
கண்ணம்மா ஒரு புதிய அன்னையே. அவளின் கவலைகள் நிறைந்த மனதும் அன்பும் என்றாவதொரு நாள் புதிய வழியைத் தேடிக் கண்டுபிடிக்கப் போவதென்னவோ நிச்சயம். அந்தத் தாயின் ஒரு மகன் இல்லாமற் போன இடத்தில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் அபயம் தேடி ஓடி வருவார்கள். அதனால் கண்ணம்மாவை நினைத்து ராகவராவ் கவலைப்பட வேண்டியதில்லை. கண்ணம்மாவின் கண்ணீர் வற்றிப் போகும் வரை வழியட்டும்!
நீண்ட தூரம் பயணம் செய்த பிறகு வேறொரு காட்சியை ராகவராவ் பார்க்க நேர்ந்தது. இப்போது, இங்கே இந்தச் சிறை அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அந்தக் காட்சியைப் பார்ப்பது என்பது ராகவராவைப் பொறுத்தவரை சந்தோஷமான ஒரு விஷயம்தான். ஏனென்றால் அவன் ஆயிரக்கணக்கான கிராம மக்களின் அழுகையைச் சிரிப்பாக மாற்றிய காட்சி அது. பிறகு எப்படி அவன் 'ரன்னர்' ஆகாமல் இருப்பான்? அசாதாரணமான அந்தச் செய்தி எப்படி தூர இடங்களில் போய் சேராமல் இருக்கும்? அதோடு எப்படி செயல் வடிவில் வராமல் இருக்கும்?
ராகவராவ் வேலாம்பள்ளி கிராமத்தில் நிலங்களை வினியோகம் செய்யும் பணியில் தீவிரமாக மூழ்கியிருந்தான். படுப்பதற்கு ஒரு வீடும் ஒரு துண்டு நிலமும் இல்லாத விவசாயிகளின் மன திருப்தியையும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அவன் நேரடியாக அனுபவித்தான். எரிந்து கரிந்து போன வீடுகள் மீண்டும் வசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டன. கிராமங்களில் மீண்டும் மக்களின் வாழ்க்கை உயிர்த்துடிப்புடன் இயங்க ஆரம்பித்தது. வயல்களில் பயிர்கள் நடப்பட்டன. விவசாயிகளின் தைரியத்தைப் பார்த்து ஆக்கிரமிப்பாளர்களுடைய இதயம் நடுங்க ஆரம்பித்தது. நேற்றுவரை விதியை நிர்ணயிப்பவர்களாக இருந்தவர்கள் நகரங்களில் அபயம் தேடி வாலைச் சுருட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.
வேலாம்பள்ளியிலிருந்த விவசாயிகள் ராகவராவின் பணியில் உதவ ஒரு குழு அமைத்தார்கள். அவர்கள் நிலம் வினியோகம் செய்யும் விஷயத்தில் ராகவராவிற்கு உதவியாக இருப்பார்கள். ராகவராவ் நிலத்தை வினியோகம் செய்தவாறு ஒரு கிராமத்திலிருந்து வேறொரு கிராமத்திற்குச் செல்வான். உண்மையிலேயே அது ஒரு உணர்ச்சி மயமான முயற்சிதான். அந்த உணர்ச்சியைத் தடுக்க எந்தவொரு சத்தியாலும் முடியவில்லை. அது மலை வெள்ளத்தைப் போல, ஒரு நீரோட்டத்தைப் போல எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து முன்னோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த நீரோட்டமும் இவ்வளவு காலமாக ஊனம் உண்டான பாதங்களைப் போல முடங்கிக் கிடந்தது. அந்தப் பாதங்களை வைத்து நடக்க முடியவில்லை. ஆனால், இப்போது அரக்கத்தனமான பலத்துடன் அந்தப் பாதங்கள் இயங்க ஆரம்பித்து விட்டன. அந்த மலையிலிருந்து வரும் வெள்ளத்தின் பாதங்கள் மண்ணில் படுகின்றன. தலை ஆகாயத்தைத் தொடுகிறது. அதன் இசை உலகத்தின் எல்லா இடங்களிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது. வயல்களை உழுது கொண்டிருக்கும் விவசாயி இன்று தன்னுடைய அதிர்ஷ்டத்தை உழுது கொண்டிருக்கிறான். இன்று வானம் முழுவதும் அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறது. மண் பொம்மைகள் ஒவ்வொன்றாகத் தகர்ந்து கொண்டிருக்கின்றன.
வேலம்பள்ளியிலிருந்து பாத்திபாடொ, அங்கிருந்து ஸ்ரீபுரம் வரை வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய திருவிழாவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த மகா உற்சவம் இதற்கு முன்பு ஒருமுறை கூட இந்த மண்ணில் கொண்டாடப்பட்டு அவர்கள் பார்த்ததில்லை. இப்போது சிறையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அந்தத் திருவிழாவின் ஆனந்தமும் உற்சாகமும் எதிரொலிப்பதாக ராகவராவிற்குத் தோன்றியது. அதன் அலைகள் ராகவராவை ஸ்ரீபுரத்திற்கு அழைத்துச் சென்றன.
ராகவராவ் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தான். பாத்திபாடொ முதல் ஸ்ரீபுரம் வரை விவசாயிகளின் நீண்ட ஊர்வலம். ஊர்வலத்திற்கு முன்னால் ஆதிவாசி இளைஞர்களின் தொண்டர் படை. அவர்களுக்குப் பின்னால் இடையர்கள் இடையர்களுக்குப் பின்னால் அடிமை வேலை செய்பவர்கள். அவர்களுக்குப் பின்னால் கொடிகளைக் கையில் ஏந்தியவர்களும் இசைக் குழுவினரும். ஊர்வலத்தின் நடுவில் அழகான ஒரு பல்லக்கு! பல்லக்கின் இரு பக்கங்களிலிருக்கும் கதவுகளில் சிவப்பு நிற திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. திரைச்சீலை காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. அந்தப் பல்லக்கிற்குள் நிலங்களைப் பற்றிய தகவல்களும் சான்றிதழ்களும் இருந்தன. நிலம், பணயம், அடிமை ஒப்பந்தம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள். எழுச்சியை வெளிப்படுத்தும் அடையாளங்கள். அந்த அடையாளங்கள் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அடிமைத்தனத்தையும் அக்கிரமங்களையும் வெளிப்படுத்தக் கூடியன. விவசாயிகள் அந்த அக்கிரமங்களுக்கும் அடிமைத்தனத்திற்கும் மூலகாரணமாக இருந்தவர்களைப் பிடித்து தங்கள் கைவசம் ஆக்கினார்கள். சில இடங்களில் அவர்களைப் பிடிக்க வேண்டிய தேவையே உண்டாகவில்லை. ஜமீன்தார்மார்கள் தங்களின் பிரம்மாண்டமான மாளிகைகளை விட்டு வேறெங்கோ ஓடிப்போயிருந்தார்கள்.
அந்தப் பல்லக்கிற்குப் பின்னால் விவசாயிகள் வற்புறுத்தி ராகவராவை இன்னொரு பல்லக்கில் உட்கார வைத்து சுமந்து கொண்டு சென்றார்கள். தான் நடந்து செல்வதாக ராகவராவ் பிடிவாதமாகச் சொன்னான். ஆனால், விவசாயிகள் அவன் சொன்னதைக் கேட்கவில்லை. அவனுடைய பல்லக்கிற்குப் பின்னால் நாகேஸ்வரனின் பல்லக்கு. அவன் சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு, தன்னுடைய நண்பனைப் பார்ப்பதற்காக பாத்திபாடொவிற்கு வந்திருந்தான். கிராமத்திலுள்ள எல்லா விவசாயிகளும் ஊர்வலத்தில் இருந்தார்கள். இன்று யாரும் தங்களின் வீடுகளைப் பூட்டவில்லை. கிராமத்தில் திருடர்களோ- குற்றவாளிகளோ இல்லை. இன்று எல்லோரும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள்.
பல்லக்குகள் மெதுவாக ஜமீன்தாரின் மாளிகையை நெருங்கின. பல்லக்கைச் சுமந்து சென்றவர்கள் மாளிகையின் சுவர்களுக்குள் பல்லக்குகளை இறக்கி வைத்தார்கள். கிராமத்தின் பெண்கள் அனைவரும் முன்கூட்டியே அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்கள் குலவை இட்டு ஆரத்தி எடுத்து பல்லக்குகளை வரவேற்றார்கள். மலர்களையும் காசுகளையும் எறிந்து வரவேற்றார்கள்.
அழகான அந்தக் காட்சியிலிருந்து கண்களை எடுக்க ராகவராவால் முடியவில்லை. அவன் பல தடவைகள் திரும்பத் திரும்பப் பார்க்க நினைத்தான். தங்களின் கிராமத்தில் புரட்சி உண்டாகும்போது, அதன் வடிவம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தான் ராகவராவ். பல்வேறு வகைகளில் கற்பனை பண்ணி வண்ணம் தீட்டி புரட்சி உண்டாவதை ராகவராவ் மனதில் நினைத்துப் பார்த்தான். புரட்சி என்பது ஒரு சூறாவளியைப் போல என்று சில நேரங்களில் தோன்றும். மலையிலிருந்து பாய்ந்துவரும் வெள்ளத்தைப்போல ஆவேசத்துடன் வரும் போர்ப்படையைச் சில நேரங்களில் அவன் மனதில் கற்பனை பண்ணிப் பார்ப்பான். சில நேரங்களில் வெடிகுண்டுகளுக்கு இரையான கணக்கற்ற பிணங்கள் மலையைப் போல குவிந்து கிடப்பதை மனதில் கற்பனை பண்ணிப் பார்ப்பான். ஆனால், தன்னுடைய கிராமத்தில் உண்டாகப் போகும் புரட்சி நாணம் கொண்ட புது மணப்பெண்ணைப் போல சிவப்பு நிறத் திரைச்சீலைகள் தொங்கும் பல்லக்கில்தான் என்பதை ராகவராவால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook