
காட்டு செண்பக மரத்தைப் பார்க்கும்போது என்னுடைய மனதில் பலவிதப்பட்ட உணர்ச்சிகளும் அலைமோதும். பல காரணங்களாலும் மற்ற பூ மரங்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்ற ஒரு வினோதமான மரம்தான் காட்டு செண்பகம். மலைச்சரிவிலும் கோவில் இருக்கும் இடங்களிலும் சுடுகாட்டிலும் மதில்களின் மூலையிலும் அது கொடிகுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும். கேரளத்தில் மட்டுமல்ல நிறத்திலும் மணத்திலும் வேறுபட்டிருக்கும் மலர்களுடன் அது சிலோனிலும் மலேயாவிலும் இந்தோனேஷியாவிலும் கூட இருக்கிறது.
இவைகளெல்லாம் உதிர்ந்து வயதாகி முற்றிப்போன அதன் கிளைகள் பொன் நிறத்தில் பூக்களைச் சூடி நிற்பதைப் பார்க்கும் போது இனம்புரியாத ஒரு பயம் மனதில் தோன்றும். முள்கிரீடம் போலவும், எலும்புக்கவசம் போலவும், பவளப்புற்று போலவும் குஷ்டரோகியின் கையைப் போலவும் அந்த மரம் என் கண்களுக்கு முன்னால் மாறி மாறித் தோன்றும்.
காட்டு செண்பகத்தைப் பற்றி இப்படிப்பட்ட எண்ணங்கள் நான் பாலித் தீவுக்குப் போவதற்கு முன்பு என்னிடம் இருந்தன. பாலியில் நான் பார்த்த ஒரு காட்டு செண்பக மரமும் அதற்கு அடியில் உட்கார்ந்திருக்கும் ஒரு வயதான கிழவியும்- அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் காதல் கதையும்- என் மனதில் ஒரு புதிய ஓவியத்தை வரைந்தது. இப்போது காட்டு செண்பக மரத்தைப் பார்க்கும்போது அந்த ஓவியம்தான் என் மனதிற்குள் தோன்றுகிறது. விவசாயிகளின் வீடுகளில் கலை வேலைப்பாடுகளுடன் இருக்கும் மரச் சிற்பங்கள் இருப்பதைத் தேடி ஸாம்பி என்ற ஆசாரியுடன் நான் பாலித் தீவின் ஒரு மூலையில் இருக்கும் கிராமப் புறங்களில் நடந்து கொண்டிருந்தேன். அப்படிப் போகும்போது சம்புவன் என்ற ஒரு காட்டு கிராமத்திற்குச் சென்றோம். அங்கு மரத்தில் சிற்பங்கள் செய்யும் ஒரு வயதான மனிதர் இருக்கிறார் என்றும் 'கொடிகளில் ஓய்வெடுக்கும் பறவை'களும் 'தாமரை மொட்டுகளில் சிக்கிக் கிடக்கும் மீன்'களும் அந்த மனிதரின் அருமையான கலைப் படைப்புகளென்றும் சொல்லி, ஸாம்பி நடுப்பகல் நேரத்திற்கு என்னை சம்புவன் கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்.
அந்தச் சிற்பியின் வீட்டை நோக்கி நடக்கும்போது காட்டு மூலையில் ஆமையின் உடலமைப்பில் ஒரு பாறைக்குப் பின்னால் ஒரு காம்போஜ மரத்திற்கு அடியில் (காட்டு செண்பக மரத்தை காம்போஜம் என்றுதான் பாலிக்காரர்கள் அழைக்கிறார்கள்) ஒரு வயதான கிழவி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அவளுக்கு முன்னால் ஒரு கட்டு சுள்ளி விறகு இருந்தது. காட்டில் விறகு பொறுக்குவதற்காக வந்த ஒரு கிழவி களைப்பு போக்க அங்கு உட்கார்ந்திருக்கிறாள் போலிருக்கிறது என்று நான் நினைத்தேன்.
"பாத்ரீதேவி, உன் காதலன் வந்தாச்சா?"- என்னுடனிருந்த ஸாம்பி ஆசாரி அந்தக் கிழவியைப் பார்த்து மரியாதையுடன் அழைத்துக் கேட்டார்.
கிழவி ஈறுகள் தெரிய சிரித்தவாறு பதில் கூறுவதைக் கேட்டேன்.
"வருவார்... வருவார்... இன்னைக்கு ராத்திரி கட்டாயம் வருவார்."
நான் அந்தக் கிழவியை உற்றுப் பார்த்தேன். காய்ந்துபோன அன்னாசிப் பழத்தைப் போல சுருக்கங்கள் விழுந்த முகம். ஆடை எதுவும் இல்லாத மார்பில் முன்பு இளமை ஆட்சி செய்து கொண்டிருந்த அடையாளங்கள் இடிந்து கிடந்தன. உடுத்தியிருந்த ஸாரோங் பழையதாக மாறி, அழுக்குப் படிந்து புள்ளிமானின் தோலைப்போல மாறியிருந்தது. துளைபோடப்பட்ட காதில் ஓலைச் சுருள்கள் நுழைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. வெண் சாமரத்தைப் போல இருந்தது தலைமுடி. அந்த முடியில் காட்டு செண்பக மலர்கள் சூடப்பட்டிருந்தன.
அந்தக் கிழவியின் கண்கள்தான் என்னைப் பெரிதும் கவர்ந்தன. முதுமை சற்றும் தொட்டுப் பார்த்திராத அற்புதமான கண்கள். நீல இரத்தினங்களைப் போல அவை பிரகாசித்துக் கொண்டிருந்தன.
நாங்கள் அங்கிருந்து புறப்பட்டபோது நான் ஸாம்பியிடம் கேட்டேன்: "அந்தப் பாட்டி யாருக்காகக் காத்திருக்கா?"
"அவளோட காதலன் முளுக்கு ஆசாரிக்காக..." ஸாம்பி சிரித்துக்கொண்டே சொன்னார்.
காதலன் முளுக்கு ஆசாரி! எனக்கு எதுவும் புரியவில்லை. இப்படி எடுத்தவுடன் புரிந்துகொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் பாலியில் இருக்கின்றன.
ஸாம்பி தொடர்ந்து சொன்னார்: "பாத்ரித் தம்புராட்டி தன்னோட காதலனை எதிர்பார்த்து இப்படி உட்கார்ந்திருக்கிறது எப்போயிருந்துன்னு நினைக்கிற... நான் பிறக்கறதுக்கு முன்னாடியிருந்தே..."
ஸாம்பிக்கு வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்துக்குள் இருக்கும். அதாவது- நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்து அந்தப் பெண் யாரையோ எதிர்பார்த்து அங்கு உட்கார்ந்திருக்கிறாள்.
"எதுக்காக அவள் அங்கு அப்படி உட்கார்ந்திருக்கா? அவளுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா?"- நான் ஸாம்பியைப் பார்த்துக் கேட்டேன்.
"இல்ல... அவள் ஒரு தேவதை"- ஸாம்பி பக்தி கலந்த குரலில் சொன்னார்: "கிராம மக்கள் வழிபடுற ஒரு புதிய தேவதை."
நாங்கள் மரச் சிற்பியின் இடத்தை அடைந்தோம். அவருடைய வீடு பூட்டிக் கிடந்தது. ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததோம்.
திரும்பி வரும்போது ஸாம்பி காம்போஜ மரத்திற்குக் கீழே விறகு கட்டுடன் காத்திருக்கும் கிழவியின் கதையை விளக்கமாக என்னிடம் சொன்னார். சம்புவன் மலையின் மறுபக்கத்தின் அடிவாரத்தில் பழைய பாலி அரச பரம்பரையில் ஒரு சத்திரிய குடும்பம் இருந்தது. தங்களிடமிருந்த சொத்துக்களையெல்லாம் இழந்து பழைய புகழின் நிழலில் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பரிதாபமான குடும்பம் அது. இடிந்து விழுந்து கிடக்கும் மதில்களுக்குள் அரண்மனை என்ற பெயரில் ஒரு கட்டிடம்... அதற்குள் சில மனிதப் பிரேதங்கள் வசித்தன. சொக்கோர்தெ (சத்திரியன்) ஹ்ராயி என்பதுதான் குடும்பத் தலைவரின் பெயர்.
மலையின் இந்தப் பக்கத்தில் ஒரு சூத்திரக் குடும்பம் புதிதாக வந்து குடியேறியது. அந்தக் குடும்பத்தில் முளுக்கு என்ற இளைஞன் இருந்தான். அவன் ஒரு மர வேலைக்காரன். பாலியின் கலைப்பொருட்களை- குறிப்பாக மரச்சிலைகளை கிராமங்களிலிருந்து பழைய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பொருட்களை வாங்கி ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்திற்குக் கொடுக்கக்கூடிய ஒரு வியாபாரத்தையும் முளுக்கு செய்து கொண்டிருந்தான்.
சம்புவன் மலையின் அந்தப் பக்கத்தில் ஹ்ராயி தம்புரானின் அரண்மனையில் அற்புதமான சில பழைய மரச் சிற்பங்கள் இருக்கின்றன என்பதை முளுக்கு எப்படியோ தெரிந்து கொண்டான். பிராமண புரோகிதர் இடுபாகுஸ் மகாதேவனுக்குச் சிறிது பணத்தைக் கொடுத்து அவர் மூலம் முளுக்கு, ஹ்ராயுடைய அரண்மனையில் இருக்கும் பழைய மரச்சிற்பங்களைப் போய்ப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கினான். அரண்மனைக்குள் நுழைந்து பார்த்த போது முளுக்கு ஆச்சரியத்தில் உறைந்துபோய் விட்டான். விலை மதிக்க முடியாத பழைய மரச்சிற்பங்கள் ஏராளமாக அங்கு ஒட்டடை படிந்தும் தூசு படிந்தும் கிடந்தன. நடனமாடும் பெண்கள், நடனமாடும் ஆண்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் ஆகியவை அற்புதமான கலை வேலைப்பாடுகளுடன் பல இனத்தைச் சேர்ந்த மரங்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்தன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook