
கார் நின்று கொண்டிருக்கும் சாலைக்குச் செல்ல வேண்டுமென்றால், சரோஜினியின் வீட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். சரோஜினி வாசலின் அருகில் போய் நின்றாள். அவளுடைய சினேகிதி செல்வதைப் பார்ப்பதற்காக. ஒரு தேவ கன்னியைப் போல பத்மாக்ஷி அப்படியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் அழகான கணவனும். பத்மாக்ஷி சரோஜினியின் அருகில் வந்து நின்றாள். "நான் வரட்டுமா சரோஜம். உன்னுடைய திருமணத்தைப் பற்றி எனக்கு தகவல் தர வேண்டும். எனக்கு கடிதம் எழுத வேண்டும்.''
"ம்...'' சரோஜினி முனக மட்டும் செய்தாள். பத்மாக்ஷி தன் கணவனுடன் சேர்ந்து சென்றாள்.
சரோஜினியின் கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர் கீழே விழுந்தது. அதற்கான அர்த்தம் என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.
சரோஜினிக்கு ஒரே ஒரு வேலைதான் இருந்தது- சந்தோஷமான திருமண வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பது. சமையலறைக்குள் அவள் எட்டிப் பார்ப்பதுகூட கிடையாது. படிப்பும் அழகும் உள்ள இளம் பெண்கள் சமையலறைக்குள் வேலை பார்ப்பதா? அதை அவளால் மனதில் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. குளித்து முடித்து, நெற்றியில் திலகம் வைத்து, நல்ல ஆடைகள் அணிந்து, ஏதாவது ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு அவள் அங்கு உட்கார்ந்திருப்பாள். அப்படியே உட்கார்ந்து, அவள் தன்னுடைய எதிர்கால மணமகனைக் கனவு கண்டுகொண்டிருப்பாள்.
பக்கத்து வீட்டைச் சேர்ந்த சில பெண்கள் அவளுடைய அன்னையிடம் பெண்ணை எந்த வேலையும் செய்யச் சொல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்பார்கள். "ஒருத்தனுடன் போய்ச் சேர்ந்த பிறகு அரிசியும் குழம்பும் வைப்பதற்குத் தெரிந்திருக்க வேண்டாமா?'' -இதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்கும். அவளுடைய தாய் கூறுவாள்:
"அவளுக்கு அது எதுவும் தெரியாது. படித்துத் திரிந்து கொண்டிருந்த பெண் அல்லவா? ஒருத்தனுடன் போகும்போது எல்லாவற்றையும் அவளே தெரிந்துகொள்வாள். பிறகு... ஏதாவது வேலை செய்யும்படி அவளைச் சொன்னால், அவளுடைய அப்பா என்னைக் கொன்று விடுவார்.''
அது உண்மைதான். சரோஜினியை எந்த வேலையையும் செய்யச் சொல்லக் கூடாது என்பது அவளுடைய தந்தையின் கட்டளையாக இருந்தது.
இப்படியே நாட்களும் மாதங்களும் பாய்ந்தோடிக் கொண்டிருந்தன. இதற்கிடையில் சில திருமண ஆலோசனைகளும் தேடி வந்தன. ஒன்று- ஒரு இன்ஸுரன்ஸ் ஏஜென்ட், பிறகு... மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குமாஸ்தா, இன்னொன்னு ஒரு மர வியாபாரியின் ஒரே மகன். அவர்கள் ஒவ்வொருவரும் நேராக வந்தும் அவ்வாறு இல்லாமலும் திருமண ஆலோசனை நடத்தினர். "பெண் பார்ப்பதற்கும்" வந்தார்கள். அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் சரோஜினியின் தந்தைக்கு சிறிது பணச் செலவும் உண்டானது. அவற்றில் ஏதாவதொன்றை முடிவு செய்ய வேண்டுமென்று அவளுடைய தாய், அவளின் தந்தையிடம் கண்டிப்பான குரலில் கூறிவிட்டாள். "அவளுக்குச் சம்மதம் என்றால், நான் சம்மதிக்கிறேன்.'' இதுதான் அவளுடைய தந்தையின் பதிலாக இருந்தது.
சரோஜினிக்கு அருகில் அந்த விஷயம் தொடர்பாக ஏதாவது பேசினால், அவள் காறித் துப்பிவிடுவாள். "இவன்களுடன் போவதற்கு ஏதாவது எலும்பும் தோலுமாக இருக்கக்கூடிய பெண்கள் இருப்பார்கள். என்னிடம் இப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் பேசக்கூடாது தெரியுதா?'' இவ்வாறு கோபத்துடன் சீறிக்கொண்டே அவள் எங்கோ தூரத்தில் போய் உட்கார்ந்து கொள்வாள்.
அந்த வகையில் திருமண ஆலோசனைகள் அனைத்தும் வீணாகிக் கொண்டிருந்தன. "இனிமேல் இந்த மாதிரியான ஆட்கள் யாராவது இந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டு இங்கே வந்தால், நான் தூக்குல தொங்கி இறந்து விடுவேன்'' என்றொரு மிரட்டலை சரோஜினி தன்னுடைய தாயிடம் வெளிப்படுத்தவும் செய்தாள்.
அவளுடைய வீட்டிற்கு அருகில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு புதிதாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அவர் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். அழகான தோற்றத்தைக் கொண்டவர். பத்திரிகைகளில் சில கவிதைகளையும் எழுதுவதுண்டு. எம்.ஆர்.முட்டம்- இதுதான் அவருடைய பெயர். சரோஜினியின் வீட்டின் தெற்குப் பகுதியில் அவர் வசிக்க ஆரம்பித்தார். சரோஜினி தெற்குப் பக்கத்திலிருந்த குளத்தில் குளிப்பதற்காகச் செல்லும்போது, அவர் தெற்கு திசை வீட்டின் கிழக்குப் பக்க வாசலில் நின்றுகொண்டு பார்ப்பது உண்டு. சில நேரங்களில் அவளும் அலட்சியமாக ஒரு பார்வை பார்ப்பாள்.
ஒரு நாள் சாயங்கால வேளையில் அவர் சரோஜினியின் வீட்டிற்கு வந்தார். அவளுடைய அன்னையிடம் சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தபோது அவளும் வந்தாள். பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தபோது, தன்னுடைய கவிதைகளைப் பற்றியும் கூறினார். ஞாபகத்திலிருந்து சில கவிதைகளைக் கூறவும் செய்தார். அனைத்து கவிதைகளும் காதலைப் பற்றியனவாகவே இருந்தன. ஆழமான அர்த்தங்களைக் கொண்டவையாக இருந்தன. அவளிடம் அவற்றைப் பற்றிய கருத்தைக் கேட்டார். மிகவும் நன்றாக இருக்கின்றன என்று அவள் பதிலும் கூறினாள்.
அதற்குப் பிறகு அவர் தினமும் சாயங்கால நேரத்தில் அங்கு வருவார். தன்னுடைய கவிதைகளில் இருக்கும் காதலை விளக்கிக் கூற ஆரம்பிப்பார். அது அவளுக்கும் சுவாரசியமான விஷயமாகவே இருந்தது. "காதல்... அது சந்தோஷத்தின் ஊற்று. சொர்க்கத்தின் வாசல். அமைதியின் அழைப்பு. பிரம்மத்தின் அம்சம்.'' இவ்வாறு அவர் விளக்கிக் கூறிக்கொண்டிருப்பார். அவை எதுவும் அவளுக்குப் புரியவே புரியாது. ஆனால், அவளுக்கு அதில் ஒரு ஈடுபாடு இருந்தது.
ஒரு நாள் அவள் கேட்டாள்: "எந்தச் சமயத்திலும் பார்த்திராதவர்கள் மீது காதல் உண்டாகுமா?''
"வரலாம்...'' அவர் ஆழமான பார்வைகளுடன் தொடர்ந்து சொன்னார். "உண்மையான காதலில் எதுதான் நடக்கக் கூடாது?''
"கேள்விகூடபடாதவர்கள்மீது காதல் உண்டாகுமா?'' அவள் கேட்டாள்.
அந்த ஆளுக்கு உற்சாகம் வந்துவிட்டது. "அப்படியும் நடக்கலாம். மனிதர்களான நாம் நினைப்பதைப்போல காதல் செல்லும் திசை இருக்காது. அது கடவுளின் லீலை.''
அவள் ஆர்வத்துடன் கேட்டாள்: "பார்க்கவோ கேள்விப்படவோ செய்திராத ஒருவர்மீது காதல் உண்டானால், அது வெற்றி பெறுமா?''
அவர் உறுதியான குரலில் கூறினார்: "நிச்சயமாக வெற்றி பெறும். அதற்கு உதாரணம் நான்.''
அவள் புன்னகைத்தாள்: "என்ன அது? நீங்கள் பார்க்கவோ கேள்விப்படவோ செய்யாத ஒருவர்மீது உங்களுக்கு காதல் உண்டானதா? அது நிறைவேறியதா?''
அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்: "ஆமாம்... அது இப்போது நிறைவேறி இருக்கிறது. பார்க்கவோ கேள்விப்படவோ செய்வதற்கு முன்பே எனக்கு உங்களின் மீது காதல் பிறந்தவிட்டது. இதோ... இப்போது... அது நிறைவேறி இருக்கிறது. கடவுளின் லீலைதான்...''
சரோஜினிக்கு கோபம் வந்துவிட்டது. "முட்டாள்தனமாக பேசாதீங்க... தெரியுதா? எனக்கு உங்களின்மீது எந்தவொரு காதலும் இல்லை.''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook