Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 9

Kizhavanum kadalum

“வாழ்நாள் முழுவதும் புலர்காலைப் பொழுது சூரியன் என் கண்களை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது.” கிழவன் சிந்தித்தான்: “எனினும் கண்களுக்கு இப்பொழுது எந்தவொரு பிரச்சினையும் இல்லை. மாலை நேரத்தில் கண்களில் இருட்டு நுழையாமல் என்னால் சூரியனை நேராகப் பார்க்க முடியும். சாயங்கால நேரத்திலும் சூரியனின் கடுமை அதிகமாகவே இருக்கிறது. ஆனால், காலையில்தான் கண்களில் வேதனையே உண்டாகிறது.”

ஒரு நிமிடம், ஒரு படைக் கப்பல் பறவை தன்னுடைய நீளமான கறுப்பு நிற சிறகுகளை விரித்து தனக்கு மிகவும் அருகில் வட்டமிட்டுப் பறப்பதை அவன் பார்த்தான். அது மிகவும் தாழ்வான நிலையில், சிறகுகளைப் பின்னோக்கி சாய்த்து வைத்துக் கொண்டு, சரிந்து, தாழ்ந்து, மீண்டும் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது.

“அவனுக்கு என்னவோ கிடைச்சிருக்கு..” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “அவன் காரணமே இல்லாமல் கண்களில் பட மாட்டான்.”

பறவை வட்டமிட்டுப் பறக்கும் இடத்தை நோக்கி மிகவும் மெதுவாக, ஒரே வேகத்தில் அவன் துடுப்பைப் போட்டவாறு சென்றான். எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அவன் தூண்டில் கயிறுகளைச் சரி பண்ணி வைத்தான். படகு நீரோட்டத்திற்கு சற்று புத்துணர்ச்சி உண்டாக்கியது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பறவையின் உதவியைப் பயன்படுத்தாமல் இருந்துவிட்டால்கூட, நேர்த்தியுடனும் முன்பைவிட வேகமாகவும் அவனால் மீன் பிடிக்க முடியும்.

பறவை வெட்ட வெளியை நோக்கி மேலும் அதிகமாக தலையை உயர்த்தி, மீண்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதனுடைய சிறகுகள் அசைவே இல்லாமல் இருந்தன. திடீரென்று அது நீரை நோக்கி வேகமாக வந்தது. பறக்கும் பறவை நீரிலிருந்து உயர்ந்து நீர்பரப்புக்கு மேலே ஆவேசத்துடன் குதிப்பதை கிழவன் பார்த்தான்.

“டால்ஃபின்...” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “பெரிய டால்ஃபின்...”

கிழவன் துடுப்பு போடுவதை நிறுத்திவிட்டு பலகைக்கு அடியிலிருந்து ஒரு தூண்டில் கயிறை வெளியே எடுத்தான். அதற்கு கயிறு சுற்றக்கூடிய ஒரு சக்கரமும் நடுத்தர அளவைக் கொண்ட ஒரு கொக்கியும் இருந்தன. கொக்கியில் மத்தி மீன்களில் ஒன்றை எடுத்து இரையாகக் கோர்த்தான். தொடர்ந்து அதை ஒரு பக்கமாக எறிந்து படகின் பின்பக்கத்தில் இருந்த வளையத்தில் கட்டினான். பிறகு இன்னொரு கயிறிலும் தூண்டிலைக் கட்டி, பலகையின் நிழலில் சுருட்டி வைத்தான். இறுதியாக, நீளமான சிறகுகளைக் கொண்ட ஒரு கறுப்பு நிறப் பறவை நீருக்கு மேலே தாழ்வாகப் பறப்பதைப் பார்த்துக் கொண்டே அவன் மீண்டும் துடுப்புகளைப் போட ஆரம்பித்தான்.

கிழவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பறவை வேகமாக நீரை நோக்கி கீழே வந்து, சிறகுகளைச் சாய்வாக வைத்துக்கொண்டு ஆவேசமாக சுழன்றவாறு, பறக்கும் மீனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தது. பெரிய டால்ஃபின் நீரில் உண்டாக்கிய மெல்லிய சலனத்தை கிழவனும் பார்த்தான். பறவையிடமிருந்து தப்பித்த மீனை டால்ஃபின் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. மீன் பறந்து போய்க் கொண்டிருப்பதற்குக் கீழே அதே வேகத்தில் டால்ஃபின்களும் பயணித்துக் கொண்டிருந்தன. மீன் கீழே விழும்போது அவை நீரில் மிகவும் கீழே இருக்கும். “அது டால்ஃபின்களின் மிகப் பெரிய ஒரு கூட்டம்தான்.” கிழவன் நினைத்தான். டால்ஃபின்கள் சுற்றி சூழ்ந்து கொண்டிருந்ததால், மீன்களுக்கு தப்பித்துச் செல்வதற்கு வழியில்லை. பறவைக்கு அது கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. பறக்கும் மீன்கள் அதனுடைய அலகில் சிக்கும் அளவைவிட பெரியதாக இருந்தன. அது மட்டுமல்ல- பயணிப்பது மிகவும் வேகமாக இருந்தது.

பறக்கும் மீன்கள் மீண்டும் மீண்டும் உயர்ந்து பறப்பதையும், பறவைகள் அவற்றிற்குப் பின்னால் வெறுமனே பறப்பதையும் அவன் பார்த்தான். “டால்ஃபின்கள் என்னிடமிருந் விலகிச்சென்று விட்டனவோ...” அவன் சிந்தித்தான். “மிகவும் வேகமாக நீண்ட தூரத்தை அவை கடந்து சென்றுவிடுகின்றன. ஒருவேளை, கூட்டத்தைத் தவறவிட்டு அலைந்துகொண்டிருக்கும் ஏதாவதொன்றை நான் கண்டுபிடிப்பேன். என்னுடைய பெரிய மீன் அவற்றிற்கு மத்தியில் இங்கு எங்காவது இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.”

இப்போது கரைக்கு மேலே இருந்த மேகங்கள் மலைகளைப்போல உயர்ந்து காணப்பட்டன. சாம்பல் நிறம் மூடியிருந்த நீல நிறக் குன்றுகள்... அவற்றுக்குப் பின்னால் நீளமான ஒரு பச்சைக் கோடாக கரை மாறிவிட்டிருந்தது. நீருக்கு இப்போது அடர்த்தியான நீல நிறம் வந்து சேர்ந்து விட்டிருந்தது. ஊதா நிறத்தின் அளவுக்கு இருண்டு போய் காணப்பட்டது. நீர்ப் பரப்பைப் பார்க்கும்போது, இருண்டு போயிருந்த நீரில் நீந்தி போய்க் கொண்டிருந்த ப்ளாஸ்டன் உயிரினத்தின் சிவப்பு ப்ளாஸ்டன் கோட்டையும், சூரியன் படைத்த வினோதமான பிரகாசத்தையும் அவன் பார்த்தான். தூண்டில் கயிறுகள் நீருக்குள் இறங்கிச் சென்று பார்வையிலிருந்து மறைந்து விட்டிருக்கின்றனவா என்று கிழவன் பார்த்தான். ப்ளாங்டன் உயிரினங்களை இந்த அளவுக்கு பார்க்க முடிந்ததை நினைத்து அவன் மிகவும் சந்தோஷப்பட்டான். அங்கு மீன் இருக்கிறது என்பதே அதற்கு அர்த்தம். நீரில் சூரியன் உண்டாக்கிய வினோதமான பிரகாசம், சூரியன் மேலே உயரத்தை அடைந்திருந்தது, கரைக்கு மேலே இருந்த மேகங்களின் தோற்றங்கள் ஆகியவை நல்ல காலச்சூழ்நிலையைக் குறிப்பாக உணர்த்தக் கூடியவை. ஆனால், பறவை கிட்டத்தட்ட பார்வையிலிருந்து மறைந்து விட்டிருந்தது. நீர்ப் பரப்பில் மஞ்சள் நிறத்தைக் கொண்ட, வெயிலில் வாடி வதங்கிப் போய் காணப்பட்ட சர்காஸோ பாசிகளின் சில அடையாளங்களும், படகுக்கு மிகவும் அருகில் போய்க் கொண்டிருந்த ஒரு விஷக்குமிழியின் ஊதா நிறத்தில் அளவெடுத்தாற்போல் இருந்த தண்டுகளும், வானவில்லின் வண்ணங்களுடன் இருந்த ஈரமான நீர்ப் பையும் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. நீர்ப் பை ஒரு பக்கம் திரும்பி, பிறகு மீண்டும் நிமிர்ந்து, நன்கு நீண்ட தண்டுகளை குறிப்பிட்ட தூரம் பின்னோக்கி நீட்டி, உற்சாகத்துடன் நீந்திப் போய்க்கொண்டிருந்தது.

“அக்வா மாலா.” கிழவன் சொன்னான்: “நீ தேவிடியா...” மெதுவாக துடுப்பைப் போட்டுக் கொண்டே அவன் நீரைப் பார்த்தான். தண்டுகளின் அதே நிறத்தில் இருந்த சிறிய மீன்கள் அவற்றிற்கு நடுவிலும், குமிழ்கள் மூழ்கும்போது உண்டாகக் கூடிய சிறிய நிழல்களுக்கு நடுவிலும் நீந்திக் கொண்டிருந்தன. விஷத்திற்கு எதிராக எதிர்ப்புத் தன்மை கொண்டவை அவை. ஆனால், மனிதர்களின் விஷயம் அப்படி இல்லையே! ஊதா நிறத்தில் இருந்த அந்த தண்டுகள் வழுவழுப்பாக தூண்டிலில் சிக்கிக் கிடப்பதுண்டு. மீனைச் சரி செய்யும்போது, கிழவனின் கைகளில் சாட்டையால் அடி வாங்கியதைப் போல அடையாளங்களும் காயங்களும் உண்டாவதுண்டு. விஷத்தன்மை கொண்ட செடியோ விஷத்தன்மை கொண்ட நுண்ணுயிரோ உண்டாக்கக்கூடிய காயங்களுக்கு நிகரானவையாக அவை இருக்கும்.

ஆனால், அக்வா மாலாவிலிருந்து வரும் இந்த விஷம் மிகவும் வேகமாகப் பாயும்- சாட்டையடியைப்போல சிறிதும் நினைக்காமலேயே.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel