரிவதை’

அவளின் கவிதையில் இருந்த அந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆனால் கவிதை எழுதியிருக்கிறாள் என்பதற்காக அவளை மிகவும் விஷயம் தெரிந்த பெண் என்று நினைக்க நான் தயாராக இல்லை. புதுமையான லட்சியம் நிறைந்த ஒரு தெய்வீகக் காதல் என்றால் அதில் ஒரு சோகம், ஏமாற்றம் இதெல்லாம் இருக்க வேண்டும். மதனனைப் போல காதலில் ஏமாற்றமடைந்து தத்துவங்கள் கலந்த பாடல்களைப் பாடிக்கொண்டு நடந்து திரிவதற்கான ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவேண்டுமென்று நான் கடவுளிடம் வேண்டினேன். மாலு என் தோள்மீது சாய்ந்துவிழும் அந்தக் காட்சியை நான் என் மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு பர்லாங் தூரத்திலிருக்கும் விசாலமான ஒரு நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பெரிய வீடுதான் மாலதியின் வீடு. நானும் அவள் தந்தையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது ‘என்ன?’ ‘நல்லது’ என்பதைத் தவிர வேறு எதையும் பேசிக் கொண்டதில்லை. எப்போதும் தரையைப் பார்த்து நடந்து கொண்டிருக்கும் மாலதி என்னுடைய முகத்தை ஒரு முறையாவது பார்த்திருப்பாளா என்பதுகூட சந்தேகம்தான்.

இரவில் சாப்பாடு முடிந்ததும், சிறிதுநேரம் நடந்துவிட்டு வரலாம் என்று நான் வெளியே போவேன். பாதையை விட்டுப் பிரிந்து போகும் அந்த ஒற்றையடிப்பாதை மாலதியின் வீட்டிற்கு மேற்குப் பக்கத்தில் போய் முடியும். அதற்குப் பக்கத்தில் அந்தப் பகுதியின் ஒரு மூலையில் நிஸாகந்தி ஒரு புதரென வளர்ந்து ஒரு ஆள் உயரத்தில் நின்றிருக்கும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel