
அதைவிட அழகான- ஏராளமான அலங்காரங்களை அடிமைகள் தங்களின் பலத்தைப் பயன்படுத்தி மிதித்து நசுக்கினார்கள். மக்புல் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ராகவராவின் இதயத்தைத் தொட்டன. ராகவராவ் ஒவ்வொரு விஷயத்திற்குள்ளும் மறைந்திருக்கும் திருட்டுத்தனங்களைப் புரிந்து கொண்டான். அதோடு ஒவ்வொரு வழியாக அவனுக்கு முன்னால் தோன்றிய வண்ணம் இருந்தன. இதற்கு முன்பு தெரிந்திராத வார்த்தைகளுக்கான அர்த்தம் இப்போது அவனுக்குத் தெரிய ஆரம்பித்தது. முன்பு அவனிடம் இருந்தது குருட்டுத்தனமான அனுபவங்களும் கோபமும் மட்டும்தான். இப்போது அங்கு பிரகாசத்தின் அலைகள் உயர்ந்து கொண்டிருந்தன.
இதற்கு முன்பு வாழ்க்கை மீது ஒரு சிறு ஈடுபாடு கூட அவனிடம் உண்டானதில்லை. ஆனால், இப்போது அவனுக்கு மண் மீது ஆழமான காதல் உண்டானது. ராகவராவ் அந்த மண்ணில் பலமாகத் தன் கால்களை ஊன்றி நின்றவாறு உரத்த குரலில் உள்ளத்திலிருந்து சொன்னான்: "நான் ஒரு இளைஞன். நான் கேக்குறது ஒவ்வொண்ணும் துடிப்பும் புத்துணர்ச்சியும் உள்ள விஷயங்களா இருக்கு. அவற்றின் உதவியுடன் வித்து விதைக்கவும் அறுவடை செய்யவும் முடியும்!"
அன்று இரவு எவ்வளவு நேரம் வரை பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது என்று இப்போது கூட ராகவராவிற்குத் தெரியாது. எப்போது உறங்கினோம் என்பதும் அவனுடைய ஞாபகத்தில் இல்லை. இந்த விஷயங்கள்தான் அவன் ஞாபகத்தில் இருக்கின்றன. அவனும் மக்புலும் போர்வையை மூடிக்கொண்டு படுத்திருந்தார்கள். ராகவராவ் கேட்டுக் கொண்டிருந்தான். மக்புல் கூறிக் கொண்டிருந்தார்.
இரவு நீண்ட நேரம் ஆனபிறகு அவன் கண்களைத் திறந்தான். கம்பளி பாதத்திற்கு மேலே நகர்ந்திருந்தது. சுரய்யா அதை அவனுடைய பாதம் வரைக்கும் இழுத்து விட்டாள். அவளுடைய விரல்கள் அவனுடைய பாதங்களைத் தொட்டன. அந்த விரல்கள் ராகவராவின் ஏதோ ஒரு மூலையைத் தொட்டன. அடுத்த நிமிடம் அவனுடைய கண்கள் நீரால் நிறைந்தது. சுரய்யா பிறகு தன் கணவனின் கம்பளியை இழுத்து சரி பண்ணினாள். மகளைக் கட்டிப் பிடித்தவாறு அவள் படுத்து உறங்கினாள். ராகவராவ் தன் கண்ணீரைத் துடைக்கவில்லை. ஏனென்றால்- அது ஆனந்தக் கண்ணீராக இருந்ததுதான். தான் இன்று தன்னுடைய சொந்த வீட்டில் இருப்பதைப் போல் அவன் உணர்ந்தான்.
சில நிமிடங்களுக்கு ராகவராவால் அந்த இனிமையான காட்சிகளை விட்டு பார்வையை வேறு பக்கம் திருப்ப முடியவில்லை. எனினும், திடீரென்று யாரோ அவனுடைய சிந்தனைச் சங்கிலியின் கண்ணிகளை அறுத்தார்கள். முதலில் சங்கிலியின் 'க்ணிங் க்ணிங்' சத்தம் கேட்டது. தொடர்ந்து சிறைக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அதற்குப் பிறகும் ராகவராவ் இருந்த இடத்தை விட்டு சிறிதும் அசையவில்லை. அவனால் அசைய முடியவில்லை என்பதே உண்மை. பிறகு தரையில் கனமான காலடி ஓசை கேட்டது. வார்டன் வந்து அவனுடைய கைவிலங்கை அவிழ்த்தான். சிறை சூப்பிரெண்டெண்ட் ராகவராவிடம் எழுந்து நிற்கும்படி கட்டளையிட்டார். அவன் மிகவும் சிரமப்பட்டு எழுந்து நின்றான். ஹா! எழுந்து நிற்கும்போது கிடைக்கும் ஆனந்தம் என்ன இருந்தாலும் தனிதான். அந்த ஆனந்தம் ராகவராவின் நரம்புகள் வழியாக ஓடியது. அதே சமயம் கால்களில் மாட்டப்பட்டிருந்த விலங்கு காலில் பட்டு பயங்கரமான வேதனையைத் தந்தது. இருந்தாலும் அவன் நிமிர்ந்து நின்றான்.
சூப்பிரரெண்டெண்டின் கையில் கசங்கிப்போன ஒரு தாள் இருத்து. அவருடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தாளில் இருந்த விஷயத்தைப் படித்துச் சொல்லும்போது சூப்பிரரெண்டெண்டின் முகம் பயங்கரமாக வியர்ப்பதை ராகவராவ் கவனித்தான். அந்தத் தாளில் ராகவராவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், தூக்குத் தண்டனை கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. நாளை காலையில் ஏழு மணிக்கு ராகவராவைத் தூக்கில் போடப்போகிறார்கள்.
சிறை சூப்பிரெண்டெண்ட் கையிலிருந்த துவாலையால் தன்னுடைய முகத்தைத் துடைத்துக் கொண்டு ராகவராவிடம் கேட்டார்: "நீ ஏதாவது சொல்ல விரும்புறியா?"
அந்தக் கேள்விக்குப் பதில் என்பது மாதிரி ராகவராவ் சிறிதாகப் புன்னகைத்தான்.
சிறை சூப்பிரெண்டெண்ட் சில நிமிடங்கள் அவனுடைய முகத்தையே பார்த்தவாறு செயலற்று நின்றிருந்தார். அவர் தன் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக இப்படிப்பட்ட ஒரு கைதியைச் சந்திக்கிறார். தன்னுடைய முப்பது வருட பணியில் அவர் எத்தனையோ கைதிகளைப் பார்த்திருக்கிறார். பயங்கரமான கொள்ளைக்காரர்கள் தூக்குத் தண்டனைக்குப் பயப்படவே மாட்டார்கள். ஆனால், தூக்குத்தண்டனை போடப்போவதாகத் தீர்ப்பு கூறியவுடன் அவர்கள் நீதிபதியை வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். அழக்கூடிய, சிறுநீர் இருக்கக்கூடிய பைத்தியத்தைப்போல அட்டகாசம் செய்யக்கூடிய, மயக்கமடைந்து கீழே விழக்கூடிய எத்தனையோ கைதிகளை அவர் பார்த்திருக்கிறார். சிலர் கைகளைக் குவித்துக் கொண்டு கடவுளைப் பார்த்துத் தொழுவார்கள். ஆனால், தூக்கில் போடப்போவதாகச் சொன்னதைக் கேட்டபிறகு அமைதியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் கைதியை இதுவரை சிறை சூப்பிரெண்டெண்ட் வாழ்க்கையில் பார்த்ததேயில்லை. அவர் மீண்டும் ராகவராவின் முகத்தை உற்றுப் பார்த்தார். ஒருவேளை அந்தச் சிரிப்பிற்குப் பின்னால் ஏதாவது பயம் மறைந்திருக்கலாம். ஏதாவது ஆசையோ அல்லது உறங்கிக் கிடக்கும் வெறியோ அங்கு இருக்கலாம். ஆனால், அதைப் பார்க்கக்கூடிய கண்கள் சிறை சூப்பிரெண்டெண்டுக்கு இல்லை. அவர் வாழ்க்கை முழுவதும் குற்றவாளிகளுடைய முகத்தின் அர்த்தத்தை மட்டுமே படித்திருக்கிறார். பிறகு எப்படி அவரால் ஒரு மனிதனின் முகத்தைப் புரிந்து கொள்ள முடியும்? சிறிது வெட்கத்துடனும் கோபத்துடனும் சிறை சூப்பிரெண்டெண்ட் அங்கிருந்து கிளம்பினார்.
சூப்பிரெண்டெண்ட் அங்கிருந்து போனபிறகும் வார்டன்கள் இருவரும் அங்கேயே நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்களில் சற்று வயது அதிகமான மனிதன் முன்னால் வந்தான். "உன் கைகளுக்கு விலங்கு போடணும்னு எங்களுக்குக் கட்டளை போடப்பட்டிருக்கு. ஆனா, நாங்க உன் கைகள்ல விலங்கு போட விரும்பல. நீ சிறை அறைக்குள்ளே நடக்கலாம்..."
"உங்க வேலைக்கு ஏதாவது பிரச்சினை வரும்ன்றது மாதிரி இருந்தா, நீங்க விலங்கு போடுங்க." ராகவராவ் சாதாரணமாகச் சொன்னான்.
"இல்ல... நாங்க அதை மனசுல நினைச்சு பயப்படல!"- வார்டன்மார்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
ராகவராவ் அமைதியாக இருந்தான்.
வயதான வார்டன் சற்று நெருக்கமாக வந்து தாழ்ந்த குரலில் கேட்டான்: "மகனே, நீ ஏதாவது சாப்பிட விரும்புறியா? அதாவது சர்பத்தோ வேற ஏதாவதோ... சொல்லு... நான் வாங்கிக் கொண்டு வந்து தர்றேன்!"
"வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். இப்போ மணி என்ன இருக்கும்?"
வயதான வார்டன் 'டூட்டி' அறைக்குச் சென்றுவிட்டு, திரும்பி வந்து சொன்னான்: "அஞ்சு மணி..."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook