
வாத்தியம் வாசிப்பவர்களும் பாடகர்களும் கூட்டமாக இருப்பது போன்ற ஒரு மரச்சிற்பம் அங்கு இருந்தது.
வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஹ்ராயி தம்புரான் அந்த மரச் சாமான்களை விற்பதற்குத் தயாராக இருக்கிறார் என்பதை முளுக்கு தெரிந்து கொண்டான். அவன் பக்குவமாக அவரைப் பார்த்துப் பேசினான். இதுவரை ஹ்ராயி அவற்றை விற்காமல் இருந்ததற்குக் காரணம் சுய கௌரவமே. கடைசியில் அவற்றை விற்க ஹ்ராயி சம்மதித்தார். ஒரே ஒரு நிபந்தனையை அவர் விதித்தார். மரச்சாமான்களை அவர் விற்கும் விஷயம் ரகசியமாக இருக்க வேண்டும். முளுக்கு ஒருவனுக்குத் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.
முளுக்கு அப்படியே செய்வதாக அவருக்குச் சத்தியம் செய்து கொடுத்தான்.
பழைய கலை வேலைப்பாடுகளின் மதிப்பு என்ன என்பதைப் பற்றிய தெளிவான அறிவு இல்லாத ஹ்ராயிக்கு, அந்த மரப்பொருட்களுக்கு முளுக்கு தீர்மானித்த பணம் மிகவும் அதிகம் என்பதைப் போல் தோன்றியது.
மரச்சிற்பங்கள் ஒவ்வொன்றையும் யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக இரவு நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் திட்டம். முளுக்கைத் தவிர வேறு யாரும் அங்கு நுழையக்கூடாது என்றும் ஹ்ராயி சொன்னார்.
அந்த வகையில் ஹ்ராயியின் அரண்மனையில் எந்நேரமாக இருந்தாலும், சர்வ சாதாரணமாக நுழைவதற்கான வாய்ப்பை முளுக்கு உருவாக்கிக் கொண்டான்.
ஒருநாள் இரவு முளுக்கு ஒரு மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் நிலவறையில் இருந்த கலைப் படைப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் இருந்த முழங்காலிட்டு நடனமாடிக் கொண்டிருந்த ஒரு நடன மங்கையின் புதிய சிற்பம் முளுக்கின் கவனத்தை ஈர்த்தது. முளுக்கு அந்தப் பெண் சிற்பத்தின் தோளைத் தடவினான். அடுத்த நிமிடம் அவன் அதிர்ச்சியடைந்து போய்விட்டான். அந்த நடன மங்கையின் கைகள் அசைந்தன. கண்களும் கால்களும் நடன முத்திரைகளுடன் இயங்கின.
திடீரென்று மெழுகுவர்த்தி அணைந்து விட்டது- யாரோ ஊதி அணைத்ததைப் போல் முளுக்கு உரத்த குரலில் கத்த நினைத்தான். ஆனால், ஓசை வெளியே வந்தால் தானே!
அப்போது இருட்டில் மணிகள் குலுங்கியதைப் போல ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது. தொடர்ந்து முளுக்கின் கன்னத்தில் யாரோ மூச்சு விடுவதைப் போல இருந்தது. அவனுடைய காதில் ஒரு மென்மையான குரல் சொன்னது: "பயப்படாதே... நான் பேயோ, கெட்ட ஆவியோ இல்ல... என் பேரு பாத்ரி..."
பாத்ரி... ஹ்ராய தம்புரானின் ஒரே மகள்.
முளுக்கு ஒரு கனவுலகில் மூழ்கித் தன்னையே மறந்து விட்டான்.
பாத்ரி தம்புராட்டியின் மெல்லிய கைகள் முளுக்கின் கழுத்தை இறுகச் சுற்றின.
நிலவறையில் முளுக்கிற்கு ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த இரத்தினம் சொந்தமானது.
பாத்ரி வேறொரு கிராமத்தைச் சேர்ந்த சத்திரிய இளவரசனான ஹுராவைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தாள். பழைய அந்தஸ்துக்கு ஏற்றபடி பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் திருமணத்தை நடத்துவதற்கு கையில் பணமில்லாத ஹ்ராயி தன் மகளின் திருமணத்தை நடத்தாமல் நீட்டிக்கொண்டே போனார். இப்போது அரண்மனையிலிருந்த மரச் சிற்பங்களை விற்றுக்கிடைக்கும் பணத்தைக் கொண்டு பாத்ரியின் திருமணத்தை மிகவும் விமரிசையாக அவர் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் பாத்ரி, இளைஞனும் கலை விற்பன்னனுமான முளுக்கை அரண்மனையில் தனியாகப் பார்க்க நேர்ந்தது. எல்லாவற்றையும் மறந்து அவள் அந்த காதலனிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்துவிட்டாள்.
மரச் சாமான்களை அரண்மனையிலிருந்து எடுத்துக் கொண்டு போகும் வேலையை முளுக்கு மிகவும் மந்தமாகச் செய்து கொண்டிருந்தான். அப்படியே பல இரவுகள் கடந்து போயின. நிலவறையில் பாத்ரி, முளுக்கு- இருவரின் காதல் நடனங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.
மரச்சிற்பங்களும் கலை வேலைப்பாடுகள் கொண்ட வீட்டுப் பொருட்களும் முடிந்த பிறகு, அரண்மனையின் தூண்களிலும் கதவுகளிலும் ஜன்னல்களிலும் சுவர்களிலும் மேற்கூரையிலும் இருந்த மர வேலைப்பாடுகளில் முளுக்கு கவனம் செலுத்த ஆரம்பித்தான். பணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த ஹ்ராயி அவற்றையும் எடுத்துக் கொள்ளும்படி அவனிடம் கூறினார்.
அந்த கலை வேலைப்பாடுகள் கொண்ட பலகைகள் ஒவ்வொன்றையும் மிகவும் கவனத்துடன் பெயர்த்து எடுக்க முளுக்கிற்கு பல இரவுகள் ஆனது. இப்படி முளுக்கு மூன்று மாத காலம் ஹ்ராயியின் அரண்மனையில் ஒரு புது மணமகனைப் போல வலம் வந்து கொண்டிருந்தான்.
அரண்மனையிலிருந்த கலைப்பொருட்களெல்லாம் எடுக்கப்பட்டு விட்டன. முளுக்கிற்கு தன் காதல் தேவதையிடம் இறதி விடை பெற்றுக் கொள்வதற்கான இரவு வந்தது.
பாத்ரி முளுக்கிடம் 'த்யாங் பாமித்' (இறுதி விடை) சொல்லவில்லை. அவள் மனதில் உள்ளதை திறந்து கூறினாள். அவளுக்கு சத்திரிய இளவரசனான ஹுரோவை வேண்டாமாம். இளம் அழகனும் கலைஞனுமான முளுக்கின் மனைவியாக ஆவது என்று மனதில் தீர்மானித்துவிட்டதாக அவள் சொன்னாள்.
ஒரு சத்திரிய இளவரசியை ஒரு ஆசாரி இளைஞன் திருமணம் செய்து கொள்வது என்றால்...! சூறாவளியும் காட்டுத்தீயும் கிராமத்தில் உண்டாகப்போவது நிச்சயம்.
என்ன செய்வது என்று தெரியாமல் முளுக்கு குழம்பி நின்றான்.
பாத்ரி காதலனிடம் சொன்னாள்: "நாம கந்தர்வ திருமணம் செய்துக்கிட்டு கிராமத்தை விட்டுப் போயிடுவோம்."
முளுக்கு இந்த விஷயத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். அரண்மனையிலிருந்து கொண்டுபோன மரச் சிற்பங்களை விற்பனை செய்த வகையில் டச் நிறுவனத்திடமிருந்து மிகப்பெரிய தொகையை முளுக்கு சம்பாதித்திருந்தான். அந்தப் பணத்தைக் கொண்டு இருவரும் தூரத்திலிருக்கும் சிங்கராஜாவில் போய் வாழலாம். அங்கு அவர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது.
திருமணம் எளிமையாக என்றாலும் பழைய ஆச்சாரங்களின் படிதான் நடக்க வேண்டும் என்பதில் பாத்ரி உறுதியாக இருந்தாள். பாத்ரி மாலை நேரத்தில் விறகு பொறுக்குவதற்காக சம்புவன் காட்டிற்கு வருவாள். விறகுக் கட்டுடன் அவள் காட்டின் வடகிழக்கு மூலையில் ஆமைப் பாறைக்குப் பின்னால் காம்போஜ மரத்திற்குக் கீழே அவனுக்காகக் காத்திருப்பாள். அப்போது அவளுடைய காதலன் முளுக்கு அங்கு வந்து அவளைத் தட்டிக்கொண்டு போக வேண்டும். (விறகுக் கட்டும் அதன் மீது ஒரு இடுப்புக் கச்சையும் யாருமில்லாமல் கிடப்பதைப் பார்த்து மக்கள் தங்களுக்குள் நினைத்துக் கொள்வார்கள்- அவளை 'கந்தர்வன்' கவர்ந்து கொண்டு போய் விட்டான் என்று இதுதான் ஆச்சாரம்)
சொன்னது மாதிரியே அன்று மாலை பாத்ரி இளவரசி அரண்மனையிடம் இறுதிவிடை பெற்றுக் கொண்டு சம்புவன் காட்டை நோக்கி நடந்தாள். விறகு பொறுக்கி கட்டி, ஆமைப் பாறைக்குப் பின்னாலிருந்த காம்போஜ மரத்திற்குக் கீழே போய் அமர்ந்து அவனுக்காகக் காத்திருந்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook