Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 36

Kizhavanum kadalum

“என்ன ஒரு மீன் அது.” அந்தக் கடையின் உரிமையாளர் கூறினார்: “இப்படியொரு மீனை நான் இதுவரை பார்த்ததே இல்லை. நேற்று நீ கொண்டு வந்த அந்த இரண்டு மீன்களும்கூட பரவாயில்லை.”

“என் மீன்கள் நாசமாகப் போகட்டும்!” சிறுவன் சொன்னான். அவன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.

“உனக்கு ஏதாவது குடிப்பதற்கு வேண்டுமா?” கடையின் உரிமையாளர் கேட்டார்.

“வேண்டாம்.” சிறுவன் சொன்னான்: “சான்டியாகோவை தொந்தரவு செய்யாதீர்கள் என்று அவர்களிடம் கூறுங்கள். நான் உடனடியாகத் திரும்பி வந்து விடுவேன்.”

“நான் மிகவும் கவலைப்பட்டேன் என்று அவரிடம் கூறு.”

“நன்றி.” சிறுவன் சொன்னான்.

கிழவனின் குடிசைக்கு சூடுள்ள காப்பி பாத்திரத்தை அவன் கொண்டு சென்றான். அவன் கண் விழிக்கும் வரை சிறுவன் அருகிலேயே காத்திருந்தான். ஒருமுறை அவன் கண் விழிக்கப் போகிறான் என்று தோன்றியது. ஆனால், ஆழமான உறக்கத்திற்கு கிழவன் திரும்பவும் சென்றுவிட்டான். காப்பியைச் சூடு பண்ணுவதற்காக சிறிது விறகு கடனுக்கு வாங்க, சிறுவன் பாதையைக் குறுக்காகக் கடந்தான்.

இறுதியாக கிழவன் கண் விழித்தான்.

“எழுந்திருக்க வேண்டாம்.” சிறுவன் சொன்னான்: “இதை குடிங்க.” அவன் சிறிது காப்பியை கண்ணாடிக் குவளையில் ஊற்றினான். கிழவன் அதை எடுத்துப் பருகினான்.

“அவை என்னை தோல்வியடையச் செய்துவிட்டன,

மனோலின்.” அவன் சொன்னான்: “அவை என்னை முற்றிலும் தோல்வியடையச் செய்துவிட்டன.”

“அவன் உங்களைத் தோற்கடிக்கவில்லை. உங்களைத் தோற்கடித்தது மீன் அல்ல.”

“இல்லை... உண்மையாகவே இல்லை. எல்லாம் பின்னால் நடந்தது...”

“படகிற்கும் பொருட்களுக்கும் பெட்ரிகோ காவலாக நின்று கொண்டிருக்கிறார். தலையை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“மீன் வலைகளில் பயன்படுத்துவதற்காக, பெட்ரிகோ அதை வெட்டி அறுக்கட்டும்.”

“அப்படியென்றால், ஈட்டியைப் போல கூர்மையாக இருக்கும் பகுதி?”

“உனக்கு வேண்டுமென்றால், எடுத்துக்கொள்.”

“அது எனக்கு வேண்டும்.” சிறுவன் சொன்னான்: “இனி நாம் மற்ற விஷயங்களைப் பற்றி திட்டம் போட வேண்டும்.”

“எனக்காக அவர்கள் தேடல் நடத்தினார்களா?”

“உண்மையாகவே நடத்தினார்கள். கடலோரப் படையையும் விமானத்தையும் பயன்படுத்தி...”

“கடல் மிகவும் பெரியது. படகு மிகவும் சிறியது. கடலைத் தெரிந்து கொள்ள சிரமப்படும் அளவிற்கு அது சிறியது.” கிழவன் சொன்னான். தன்னுடனும் கடலுடனும் மட்டுமே எதையாவது பேசிக் கொண்டிருப்பதைவிட, பேசிக் கொண்டிருப்பதற்கு வேறு யாரேனும் அருகில் இருக்கிறார்கள் என்பது எவ்வளவோ சந்தோஷத்தை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். “உன்னைப் பார்க்காமல் நான் மிகவும் கவலைப் பட்டேன்.” அவன் சொன்னான்: “நீ என்ன மீனைப் பிடித்தாய்?”

“முதல் நாள் ஒரு மீன். இரண்டாவது நாள் ஒரு மீன். மூன்றாவது நாள் இரண்டு மீன்கள்.

“மிகவும் நல்லது.”

“இப்போது மீண்டும் நாம் இருவரும் சேர்ந்து மீன் பிடிக்கச் செல்வோம்.” சிறுவன் சொன்னான்.

“வேண்டாம். நான் அதிர்ஷ்டசாலி அல்ல. இனிமேல் எந்தச் சமயத்திலும் நான் அதிர்ஷ்டசாலியாக இருக்கப் போவதில்லை.”

“அதிர்ஷ்டம் நரகத்திற்குச் செல்லட்டும்...” சிறுவன் சொன்னான்: “நான் என்னுடன் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவேன்.”

“உன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன கூறுவார்கள்?”

“அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நேற்று நான் இரண்டு மீன்களைப் பிடித்தேன். ஆனால், இப்போது நாம் இருவரும் சேர்ந்து மீன் பிடிப்போம். உங்களிடம் நான் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.”

“நமக்கு கொல்வதற்கு பயன்படக் கூடிய நல்ல ஒரு ஈட்டி வேண்டும். அதை எப்போதும் படகில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பழைய ஃபோர்ட் காரின் ஸ்ப்ரிங் லீஃபிலிருந்து ஈட்டியின் முனைப் பகுதியை உண்டாக்கலாம். குவானபகோவாவிற்குக் கொண்டு சென்று கூர்மைப்படுத்தலாம். நல்ல கூர்மை இருக்க வேண்டும். ஆனால், இறுக்கமாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது உடைந்துவிடும். என் கத்தி உடைந்துவிட்டது.”

“நான் இன்னொரு கத்தியைக் கொண்டு வருகிறேன். ஸ்ப்ரிங்கிற்கு கூர்மை உண்டாக்கி விடலாம். பலமான இந்த காற்று இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும்?”

“மூன்று நாட்களுக்கு இருக்கும். ஒருவேளை அதைவிட அதிக நாட்கள் கூட இருக்கலாம்.”

“நான் எல்லா காரியங்களையும் முறைப்படி செய்கிறேன்.” சிறுவன் சொன்னான்: “உங்களுடைய கைகள் குணமாகட்டும், தாத்தா.”

“கைகளை எப்படி கவனமாகப் பார்த்துக் கொள்வது என்று எனக்குத் தெரியும். இரவில் நான் எப்போதுமில்லாமல் எதையோ துப்பினேன். நெஞ்சில் ஏதோ உடைந்துவிட்டதைப்போல எனக்குத் தோன்றியது.”

“அதுவும் குணமாகட்டும்.” சிறுவன் சொன்னான்: “படுங்கள் தாத்தா. உங்களுடைய சுத்தம் செய்யப்பட்ட சட்டையை நான் கொண்டு வந்து தருகிறேன். பிறகு சாப்பிடுவதற்கு ஏதாவது...”

“நான் கடலுக்குள் போய் விட்டிருந்த நாட்களில் வந்த ஏதாவது பத்திரிகைகளைக் கொண்டு வா.” கிழவன் சொன்னான்.

“நீங்கள் வேகமாக குணமாக வேண்டும். உங்களிடமிருந்து ஏராளமான விஷயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. எல்லா விஷயங்களையும் எனக்கு கற்றுத் தருவதற்கு உங்களால் முடியும். நீங்கள் எந்த அளவிற்கு துன்பங்களை அனுபவித்தீர்கள்?”

“நிறைய...” கிழவன் சொன்னான்.

“நான் உணவு, பத்திரிகைகள் ஆகியவற்றைக் கொண்டு வருகிறேன்.” சிறுவன் சொன்னான்: “நன்றாக ஓய்வெடுங்கள், பெரியவரே. மருந்துக் கடையிலிருந்து உங்களுடைய கைகளுக்குத் தேவையான மருந்தையும் நான் கொண்டு வருகிறேன்.”

“பெட்ரிக்கோவிடம் தலை அவருக்குத்தான் என்று கூறுவதற்கு மறந்து விடாதே.”

“இல்லை. நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன்.”

கதவிற்கு வெளியே சென்று பவளப்புற்றுகள் நிறைந்த பாறைகளின் மீது நடக்கும்போது, சிறுவன் மீண்டும் அழுதான்.

அன்று சாயங்காலம் சுற்றுலாப் பயணிகளின் ஒரு கூட்டம் மேல் தளத்தில் ஒன்று சேர்ந்தது. கீழே நீர்ப்பரப்பை அவர்கள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். காலியான பீர் டின்களுக்கும் இறந்து கிடக்கும் மீன்களுக்கும் மத்தியில், நுனியில் பெரிய வாலைக் கொண்ட மிகவும் நீளமான ஒரு எலும்புக் கூட்டை, அந்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்திலிருந்த ஒரு பெண் பார்த்தாள். துறைமுகத்திற்குச் செல்லும் நுழைவுவாயிலுக்கு வெளியேயிருந்து, கீழ்காற்று கடலில் பலமாக வீசும்போது உண்டாகக்கூடிய அலைகளுடன் சேர்ந்து எலும்புக் கூட்டின் முனையில் இருந்த வால் அசைந்து கொண்டிருந்தது.

“அது என்ன?” பெரிய மீனின் நீளமான முதுகெலும்பைச் சுட்டிக்காட்டியவாறு ஒரு பணியாளிடம் கேட்டாள். அலைகளுடன் சேர்ந்து கடலில் போய் சேர்வதற்காக காத்துக் கிடக்கும் ஒரு குப்பை மட்டுமே இப்போது அது.

“டிபுரான்.” பணியாள் சொன்னான்: “இல்லாவிட்டால் சுறா.” என்ன நடந்தது என்பதை விளக்கிக் கூறுவது அவனுடைய முயற்சியாக இருந்தது.

“சுறா மீன்களுக்கு இந்த அளவிற்கு அழகும் கம்பீரமும் உள்ள வால்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது.”

“எனக்கும் தெரியாது.” அவளுடைய நண்பன் சொன்னான்.

மேலே பாதைக்கு அப்பாலிருந்த தன்னுடைய குடிசையில் கிழவன் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தான். முகத்தை படுக்கையில் அழுத்தி வைத்துக் கொண்டுதான் தூக்கமே. அவனையே பார்த்துக் கொண்டு அவனுக்கு அருகில் சிறுவன் உட்கார்ந்திருந்தான். கிழவன் சிங்கங்களைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தான்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel