Lekha Books

A+ A A-

நிஸாகந்தி - Page 2

nisakanthi

அந்தப்புதருக்குள் போய் உட்கார்ந்தால், மாலதி அவளுடைய அறையில் அமர்ந்து பாடிக் கொண்டிருப்பதை ஜன்னல் வழியாக நன்றாகப் பார்க்கலாம். என்பதை ஒருநாள் நான் கண்டுபிடித்தேன்.

அந்த மேஜை விளக்கு வெளிச்சம் அவளின் ஒவ்வொரு அசைவையும் எனக்கு நன்றாக காட்டின. மார்புப் பகுதி இலேசாகத் தெரிகிற மாதிரியான ப்ளவுஸ் ஒன்றை அவள் அணிந்திருந்தாள். அவிழ்த்து விடப்பட்ட அவளின் கூந்தல் இரு தோள்கள் வழியாக மார்பின் மீது விழுந்து அந்த ப்ளவுஸை மறைத்துக் கொண்டிருந்ததால் மலையிலிருந்து வேகமாகப் புறப்பட்டு வரும் அருவியைப் போல அவளுடைய மார்பின் ஒரு பகுதியை மட்டுமே இங்கிருந்து என்னால் பார்க்க முடிந்தது. தனக்கு முன்னால் தன்னுடைய ஆங்கிலப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு இடதுகையால் நெற்றியைத் தாங்கியவாறு மேஜை மீது இலேசாகக் குனிந்து மெதுவாக முணுமுணுத்தவாறு அவள் படித்துக் கொண்டிருந்தாள். உரத்த குரலில் படிக்கும் வழக்கம் அவளுக்கு இல்லை. ‘அண்ட் சீதா வாண்டட் டூ கோ வித் ராமா’ - இப்படி அந்த இளம்பெண் மெதுவான குரலில் சொல்லிக் கொண்டிருப்பாள். படித்துப் படித்து சில நேரங்களில் அப்படியே அவள் தூங்க ஆரம்பித்து விடுவாள். தூக்கம் கண்களைத் தழுவத்தழுவ அந்தப் பெண் தராசுத்தட்டு ஒரு பக்கம் இறங்குவதைப் போல முகத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்த்து கடைசியில் மேஜை மீது போய் முழுமையாகச் சாய்ந்து விடுவாள். தலை மேஜை மீது இடித்தவுடன் தன் நிலையை உணர்ந்து கண்களை மெதுவாகத் திறந்து முகத்தை மேல்நோக்கித் தூக்கி தன்னைச் சுற்றிலும் பார்ப்பாள். பிறகு அந்த ஜன்னல் வழியாக இருட்டையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருப்பாள். புதரின் அருகில் அமர்ந்து அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு அவளின் மீது பிறந்த கனிவு காரணமாக ‘என் செல்லமே படித்தது போதும்டா... இனி போய் நிம்மதியா தூங்கு’ என்று சொல்ல வேண்டும்போல் இருக்கும். ஆனால், சிறிதுநேரம் கண்களைக் கசக்கிக் கொண்டு அமர்ந்திருக்கும் அவள் மீண்டும் படிப்பதில் ஈடுபட ஆரம்பிப்பாள். தூங்காமல் அந்த இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கும் என் இதய தேவதையையே மூச்சைப் பிடித்துக் கொண்டு பார்த்தவாறு நான் அமர்ந்திருப்பேன். அப்போது நிஸாகந்தியின் மயங்க வைக்கும் நறுமணம் என் இதயம் வரை சென்று என்னை ஒரு ஆனந்த அனுபவத்திற்குள் மூழ்க வைக்கும். அந்த மலரின் மணத்தை முகர்ந்தவாறு அமர்ந்திருந்த அந்த ஒவ்வொரு நிமிடமும் நான் இனம் புரியாத ஒரு சுகத்தை அனுபவித்தேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆனந்தமான தூக்கத்திற்கு மத்தியில் ஒரு சுகமான கனவு தோன்றுவதைப்போல, அந்தப் பொன்னழகி என் கண் முன்னால் நடந்து கொண்டிருப்பாள். என் நினைவுகளிலும் கனவுகளிலும் அந்த நிஸாகந்தியின் நறுமணம் முழுமையாக நிறைந்திருப்பதைப் போல மனதில் ஒரு எண்ணம்.

சில வேளைகளில் அவள் மலையாளக் கவிதைகளைப் படிப்பாள். ‘மஞ்சரி...” - அவள் அழகாகச் சொல்லுவாள்.

‘அம்மாவுக்கு மட்டுமல்ல மற்ற எல்லோருக்குமே எடுத்து முத்தம் கொடுக்க வேண்டும்போல் தோன்றுமல்லவா?...’ - ஹா! அந்த வரிகளை அவள் பாடும்போது கேட்கவேண்டுமே! அப்போது அவளுடைய உதடுகளில் முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருக்கும்.

இப்படி ஒருநாள்கூட விடாமல் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஒவ்வொரு இரவிலும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அந்த நிஸாகந்திச் செடிகள் இருக்குமிடத்தில் பதுங்கிக் கொண்டு அவளுடைய அழகை நான் அமைதியாக அனுபவித்தேன். நிஸாகந்தியின் மணமும் மாலதியின் முக அழகும் என்னுடைய மனதில் பிரிக்க முடியாதபடி ஒட்டிக் கொண்டன. அந்த நறுமணம் கலந்த அழகை நான் ஒவ்வொரு நாளும் கண்டு ஆனந்த அனுபவத்தை அடைந்தேன்.

கோடைக்காலம் முடிந்தது. மழைக்காலம் தொடங்கியது. நாற்று நடும் வேலைகள் ஆரம்பமாயின.

மழை பெய்வதால் என்னுடைய செயல்கள் சிறிதும் பாதிக்கவில்லை. ஆனால், சில நேரங்களில் மழை பெய்வதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போகும்போது, அவள் அந்த ஜன்னல் கதவுகளை மூடிவிடுவாள். அதுதான் பிரச்சினையே. அப்போது என்னுடைய இதயக் கதவுகளும் அதோடு சேர்த்து அடைக்கப்பட்டு விடும். ஒருவகை ஏமாற்றத்துடன் அந்த மழையில் நனைந்தவாறு இறுகிக் கல்லாகிப்போன இருண்ட இதயத்தைத் தாங்கிக் கொண்டு நான் என்னுடைய வீடு நோக்கித் திரும்புவேன்.

ஒருநாள் அந்த நிஸாகந்திச் செடிகள் இருக்குமிடத்தில் அமர்ந்திருந்தபோது, அவளுடைய தந்தை அவள் சகோதரனிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தது என் காதுகளில் விழுந்தது. “நாளைக்கு நம்ம தோட்டத்துல இருக்குற எல்லாச் செடிகளையும் வெட்டணும். படர்ந்திருக்கிற கொடிகளையும் முழுசா வெட்டிட வேண்டியதுதான்.”

அதைக் கேட்டதும் என்னுடைய இதயமே நெருப்பில் எரிந்து விட்டதைப்போல் நான் உணர்ந்தேன். தோட்டத்திலுள்ள செடிகளை முழுமையாக வெட்டி வீழ்த்த அவர்கள் தீர்மானத்திருக்கிறார்களென்றால் அந்த நிஸாகந்தி செடிகளையும் அவர்கள் வெட்டி வீழ்த்தப் போகிறார்கள் என்பதென்னவோ நிச்சயம். அந்தச் செடிகள் நன்கு வளர்ந்து பரந்து கிடந்தன. என்னுடைய காதல் தளம் அவர்களால் அழியப்போகிறது என்றால் என்னுடைய நிலைமை எப்படி இருக்கும்? என்னுடைய மகிழ்ச்சியும், கனவுகளும் குடி கொண்டிருந்ததே அந்த இடத்தில்தான். கூடு கலைந்துபோன கிளியைப்போல அதற்குப் பிறகு நான் எங்கு போவேன்? தனிமையில் அவள் அழகு முகத்தை அதற்குப் பிறகு நான் எப்படிப் பார்க்க முடியும்?

இதை விட்டால் வேறு வழியில்லை- அவர்களின் செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் இதுமட்டுமே வழி என்று நினைத்த நான் மாலதிக்கு ஒரு கடிதம் எழுதவேண்டுமென்று தீர்மானித்தேன்.

அன்று இரவு மூன்று மணி வரை அமர்ந்து சிந்தித்து இப்படி ஒரு கடிதத்தை அவளுக்கு எழுதினேன்.

இதய நாயகியே,

கடந்த மூன்று மாத காலமாக ஒவ்வொரு நாள் இரவிலும் உன்னுடைய அறைக்குச் சமீபத்தில் இருக்கும் நிஸாகந்தி செடிகள் அடர்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு உன்னையே நான் மனதிற்குள் தொழுதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்படியே யாருக்கும் ஏன் உனக்கும் கூட தெரியாமல் அமைதியாக அமர்ந்துகொண்டு எப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால், விதியை நம்மால் மாற்ற முடியுமா? அதை நினைத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அந்த நிஸாகந்தி செடிகள் நாளை காலையில் உன்னுடைய தந்தையால் முழுமையாக அழிக்கப்படப் போகின்றன. அதற்குப்பிறகு எங்கே அமர்ந்து உன்னை நான் காண்பேன்? அந்தச் செடிகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் அழிக்கக் கூடாது என்று மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நான் உன் மீது கொண்டிருக்கும் காதல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால், அதற்கு உன்னுடைய கருணை எனக்குக் கட்டாயம் வேண்டும். ஓம் சாந்தி. மற்றவை பிறகு-

உன்னுடைய காதலன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel