Lekha Books

A+ A A-

கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 3

kanavukku en azhudhai

“வெளியூர் மாப்பிள்ளைன்னா உடனே நீ எடுத்த எடுப்பிலேயே வேண்டாம்னு சொல்லிடுவியோன்னுதான் முதல்ல மாப்பிள்ளைப் பையனைப் பத்தின ப்ளஸ் பாயிண்ட்ஸ் எல்லாம் சொன்னேன்.”

“ஆமாங்க. கல்யாணியைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாதுங்க. அதனாலதானே அவளோட படிப்புக்குக் கூட நான் எந்த வெளியூருக்கும் அவளை அனுப்பலை. உங்களுக்கே தெரியும். என்னால அவளைப் பார்க்காம இருக்க முடியாதுன்னு...”

“சுசிலா, இவ்வளவு நாள் அவளோட ஸ்கூல், காலேஜ் எல்லா விஷயத்துக்கும் உள்ளூர் உள்ளூர்னு பார்த்தோம். ஆனா, இனிமேல் நாம உள்ளூர் மாப்பிள்ளை வேணும்னு பிடிவாதமா இருக்க முடியாதும்மா.”

“ஏன்னா, அவளோட எதிர்காலம் படிப்பைவிட முக்கியமானது. அவ போற இடத்துல கண் கலங்காம சந்தோஷமா வாழணும். அதுக்கு அடிப்படையான விஷயம். அவளுக்குத் தாலி கட்டறவன் நல்ல குணம் உள்ளவனா இருக்கணும். அவன் நம்ம பொண்ணு கழுத்துல கட்டற தாலி, மங்கலகரமான மஞ்சள் கயிறா இருக்கணுமே தவிர, அவளோட கழுத்தை நெறிக்கற சுருக்குக் கயிறா ஆயிடக்கூடாது. அதனாலதான் வெளியூரா இருந்தாலும் பரவாயில்லைன்னு தியாகுவைப் பத்தி விசாரிச்சுட்டு வச்சிருக்கேன். நீ பையனைப் பாரு. உனக்கும் அவனைப் பத்தின நல்ல அபிப்ராயம் தோணுச்சுன்னா, அதுக்கப்புறம் பேச்சுவார்த்தை நடத்தலாம்.”

“நீங்க சொல்றதை எல்லாம் வச்சுப் பார்த்தா, உள்ளூர் பையன்தான் வேணும்னு கட்டாயம் இல்லாம நல்ல பையன் வெளியூரா இருந்தாலும் பரவாயில்லைன்னு தோணுது. ஆலோசனையை நீங்க சொல்லிட்டீங்க. ஆக வேண்டியதை அந்த ஆண்டவன் அருளை நம்பி விட்டுடுவோம். மாப்பிள்ளைப் பையனை நம்ம கல்யாணி பார்க்கட்டும். அவளோட விருப்பம் எதுவோ அப்படியே நடக்கட்டும்.”

“நமக்குன்னு குழந்தை இல்லாம வெறுமையாகிப் போன வாழ்க்கையில விடிவெள்ளியா கல்யாணி வந்தா. அவளோட இல்லற வாழ்க்கை இனிமையானதா அமையணும்... அதை அமைச்சுக் குடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.”

“அடுத்த வாரம் திருச்சிக்குப் போய் நாம ரெண்டு பேரும் மாப்பிள்ளைப் பையன் தியாகுவை பார்க்கலாம். அவனோட தூரத்து உறவான அத்தையம்மா தான் வீட்டைப் பார்த்துக்கறாங்களாம். அந்த அம்மாகிட்டயும் பேசலாம். ஆனா, முடிவு எடுக்கறதெல்லாம் தியாகுதானாம். அடுத்த வெள்ளிக்கிழமை நல்ல நேரம் பார்த்து வை. கிளம்பிடலாம். அதுக்கப்புறம் மாப்பிள்ளை இங்கே வந்து பொண்ணு பார்க்கட்டும். சரிதானே?”

“சரிங்க. நீங்க சொன்னபடி வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நேரம் பார்த்து வைக்கிறேன். திருச்சிக்குப் புறப்படலாம்.”

4

“அம்மா...” உற்சாகமாக கத்திக்கொண்டே வந்தாள் கல்யாணி. கறுப்புநிற பட்டுத்துணியில், நீல வண்ணத்தில் அழகிய கைவேலைப்பாடு செய்யப்பட்டிருந்த சுடிதாரும், நீல வண்ணத்தில் துப்பட்டாவும் அணிந்திருந்தாள். பருவம், அவளது மேனியில் வள்ளலாக, அழகையும் செழுமையான வனப்பையும் வாரி வழங்கியிருந்தது.

எடுப்பான மூக்கும், கரிய நீண்ட கண்களும், பவளம் போல் சிவந்த உதடுகளும் காண்போரை மயங்க வைக்கும் பேரழகாக இருந்தது. தினம் தினம் பார்த்தாலும், கல்யாணியை ரசிப்பது மட்டும் சுசிலாவிற்கு அலுக்கவே அலுக்காது.

“என்னம்மா கல்யாணி, கையில என்ன?”

“அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்திருக்கேன்மா.”

“எதுக்கு?”

“எதுக்கா? எம்.எஸ்ஸி படிக்கறதுக்குத்தான்மா...”

“படிப்பை எல்லாம் மூட்டைகட்டி வச்சுட்டு, சமர்த்தா இன்னையில் இருந்து பார்வதியம்மாகிட்ட சமையல் கத்துக்கோ...”

“பார்வதியம்மாதான் சமையலுக்குன்னு இருக்காங்கள்ல? நான் எதுக்காக சமைக்கக் கத்துக்கணும்?” செல்லமான சிணுங்கலுடன் கேட்ட கல்யாணியைப் பார்த்து சிரித்தாள் சுசிலா.

“இங்கே இருக்கறவரைக்கும் நீ இந்த வீட்டின் இளவரசி. உனக்குக் கல்யாணம் ஆகி போற இடத்துலயும் இப்படியே எதிர்பார்க்க முடியுமா? பொண்ணா பிறந்தவ, பிறந்தவீட்டு சுகங்களை புகுந்த வீட்டில் எதிர்பார்க்க முடியாது...”

“என்னம்மா, நீங்க பிறந்த வீடு, புகுந்தவீடுன்னு பேசி என்னைக் குழப்பறீங்க?”

சிவலிங்கம், கல்யாணியின் தலையை அன்பு மிகுதியில் ஆறுதலாகத் தடவினார்.

“உங்க அம்மா ஒரு அவசர குடுக்கை. நிதானமா உன்கிட்ட பேச வேண்டிய விஷயத்தை பட்டாசு மாதிரி போட்டு வெடிக்கறா... நீ ஆசைப்பட்ட மாதிரி பட்டப்படிப்பை முடிச்சுட்ட. நீ இன்னும் மேல படிக்கணும்ங்கற அவசியம் கிடையாதும்மா. நம்ப குடும்பத்துக்கு ஒரே வாரிசு நீதான். ஏழு தலைமுறைக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு. இருந்தாலும், அடிப்படைக் கல்வி அவசியம்ணுதான் உன்னைப் படிக்க வச்சோம். கல்லூரிக் கல்வியை முடிச்சுட்ட. நீ, இனி கல்யாணமாகி வாழ்க்கைக் கல்வியை ஆரம்பிக்கணும். அதுக்காக உனக்கு வரன் பார்த்திருக்கோம். இப்படி விளக்கமா சொல்லாம, சமையல் கத்துக்க அது கத்துக்கன்னு உங்க அம்மா சுத்தி வளைச்சுப் பேசறா...”

“என்னைப் பெத்த அம்மா, அப்பா போனதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் என்னைப் பெத்த மகளா வளர்த்திருக்கீங்க. என்னோட சொந்த அம்மா, அப்பாவை இழந்துட்ட சோகத்தை ஒரு துளிக்கூட நான் இதுவரைக்கும் உணர்ந்ததே இல்லை. குயிலுக்கு முட்டைகளை அடைகாக்கத் தெரியாம, காக்கா கூட்டுக்குள்ள தன்னோட முட்டைகளைப் போட்டு வச்சிடுமாம். காகங்களும் தன் கூட்டில் இருக்கற முட்டைகள் குயிலோடதுன்னு தெரியாம அடைகாத்து குஞ்சும் பொரிச்சுடுமாம். குஞ்சுகள் கொஞ்சம் பெரிசானப்புறம் தன்னோட குஞ்சுகள் இல்லைன்னு அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு, கொத்தி கொத்தி விரட்டிடுமாம். ஆனா நீங்க? உங்களுக்குப் பிறக்காத என்னை அடையாளம் தெரிஞ்சும், அளவில்லாத பாசத்தைப் பொழிஞ்சு வளர்க்கறீங்க. நீங்க என்ன சொன்னாலும், நான் அதன்படி நடப்பேன்.”

“ரொம்ப சந்தோஷம்மா. உனக்கு வந்த வரன்கள், நல்ல குணம் கொண்ட ஒரு பையனைத் தேர்ந்தெடுத்திருக்கோம்... உனக்குப் பிடிச்சு, நீ சம்மதிச்சா முடிச்சு வைப்போம். பையன் திருச்சியில கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்ணி சேல்ஸ் பண்ற நிறுவனம் வச்சிருக்கான். ஒரே ஒரு தங்கச்சி மட்டும்தான். வர்ற வெள்ளிக்கிழமை நாங்க போய் பையனை நேர்ல பார்த்துட்டு வர்றோம்... அதுக்கப்புறம், பெண் பார்க்கும் படலம். அதே சமயத்துல நீயும் அவனைப் பார்த்துக்கலாம்... ”

“சரிப்பா.”

“கல்யாணி, உன் அப்பா சுருக்கமா சொல்லாம ஒரு பெரிய லெக்சரே குடுத்துட்டாரு. இந்த அழகுல என்னை சுத்தி வளைச்சுப் பேசறதா சொல்றாரு. இதென்னம்மா நியாயம்?”

“அம்மா, அப்பாவைப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே? பேசினா நிறைய பேசுவார். இல்லைன்னா மூட் அவுட் ஆனாப்ல எதையோ யோசனை பண்ணிக்கிட்டு இருப்பாரு. அவர் அப்படி மெளனமா இருக்கறதைவிட, நிறைய பேசறது மனசுக்கு நிறைவா இருக்கும்மா.”

“நீ சொல்றது ரொம்ப சரி. நான் கல்யாணம் ஆகி இங்கே வந்த இத்தனை வருஷ காலத்துல, அவர் பேசினது ரொம்பக் குறைவு. இது எனக்கு ஒரு குறைதான். என்ன பண்றது...? நமக்குன்னு கிடைக்கறதுதானே கிடைக்கும்? அவரோட சுபாவம் அதுன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். பழகிட்டேன்.”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel