
ஆகாயம் அந்திச் சிவப்பு நிறத்தல் காட்சியளித்தது.
அவளுடைய கந்தர்வன் வரவில்லை.
மாலை மறைந்தது. காட்டில் இருள் படர்ந்தது.
அதற்குப் பிறகும் அவளுடைய காதலன் வரவில்லை.
ஆகாயம் புள்ளி ஆடையை உடுத்தியது. இரவில் நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது.
அவளுடைய காதலன் வரவில்லை.
மறுநாள் பொழுது விடிந்த பிறகும் அவள் விறகுக் கட்டுடன் அந்தக் காட்டு செண்பக மரத்திற்குக் கீழே அவனுக்காகக் காத்து அமர்ந்திருந்தாள்... ஒரு பித்துப் பிடித்த பெண்ணைப் போல.
பாத்ரியின் காதலனுக்கு என்ன ஆனது? அந்த ஆசாரி அவளை ஏமாற்றி ஓடிவிட்டானா?
பாத்ரி சம்புவன் காட்டில் முளுக்கை எதிர்பார்த்து காத்திருந்தபோது, மலையின் மறுபக்கத்தில் ஒரு சம்பவம் நடந்தது அவளுக்குத் தெரியாது. இன்றுவரை அவளுக்கு அந்த விஷயம் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. பாத்ரி தம்புராட்டியும் ஆசாரி முளுக்கும் அரண்மனையின் நிலவறையில் கடைசி தடவையாக அங்கு பேசியதை அங்கு இருக்கும் கிழவியான தாசி ராக்கா தானிய அறையில் ஒளிந்திருந்து கேட்டாள்.
மறுநாள் பொழுது விடிந்தவுடன் ராக்கா பாத்ரியின் எதிர்கால கணவனான ஹுராவைத் தேடிச் சென்று தான் கேட்ட விஷயத்தை அவனிடம் கூறினாள். ஹுராவிடமிருந்து அவளுக்கு நல்ல ஒரு பரிசு அதற்காகக் கிடைத்தது. அன்று மாலை ஹுராவும், உடல் பலம் கொண்ட மூன்று நான்கு ஆட்களும் சம்புவன் மலையின் மூலையில் ஒளிந்திருந்தார்கள். பயணத்திற்கான மூட்டையுடனும், பணப்பையுடனும் சம்புவன் காட்டை நோக்கி பாத்ரியைத் தேடிவந்த முளுக்கை அவர்கள் ஓடிப்போய்ப் பிடித்தார்கள். அவர்கள் அவனை அடித்துக் கொன்றார்கள். பிணத்தை அங்கேயே ஒரு குழியைத் தோண்டி புதைத்து மூடிவிட்டார்கள். பணப்பையை எடுத்துக்கொண்டு அவர்கள் திரும்பிப் போனார்கள்.
அரண்மனையில் மகள் இல்லாததைத் தெரிந்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளான ஹ்ராயி மறுநாள் காலையில் அவள் சம்புவன் காட்டில் அமர்ந்திருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டார் ஹ்ராயி அங்கு சென்றார். கிராம மக்கள் சிலரும் அங்கு இருந்தார்கள்.
ஹ்ராயி தன் மகளை வாரி அணைத்துக் கொண்டார்.
பாத்ரி அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழவில்லை.
"நான் என்னோட காதலனுக்காகக் காத்திருக்கேன்... நான் என் காதலன் முளுக்குகூட போகப்போறேன்."
அவள் எல்லாருக்கும் தெரியச் சொன்னாள்.
மகளின் வார்த்தைகளைக் கேட்ட ஹ்ராயி தன் காதுகளை மூடிக்கொண்டு அரண்மனையை நோக்கித் திரும்பி ஓடினார்.
அன்றே ஹ்ராயி, இடு பாகுஸ் மகாதேவனை வரவழைத்து பாத்ரிக்குப் பிண்டம் வைத்து, அவளை குலத்திலிருந்து நீக்கி வைத்தார்.
அதே நேரத்தில், கிராம மக்கள் பாத்ரியை சம்புவன் காட்டின் ஒரு தேவதையாக வழிபட்டார்கள்.
கிராம மக்கள் காம்போஜ மரத்தடியில் தேவியைப் பூ அணிவித்து பூஜை செய்தார்கள். அவர்கள் தேவிக்கு அப்பத்தையும், பழங்களையும் மற்ற உணவுப் பொருட்களையும் நிவேதனமாகத் தந்தார்கள். விறகுக் கட்டையும் அவர்கள் பூஜை செய்து வணங்கினார்கள்.
ஆட்களுக்கு காய்ச்சல் வந்தால் அவர்கள் பாத்ரிதேவிக்கு நேர்ந்தார்கள். சிலரின் காய்ச்சல் நீங்கும். அப்போது தேவியின் புகழ் மேலும் பெருகும். இப்படியே வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
பாலித்தீவில் எத்தனையோ மாற்றங்கள் நடந்தன.
டச்சுக்காரர்கள் போய் நாடு விடுதலை ஆனது.
ஹ்ராயியின் வம்சம் வேரோடு ஒன்றுமில்லாமல் போனது. அரண்மனை இருந்த இடத்தில் இப்போது ஒரு மாம்பழத் தோப்பு இருக்கிறது. டச்சுக்காரர்களுக்கு எதிராக நடந்த போரில் ஹுரா கொல்லப்பட்டான்.
இருந்தாலும், பாத்ரி நாற்பத்தைந்து வருடங்கள் கடந்த பிறகும் அங்கு- அந்த காட்டு செண்பக மரத்திற்குக் கீழே விறகுக் கட்டுடன் தன்னுடைய காதலனை எதிர்பார்த்து அமர்ந்திருப்பது தொடர்கிறது...
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு பாலியில் சம்புவன் காட்டில் செண்பக மரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்தக் காதல் தேவியை நான் பார்த்தேன். பாத்ரி இப்போதும் அதே இடத்தில்தான் அமர்ந்திருக்கிறாளா? இல்லாவிட்டால், வேறொரு காதலன்- மரணம் என்ற பெயரைக் கொண்ட காதலன்- அவளைத் தட்டிக்கொண்டு போயிருப்பானா?
எது எப்படியோ, ஒன்று மட்டும் நிச்சயம் மிகவும் வயதாகி முதுமை நிலையில் இருக்கும் கிளைகளில் பொன் நிறத்தில் மலர்கள் பூத்துக் குலுங்க நின்றிருக்கும் அந்தக் காட்டு செண்பக மரம் இப்போதும் அங்கு இருக்கத்தான் செய்கிறது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook