Lekha Books

A+ A A-

வெள்ளம் - Page 2

vellam

செம்பேரி ஆற்றின் கரையில் நாங்கள் அமர்ந்திருந்து, ஒரோதாவை மனதில் நினைத்துப் பார்த்தபோது எங்களுக்கு அழுகைதான் வந்தது.

ஒரோதாவை நினைக்கிறபோது அழுகையை பொதுவாக எங்களால் எப்போதுமே அடக்க முடியாது. அவளைப் பற்றி நினைக்காமலும் இருக்க முடியாது.

எங்களின் வீட்டுக்கு மிகவும் அருகில் ஓடிக் கொண்டிருக்கிறது செம்பேரி ஆறு. ஆற்றின் இரு பக்கங்களிலும் பச்சைப் பசேலென பயிர்கள் முகம் காட்டி சிரித்துக் கொண்டிருக்கின்றன.

பயிர்கள் விளையும் நிலங்களைத் தாண்டி இப்போதும் பயங்கரமான மிருகங்கள் வாழக்கூடிய அடர்ந்த காடு மலைப் பக்கம் இருக்கிறது. எங்களைச் சுற்றிலும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த மாதிரி மலைகள் சூழ்ந்திருக்கின்றன. ஆற்றையொட்டி இருக்கும் இயற்கையின் வனப்பில் மனிதர்களின் கடுமையான உழைப்பும், இடைவிடாத முயற்சியும் எந்தக் காலத்திலும் ஞாபகத்தில் வைத்திருக்கக் கூடிய ஒரு சரித்திரமும் மறைந்து கிடக்கிறது. அந்தச் சரித்திரத்தின் பக்கங்களில் ஏதோ ஒரு இடத்தில் ஒரோதா தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள். ஆற்றையொட்டி இருக்கும் ஒவ்வொரு பசுமையான தாவரமும் ஒவ்வொரு புல்லும் ஒரோதாவின் பெயரைச் சொல்லும் நினைவுச் சின்னங்கள் என்பதை மனதில் நினைத்துப் பார்த்தபோது எங்களுக்குத் திரும்பவும் அழுகை வந்தது.

செம்பேரி ஆற்றையொட்டி உள்ள கிராமங்கள் அனைத்தும் இன்று நல்ல செழிப்பாகவும் பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையிலும் இருக்கின்றன. நல்ல விளைச்சல் தரும் விவசாய நிலங்கள் அங்கு இருக்கின்றன. கிராமங்களின் தலைநகரமான செம்பேரி என்ற கிராமம் இன்று ஒரு சிறு நகரம் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

செம்பேரியில் சர்ச் இருக்கிறது. பள்ளிக்கூடம் இருக்கிறது. மருத்துவமனை, தந்தி அலுவலகம், தொலைபேசி, சந்தை, மதுக்கடைகள் எல்லாமே இருக்கின்றன. அங்கு பெருநாள் இருக்கிறது. திருவிழாக்கள் இருக்கின்றன. கல்வி கற்கும்... மன்னிக்க வேண்டும்... தவறாக வந்துவிட்டது- கல்லூரிக்குப் போய் வந்த இளைஞர்கள் உண்டு. ஹிப்பிகள் உண்டு. மேல்நாட்டு இசை உண்டு. யெஹீதிமெனுஹின் உண்டு. ரவிசங்கர் உண்டு. உஷா உதூப் உண்டு. போணி எம் உண்டு. கஞ்சா உண்டு. பஸ் உண்டு. கார் உண்டு. லாரி உண்டு. மாட்டு வண்டி உண்டு. முதலாளிமார்கள் உண்டு. ரவுடிகள் உண்டு. விலைமாதர்கள் உண்டு. பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் உண்டு. பிக்பாக்கெட்டுகள் உண்டு. திருடர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் உண்டு. எதற்கு இதெல்லாம்... மனித நாகரீகத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய எல்லா விஷயங்களுமே அங்கு உண்டு. ரெயில்வே ஸ்டேஷனும், விமான நிலையமும், எம்பயர் ஸ்டேட் கட்டிடமும் அங்கு வந்து விட்டால் செம்பேரி அடுத்த நிமிடம் நியூயார்க்காக மாறிவிடும். தேம்ஸ் நதி இந்த வழியே ஓடினால் செம்பேரி லண்டனாகிவிடும். லோவர் பேலஸ்ஸைப் பெயர்த்து அங்குள்ள பள்ளிக்கூடத்திற்கு அருகில் கொண்டு போய் நிறுத்தினால் செம்பேரி பாரீஸாக மாறிவிடும். ரெட் ஸ்கொயரும் க்ரெம்ளின் அரண்மனையும் இருந்தால் செம்பேரி மாஸ்கோவாக மாறும். ஜப்பானிய மொழியைப் பேசிக் கொண்டு கெய்ஷா இளம் பெண்கள் சுற்றித் திரிந்தால் அதுவே டோக்யோவாக ஆகிவிடும். இதெல்லாம் எதற்கு... உலகத்தின் நவநாகரீகமான நகரங்களுக்கும் செம்பேரிக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிக மிகக் குறைவு.

சமீபத்தில் செம்பேரியைப் போய்ப் பார்த்த ஒரு வெளிநாட்டுக்காரர், அங்கு பார்வையாளர்களின் கருத்தை எழுதி வைப்பதற்கான குறிப்புப் புத்தகம் எதுவும் வைக்கப்படாததால், ஆங்கில வார்த்தைகளில் செம்பேரியைப் பற்றிய தன்னுடைய கருத்தை இப்படி கூறினார். “உங்களின் செம்பேரி மிக மிக அழகானது. நான் இந்த இடத்தைக் காதலிக்கிறேன். இங்கேயே எனக்கு வாழவேண்டும் போல் இருக்கிறது.”

இப்படிச் சொன்னது ஒரு வெள்ளைக்காரர் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தியர்களுக்கு இந்த வார்த்தைகளின் முக்கியத்துவமும், மதிப்பும் என்ன என்பது புரிகிறது அல்லவா? காரணம்- வெள்ளைக்காரர்கள் எப்போதும் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைக் கொஞ்சமும் மறைக்காமல் கூறுபவர்கள் ஆயிற்றே!

சுருக்கமாகச் சொல்லப்போனால் செம்பேரி ஒரு வளர்ச்சியடைந்த ஊர்.

இது செம்பேரியின் இன்றைய முகம். இதன் பழைய கதை இதுவல்ல. அன்று செம்பேரிக்கு ஒரு முகம் என்பதே கிடையாது. செம்பேரி பகுதியில் மனிதர்களோ விவசாய நிலங்களோ அன்று இல்லை. கடைகளோ, சந்தையோ, சாலைகளோ, தெருக்களோ எதுவுமே இல்லை. செம்பேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அப்போது அடர்த்தியான காடுகளாக இருந்தன. மூடிக் கிடக்கும் பனிப் படலத்திற்குக் கீழே, மலைகளின் அடிவாரத்தில், ஆற்றின் கரையை ஒட்டி, காட்டு விலங்குகள் இரையைத் தேடி அலைந்து கொண்டிருந்த பயங்கரமான காடுகள் இருந்த பகுதி இது. காட்டுக்குள் நுழைவதற்கான வாசலாக செம்பேரி அன்று திகழ்ந்தது. அன்று செம்பேரி பகுதிக்குள் வருவதற்கு மனிதர்கள் பயந்தார்கள். நாகரீகம் அச்சப்பட்டது. தெய்வங்கள் கூட அஞ்சி நடுங்கின. இல்லாவிட்டால் கோவில்களோ சர்ச்சோ இங்கு உண்டாகியிருக்கும் அல்லவா?

பிறகு மனிதர் இந்தப் பகுதியில் வாழலாம் என்று வந்தபிறகும், அவர்கள் பயங்கர மிருகங்களுடனும், எந்தவிதத்திலும் ஒத்துழைக்காத மண்ணுடனும், காட்டு மரங்களுடனும் போராடி இங்கு தங்களின் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்து பல வருடங்களுக்குப் பிறகு கூட செம்பேரிப் பகுதிக்கு வர தெய்வங்களும், நாகரீகமும் மிகவும் தயங்கின. அந்தக் கால கட்டத்தில் செம்பேரியில் வசித்தவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும், தெய்வங்களைத் தொழுது தங்களின் கஷ்டங்களைச் சொல்லி வேண்டிக் கொள்வதற்கும் தனிப்பறம்பு வரை போக வேண்டி இருந்தது. செம்பேரியில் இருக்கும் குழந்தைகள் படிப்பதற்காக ஸ்ரீகண்டபுரத்திற்கோ தனிப்பறம்பிற்கோ நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு படிப்படியாகத்தான் இங்கு வசிப்பவர்கள் செம்பேரியில் தெய்வங்களைக் கொண்டுவந்தார்கள். நாளடைவில் நாகரீகம் கொஞ்சம் கொஞ்சமாக செம்பேரிக்குள் நுழைய ஆரம்பித்தது.

இப்படி செம்பேரிப் பகுதியின் வரலாறு கடந்த போன பலநூறு வருடங்களில் உண்டான ஒரு மிகப் பெரிய மாற்றம் அல்லது பல மாற்றங்களை உள்ளடக்கிக் கொண்ட ஒன்று என்று கூறுவதே சாலச்சிறந்தது. இந்த வரலாற்றை ஒரு இதிகாசம் என்று கூடக் கூறலாம். இந்த இதிகாசம் எத்தனையோ தியாகங்களின், போராட்டங்களின், துக்கங்களின், சண்டைகளின் அன்பின், உணர்ச்சி வெள்ளத்தின், பிரிவுகளின் உயிரோட்டமான சின்னச்சின்ன கதைகளால் நிரம்பியிருக்கிற ஒன்று. அந்தக் கதைகளுக்கு எல்லாக் காலங்களிலும் சாட்சியாக இருந்தது மழைக்காலத்தில் வயிறு பெருத்து பூரண கர்ப்பிணியாகவும், கோடை காலத்தில் வறண்டு போன மணலின் நரம்புகளைப் போன்று சின்ன நீரோட்டமாக ஓடிக் கொண்டிருந்த செம்பேரி ஆறு மட்டுமே.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel